Sunday, 9 August 2020

பொது முடக்கத்தால் உறவு முரண்பாடு: கவனம் தேவை பெற்றோர்களே!

 

பொது முடக்கத்தால் உறவு முரண்பாடு: கவனம் தேவை பெற்றோர்களே!




  ietamil E Journal Published: August 8, 2020, 

முனைவர் கமல. செல்வராஜ்

எல்லா வருடமும் ஏப்ரல் மாதம் கடைசியில் பள்ளி இறுதித் தேர்வு முடிந்து, மே மாதம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு மாத காலம் முழுமையாகப் பள்ளிகளுக்கு விடுமுறைக் கிடைக்கும். அதன் பிறகு ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாம் தேதியிலிருந்து புதியக் கல்வியாண்டுத் தொடங்கி விடும். இது காலாகலமாக நம் நாட்டில் நடந்து வரும் வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு நம் நாட்டில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளன. ஏப்ரல் மாதத்தில், தேர்வு நடக்கவில்லை, ஜூன் மாதத்தில் பள்ளி திறக்கவுமில்லை. இது அனைத்துத் தரப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் எப்பொழுது பள்ளி இறுதித் தேர்வு முடியும், உறவினர்களின் வீட்டிற்கு விருந்துக்குப் போகலாம் என ஒவ்வொரு மாணவனும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டே இருப்பான். கூடவே பிள்ளைகளின் பெற்றோரும், பிள்ளைகளுக்கு விடுமுறைக் கிடைத்து விட்டால், பிள்ளைகளுடன், தங்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழலாம் என்ற ஏக எண்ணத்தில், அந்த விடுமுறையை எதிர்நோக்கி இருப்பார்கள்.


உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விட்டால் பிள்ளைகளுக்குக் குதூகுலம்தான். எனென்றால் அங்கு அவர்களுக்குக் கிடைப்பது, தினமும் அறுசுவை விருந்து மட்டுமல்ல பல்வேறு விளையாட்டுகளை, கூடியாடிக் கொக்கரித்து, ஆரவாரித்து விளையாடுவதற்கான நல்ல நண்பர்களும் கிடைத்து விடுவார்கள்.

மே மாதம் எப்பொழுது தொடங்கியது, எப்படி முடிந்தது என்றே நினைத்துப் பார்க்க முடியாதப்படி நாள்கள் கடந்து போகும். விருந்து வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி என எல்லோரும் போட்டிப் போட்டுப் புத்தாடை எடுத்துத் தருவது, புத்தாண்டில் பள்ளிக்குப் போகும் போது புத்தகம் வாங்க பணம் தருவது என எல்லாமே மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக இருக்கும்.

ஜூன் மாதம் பள்ளித் திறக்கும் பொழுது பருவ மழையும் பொழியத் தொடங்கும். புத்தாடை உடுத்து, புதியப் புத்தகங்களுடன் பெரும்பாலான நாள்கள் நனைந்து கொண்டே பள்ளிக்குப் பிள்ளைகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்வார்கள்.

அப்பொழுதெல்லாம், பள்ளிக்குச் செல்லும் போது மழை பொழிந்தால், இப்பொழுதுள்ள பிள்ளைகள் கொண்டுச் செல்லும் விதவிதமான வண்ண வண்ணக் குடைகளெல்லாம் இருக்காது. பெற்றோர்கள், பெரிய வாழையிலை, சேம்பிலை, பனை ஓலையில் செய்த தலைக்குடை போன்றவற்றைக் கொடுத்து அனுப்புவார்கள். அவற்றுடன் பாதி நனைந்தும் நனையாததுமாகப் பெரும்பாலான நாள்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டி வரும். அந்த நினைவுகளெல்லாம் இன்றும் வயதானவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல, மழையும் வெயிலும் பிள்ளைகளுக்கு ஒரு பொருட்டல்ல. வீட்டின் வாசலில் பள்ளி வாகனங்கள் வந்து காத்து நின்று, பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்றன. காலம் அப்படி மாறிவிட்டது.

கொரோனா தந்த விடுமுறை:

இந்த ஆண்டு கொடியக் கொரோனா தொற்றினால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஏப்ரல் மாதம் நடக்க வேண்டியப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வருப்பு வரை நடத்தாமலே ரத்தாக்கி விட்டார்கள். இதனால் தேர்வில் வெற்றியா? தோல்வியா? என்ற பயம் இல்லாமலானது. தேர்வில் அதிக மார்க் கிடைக்குமா? இல்லை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் போனது.

மே மாதம் மட்டும் கிடைக்க வேண்டிய விடுமுறைக்குப் பதில் மார்ச் மாதத்திலிருந்தே நீண்ட விடுமுறை கிடைத்து விட்டது. ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்க வேண்டியப் பள்ளிகள் இன்னும் திறக்கவேயில்லை.

