Monday, 2 March 2020

ABOUT ME


பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani
அந்தத் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி என்ற பெண்ணுடைய திருமணம் அது. எல்லோரும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருக்க இரண்டு பேர் கண்களில் மட்டும் கண்ணீர் திரண்டிருந்தது. அவர்கள் கமலசெல்வராஜ் அவரது மனைவி மினி செல்வராஜ்.."என்னப்பா, என்னம்மா.. மகிழ்ச்சியான தருணம் தானே இது? நம்முடைய அக்காவுக்குத் தானே திருமணம் நடைபெறுகிறது? நீங்கள் இருவரும் ஏன் கண் கலங்கி நிற்கிறீர்கள்?" என்று கேட்டவர்கள் வேறு யாருமல்ல கமலசெல்வராஜ்-மினி தம்பதியினரின் மகள் ஆதர்ஷாவும் மகன் ஆதர்ஷும்..
அவர்கள் 'அக்கா' என்று குறிப்பிட்ட ஸ்ரீதேவி கூடப் பிறந்த அக்கா இல்லை; ஆனாலும் கூடப் பிறந்த அக்கா மாதிரிதான். கமலசெல்வராஜும் மேலும் எட்டு நண்பர்களும் சேர்ந்து ஆதரவற்ற பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சிதறால் பகுதியில் சித்ராலயா இல்லம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். 28 பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியை நர்சிங் படிப்பு படிக்க வைத்து இருக்கிறார்கள். இப்போது அவருக்குத் தகுந்த மணமகனைத் தேடிக் கண்டுபிடித்து, திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்..
கமலசெல்வராஜின் அப்பா கமலன் விவசாயி. அம்மா கமலம்மாள். குமரி மாவட்டத்தின் அருமனை கிராமத்தில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு மூன்று பெண்கள். நான்கு ஆண்கள்.ஆக மொத்தம் ஏழு குழந்தைகள். மிக மிக வறுமையான குடும்பம். கமலசெல்வராஜுக்கு 11வயது நடக்கையில் அதாவது ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். குடும்பம் திக்குத் தெரியாமல் திகைத்து நின்றது."இனி நாங்க என்ன பண்ணுவோம்னு தெரியலையே. ஒரு தீப்பெட்டி வாங்கக்கூட வழியில்லேயே"என்று எல்லோருக்கும் மூத்த அக்கா சொல்லிக் கதறி அழுதார்.
அம்மா வாழ்க்கையை தைரியமாக எதிர் கொண்டார். சின்னச் சின்ன வேலைகளுக்குப் போக ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்குக் கொண்டுபோய் விற்று சம்பாதிக்க வேண்டிய அளவுக்கு வறுமை வீட்டில் தாண்டவமாடியது. அரிசி நிறைத்த பையை தலை சும்மாடாகக் கொண்டு போவார் அம்மா. நேர்வழியில் போனால் காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்று அம்மா ரப்பர் தோட்டங்களுக்குள் புகுந்து புறப்பட்டுப் போவார். அவ்வளவு கஷ்டப்பட்டு தான் குடும்பத்தை கரையேற்ற வேண்டியிருந்தது.
இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பு கொடுப்பது என்பது அந்தத் தாய்க்கு மிகவும் முடியாத காரியமாகவே இருந்தது. அதனால் கமலசெல்வராஜை தனது சகோதரன் பொறுப்பில் படிக்கவைக்க அனுப்பினார் அம்மா. தாய் மாமாவின் தயவில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார் கமலசெல்வராஜ். அதன் பிறகு படித்துக்கொண்டே கூலி வேலைகள் பார்க்கப் போனார். ரப்பர் பால் வெட்டுகிற வேலை கிடைக்கவே அதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பட்டப்படிப்பு படித்து முடித்தார் கமலசெல்வராஜ். ரப்பர் பால் எடுக்கும் போது உடம்பு பூரா துர்நாற்றம் வீசும். கல்லூரி படிக்கும் காலங்களில் ரப்பர் பாலுடைய துர்நாற்றம் தன்னிடம் இருந்து வந்து மற்ற மாணவர்கள் முகம் சுளிக்க அதுவே காரணமாகிவிடுமோ என்று எண்ணி அவர்களிடம் இருந்து விலகியே இருந்தார் கமலசெல்வராஜ். ஆனாலும் படிப்பில் மிகத் திறமைசாலியாக இருந்தார்.
