Monday, 17 September 2018

ஆசிரியர் மாணவர் உறவு : அக்காலம் முதல் இக்காலம் வரை.


ஆசிரியர் மாணவர் உறவு : அக்காலம் முதல் இக்காலம் வரை நீதி                 இலக்கியங்கள் வழி ஓர் ஒப்பீடு.
                                  
                                  
          உலகிலுள்ள மொழிகள் அனைத்ததையும் ஆய்ந்து நோக்கும்கால், அவையனைத்தும் ஆசிரியர், மாணவர் யார் என்பதற்கு விளக்கமளிப்பவையாகவே இருக்கும். ஆனால் ஆசிரியர் மாணவர் என்றால் யார் அவர்களின் பண்பு நலன்கள் என்னென்ன, அவர்களின் உறவு நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சூத்திரம் வகுத்து வைத்திருக்கும் ஒரே மொழி தமிழ் மொழியாக மட்டுமே இருக்கும் என்பது மறுப்புக்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டது.
     
     நீதி இலக்கியங்களில் ஆசிரியர் மாணவர் உறவைப் பற்றி விவாதிப்பதற்கோ, விவரிப்பதற்கோ உட்புகுமுன், தமிழ் இலக்கணத்தில் இவ்விரு உறவுகளையும் விவரிப்பதற்காக வகுத்து வைக்கப் பட்டிருக்கும் நெறிமுறைகளைச் சற்று அலசி ஆய்வது உயர்வானது. 
    
     தமிழ் மொழி, இலக்கிய, இலக்கண நெறிகளுக்குட்பட்ட செம்மொழி. இலக்கணத்தின் நெறி நின்றே இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன. அவ்வகையில் தொல்காப்பியத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும், பவணந்தி முனிவரால் ஆக்கப்பட்ட இலக்கண நூலாகிய  நன்னூல், நல்லாசிரியர், ஆசிரியராகாதவர், மாணாக்கர், மாணக்கரா காதவர், ஆசிரியர் மாணாக்கர் உறவுநிலை ஆகியவற்றிற்குத் தனித்தனியே இலக்கணம் வகுத்தளித்துள்ளது. இது தமிழ் மொழிக்கு மட்டுமே கிடைத்துள்ள மிகப்பெரிய மகத்துவம்.
     
     அவ்வகையில் நன்னூலார், ஆசிரியருக்குரியதாக எடுத்தியம்பும் நூற்பாவை அறிதல் அனைவருக்கும் நலனே.
           குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
            கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
            நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
            உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
            அமைபவன் நூலுரை யாசிரி யன்னே
உயர்ந்தக் குடியில் பிறந்தவராகவும் கடவுள் பக்தி உடையவராகவும் பல நூல்களைக் கற்றறிந்த அறிவும், அவ்வறிவை மாணக்கர் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்தியம்பும் ஆற்றல் உடையவராகவும், நிலத்தையும், மலையையும், துலாக்கோலையும், மலரையும் ஒத்தக் குணங்களை உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள் பலவற்றை உள்ளடக்கியவராகவும் ஆசிரியர் இருத்தல் வேண்டும் என்பது நன்னூலாரின் நற்கருத்து.
     
     இதைப் போன்றே மாணாக்கருக்கும் அவர், நூற்பா உரைத்துள்ளார்.
          தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
          பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே
          உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே   
 தன் மகன், தன்னுடைய ஆசிரியர் மகன், அரசன் மகன், மிகுதியாகப் பொருள் கொடுப்பவன், தனக்கு வழிபாடு செய்பவன், தான் சொல்லும் கருத்தினை விரைவில் கற்றுக் கொள்ளும் அறிவு உடையவன் ஆகியோர் மட்டுமே மாணாக்கர் ஆவதற்குத் தகுதியுடையோர் என்பது நன்னூலார் நல்வாக்கு.
     