இவையெல்லாம் கிடைத்தும் பிள்ளைகளின் மனதிற்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் உண்டா? என்றால் அவை எதுவுமே இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. ஒரு மாதத்திற்குப் பதில், நான்கு மாதங்கள் விடுமுறை கிடைத்தும், ஒரு நாள் கூட உறவினர்கள் வீட்டில் சென்று விருந்து உண்பதற்கு முடியவில்லை. உறவினர்களோடு மட்டுமல்ல அடுத்த வீட்டிலுள்ளப் பிள்ளைகளோடு கூட விளையாடி மகிழ்வதற்கான வாய்ப்பில்லை.

தினம் தினம் பேசிப்பழகி வந்த உற்ற நண்பர்களைப் பார்ப்பதற்கும், அவர்களிடம் மனம் திறந்து பேசுவதற்கும் முடியவில்லை. கொரோனாவினால் லாக்டவுண் அறிவிக்கப் பட்டதினால் வீட்டைவிட்டு வெளியே இறங்க முடியாதப் பரிதாபமான நிலைக்குப் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு பிள்ளையும் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளால் பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பிள்ளைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததும், தங்களது நண்பர்களைச் சந்திக்க முடியாததும் மனதிற்குள்ளே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்தி விடுவதற்காக, இரவிலும் பகலிலும் அதிக நேரம் தூங்குகின்றனர். மட்டுமின்றி சில பிள்ளைகள் டி.வி. பார்ப்பதிலேயே தங்களின் முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளிலுள்ளப் பிள்ளைகள் நேரம் விடிவதும் இருட்டுவதும் தெரியாமல் செல்போனிலேயே தங்களின் நேரத்தை வீணடிக்கின்றனர். பிள்ளைகளின் இது போன்ற செயல்பாடுகள், பெரும்பாலான பெற்றோரால் சகித்துக் கொள்வதற்கு முடியவில்லை. அதனால் பிள்ளைகளை அவர்கள் சில நேரங்களில் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.

அப்பொழுது பிள்ளைகள், தங்களின் பெற்றோரிடத்தில், ‘நான் இவற்றைச் செய்யாமல் வீட்டுக்குள்ளே இருந்து வேறு என்ன செய்ய வேண்டும்’ என எதிர் கேள்வி கேட்கின்றனர். இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதமும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்படியாமையும் நடக்கின்றன. இவை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தி சில நேரங்களில் அவை குடும்ப வன்முறைகளாகக் கூட மாறுகின்றன.

இணையவழித் தீமை:

நிலைமை இப்படியிருக்க தற்பொழுது பெரும்பாலானத் தனியார்ப் பள்ளிகள் எல்.கே.ஜி, யு.கே.ஜி. என அனைத்து நிலைப் பிள்ளைகளுக்கும் இணையவழிக் கல்வியைத் தொடங்கியுள்ளனர். இக்கல்வி முறை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படுகிறதா? என்றால் அதுவும் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரளவுக்கு வசதிபடைத்த வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் இருக்கும். மற்ற வீடுகளிலுள்ளப் பிள்ளைகளுக்கு அந்த வசதியிருக்காது. இரண்டு வசதிகளும் இருந்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்தில் இன்டெர்நெட் இணைப்பு இருக்காது. அதனால் அவர்கள் இணையவழிக் கல்வியில் இணைந்திருந்துப் படிப்பதற்கு முடியாது. இதுவும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நிலைமை இப்படியிருக்க சில பிள்ளைகள் இணையவழியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர்கள் நடத்தும் பாடத்தைக் கவனிக்காமல், இணையதளத்திலுள்ள ஆபாசப் படங்களைப் பார்ப்பதையும், தற்கொலைக்குத் தூண்டும் அளவிலான விளையாட்டுகளை விளையாடுவதாகவும் பெற்றோர் மத்தியிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவையும் வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுக்கு உலை வைப்பதாக இருக்கின்றன.

மட்டுமின்றி சில பள்ளிகள் காலை முதல் மாலை வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்தி, அதன் பின் தினமும் தேர்வுகள் நடத்தி பிள்ளைகளுக்கு ஓய்வே இல்லாமல் பாடாப்படுத்துகின்றன. இதுவும் பிள்ளைகளுக்கு மன, உடல் ரீதியிலான பிரச்னைகளுக்கு வித்திடுகின்றன.

எனேவ இணைய வழியாகப் பள்ளிகள், வகுப்புகள் நடத்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கூடவே பிள்ளைகள் வீட்டில் இருந்து இணையவழிக் கல்விக் கற்கும் போது பெற்றோர்கள் முழுமையாக அவர்களைக் கண்காணிக்க வேண்டும். என்றால் மட்டுமே பிள்ளைகள் இந்த இணையவழிக் கல்வி மூலம் வழி தவறிப் போகாமல் பாதுகாப்பதற்கு முடியும்.

