Friday, 31 July 2020
Thursday, 30 July 2020
Wednesday, 29 July 2020
உயிர்களுக்கு விலை பேசல் தகாது.
உயிர்களுக்கு விலை பேசல் தகாது.
Published: July 25, 2020, ietamil E Journal.

சிறுவயதில் கிராமப்புறங்களில் வீட்டின் முற்றத்தில் வட்ட வடிவில் சுற்றியிருந்து “குலேகுலே முந்திரிக்கா… நரியே நரியே ஓடிவா…” எனப் பாடிப்பாடி ஒரு விளையாட்டை சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடுவார்கள். அந்தப் பிள்ளைகளின் விளையாட்டு, பார்ப்பவர்களைப் பரவசமூட்டுவதாக இருக்கும். பிள்ளைகளுக்கோ மிகவும் குதுகலமாக இருக்கும்.
அன்றைக்கு அந்தக் குழந்தைகள் விளையாட்டிற்காகப் பயன்படுத்திய அந்தக் “குலேகுலே முந்திரிக்கா…” என்றப் பாடல் இன்றும் பெரியவர்களின் காதுகளில் ரீங்காரமாக ஒலித்து, ஒரு வித ஆனந்தத்தைத் தந்து கொண்டேயிருக்கும். ஆனால் அந்த “குலேகுலே” என்ற பாடல் இன்று நிஜமாகவே ஊரெங்கும் “கொலை கொலை” என உருமாறி மக்கள் மத்தியில் ஒருவித ஐயப்பாட்டை உருவாக்கியிருப்பதுதான் வேதனைக்குரியது.
இன்றைக்குச் சமூக ஊடகங்களை இரண்டேயிரண்டுச் செய்திகள்தான் அபகரித்துள்ளன. அவற்றில் ஒன்று கொடிய கொரோனா மற்றொன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து, எல்லையான கன்னியாகுமரி வரை தினம் தினம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் ஆகியன.
அவற்றில் கொலைகளைப் பொறுத்தவரை, தள்ளாடும் முதியவர்களிலிருந்து, பச்சிளம் குழந்தைகள் வரை சில காமக்கொடூரர்களின் கழுகுப் பிடிக்குள் சிக்குண்டு மூச்சற்றுப் போகின்றன.
அதனால், தற்போதெல்லாம் காலையில் எழுந்ததும் பத்திரிகைகளைப் படிப்பதும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதும் ஒருவிதப் பதற்றத்தைத் தருகின்றனவே தவிர, மனதிற்கு அமைதியான, அறிவார்ந்தச் செய்திகள் என்பவை அருகியேயுள்ளன.
இப்படி அநியாயமாகக் கொலைகள் நடப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம், இந்தக் கொலைகளின் பின்னணியில் நடக்கும் போராட்டங்களின் போக்குக் கொலையை விட அநியாயமாகயுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தந்தை – மகன் கொலை, இந்த நாட்டையே உலுக்கியுள்ளச் சம்பவம் அனைவரும் அறிந்ததே.
அந்தக் கொலையின் அச்சம் இன்னும் மக்களின் மனங்களிலிருந்து மாய்வதற்குள், அடுத்து, அதே சாத்தான்குளத்தில் ஒரு எட்டு வயது சிறுமியை கொடூரமாகக் கொலை செய்திருப்பதும், அதன் பின்னணியில் நடந்திருக்கும் போராட்டங்களும், அதற்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் நிவாரணமும், தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறிவிடுமோ என்ற கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றதும், சிறுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்ப்பதற்குச் சென்றுள்ளார். அன்று மதியம் சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தப் போது தனது மகளைக் காணவில்லை. செய்தி காட்டுத் தீ போல் ஊர் முழுக்கப் பரவ ஊரார் சேர்ந்து வழக்கமானத் தேடுதலுக்குப் பிறகு, சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு ஒரு பெரிய தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்டு அருகிலுள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்திருந்ததைக் கண்டுப்பிடுத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சிறுமி டி.வி பார்க்கச் சென்ற வீட்டிலுள்ள இளைஞன் மூத்தீஸ்வரனும் அவது நண்பனும் சேர்ந்து கொலை செய்ததுத் தெரிய வரவே அவர்கள் இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த சிறுமியின் உறவினர்களும் சில அரசியல் கட்சியினரும் நடத்தியிருக்கும் கூத்துதான் அனைவரின் மனதையும் அழுத்துகிறது. டாக்டர்களின் வழக்கமான நடைமுறைக்குப் பிறகுச் சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போது, உறவினர்களும், சில அரசியல் கட்சிகளும் சேர்ந்து, சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும், வீடுகட்டுவதற்கு மூன்று சென்ட் நிலமும் வழங்க வேண்டும் என்றால்தான் உடலை