     இவை அனத்திற்கும் அப்பாற்பட்டு, ஆசிரியர் மாணவர் உறவு நிலைக்கு அவர் வகுத்தளித்திருக்கும் கருத்தாக்கம் மிக அற்புதமானது.
             அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
             நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
             எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
             அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே.
குளிர் காலத்தில், நெருப்பின் முன் அமர்ந்து குளிர் காய்பவர்கள், அந்நெருப்பின் அருகில் அதிகம் நெருங்காமலும், நெருப்பை விட்டு அதிகம் விலகாமலும் இருப்பர். அதைப் போன்று ஆசிரியரிடத்தில் அச்சம் கருதி அதிகம் விலகிச் செல்லாமலும், அவரிடத்தில் அதீதமாக ஏற்பட்டப் பழக்கத்தினால் அதிகம் நெருங்கிப் பழகாமலும் இருக்க வேண்டும்.
     
     மேலும் ஆசிரியர் செல்லும் இடமெல்லாம் நிழல்போல் பின்தொடர்ந்து சென்று, அன்பு நிரம்பிய மனதுடன், எவ்வகையால் ஆசிரியர் மகிழ்ச்சி அடைவாரோ அவ்வகையோடு பொருந்தி, அறவழியிலிருந்து மாறுபடாமல் நடத்தலே மாணவர் ஆசிரியரிடம் கொள்ளும் உறவாகும் என ஆசிரியர் மாணவர் உறவுக்கு மிகப் பொருத்தமான இலக்கணம் வகுத்துள்ளார் நன்னூலார்.
     
     இலக்கண வல்லுனரால்  இவ்விதம் வகுத்து வைக்கப்பட்டிருக்கும் இலக்கணத்திற்கு ஏற்பவே, பிற்காலத்தில் எழுந்த நீதி இலக்கியங்களும் காப்பிய இலக்கியங்களும் ஆசிரியர் மாணவர் உறவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.
நீதி இலக்கியங்கள்             
     
     தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம், அக்கால மக்களின் பொற்காலமாகவே கருதப்பட்டு வருகிறது. அக்காலத்தில் வாழ்ந்த மக்களிடையே நீதியும் அறமும் கோலோச்சி நின்றன. அதனால் அக்காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இருவகை நூல்களும் அக்கால மக்களின் அறம் சார்ந்த வாழ்க்கையை எடுத்தியம்பின.
     
     ஆனால் சங்கம் மருவியக் காலக்கட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறையானது நேர் எதிராக மாறிவிட்டது. நீதியும் அறமுமற்ற, கட்டுப்பாடு ஏதும் இல்லாதத் தான்தோன்றித்தனமான வாழ்க்கைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
     
     நாட்டில், நீதி நிலை குலைந்து, அநீதியும் அக்கிரமமும் தாண்டவம் ஆடும் போது அவற்றை அகற்றி நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்கு மகான்கள் அவதரிப்பார்கள் என்பது வேதங்கள் உரைத்த உண்மை. அது மகான்களோடு மட்டும் நின்று விடாமல் இலக்கியங்களாகவும் உருவெடுத்துள்ளன என்பது இலக்கியங்கள் உணர்த்தும் உண்மை.
     
     அவ்வகையில்தான் சங்கம் மருவியக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறைகளிலிருந்து நெகிழ்ந்து சென்ற மக்களை, நெறிப்படுத்தி நல்வழிகாட்டுவதற்காகத் தோன்றியவையே நீதி இலக்கியங்களாகும். பொய்யாமொழிப் புலவரின் இருவரிக் குறளிலிருந்து தொடங்கி… நால்வரி நாலடியாரில் தொடர்ந்து… பழமொழி வரை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கொட்டிக் கிடப்பதெல்லாம் நீதியும், அறமும், அறிவுரையுமே அன்றி வேறேதுமில்லை.

குருவும் குருகுலமும்          
     
     மக்களின் அகத்திற்கு அழகூட்டுவது கல்வி. அக்கல்வியைப் புகட்டும் ஆசிரியர், கடவுளுக்கு நிகரானவரல்லர், கண்கண்ட கடவுளேதான். அதனால்தான் அக்காலக் கல்விமுறையானது குருகுலக் கல்வியாக இருந்தது. அங்கு குருவுக்குதான் முக்கியத்துவமும் முதலிடமும். குருவிடம் படிக்கும் மாணாக்கர்கள் அவருடனேத் தங்கி, அவருக்கு வேண்டியப் பணிவிடைகள் அனைத்தும் முகக்கோணலின்றிச் செய்து, அவரையே கடவுளாக மதித்து, வித்தைகளையும் கல்வியையும் கற்றுத் தேர்ந்தனர்.
     