பொற்றோரின் கடமை:

பிள்ளைகள் பள்ளிக்குப் போகாமலும், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்கு முடியாமலும் வீட்டிற்குள்ளையே அடங்கி, பெற்றோரின் அரவணைப்பில் மட்டுமே இருக்கும் இவ்வேளையில், அவர்களுக்குள் பல்வேறு விதமான மன அழுத்தங்களும், குமுறல்களும் இருக்கும். அவற்றையெல்லாம் பெற்றோர்கள் ஒரு உளவியல் வல்லுநரைப் போன்று உணர்ந்து, அவர்களுடன் பழக வேண்டும்.

அவர்களுடன் அன்பான வார்த்தைகள் மட்டுமே பேசுதல், வீட்டிற்குள்ளே எப்படியெல்லாம் அவர்கள் பொழுதைப் போக்குவதற்கு முடியுமே அவற்றிற்கு எல்லாம் பெற்றோரும் ஒத்துழைத்தல், ஒரு குறிப்பிட்ட நேரம் அவர்களுக்கு செல்போனில் பேசுவதற்கும், டி.வி. பார்ப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பிறரிடத்தில் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளின் குறைகளைக் கூறாமலும், அவர்களைத் தரம் தாழ்த்திப் பேசாமலும் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் பிள்ளைகள் என்னதான் தவறுகள் செய்தாலும் அவற்றை நல்ல பொறுமையுடனும் ஞானத்துடனும் கையாளுவது பெற்றோரின் தலையாயக் கடமையாகும். ஆனால் அவர்கள் என்னதான் அடம் பிடித்தாலும் தேவையின்றி வெளியே சென்று ஊர்சுற்றுவதற்கும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்கும் அனுமதிக்காதீர்கள். அது கொரோனாவின் கொடியத் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

எது எப்படியானாலும் இந்நேரத்தில் பள்ளிகள் திறப்பது வரை பிள்ளைகளைப் பேணிக்காப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.

( கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

(இக்கட்டுரை ietamil E Journal இல் 8-8-2020 அன்று பிரசுரமானது.)


Wednesday, 29 July 2020

உயிர்களுக்கு விலை பேசல் தகாது.

உயிர்களுக்கு விலை பேசல் தகாது.


