ஓர் எழுத்தில் ஓருலகம்
(கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சார்ந்த கவிஞர் சை. சுஜிஷ் அவர்களின் கவிதை நூலான
"ஒற்றை எழுத்து" - ஆய்வுரை.)
தமிழ் இலக்கிய உலகம் பல நூற்றாண்டுகளாகத் தெள்ளத் தெளிந்த நீரோடையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கதை, கவிதை, கட்டுரை, நாடகம் என இதன் நீட்சி அளவிடற்கரியது.
இவற்றில் கவிதையை மட்டும் பல்வேறு காலகட்டத்தில், இலக்கிய உலகிற்குள் புகுந்த கவிஞர்கள், தங்களின் இயல்புக்கு ஏற்ப மாற்றுருவாக்கம் செய்துள்ளனர். ஆயினும் கவிதை, தனது பிரியர்களுக்கு நேற்றும்… இன்றும்… என்றும்… இனிமையான இன்பத்தையும் அருமையான அனுபவத்தையும் நல்கும் அட்ஷயப் பாத்திரமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் கவிஞர் சை. சுஜிஷ் அவர்கள் ஒற்றை எழுத்து என்ற கவிதை நூலுடன் ஓர் இளம் புது வரவாகத் தமிழிலக்கியத்திற்குள் தடம் பதித்துள்ளார்.
இவர் உழைப்பையும் படிப்பையும் இரு விழிகளாகக் கொண்டவர். அதுபோலவே எழுத்தையும் வாசிப்பையும் தனது மூச்சாக நேசிப்பவர். கூடவே இவர் தூரிகைப் பிடித்தால், உணர்ச்சியும் உயிரோட்டமும் மிக்க ஓவியங்களால் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கவும் வல்லவர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அடியேன் உணர்ந்துள்ளேன்.
ஒழுக்கத்திற்கு இவர் இலக்கணமானவர். இதனால் இவரை இந்திய அரசு, லஞ்ச ஒழிப்புத்துறையின் உறுப்பினராக நியமித்துள்ளது. இத்தனைக் குணாதிசயங்களும் நிரம்பிய இவர் குளிர்ச்சியும் எழுச்சியும் மிக்கக் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்குச் சொந்தக்காரர்.
ஒற்றை எழுத்து என்னும் கவிதை நூலை நல்ல வாசகர்கள் ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம். ஆனால், இந்த ஒற்றை எழுத்துக்குள் ஓர் உலகமே உருக்கொண்டுள்ளது என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்கு ஒவ்வொரு வாசகனும் பல மணி நேரம் சிந்தையைச் சிதைத்தாக வேண்டும்.
இவ்வுலகின் முதுகெலும்பாம் விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளிலிருந்து தொடங்கி… ம் என்ற ஒற்றை எழுத்தின் ஆழத்தைப் புரிய வைப்பதில் தொடர்ந்து… கலப்படத்தின் கொடூரத்தை அழுத்தமாகக் கொட்டித் தீர்ப்பது ஈறாக முத்தான முப்பத்தைந்து கவிதைகளைக் கருக்கொண்டுள்ளது கவிஞர் சுஜிஷின் கன்னிக் கவிதை நூலான இந்த
"ஒற்றை எழுத்து".
எதுகையும் மோனையும் மரவுக் கவிதைக்குப் பொருந்துவது.
" ஒற்றை எழுத்து", புதுக்கவிதையின் வடிவமாக இருந்தாலும், எதுகைக்கும் மோனைக்கும் எவ்விதப் பஞ்சமும் இல்லை. அதற்குச் சான்று பகிர்வதுதான் கலப்படம் என்னும் அர்புதமானக் கவிதை.
“மயிர் வெளுத்தக் கிழடுகள் தொட்டு
தளிர் விட்டெழும் மழலைகள் வரை
உயிர் மீட்க உதவிடும் மருந்தில்
திமிர் பிடித்தக் கயவரின் கலப்படம்”
இக்கவிதை எதுகைக்கும் மோனைக்கும் சான்று பகிர்வதோடு மட்டும் நின்று விடவில்லை. கலப்படக்காரர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்திடும் கவிஞரின் அச்சமில்லாத் துணிச்சலுக்கும் சான்றுரைக்கிறது. இதன் மூலம் இவ்விளம் கவிஞனை, முறுக்கு மீசைக்காரன் பாரதியின் வாரிசு என்றுரைப்பதில் தவறில்லை.
“பாம்பறியும் பாம்பின் கால்” என்பதிற்கிணங்க ஓர் இளைஞனால் தான் இன்னொரு இளைஞனின் திறமையை உணர முடியும் என்பதை நியாமாக்கிறார் இக்கவிஞர்.
“மண்ணுக்குள் தள்ளிவிட்டாலும்
மரமாகி எழு…!
தண்ணீரில் மூழ்கடித்தாலும்
முத்தெடுத்து மேலெழு…
உன்னால் முடியும்…!
என்னும் வரிகள் எவ்வளவு உத்வேகமானவை என்பதை ஒவ்வொரு இளைஞனும் உளமார உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொட்டுக்காட்டி, விட்டுச் செல்கிறேன். புத்தகம் முழுமையும் புரட்டிப் படித்தால், ஒரு சக்தி பிறக்கும் நமக்குள்ளே என்பது சத்தியம்.
இக்கவிஞரின் இடைவிடாத எழுத்தும் தொய்வில்லாத வாசிப்பும் எதையும் உற்று நோக்கும் திறனும் எதிர்காலத்தில் தமிழ் தாயின் தவப்புதல்வனாய் உயர்த்தும் என நம்புவோம். அதற்காக இவருக்கு நெஞ்சத்தில் வஞ்சமில்லா வாழ்த்துகளை வாரி வழங்குவோம்.
தொடர்வுக்கு:
7373360535
No comments:
Post a Comment