     எவ்வளவு காலம் குருவுடன் தங்கிக் கல்வி அல்லது வித்தைகள் கற்றாலும் கடுகளவிற்கும் ஆசிரியர் மாணவர் உறவில் குற்ற செயல்கள் நிகழ்வதேயில்லை. ஆசிரியருக்கு மாணவனைப் பற்றி புகார்களில்லை. மாணவனுக்கு ஆசிரியரைப் பற்றி குற்றச்சாட்டு இல்லவேயில்லை. பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் பற்றி எவ்வித கவலையும் இல்லை. அதனால்தான் குருகுலக் கல்வி முறையானது அக்காலத்தில் 
தன்னிகரில்லாத் தலைசிறந்த கல்வியாகத் திகழ்ந்தது.

நீதி இலக்கியங்களில் ஆசிரியர் மாணவர் உறவு.
     
     நீதி இலக்கியங்களில் கல்வியின் பெருமைகளை எடுத்தியம்பாத இலக்கியங்களே இல்லையெனலாம். ஆனால் ஆசிரியர் மாணவர் உறவு பற்றி ஒரு சில இலக்கியங்களே குறிப்பிட்டுச் செல்கின்றன. அவ்வகையில் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்கோவை போன்றவை முதன்மைப் பெறுகின்றன.
     
     திரிகடுகத்தைப் பொறுத்தவரை நன்மைப் பயக்காதவை என்றப் பட்டியலில் கணக்காயர் இல்லாத ஊரும்… அதாவது கற்பிப்பதற்கு இயலாதவர்கள் இருக்கின்ற ஊரில் வாழ்வதே வீண் என்றுரைக்கின்றது. மேலும் அந்நூல், மனிதர்களில் மிக உயர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும் போது, வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசானும்…. என்கிறது.  
தாவது ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் தலைசிறந்தவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.
     
     மேலும் திரிகடுகத்தில், யாருக்கு நல்லுலகு இல்லை என்றக் கருத்தை வலியுறுத்தும் போதும், கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும்… என்கின்றது. இதன் பொருள், ஒரு குடும்பத்தில் அல்லது ஊரில் கற்றவர் ஒருவர் இருந்தால், அவரை முறையாக ஆதரிக்காமல், அவரை உற்றாரோ, ஊராரோ கைவிட்டுவிடுவார்களாயின் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்லுலகு இல்லை என்பதை முன்னுரைத்து நிற்கின்றது.
     
     சிறுபஞ்சமூலம் ஆசிரியர் மாணவர் உறவை விளக்கும் போது:-
ஒருசில ஆசிரியர்கள் பிரம்மச்சாரியத்தைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். அத்துடன், அவர்கள் காமம், வெகுளி, பொறாமை போன்றவற்றை அறவே மாற்றி மாணவர்ளை நல்வழி படுத்துவார்கள். மாணவர்கள் அவர்களிடத்தில் மிகுந்த அன்பு செலுத்தி, வழிபட்டு வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது.
     
     மேலும் அந்நூல், ஆசிரியர்முன் மாணாக்கர் நடந்து கொள்ளும் விதத்தையும் தெளிவாக்குகிறது.
          நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும்
          உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல்,
          நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர்,
          வணங்கல், வலம் கொண்டு வந்து.
மாணவர்கள், தங்கள் தலைமயிரை மாதம் ஒரு முறை சீர்செய்து மிகவும் குறுகிய அளவே வளர்க்க வேண்டும். அத்துடன் அவர்கள் ஆசிரியரை வலம் வந்து, அவர்கள் கற்பிப்பதை மிகுந்த சிரத்தையுடன் கேட்டு, அவற்றின் பொருளை உணர்ந்து அதன் படி ஒழுக வேண்டும் என்றுரைக்கிறது.

     மாணவர்கள் அதிகமாக மயிர் வளர்ப்பது கூட, அவர்களின் கல்வி கற்றலுக்கு ஏற்புடையதல்ல என்பதை அக்காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதை இதன் வாயிலாகத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள இயல்கிறது.
     