Published: July 25, 2020, ietamil E Journal.
சிறுவயதில் கிராமப்புறங்களில் வீட்டின் முற்றத்தில் வட்ட வடிவில் சுற்றியிருந்து “குலேகுலே முந்திரிக்கா… நரியே நரியே ஓடிவா…” எனப் பாடிப்பாடி ஒரு விளையாட்டை சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடுவார்கள். அந்தப் பிள்ளைகளின் விளையாட்டு, பார்ப்பவர்களைப் பரவசமூட்டுவதாக இருக்கும். பிள்ளைகளுக்கோ மிகவும் குதுகலமாக இருக்கும்.
அன்றைக்கு அந்தக் குழந்தைகள் விளையாட்டிற்காகப் பயன்படுத்திய அந்தக் “குலேகுலே முந்திரிக்கா…” என்றப் பாடல் இன்றும் பெரியவர்களின் காதுகளில் ரீங்காரமாக ஒலித்து, ஒரு வித ஆனந்தத்தைத் தந்து கொண்டேயிருக்கும். ஆனால் அந்த “குலேகுலே” என்ற பாடல் இன்று நிஜமாகவே ஊரெங்கும் “கொலை கொலை” என உருமாறி மக்கள் மத்தியில் ஒருவித ஐயப்பாட்டை உருவாக்கியிருப்பதுதான் வேதனைக்குரியது.
இன்றைக்குச் சமூக ஊடகங்களை இரண்டேயிரண்டுச் செய்திகள்தான் அபகரித்துள்ளன. அவற்றில் ஒன்று கொடிய கொரோனா மற்றொன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து, எல்லையான கன்னியாகுமரி வரை தினம் தினம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் ஆகியன.
அவற்றில் கொலைகளைப் பொறுத்தவரை, தள்ளாடும் முதியவர்களிலிருந்து, பச்சிளம் குழந்தைகள் வரை சில காமக்கொடூரர்களின் கழுகுப் பிடிக்குள் சிக்குண்டு மூச்சற்றுப் போகின்றன.
அதனால், தற்போதெல்லாம் காலையில் எழுந்ததும் பத்திரிகைகளைப் படிப்பதும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதும் ஒருவிதப் பதற்றத்தைத் தருகின்றனவே தவிர, மனதிற்கு அமைதியான, அறிவார்ந்தச் செய்திகள் என்பவை அருகியேயுள்ளன.
இப்படி அநியாயமாகக் கொலைகள் நடப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம், இந்தக் கொலைகளின் பின்னணியில் நடக்கும் போராட்டங்களின் போக்குக் கொலையை விட அநியாயமாகயுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஒரு தந்தை – மகன் கொலை, இந்த நாட்டையே உலுக்கியுள்ளச் சம்பவம் அனைவரும் அறிந்ததே.
அந்தக் கொலையின் அச்சம் இன்னும் மக்களின் மனங்களிலிருந்து மாய்வதற்குள், அடுத்து, அதே சாத்தான்குளத்தில் ஒரு எட்டு வயது சிறுமியை கொடூரமாகக் கொலை செய்திருப்பதும், அதன் பின்னணியில் நடந்திருக்கும் போராட்டங்களும், அதற்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் நிவாரணமும், தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக மாறிவிடுமோ என்ற கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றதும், சிறுமி பக்கத்து வீட்டில் டி.வி. பார்ப்பதற்குச் சென்றுள்ளார். அன்று மதியம்  சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தப் போது தனது மகளைக் காணவில்லை. செய்தி காட்டுத் தீ போல் ஊர் முழுக்கப் பரவ ஊரார் சேர்ந்து வழக்கமானத் தேடுதலுக்குப் பிறகு, சிறுமி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு ஒரு பெரிய தண்ணீர் கேனுக்குள் அடைக்கப்பட்டு அருகிலுள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்திருந்ததைக் கண்டுப்பிடுத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், சிறுமி டி.வி பார்க்கச் சென்ற வீட்டிலுள்ள இளைஞன் மூத்தீஸ்வரனும் அவது நண்பனும் சேர்ந்து கொலை செய்ததுத் தெரிய வரவே அவர்கள் இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
அதன் பிறகு சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த சிறுமியின் உறவினர்களும் சில அரசியல் கட்சியினரும் நடத்தியிருக்கும் கூத்துதான் அனைவரின் மனதையும் அழுத்துகிறது. டாக்டர்களின் வழக்கமான நடைமுறைக்குப் பிறகுச் சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போது, உறவினர்களும், சில அரசியல் கட்சிகளும் சேர்ந்து, சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயும், வீடுகட்டுவதற்கு மூன்று சென்ட் நிலமும் வழங்க வேண்டும் என்றால்தான் உடலை வாங்குவோம் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இரண்டு நாள்கள் சிறுமியின் உடலை வாங்காமல் பேச்சுவார்த்தை, போராட்டம் எனத் தொடர்ந்துள்ளது. அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், உறவினர்களிடமும் போராட்டக்காரர்களிடமும் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுமியின் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியும், மூன்று சென்ட் நிலத்தில் பசுமை வீடு கட்டிக்கொடுக்கப்படும். கூடவே இந்த சிறுமியின் பத்து வயதான அண்ணனின் படிப்பு செலவு அனைத்தும் அரசு ஏற்கும் என வாக்குறுதி அளித்தப் பிறகே சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கே எழுப்பப் படும் கேள்வி, சிறுமியைக் கொலை செய்தக் கயவர்களைப் போலீசார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் அவர்களைத் தூக்கிலிடுங்கள் என்று போராட்டம் நடத்தியிருக்கலாம். அது நியாயமாக இருந்திருக்கும். அதைத் தவிர்த்து ஓர் உயிருக்கு ஒரு கோடி ரூபாயும் மூன்று சென்ட் நிலமும் கேட்டு போராட்டம் நடத்தியிருப்பதும், அதற்காக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாதம் ஐயாயிரம் ரூபாயும், மூன்று சென்று நிலமும் பசுமை வீடும், அண்ணனின் படிப்பு செலவும் ஏற்றிருப்பதும் வருங்காலத்தில் இது போன்ற கொடூரச் செயலுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகாதா?
மேலும், சில அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற கொலைகள் நடக்கும் போது அவர்களின் குடும்பங்களுக்கு லட்சக்கணக்கானப் பணத்தை நிவாரணமாக வழங்கி நல்ல பிள்ளை பெயர் வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற கொலைகள் நடக்காமல் இருப்பதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டுமே தவிர இதைப் போன்று லட்சங்களைக் கொடுத்துக் கொடையாளிகளாவது, கொலையாளிகளுக்கு மீண்டும் மீண்டும் வளமாகுமே தவிர, இப்படிப்பட்ட அசம்பாவிதங்களுக்கு ஒரு போதும் தீர்வாகாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் படுகொலைகளுக்கும், பணம், சொத்துக்காக நடைபெறும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசும், நீதித்துறையும் புதியக் கடுமையானச் சட்டங்களை இயற்ற வேண்டுமே தவிர, இதுபோன்ற தவறான நிவாரணங்கள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர வேண்டும்.
முனைவர் கமல.செல்வராஜ்,
அருமனை. பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com

Monday, 20 July 2020

கூச்சமின்றி உறவுகளை அழைத்திடுவோம்.