வாங்குவோம் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இரண்டு நாள்கள் சிறுமியின் உடலை வாங்காமல் பேச்சுவார்த்தை, போராட்டம் எனத் தொடர்ந்துள்ளது. அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், உறவினர்களிடமும் போராட்டக்காரர்களிடமும் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமியின் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியும், மூன்று சென்ட் நிலத்தில் பசுமை வீடு கட்டிக்கொடுக்கப்படும். கூடவே இந்த சிறுமியின் பத்து வயதான அண்ணனின் படிப்பு செலவு அனைத்தும் அரசு ஏற்கும் என வாக்குறுதி அளித்தப் பிறகே சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கே எழுப்பப் படும் கேள்வி, சிறுமியைக் கொலை செய்தக் கயவர்களைப் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் அவர்களைத் தூக்கிலிடுங்கள் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். அது நியாயமாக இருந்திருக்கும். அதைத் தவிர்த்து ஓர் உயிருக்கு ஒரு கோடி ரூபாயும் மூன்று சென்ட் நிலமும் கேட்டு போராட்டம் நடத்தியிருப்பதும், அதற்காக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாதம் ஐயாயிரம் ரூபாயும், மூன்று சென்று நிலமும் பசுமை வீடும், அண்ணனின் படிப்பு செலவும் ஏற்றிருப்பதும் வருங்காலத்தில் இது போன்ற கொடூரச் செயலுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகாதா?
மேலும், சில அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற கொலைகள் நடக்கும் போது அவர்களின் குடும்பங்களுக்கு லட்சக்கணக்கானப் பணத்தை நிவாரணமாக வழங்கி நல்ல பிள்ளை பெயர் வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற கொலைகள் நடக்காமல் இருப்பதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டுமே தவிர இதைப் போன்று லட்சங்களைக் கொடுத்துக் கொடையாளிகளாவது, கொலையாளிகளுக்கு மீண்டும் மீண்டும் வளமாகுமே தவிர, இப்படிப்பட்ட அசம்பாவிதங்களுக்கு ஒரு போதும் தீர்வாகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் படுகொலைகளுக்கும், பணம், சொத்துக்காக நடைபெறும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசும், நீதித்துறையும் புதியக் கடுமையானச் சட்டங்களை இயற்ற வேண்டுமே தவிர, இதுபோன்ற தவறான நிவாரணங்கள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர வேண்டும்.
முனைவர் கமல.செல்வராஜ்,
அருமனை. பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com
அருமனை. பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com
Sunday, 26 July 2020
Wednesday, 22 July 2020
Monday, 20 July 2020
கூச்சமின்றி உறவுகளை அழைத்திடுவோம்.
கூச்சமின்றி உறவுகளை அழைத்திடுவோம்

முனைவர் கமல.செல்வராஜ், எழுத்தாளர்.
தமிழகக் கலாச்சாரப் பண்பாட்டின் ஆணிவேராக இருப்பது குடும்ப உறவு முறைகளாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறவு முறையில் அழைக்கப்படும் போதுதான், அவர்களின் அன்பும் பாசமும் மாறிமாறி வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் அரவணைப்பு அரணாக இருப்பார்கள்.
ஆனால், இன்று ஆங்கிலப் பள்ளிகளின் அதிகரிப்பும், மக்களிடையே உருவாகியுள்ள ஆங்கில மோகமும் தமிழகத்திலுள்ள குடும்ப உறவு முறைகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளன. உதாரணமாக மாமா – மாமி, பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி என அழைக்கும் அற்புதமான இரத்தப்பந்த உறவுகளெல்லாம், இன்று ஆங்கிலத்தில் அனைவரையும் ஒற்றை வார்த்தையில் அங்கிள் – ஆன்ட்டி என்று அழைக்கப்படும் நிலைக்கு மாற்றியுள்ளன.
அதைப்போன்றே தாத்தா – பாட்டி என அழகானத் தமிழில் அழைத்து வந்த உறவுமுறை இன்று ஆங்கிலத்தில் கிரான்ட்ஃபா – கிரான்ட்மா எனத் திரிந்துள்ளன. இதைவிடக் கொடுமை இதயங்களை இணைக்கும் அம்மா – அப்பா என்ற உறவு கூட, டாடி – மம்மி எனப் போலியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் குடும்ப உறவுமுறைகளில் பலவீனத்தை உருவாக்கி, உறவுகளுக்கிடையே தகாத உறவுகளுக்கு வழிவகுத்து வருகின்றன என்பது வேதனைக்குரியச் சீரழிவு.