     நீதி இலக்கியங்களோடு, அற இலக்கியங்களும் ஆசிரியர் மாணவர் உறவை எடுத்தியம்புவதினின்று அகன்று நிற்கவில்லை. விவேக சிந்தாமணி இரண்டாம் பாகத்திலுள்ள பத்தாவது பாடல் பயனற்றவை என்றத் தலைப்பில் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் ஆசிரியர் இல்லாமல் கற்றுக் கொண்டக் கல்வி பயனற்றது என்று பட்டியலிட்டுள்ளது.
     
     அத்தோடு நின்று விடாமல் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய நேரத்தையும் காலத்தையும் கூடக் குறிப்பிட்டுள்ளது. பாடம் சொல்லத் தொடங்கக் கூடாத திதிகள் என்று கூறுமிடத்தில்,
              அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது;
              சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும்;- கெட்டவுரை
              வித்தைக்கு நாசமாம்; வெய்ய பிரதமையில்
              பித்தரும் பேசார் பிழை.  
அட்டமி திதியில் ஆசிரியர், மாணவர்களுக்குக் கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினால், அவ்வாசிரியருக்கு தீமைகள் நேரும் என்றும், பதினான்காம் திதியான சதுர்த்தசியில் பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கினால், மாணவர்களுக்குத் தீமைப் பயக்குமென்றும், கெடுதி விழைவிக்கும் அமாவாசையில் பாடம் தொடங்கினால் கல்விக்கே கேடு விளையுமென்றும், கொடிய முதல் திதியான பிரதமையில் பாடம் தொடங்கினால் குற்றம் உண்டாகும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் தொடங்கும் கால நேரத்தின் நன்மைத் தீமைகளைத் தெளிந்துரைத்துள்ளது.
     
     இவற்றின் மூலம் இலக்கண நூல்களும், நீதி நூல்களும், அற நூல்களும் ஆசிரியர் மாணவர் உறவு நிலைகளுக்கு ஒரு எல்கையும் கொள்கையும் வகுத்திருப்பதுத் தெளிவாகிறது.

தற்கால உறவு நிலை
     
     நீதி இலக்கியக் காலத்தில் குறிப்பிட்டிருக்கும் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளிலிருந்து, தற்காலத்திலுள்ள கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டே இருகின்றன. அம்மாற்றத்தின் அடிப்படையில் மாணவர் ஆசிரியர் உறவு முறையிலும் பெரும் சிதைவுகள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.
     
     அம்மாற்றத்திற்கு மிக முக்கியமான அடிப்படைக் காரணங்களாக விளங்குபவை இரண்டு. முதல் காரணம், அக்காலத்தில் இருந்த பாடத் திட்டங்கள் ஆசிரியரை மையமாகக் கொண்டிருந்தன. தற்போதையப் பாடத் திட்டங்கள் மாணவர்களை மையமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டாவது காரணம் அக்காலங்களில் உள்ளது போல் அல்லாமல் தற்காலத்தில் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருகின்றது. இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் சமூக ஊடகங்களின் ஊடுருவலும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
     
     அக்காலங்களில் ஆசிரியர் மாணவர் உறவானது வகுப்பறையோடு முடிந்து விடும். வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியேறிவிட்டால் அதன் பிறகு மாணவர்களுடன் ஆசிரியரோ, ஆசிரியர்களிடம் மாணவர்களோ சகஜமாகப் பழகுவதற்கு எவ்விதமானச் சந்தர்ப்பங்களும் அமையாது.
     
     தற்போது இந்தச் சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது. வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்களுடன் மாணவர்களும், மாணவர்களுடன் ஆசிரியர்களும் மிகவும் சகஜமாகப் பேசவும் பழகவும் ஏராளம் வாய்ப்புகள் அமைகின்றன. தொலைபேசி, கைபேசி உட்பட தற்காலத்திலுள்ள அனைத்து மின் தொடர்பு சாதனங்களும் அவர்களுக்குச் சாதகமாக உள்ளன. இவையனைத்தும் மிகப் புனிதமாகக் கருதப்பட்டு வந்த ஆசிரியர் மாணவர் உறவு முறையை சீரழித்துச் சின்னாப் பின்னமாக்கியுள்ளன.
     