கூச்சமின்றி உறவுகளை அழைத்திடுவோம்


 July 20, 2020.
முனைவர் கமல.செல்வராஜ், எழுத்தாளர்.
தமிழகக் கலாச்சாரப் பண்பாட்டின் ஆணிவேராக இருப்பது குடும்ப உறவு முறைகளாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறவு முறையில் அழைக்கப்படும் போதுதான், அவர்களின் அன்பும் பாசமும் மாறிமாறி வெளிப்பட்டு ஒருவருக்கொருவர் அரவணைப்பு அரணாக இருப்பார்கள்.
ஆனால், இன்று ஆங்கிலப் பள்ளிகளின் அதிகரிப்பும், மக்களிடையே உருவாகியுள்ள ஆங்கில மோகமும் தமிழகத்திலுள்ள குடும்ப உறவு முறைகளைச் சின்னாபின்னமாக்கியுள்ளன. உதாரணமாக மாமா – மாமி, பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி என அழைக்கும் அற்புதமான இரத்தப்பந்த உறவுகளெல்லாம், இன்று ஆங்கிலத்தில் அனைவரையும் ஒற்றை வார்த்தையில் அங்கிள் – ஆன்ட்டி என்று அழைக்கப்படும் நிலைக்கு மாற்றியுள்ளன.
அதைப்போன்றே தாத்தா – பாட்டி என அழகானத் தமிழில் அழைத்து வந்த உறவுமுறை இன்று ஆங்கிலத்தில் கிரான்ட்ஃபா – கிரான்ட்மா எனத் திரிந்துள்ளன. இதைவிடக் கொடுமை இதயங்களை இணைக்கும் அம்மா – அப்பா என்ற உறவு கூட, டாடி – மம்மி எனப் போலியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் குடும்ப உறவுமுறைகளில் பலவீனத்தை உருவாக்கி, உறவுகளுக்கிடையே தகாத உறவுகளுக்கு வழிவகுத்து வருகின்றன என்பது வேதனைக்குரியச் சீரழிவு.
எனவேதான், மீண்டும் பழைய உறவு முறைகளை இனிவரும் இளையத் தலைமுறைகள் அறிந்து கொண்டு, அவற்றையே பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குழந்தைப் பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.
அம்மா அப்பா உறவேதான்
அவர்கள் உதிரம் நாமேதான்
மூத்தோர் இருவர் உள்ளனரே
தாத்தா பாட்டி என்போமே!
O
தாத்தா பாட்டிப் பெற்றவர் ஐவராம்
இடையில் பிறந்தது அப்பாவாம்
மூத்தவர் இருவர் பெரியப்பா
இளையோர் இருவர் சித்தப்பா!
O
பெரியம்மா சித்தி என்போமே
அம்மா முன்பின் பிறந்த பெண்களையே
மாமா என்றே அழைத்திடுவோம்
அம்மாவோடுப் பிறந்த ஆண்களையே!
O
அத்தை மாமி என்போமே
மாமன் மனைவி அவர்தாமே!
மச்சான் மையினி என்போமே
அவர் வழிப் பிறந்தோரை!
O
கணவன் மனைவி இருவராம்
ஆசைப் பிள்ளைகள் நால்வராம்
மூத்தோர் அண்ணன் அக்காவாம்
இளையோர் தம்பித் தங்கையாம்!
O
உறவே நமக்குப் பலமாகும்
அதுவே நமக்கு அரணாகும்
கூச்ச மின்றி அழைத்திடுவோம்
அச்ச மின்றி வாழ்ந்திடுவோம்!
முனைவர் கமல. செல்வராஜ், எழுத்தாளர்
அருமனை.பேச: 9443559841
பகர: drkamalaru@gmail.com
(ietamil E Journal இல் 20 - 07-2020 அன்று பிரசுரமானது.)

Sunday, 5 July 2020

உலகத்தைப் பார்க்க முடியாதவரை உலகமே பார்க்கிறது.HE CANT BUT THE WORLD CAN...

யார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது?

யார் திருஷ்டிப்பட்டது தமிழகப் போலீஸ் மீது?


