
யார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது?
July 04, 2020
July 04, 2020
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஊருக்குள் வீடுகளில் குழந்தைகள் கொழுகொழுவென வளர்ந்திருக்கும், எல்லோரும் தூக்கியெடுத்துக் கொஞ்சி விளையாடுவார்கள். ஆஹா… ஓகோ… என பாராட்டி மகிழ்வார்கள். ஏதோ காரணத்தினால் குழந்தைக்குக் கொஞ்சம் உடல் பலவீனம் அடைந்து விட்டால் ‘எந்தப் பொல்லாதவங்க திருஷ்டிப் பட்டதோ, கொழுகொழு என்றிருந்த குழந்தை இப்படி வாடி வதங்கி விட்டதே, திருஷ்டிப் போட்டவங்க கண்ணுக் கெட்டுப் போகாதா?’ என வேண்டாக் குறைக்குச் சாபம் இடுவார்கள்.
அது போன்ற ஒரு நிலைதான் தற்போது தமிழகத்திலுள்ள போலீசாருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கோரக் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள் அனைவரும் வழக்கமான விடுமுறையின்றி, போதியத் தூக்கமின்றி, சுவையான உணவின்றி, ஓய்வின்றி அல்லும் பகலும் அயராதுப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் போலீஸ்காரர்களின் பணியென்பது, முதல் முதலில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மிகவும் அபாரமாக இருந்தது. ஏனென்றால், இரவு பகலாக ரோடுகளில் நின்று வாகனங்களைத் தடுப்பது, சேதனையிடுவது என இமையசைக்கும் நேரம் கூட ஓய்வின்றி உழைத்தார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதிலும் தெருவோரங்களில் கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நின்று அவர்கள் ஆற்றியப் பணி எவராலும் எக்காலத்திலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது.
லாக்டவுன் நேரத்தில் வெளியே வந்தவர்களிடமிருந்து, போலீஸ்காரர்கள் அபராதம் விதித்த போதும், அவர்களின் கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்தபோதும், இளைஞர்களை நடுரோட்டில் நிறுத்தித் தோப்புக்கரணம் போட வைத்தபோதும், அவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து ரோட்டோரத்தில் நிறுத்தி கொரோனா தேர்வு எழுதச் சொன்னபோதும் ஒட்டுமொத்த மக்களும் போலீஸ்காரர்களுக்குத் துணை நின்றார்களே தவிர, அவர்களைக் குறை கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நேரத்தில், போலீஸ்காரர்கள் இப்படிப்பட்ட நூதனமாக நடவடிக்கைகளைக் கையாண்டதினால்தான் தமிழகத்தில் ஓரளவுக்காவது லாக்டவுனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.
அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக லாக்டவுனை அறிவித்தபோது, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கூடவே காவல் துறையினருக்கும் சேர்த்து கைதட்டுங்கள்… மணியடியுங்கள்… எனக் கோட்டுக் கொண்டார். மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றைச் செய்தார்கள். அது அவர்களுக்கு மிகுந்த கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
மேலும், தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் எனப் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டபோது அவர்களுக்காகப் பரிதாபமும் அனுதாபமும் பட்டார்களே தவிர, அவர்களைப் பழிக்கவோ, இழிக்கவோயில்லை. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த போது அத்தனை மக்களும் தங்களின் இல்லத்திலுள்ள ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பைப் போல் கருதி கவலைப்பட்டார்கள். ஊர் ஊராக, தெருத்தெருவாக அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பேனர்களை வைத்து மரியாதைச் செலுத்தினார்கள்.
இப்படியெல்லாம் தமிழகப் போலீசாரைக் கொண்டாடிய மக்கள், இன்று சிறு குழந்தை முதல் தள்ளாடும் கிழடுகள் கூட ‘சீ…. என்னடா போலீஸ்’? என்று இளக்காரமாகப் பார்க்கும் அளவிற்கும், ‘இவர்களெல்லாம் மனிதர்களா’? என கேட்கும் அளவிற்கும் ஆளாகியுள்ளார்கள். இதற்கெல்லாம் என்னக் காரணம்? ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் ‘சாத்தான்குளம்’ தான் காரணம். சொந்தமோ, பந்தமோ ஏதொன்றும் இல்லாத நிலையிலும் அந்தத் தந்தை, மகன் கொடூரக் கொலை, கேட்பவர்களின் இதயங்களை நொறுக்கியது. அழுவதற்குத் தெரியாதவர்களையும் ஓ… எனக் கதறியழ வைக்கிறது. ஏன் இந்தக் கொடூரம்? எதற்கிந்த அநியாயம்?
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை வெடிகுண்டால் சுக்குநூறாக வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்தவர்கள் கூட தண்டனைப் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயிலில் இருந்தாலும் உயிருடன் இருக்கிறார்களே, அதைவிட ஒரு பெரியக் குற்றத்தையா இந்த ஜெயராஜூம், பென்னிக்சும் செய்திருக்க முடியும்?
எப்படிப்பட்டத் தாங்க முடியாத தவறு செய்திருந்தாலும், போலீஸாரையே எதிர்த்துத் தாக்கியிருந்தாலும், அவர்களின் கோபம் தீரும் மட்டும் இருவரையும் அடித்து நொறுக்கி, துவைத்தெடுத்து உயிருடன் விட்டிருக்கலாம். வாழ்நாள் முழுதும் அவர்கள் இருவரும், ‘போலீஸை எதிர்த்தால் இதுதான் கதி’ என்ற நினைப்பிலேயே வாழ்ந்து இறந்திருப்பார்கள். உறவினர்களும் ‘சரி உயிரோடாவது விட்டு வைத்தார்களே என நிம்மதியடைந்திருப்பார்கள்.
இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இரண்டோ மூன்றோ போலீஸார் செய்த கோரக் கொடுமையினால், ஒட்டுமொத்தத் தமிழகப் போலீஸாரும், இந்த நாட்டின் முன் தலைகுனிய வேண்டியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம், அசிங்கம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் பூதாகரமாகி, தமிழகத்திலுள்ள தலைவர்கள் மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ளத் தலைவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையினரும் கண்டனமும் வருத்தமும் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகூட தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி, போலீஸ் செய்தத் தவறுக்கு, அதே போலீஸில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் சாட்சியாக மாறியிருப்பதும், சில போலீஸ் அதிகாரிகள் அப்ரூவர்களாக மாறியிருப்பதும் இதுவே முதல் முறையாகத்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இதே வேகத்தில் சென்று, குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை வழங்கினால், தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தப் போலீஸார் மீதும் இருக்கும் அவப்பெயர் நீங்கி விடும். ஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.
(இக்கட்டுரை 04-07-2020 அன்று ஐ.இ. தமிழ் இணைய இதழில் பிரசுரமானது.)
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com
அருமனை. அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com
No comments:
Post a Comment