எனவேதான், மீண்டும் பழைய உறவு முறைகளை இனிவரும் இளையத் தலைமுறைகள் அறிந்து கொண்டு, அவற்றையே பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குழந்தைப் பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.
அம்மா அப்பா உறவேதான்
அவர்கள் உதிரம் நாமேதான்
மூத்தோர் இருவர் உள்ளனரே
தாத்தா பாட்டி என்போமே!
O
தாத்தா பாட்டிப் பெற்றவர் ஐவராம்
இடையில் பிறந்தது அப்பாவாம்
மூத்தவர் இருவர் பெரியப்பா
இளையோர் இருவர் சித்தப்பா!
O
பெரியம்மா சித்தி என்போமே
அம்மா முன்பின் பிறந்த பெண்களையே
மாமா என்றே அழைத்திடுவோம்
அம்மாவோடுப் பிறந்த ஆண்களையே!
O
அத்தை மாமி என்போமே
மாமன் மனைவி அவர்தாமே!
மச்சான் மையினி என்போமே
அவர் வழிப் பிறந்தோரை!
O
கணவன் மனைவி இருவராம்
ஆசைப் பிள்ளைகள் நால்வராம்
மூத்தோர் அண்ணன் அக்காவாம்
இளையோர் தம்பித் தங்கையாம்!
O
உறவே நமக்குப் பலமாகும்
அதுவே நமக்கு அரணாகும்
கூச்ச மின்றி அழைத்திடுவோம்
அச்ச மின்றி வாழ்ந்திடுவோம்!
முனைவர் கமல. செல்வராஜ், எழுத்தாளர்
அருமனை.பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com
அருமனை.பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com
(ietamil E Journal இல் 20 - 07-2020 அன்று பிரசுரமானது.)
Sunday, 19 July 2020
Friday, 17 July 2020
Wednesday, 15 July 2020
Sunday, 12 July 2020
Friday, 10 July 2020
Wednesday, 8 July 2020
Sunday, 5 July 2020
யார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது?

யார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது?
July 04, 2020
July 04, 2020
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஊருக்குள் வீடுகளில் குழந்தைகள் கொழுகொழுவென வளர்ந்திருக்கும், எல்லோரும் தூக்கியெடுத்துக் கொஞ்சி விளையாடுவார்கள். ஆஹா… ஓகோ… என பாராட்டி மகிழ்வார்கள். ஏதோ காரணத்தினால் குழந்தைக்குக் கொஞ்சம் உடல் பலவீனம் அடைந்து விட்டால் ‘எந்தப் பொல்லாதவங்க திருஷ்டிப் பட்டதோ, கொழுகொழு என்றிருந்த குழந்தை இப்படி வாடி வதங்கி விட்டதே, திருஷ்டிப் போட்டவங்க கண்ணுக் கெட்டுப் போகாதா?’ என வேண்டாக் குறைக்குச் சாபம் இடுவார்கள்.
அது போன்ற ஒரு நிலைதான் தற்போது தமிழகத்திலுள்ள போலீசாருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கோரக் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள் அனைவரும் வழக்கமான விடுமுறையின்றி, போதியத் தூக்கமின்றி, சுவையான உணவின்றி, ஓய்வின்றி அல்லும் பகலும் அயராதுப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் போலீஸ்காரர்களின் பணியென்பது, முதல் முதலில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மிகவும் அபாரமாக இருந்தது. ஏனென்றால், இரவு பகலாக ரோடுகளில் நின்று வாகனங்களைத் தடுப்பது, சேதனையிடுவது என இமையசைக்கும் நேரம் கூட ஓய்வின்றி உழைத்தார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதிலும் தெருவோரங்களில் கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நின்று அவர்கள் ஆற்றியப் பணி எவராலும் எக்காலத்திலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது.
லாக்டவுன் நேரத்தில் வெளியே வந்தவர்களிடமிருந்து, போலீஸ்காரர்கள் அபராதம் விதித்த போதும், அவர்களின் கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்தபோதும், இளைஞர்களை நடுரோட்டில் நிறுத்தித் தோப்புக்கரணம் போட வைத்தபோதும், அவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து ரோட்டோரத்தில் நிறுத்தி கொரோனா தேர்வு எழுதச் சொன்னபோதும் ஒட்டுமொத்த மக்களும் போலீஸ்காரர்களுக்குத் துணை நின்றார்களே தவிர, அவர்களைக் குறை கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நேரத்தில், போலீஸ்காரர்கள் இப்படிப்பட்ட நூதனமாக நடவடிக்கைகளைக் கையாண்டதினால்தான் தமிழகத்தில் ஓரளவுக்காவது லாக்டவுனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.
அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக லாக்டவுனை அறிவித்தபோது, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கூடவே காவல் துறையினருக்கும் சேர்த்து கைதட்டுங்கள்… மணியடியுங்கள்… எனக் கோட்டுக் கொண்டார். மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றைச் செய்தார்கள். அது அவர்களுக்கு மிகுந்த கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
மேலும், தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் எனப் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டபோது அவர்களுக்காகப் பரிதாபமும் அனுதாபமும் பட்டார்களே தவிர, அவர்களைப் பழிக்கவோ, இழிக்கவோயில்லை. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த போது அத்தனை மக்களும் தங்களின் இல்லத்திலுள்ள ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பைப் போல் கருதி கவலைப்பட்டார்கள். ஊர் ஊராக, தெருத்தெருவாக அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பேனர்களை வைத்து மரியாதைச் செலுத்தினார்கள்.
இப்படியெல்லாம் தமிழகப் போலீசாரைக் கொண்டாடிய மக்கள், இன்று சிறு குழந்தை முதல் தள்ளாடும் கிழடுகள் கூட ‘சீ…. என்னடா போலீஸ்’? என்று இளக்காரமாகப் பார்க்கும் அளவிற்கும், ‘இவர்களெல்லாம் மனிதர்களா’? என கேட்கும் அளவிற்கும் ஆளாகியுள்ளார்கள். இதற்கெல்லாம் என்னக் காரணம்? ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் ‘சாத்தான்குளம்’ தான் காரணம். சொந்தமோ, பந்தமோ ஏதொன்றும் இல்லாத நிலையிலும் அந்தத் தந்தை, மகன் கொடூரக் கொலை, கேட்பவர்களின் இதயங்களை நொறுக்கியது. அழுவதற்குத் தெரியாதவர்களையும் ஓ… எனக் கதறியழ வைக்கிறது. ஏன் இந்தக் கொடூரம்? எதற்கிந்த அநியாயம்?
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை வெடிகுண்டால் சுக்குநூறாக வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்தவர்கள் கூட தண்டனைப் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயிலில் இருந்தாலும் உயிருடன் இருக்கிறார்களே, அதைவிட ஒரு பெரியக் குற்றத்தையா இந்த ஜெயராஜூம், பென்னிக்சும் செய்திருக்க முடியும்?
எப்படிப்பட்டத் தாங்க முடியாத தவறு செய்திருந்தாலும், போலீஸாரையே எதிர்த்துத் தாக்கியிருந்தாலும், அவர்களின் கோபம் தீரும் மட்டும் இருவரையும் அடித்து நொறுக்கி, துவைத்தெடுத்து உயிருடன் விட்டிருக்கலாம். வாழ்நாள் முழுதும் அவர்கள் இருவரும், ‘போலீஸை எதிர்த்தால் இதுதான் கதி’ என்ற நினைப்பிலேயே வாழ்ந்து இறந்திருப்பார்கள். உறவினர்களும் ‘சரி உயிரோடாவது விட்டு வைத்தார்களே என நிம்மதியடைந்திருப்பார்கள்.
இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இரண்டோ மூன்றோ போலீஸார் செய்த கோரக் கொடுமையினால், ஒட்டுமொத்தத் தமிழகப் போலீஸாரும், இந்த நாட்டின் முன் தலைகுனிய வேண்டியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம், அசிங்கம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் பூதாகரமாகி, தமிழகத்திலுள்ள தலைவர்கள் மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ளத் தலைவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையினரும் கண்டனமும் வருத்தமும் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகூட தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி, போலீஸ் செய்தத் தவறுக்கு, அதே போலீஸில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் சாட்சியாக மாறியிருப்பதும், சில போலீஸ் அதிகாரிகள் அப்ரூவர்களாக மாறியிருப்பதும் இதுவே முதல் முறையாகத்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இதே வேகத்தில் சென்று, குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை வழங்கினால், தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தப் போலீஸார் மீதும் இருக்கும் அவப்பெயர் நீங்கி விடும். ஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும்.
(இக்கட்டுரை 04-07-2020 அன்று ஐ.இ. தமிழ் இணைய இதழில் பிரசுரமானது.)
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com
அருமனை. அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com
Subscribe to:
Posts (Atom)