July 04, 2020 

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஊருக்குள் வீடுகளில் குழந்தைகள் கொழுகொழுவென வளர்ந்திருக்கும், எல்லோரும் தூக்கியெடுத்துக் கொஞ்சி விளையாடுவார்கள். ஆஹா… ஓகோ… என பாராட்டி மகிழ்வார்கள். ஏதோ காரணத்தினால் குழந்தைக்குக் கொஞ்சம் உடல் பலவீனம் அடைந்து விட்டால் ‘எந்தப் பொல்லாதவங்க திருஷ்டிப் பட்டதோ, கொழுகொழு என்றிருந்த குழந்தை இப்படி வாடி வதங்கி விட்டதே, திருஷ்டிப் போட்டவங்க கண்ணுக் கெட்டுப் போகாதா?’ என வேண்டாக் குறைக்குச் சாபம் இடுவார்கள்.
அது போன்ற ஒரு நிலைதான் தற்போது தமிழகத்திலுள்ள போலீசாருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கோரக் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ்காரர்கள் அனைவரும் வழக்கமான விடுமுறையின்றி, போதியத் தூக்கமின்றி, சுவையான உணவின்றி, ஓய்வின்றி அல்லும் பகலும் அயராதுப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் போலீஸ்காரர்களின் பணியென்பது, முதல் முதலில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மிகவும் அபாரமாக இருந்தது. ஏனென்றால், இரவு பகலாக ரோடுகளில் நின்று வாகனங்களைத் தடுப்பது, சேதனையிடுவது என இமையசைக்கும் நேரம் கூட ஓய்வின்றி உழைத்தார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதிலும் தெருவோரங்களில் கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நின்று அவர்கள் ஆற்றியப் பணி எவராலும் எக்காலத்திலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது.
லாக்டவுன் நேரத்தில் வெளியே வந்தவர்களிடமிருந்து, போலீஸ்காரர்கள் அபராதம் விதித்த போதும், அவர்களின் கார், பைக், ஆட்டோ போன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்தபோதும், இளைஞர்களை நடுரோட்டில் நிறுத்தித் தோப்புக்கரணம் போட வைத்தபோதும், அவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து ரோட்டோரத்தில் நிறுத்தி கொரோனா தேர்வு எழுதச் சொன்னபோதும் ஒட்டுமொத்த மக்களும் போலீஸ்காரர்களுக்குத் துணை நின்றார்களே தவிர, அவர்களைக் குறை கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அந்த நேரத்தில், போலீஸ்காரர்கள் இப்படிப்பட்ட நூதனமாக நடவடிக்கைகளைக் கையாண்டதினால்தான் தமிழகத்தில் ஓரளவுக்காவது லாக்டவுனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.
அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக லாக்டவுனை அறிவித்தபோது, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கூடவே காவல் துறையினருக்கும் சேர்த்து கைதட்டுங்கள்… மணியடியுங்கள்… எனக் கோட்டுக் கொண்டார். மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றைச் செய்தார்கள். அது அவர்களுக்கு மிகுந்த கௌரவத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது.
மேலும், தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் எனப் பலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டபோது அவர்களுக்காகப் பரிதாபமும் அனுதாபமும் பட்டார்களே தவிர, அவர்களைப் பழிக்கவோ, இழிக்கவோயில்லை. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த போது அத்தனை மக்களும் தங்களின் இல்லத்திலுள்ள ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பைப் போல் கருதி கவலைப்பட்டார்கள். ஊர் ஊராக, தெருத்தெருவாக அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பேனர்களை வைத்து மரியாதைச் செலுத்தினார்கள்.
இப்படியெல்லாம் தமிழகப் போலீசாரைக் கொண்டாடிய மக்கள், இன்று சிறு குழந்தை முதல் தள்ளாடும் கிழடுகள் கூட ‘சீ…. என்னடா போலீஸ்’? என்று இளக்காரமாகப் பார்க்கும் அளவிற்கும், ‘இவர்களெல்லாம் மனிதர்களா’? என கேட்கும் அளவிற்கும் ஆளாகியுள்ளார்கள். இதற்கெல்லாம் என்னக் காரணம்? ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் ‘சாத்தான்குளம்’ தான் காரணம். சொந்தமோ, பந்தமோ ஏதொன்றும் இல்லாத நிலையிலும் அந்தத் தந்தை, மகன் கொடூரக் கொலை, கேட்பவர்களின் இதயங்களை நொறுக்கியது. அழுவதற்குத் தெரியாதவர்களையும் ஓ… எனக் கதறியழ வைக்கிறது. ஏன் இந்தக் கொடூரம்? எதற்கிந்த அநியாயம்?
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை வெடிகுண்டால் சுக்குநூறாக வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்தவர்கள் கூட தண்டனைப் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயிலில் இருந்தாலும் உயிருடன் இருக்கிறார்களே, அதைவிட ஒரு பெரியக் குற்றத்தையா இந்த ஜெயராஜூம், பென்னிக்சும் செய்திருக்க முடியும்?
எப்படிப்பட்டத் தாங்க முடியாத தவறு செய்திருந்தாலும், போலீஸாரையே எதிர்த்துத் தாக்கியிருந்தாலும், அவர்களின் கோபம் தீரும் மட்டும் இருவரையும் அடித்து நொறுக்கி, துவைத்தெடுத்து உயிருடன் விட்டிருக்கலாம். வாழ்நாள் முழுதும் அவர்கள் இருவரும், ‘போலீஸை எதிர்த்தால் இதுதான் கதி’ என்ற நினைப்பிலேயே வாழ்ந்து இறந்திருப்பார்கள். உறவினர்களும் ‘சரி உயிரோடாவது விட்டு வைத்தார்களே என நிம்மதியடைந்திருப்பார்கள்.
இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இரண்டோ மூன்றோ போலீஸார் செய்த கோரக் கொடுமையினால், ஒட்டுமொத்தத் தமிழகப் போலீஸாரும், இந்த நாட்டின் முன் தலைகுனிய வேண்டியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம், அசிங்கம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் பூதாகரமாகி, தமிழகத்திலுள்ள தலைவர்கள் மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ளத் தலைவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையினரும் கண்டனமும் வருத்தமும் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகூட தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி, போலீஸ் செய்தத் தவறுக்கு, அதே போலீஸில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் சாட்சியாக மாறியிருப்பதும், சில போலீஸ் அதிகாரிகள் அப்ரூவர்களாக மாறியிருப்பதும் இதுவே முதல் முறையாகத்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இதே வேகத்தில் சென்று, குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை வழங்கினால், தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தப் போலீஸார் மீதும் இருக்கும் அவப்பெயர் நீங்கி விடும். ஒரு துறையில் பணியாற்றுபவர்களில், ஒருசிலக் கறுப்பாடுகள் செய்யும் தவறுகளுக்கு, அந்தத் துறையில் பணியாற்றும் ஒட்டு மொத்தப் பணியாளர்களையும் குற்றவாளிகளாக்குவதும், அவர்கள் மீது பழி சுமத்துவதும் ஏற்புடைத்தன்று. அந்த வகையில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த போலீஸ் மீதும் விழுந்திருக்கும் திருஷ்டியைக் களைவது தமிழக அரசு, நீதித்துறை ஆகியோரின் தலையாயக் கடமையாகும். 
 (இக்கட்டுரை 04-07-2020 அன்று ஐ.இ. தமிழ் இணைய இதழில் பிரசுரமானது.)
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841; அணுக: drkamalaru@gmail.com