பட்டப்படிப்பை முடித்து பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார் இவர். படித்த பாடங்கள் மூலம் சீர்திருத்தமான எண்ணங்களை தன் மனதில் வளர்த்துக் கொண்டு வந்தார் கமலசெல்வராஜ். தன்னுடைய குடும்ப வறுமை, வீட்டில் இவரோடு கூடப்பிறந்த பெண் பிள்ளைகள் பட்ட கஷ்டங்கள், இவரை வரதட்சணை தவிர்த்து புரட்சித் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கித் தள்ளியது. ஆரம்பத்தில் விதவைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் இவற்றையெல்லாம் செய்யலாம் என்று நினைத்த கமலசெல்வராஜ்
மனதில் கடைசியாக ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு தருவோம் என்ற எண்ணமே நிலைபெற்று இறுதியானது.
ஆதரவற்ற பெண்ணை திருமணம் முடிக்க கமலசெல்வராஜ் ஓராண்டு காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவனந்தபுரத்தில் அரசு நடத்தும் ஸ்ரீ சித்ரா ஆதரவற்றோர் இல்லம் சென்று தனது விருப்பத்தைச் சொன்னார் கமல செல்வராஜ். மாவட்ட ஆட்சியர் தான் அந்த மையத்தின் தலைவர். மையத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய யாரேனும் விரும்பினால் அவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்வது அந்த மையத்தின் நடைமுறை. மணமுடிக்கும் மணமகனுக்கு சொந்த வீடு நிரந்தர வருமானம் குடும்பத்தினர் சம்மதம் உடல் தகுதிச் சான்று இவையெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்களாம்.கமல செல்வராஜ் இவற்றையெல்லாம் கடந்து வர ஓராண்டு ஆகிவிட்டது.
ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 400 இளம்பெண்களில் கமலசெல்வராஜின் வயது தகுதிக்கு ஏற்ப மூன்று பெண்களை மையம் பரிந்துரைத்தது. அதில் மினியை தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டார் கமலசெல்வராஜ். பரதநாட்டியக் கலைஞராக இருந்தார் மினி. ஆதரவற்ற மினிக்கு நல் வாழ்வு கொடுத்த மகிழ்ச்சி கமலசெல்வராஜின் வாழ்வில் நிலைபெற, இப்போது இரண்டு குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக விளங்கி வருகிறார். வீட்டிலேயே பரதம் சொல்லிக் கொடுத்து வருகிறார் மினி.
"சொல்லுவது எல்லோருக்கும் மிகவும் சுலபம்; சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்" என்ற கவிதை வரிகளுக்கு ஏற்பவே வாழ்பவர்கள் மத்தியில், சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்பவர் தான் கமல செல்வராஜ். எம்., எம்.ஃபில், எம்.எட், டி.ஜே என பல பட்டங்கள் பெற்றிருக்கும் இவர், இப்போது படந்தாலுமூடு பகுதியிலுள்ள பிஎட் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முகத் திறமை இவருக்கு உண்டு. இவரது கவிதை மற்றும் கட்டுரைகள் நூலாக்கம் பெற்றிருக்கிறது.இவரது படைப்புகள் மீது ஆய்வு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் மேலாக இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பே தன் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்திருக்கிறார் கமல செல்வராஜ். தன் காலத்துக்குப் பிறகு தன் உடல் பாகங்களால் பல உயிர்கள் பிழைத்திருக்கும் என்று நினைக்கும் போது மனசுக்கு நிம்மதியாக இருப்பதாக உணர்கிறார் கமலசெல்வராஜ். இப்படிப்பட்ட சேவை மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் கமலசெல்வராஜ்!
 

No comments:

Post a Comment