காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும்.
January 11, 2020 04:08:32 pm
முனைவர் கமல. செல்வராஜ்.
மனித வாழ்க்கையில் தொன்மைக் காலம் முதல் நவீனக்காலம் வரை காதல் என்பது மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ஒரு விளையாட்டாக அல்லது பொழுதுபோக்காகக் கொள்ளவில்லை. மிகவும் கண்ணியமாகவும் புனிதமாகவும் கருதப்பட்டது.
காதலைப் பற்றி குறிப்பிடாத இலக்கியங்களுமில்லை, எழுதாதப் படைப்பாளர்களுமில்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் முண்டாசுக் கவிஞன் பாரதி கூட காதலைப் பற்றிக் கூறும் போது;
“காதல் காதல் காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்.” என்கிறார்.
சங்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலும் காதலின் நீக்கும் போக்கும் கவனிக்கத் தக்கது. அந்த வகையில் சங்ககால இலங்கியங்களில் காதலை எப்படி உளவியலோடு ஒப்பிட்டுப் படைத்துள்ளார்கள் என்பதுதான் இக்கட்டுரை.
காதலுக்கே இலக்கணம் வகுத்தப் பெருமை தமிழின் முதுபெரும் இலக்கண நூலாகியத் தொல்காப்பியத்திற்கு உள்ளது. அந்நூலில் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடும் போது;
“மக்கள் நுதலிய அகன்ஐந்தினையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்” என்கிறார்.
பொதுவாக நாம் சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் போது, அங்கே இருக்கும் கட்டடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், பாறைகள், பெரிய பெரிய மரங்களில் கூட சில ஆண்களின் பெயர்களும் பெண்களின் பெயர்களும் அருகருகில் எழுதப்பட்டிருக்கும். போதாக்குறைக்கு அதன் அருகில் காதலின் அடையாளத்தைக் குறிக்கும், இதயத்தின் படங்களும் வரையப்பட்டிருக்கும். அது யாருடையப் பெயர் என்று பார்த்தால் ஒரு காதலன் காதலியின் பெயராக இருக்கும்.
இதயத்தில் இதமாக வைத்திருக்க வேண்டிய காதலன் காதலியின் பெயர்களை இப்படி பொதுவான இடங்களில் எழுதி வைத்து போலித்தனமானக் காதலை வெளிப்படுத்தும் காதலர்களுக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கைதான் தொல்காப்பியரின் காதல் பற்றிய இந்த வரையறை.
ஏன் காதலிக்கும் போது காதலன், காதலிப் பெயரைக் கூறக் கூடாது? அதில் என்ன தவறு? என்னும் வினாக்கள் எழுவது நியாயமே. காதலிக்கும் காலத்தில் காதலர்களின் பெயர்கள் வெளிப்பட்டால் அந்தப் பெயர்களை வைத்தே அவர்கள், மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இதனால், அவர்கள் செல்லும் இடமெல்லாம் மன உளச்சலுக்குள்ளாவார்கள். அதனால், அவர்களின் காதல் தடைபட்டுப் போவதற்கு அல்லது அவர்கள், தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்வதற்கான சூழல் உருவாகும்,
இதனால் அவர்களின் பெயரைச் சுட்டாமல் இருவருக்கும் தலைவன், தலைவி என்ற மிக உன்னதமானப் பொதுப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. இலக்கியத்தில் காதலுக்குக் கூட உளவியல் ரீதியிலான கண்ணியம் கட்டிக்காக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு அற்புதமானது.
கண்டதும் காதல்…….கூடியதும் பிரிவு… என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பண்டைய தமிழர்களின் காதல் பண்பாடு எப்படி இருந்தது என்பதற்கு இதோ இன்னும் ஓர் அற்புதமான சான்றாதாரம்.
ஒரு தாய் தன் இல்லத்திற்கு அப்பால் ஒரு புன்னை மரத்தை நட்டு, தினமும் அதற்கு நீரூற்றி அது ஒரு மரம் என்றும் பாராமல் அதோடு கொஞ்சிப் பேசி வளர்க்கின்றாள். அதனை, தனது சிறு வயது மகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறாள். ஆண்டுகள் சென்றது, அந்தச் சிறு புன்னை, ஒரு பெரிய மரமாக வளர்ந்து கிளைகள் படர்த்தி பலருக்கும் நிழல் தரும் ஓர் இயற்கைக் குடைபோல் மாறிவிட்டது. அப்புன்னை எப்படி வளர்ந்து பெரிய மரமாகியதோ அதைப் போன்று அந்தத் தாயின் சிறுபிள்ளையும் வளர்ந்து மணவாட்டிப் பருவம் அடைந்து விட்டாள்.
இப்பொழுது அந்த மகள் ஓர் இளைஞனுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் படர்ந்து விரிந்து நிற்கும் அந்தப் புன்னை மரத்தின் அருகில் நின்று காதல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
திடீரென அந்தக் காதல் தலைவிக்கு ஒரு தயக்கமும் நாணமும் தானாக வந்து விட்டது. உடனே அவள் நினைத்துப் பார்க்கிறாள். “ஐயகோ! இது நம் தாய் நட்டு நீரூற்றி வளர்த்த மரம் அல்லவா? அப்படியென்றால், இது நமக்கு தமக்கை உறவன்றோ? தமக்கையின் முன்னின்று எப்படிக் காதல் விளையாட்டு விளையாடுவது?’ என்று நாணிக்கோணி அங்கிருந்து ஓடியே விடுகிறாள். இதனை,
“விளையாட்டு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப,
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று.
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்மா! நாணுதும், நும்மொடு நகையே”
என சங்க இலக்கியமான நற்றிணை நூலில் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பாடலானது, நவீன காலத்தில் கண்டதும் காதல் கொண்டு, கடற்கரையிலும், ஐஸ்கிரீம் கடையிலும், சுற்றுலாத் தலங்களிலும், பலரும் பயணிக்கும் பேருந்துகளிலும் அமர்ந்து கண்ணாமூச்சி விளையாடும் கண்ணியமில்லாப் போலி காதலர்களுக்கு ஒரு சாவு மணியாகும்.
இங்கே ஒரு மரம் என்பதல்ல பொருள்; ஒரு மனம் என்பதுதான் மையம். எதை எப்படி அணுக வேண்டும் என்ற பண்பாட்டை, நாகரிகத்தையன்றோ இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
காதல் ஒரு போதும் காமத்திற்கு இச்சையாகக் கூடாது. அது அன்புக்கு மட்டுமே அடையாளமாக வேண்டும் என்ற உளவியல் உண்மை அன்றோ இங்கே வெளிப்படுகிறது. சங்ககாலத்தில் கூறப்பட்டுள்ள இந்த காதல் நாகரிகத்தை நவீன காலத்திலுள்ள காதலர்களும் கடைபிடித்தால் காதலால் நம்நாட்டில் ஏற்படும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள் காணாமல் போகும். கூடவே, காதலர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக : drkamalaru@gmail.com )
No comments:
Post a Comment