Monday, 29 June 2020

தேவை பயமுறுத்தல் அல்ல, விழிப்புணர்வு.

தேவை பயமுறுத்தல் அல்ல, விழிப்புணர்வு


முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிக்கு, அவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட, நோயாளிக்குக் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகளே, அவருக்கு தன்னம்பிக்கையை அளித்து பாதி நோயைக் குணப்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. அதைப் போன்று இந்த நேரத்தில் கொரோனா பற்றிய அச்ச உணர்வை அதிகமாக மக்கள் மனதில் விதைக்காமல், அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வைக் கொடுத்து, அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது இருட்டுக்கடை அல்வா. நூறு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது தலைமுறையாக அந்தக் கடையை நடத்தி வந்தவர் ஹரிசிங் அவர்கள். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்டப் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், தன்னால், இனி தனது கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், தனது வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், தன்னிடம் அல்வா வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதே ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
இந்தத் தற்கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பையும், மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தால் மரணம் நிச்சயம் என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். அதைப்போன்று வீட்டிலுள்ள ஒருவருக்கு அல்லது ஓர் இடத்திலுள்ள ஒருவருக்கு இந்தத் தொற்று வந்தால் அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவும் என்ற ஒரு தவறானத் தகவலைப் பரப்பி மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றனர்.
ஆனால், உண்மை அதுவன்று. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றுப் பாதித்தவர்களில் பத்து சதவீதம் பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டுமே இறப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று நம்பிக்கையோடு கூறுகின்றார்கள். இந்த உண்மை நிலை இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லப்படவில்லை.
இதனை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வாக முழுமையாக எடுத்துச் சென்றால், இதுவரை மக்கள் மத்தியில் கொரோனா மரணம் பற்றி தொற்றிக் கொண்டிருக்கும் அச்சம் நீங்கி, இது போன்ற தற்கொலைகள் நடக்காமல் தடுப்பதற்கு முடியும்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றையும் மீறி முதியவர்கள் கூட இந்த நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக, கேரள மாநிலத்தில் 93 வயதான முதியவரும், 88 வயதான அவரது மனைவியும், இத்தாலியில் வசிக்கும் தங்களின் பிள்ளைகளைச் சந்தித்து விட்டு கொரோனா தொற்றுடன் வந்துள்ளனர். ஆனால், கொரோனா சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்து, இப்போது நலமுடன் உள்ளனர். இதற்கும் சவால் விடும் வகையில் கர்நாடக மாநிலத்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதியாகி, பெங்களூரு, அரசு ஆஸ்பத்திரியில் ஒன்பது நாள்கள் சிகிச்சைப் பெற்று நல்ல முறையில் குணமடைந்து, அனைவரையும் ஆச்சரியமூட்டும் விதத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
அந்த மூதாட்டி தான் குணமடைந்ததைப் பற்றிக் கூறும் போது, “நான் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்குக் காரணம், நான் மன தைரியத்துடன் இருந்து, டாக்டர்கள் அளித்த மருந்துகளை அவர்களின் அறிவுரைப்படி எடுத்துக் கொண்டேன்” என மிகவும் ஐஸ்வர்யமானப் புன்னகைத் ததும்பும் முகத்துடன் கூறியுள்ளார். இதைப் போன்ற தன்னம்பிக்கையூட்டும் விழிப்புணர்வுதான் இபோதைக்கு மக்களுக்கு மிகவும் அவசியமாக வேண்டியுள்ளது.