     இதற்கானச் சான்றுகளை ஒவ்வொரு நாளும் நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழி நம்மால் கண்டு, கேட்டு அறிந்து கொள்வதற்கு இயல்கிறது. இதனால் ஒழுக்கமே கல்வியின் உயிர்நாடி என்னும் மகத்தான தத்துவம் முற்றிலும் மாறி ஒழுங்கீனமே முதல்நாடி என்னும் நிலைக்கு நாளுக்கு நாள் நம் ஆசிரியர் மாணவர் உறவு முறை நகர்ந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
     
     பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் காதலித்து, படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஒன்றுமறியா இளம் வயதிலையே மணம் முடித்து வாழ்க்கையைச் சீரழிக்கும் நிலையும், பள்ளிக் கல்லூரிகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்களே தங்களிடம் படிக்கும் மாணவிகளைக் காதலித்து கரம் பிடித்து இழுத்துச் செல்லும் நிலையும் நாள் தோறும் நாட்டில் நடந்து வருவதைக் கண்கூடாகப் காண்பதற்கு முடிகிறது.
     
     இந்த நடைமுறை மாற்றத்திற்கு முக்கியக் காரணம், பள்ளிக் கல்லூரிப் பாடத் திட்டங்களில் ஒழுக்கக் கல்விக்கும், அறவழிக் கல்விக்கும் அதிக இடம் கொடாமல், நவீன அறிவியல், தொழில் நுட்பக் கல்விக்கு அதிக முன்னுரிமை அளிப்பதே ஆகும்.
     
     கல்விக் கூடங்களில் கட்டுப்பாடின்மை, மாணவர்களிடையே கீழ்படிதலின்மை, ஆசிரியர்களிடையே கடமையுணர்வின்மை, அதிகாரிகளிடையே நிர்வாகத் திறமையின்மை, அரசிடம் திறம்பட  ஆளும் திடமின்மை, பெற்றோரின் கண்காணிக்கும் கண்ணியமின்மை இவையே தற்காலத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே உள்ள தூய்மையான, தெய்வீகமான உறவுக்குக் குந்தகம் விளைவிக்கும் காரணிகளாக உள்ளன.   

நிறைவாக:
     
     நீதி இலக்கியங்கள் உணர்த்தும் ஆசிரியர் மாணவர் உறவானது மிகவும் கண்ணியம் மிக்கதாக உள்ளது. ஒழுக்கமும், கட்டுப்பாடும், கீழ்படிதலும், மதித்தலும், வழிபடுதலும், மனமறிந்து ஒழுகலும்   அவற்றின் மைய நோக்காக உள்ளன.
     
     தற்காலத்தில் பெருகி வரும் அறிவியல் தொழில் நூட்ப தகவல் தொடர்வு சாதனங்களின் மூலம் கற்பித்தல், கற்றல் முறைகளில்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியைக் குறைத்து விட்டன. இதனால் ஆசிரியர் மாணவர் தொடர்வு மிக நெருக்கமாகவும், அன்னேன்னியமாகவும் மாறியுள்ளன. இதனால் சமீபக் காலங்களில் ஆசிரியர் மாணவர் உறவுகளுக்கிடையே ஊனம் ஏற்பட்டிருக்கிறது என்பது திண்ணம்.
     
     இந்த இழிநிலையை மாற்றி மீண்டும் ஆசிரியர் மாணவர் உறவு நிலையை மிக உன்னதமான தெய்வீக நிலையில் கொண்டு வரவேண்டும். அதற்கு நீதி நூல்களில் குறிப்பிட்டிருக்கும் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை அதிக அளவில் பள்ளிப் பாடத் திட்டங்களில் புகுத்த வேண்டும்.
     
     அத்துடன் கல்வி நிறுவனங்களில், மாணவர்களிடம் தவறான ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மிகக் கடுமையானத் தண்டனை வழங்கி, அவர்கள் அப்பணியில் மீண்டும் தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


(இக்கட்டுரை நீதி இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியில் கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இனைந்து  டிசம்பர் 2017 இல் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்டது.)  

    



      
    
                 
       

        

No comments:

Post a Comment