மேலும், இதற்கு முன் இத்தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போது, அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவி, அந்த சுற்றுவட்டாரத்தையே அழித்து விடும் என்ற பீதி மக்கள் மத்தியில் இருந்தது. அதால்தான், சென்னையில் டாக்டர் சைமன் இறந்த பிறகு இரண்டுக் கல்லறைத் தோட்டத்திலும் அவரை அடக்கம் செய்ய விடாமல் மக்கள் பெரும் பிரச்னைகளைக் கிளப்பினார்கள். மட்டுமின்றி சொந்தப் பிள்ளைகள் கூட தங்களின் தந்தையின் உடலை வாங்கி புதைப்பதற்குப் பயப்பட்டார்கள். ஆனால், இப்பொழுது தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை, அவர்களின் உறவினர்களே பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய முன்வருகிறார்கள்.
ஆரம்பத்தில் ஒருவர் இந்தத் தொற்றினால் இறந்து போனால் அவர்களின் உறவினர்களுக்குக் கூட, அதாவது திருமணமான ஒருவர் இறந்து போனால், அவரது மனைவி, மக்களுக்குக் கூட அவரைக்காட்டாமல் சுகாதாரப் பணியாளர்கள் எடுத்துச் சென்று புதைத்து வந்தார்கள். ஆனால், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொற்றினால் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடலை அடக்கம் செய்வதற்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, அவரின் உற்றார் உறவினர்கள் சிலரைப் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர். அந்த நெஞ்சை உருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவையெல்லாம் உரியப் பாதுகாப்புடன் செய்யப்படுவதால் மக்களுக்குள்ளேயிருந்த கொரோனா பற்றிய அச்ச உணர்வுகளைப் போக்கி, அவர்களிடத்தில் ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இவற்றையெல்லாம் விட மக்களிடையே தற்போது தொற்றிக் கொண்டிருக்கும் ஓர் அச்ச உணர்வு என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ சென்றால் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்பதுதான். இதுவும் மக்களைப் பயங்கரமாகப் பீதியடையச் செய்துள்ளது. எனவே மக்களின் இந்த அச்சத்தை நீக்குவதற்கு, இத்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள், அரசு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை, சிகிச்சைப் பெற்றால் அதன் மொத்தச் செலவையும் அந்தந்தப் பாதிப்பாளர்களின் வருமானத்தின் அடிப்படையில் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதிலும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்களைத் தங்க வைக்கும் இடங்களிலுள்ள மக்கள் அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி பொது இடங்களில் தனிமைப்படுத்தும் போது அந்த இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லாமல் இருக்கின்றன. அங்கு அவர்கள் இரண்டு வாரங்களைக் கடத்துவதென்பது கொரோனாவை விடக்கொடுமையாக உள்ளது. இது தனிமைப்படுத்தப் படுவோருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், தனிமைப்படுத்துபவர்களை, அவரவர்களின் வீட்டிலுள்ள வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, அந்தந்த பகுதியிலுள்ள சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பில், அவரவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலாம். இதனால், வீணாகப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கவும் முடியும் கூடவே தனிமைப்படுத்தப்படுவோரின் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.
இவற்றுடன் ஓர் இடத்தில் ஒருவருக்குத் தொற்று வந்தால், அவரை அங்கிருந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு, அந்தச் சுற்றுவட்டாரத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் வரை சீல் வைத்து, அந்தப் பகுதிக்குள் எவரையும் நுழைய விடாமலும், உள்ளே இருப்பவர்களை வெளியே விடாலும் பெரும் கெடுபிடிக் காட்டுவதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை எற்படுத்துவதோடு பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கெடுபிடிகளே சில நேரங்களில் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.
எனவே கொரோனா பற்றிய இந்த அச்ச உணர்வுகளில் இருந்தெல்லாம் மாறி, மக்கள் ஒரு இயல்பான மனநிலைக்கு வருவதற்கும் அவர்களை அவர்களாகவே சுயமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இன்னும் அதிகமான விழிப்புணர்வுகளைக் கொடுப்பதற்கு, அரசும், சுகாதாரத்துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தவிர்த்து, அச்ச உணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.c
(இக்கட்டுரை 29-06-2020 அன்று ஐ.இ. தமிழ் இணைய இதழில் பிரசுரமானது)