Sunday, 20 May 2018


                   விடுமுறை: விருந்தும் விளையாட்டும்.
        
        (இக்கட்டுரை தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் 
         11 - 05 - 2018 அன்று பிரசுரமானது.)                              
      
     எங்களுடையப் பள்ளிப்பருவத்தில், பள்ளிக்கூடத்திற்கு எப்போது கோடை விடுமுறை வரும் என ஏங்கித்தவித்திருப்போம். ஏனென்றால், பள்ளிக்கூடத்திற்கு விடுமுறைக் கிடைத்த மறுநாள், எங்களை தாத்தாப் பாட்டி வீடு, சித்தப்பா, பெரியப்பா வீடு, மாமா, மாமி வீடு என ஒவ்வொருச் சொந்தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
     எங்கள் உறவினர்களும், நாங்கள் செல்லும் போது வான்புகழ் வள்ளுவனின்,
                “இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
                 வேளாண்மை செய்தல் பொருட்டு.” 
 என்னும் கூற்றிற்கிணங்க எங்களை மனப்பூர்வமாக வரவேற்பதற்காகக் காத்திருப்பார்கள்.  
     அப்புறம் என்ன ஒரு மாதக்காலம் மாறிமாறி ஒவ்வொரு உறவுகளின் வீட்டிலும், வேளாவேளைக்குச் செமத்தியானச் சாப்பாட்டுடன் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… என ஒரு நொடிப் பொழுது போல் ஒருமாதக் காலம் உருண்டோடி போகும். பின்பு புதுத்தெம்பும் புத்தாடையும் அடுத்த வகுப்புக்கு வெற்றி பெற்ற மகிழ்ச்சியும் எழுச்சியுமாய் துள்ளிக் குதித்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கூடத்தைப் பார்த்து ஒரு கம்பீரநடை.
     ஆஹா…! இப்பொழுது நினைத்தாலும் அந்த நிகழ்வுகளும் உறவுகளும் நம்மைப் புல்லரிக்கச் செய்கின்றன.
விருந்தும் பண்டமாற்று முறையும்.
     எங்களின் வீட்டிலிருந்து உறவுகளின் வீடுகளுக்குச் செல்லும் போது ஒரு நாள்கூட வெறும் கையோடுப் சென்றதேயில்லை. ஏனென்றால், நாங்கள் வீட்டிலிருந்து விருந்து வீட்டிற்குச் செல்வதற்குத் தயாரான உடன், எங்கள் வீட்டிலிருக்கும் பாம்பழத்தையும் பலாப்பழத்தையும் பக்குவமாகப் பார்சல் செய்து எங்களிடம் தந்தனுப்புவார்கள். கூடவே சிலப் பலகார வகைகளும் இருக்கும்.
     நாங்கள் சில நாட்கள் அங்குத் தங்கி விட்டு, விட்டிற்குத் திருப்பும் போது, அவர்கள் எங்களிடம், அங்குப் பக்குவமாய் உலர்த்தி வைத்திருக்கும் மரவள்ளிக் கிழங்கு, நெல், நல்லச் சுத்தமான கருப்புக்கட்டி பல்வேறு வகையானக் கிழங்கு வகைகள் மற்றும் நெய்யப்பம், முறுக்கு போன்ற பலவகைப் பலகாரங்களையும் தந்தனுப்புவார்கள். இது ஒரு பண்டமாற்று முறைக்குச் சமமாகவே இருக்கும்.
     மட்டுமின்றி இப்படிப்பட்டப் பொருட்களைக் கொண்டு வரும் போது, எங்கள் வீட்டில் இருப்போரின் சந்தோஷம் இரட்டிப்பாகும். அதோடு வீட்டில் சில நாட்கள் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவும்.
விருந்தும் விளையாட்டும்.
  விருந்தினர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது, அவை கூட்டுக் குடும்பங்களாக இருப்பதினால், அங்கு பல வயது நிலையிலுள்ள ஏராளம் குழந்தைகள் இருப்பார்கள். அதனால் சொந்த வீடுகளில் உள்ளதைப் போன்ற கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது. எனவே கிரமப்புற விளையாட்டிகளான கிளியாந்தட்டிலிருந்து தொடங்கி, கோலி விளையாட்டு, கபடி விளையாட்டு, கால்பந்து விளையாட்டு எனக் குழந்தைப் பட்டாளங்கள் கூடியாடி விளையாடும் விளையாட்டுகளுக்கு எண்ணிக்கையே இருக்காது.
      ஒரு வீட்டிலுள்ள குழந்தைகள் மட்டுமின்றி ஊரிலுள்ளக் குழந்தைகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் சேர்ந்து கல்லியாணம் கட்டி விட்டு, கல்லியாண வீட்டில் பரிமாறுவது போன்று மண்ணில் சோறும் கறியும் வைத்துப் பரிமாறி விளையாடும் விளையாட்டுகள் இன்றும் கண்முன் நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.
     பெண்கள் அதிகமாக விளையாடும், வட்டு விளையாட்டும் தொட்டு விளையாட்டும், ஒளித்து விட்டுக் கண்டுபிடி விளையாட்டும், பல்லாங்குழி விளையாட்டும் குழந்தைகளிடையே ஓர் அன்னியோனியத்தை ஏற்படுத்தும். இப்படி கிராமப்புறங்களிலுள்ள பிள்ளைகளின் விளையாட்டைப் பார்த்து விட்டுத்தான், அந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார்,
              ஓடி விளையாடு பாப்பா! - நீ
                  ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
              கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
                  குழந்தையை வையாதே பாப்பா.
என்னும் குழந்தைப் பாடலைப் பாடியிருப்பார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
விருந்தும் நீச்சல் பயிற்சியும்
     கோடை விடுமுறையில்தான் பெரும்பாலானக் குழந்தைகள் தண்ணீரில் நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்வார்கள். குறிப்பாகக் கிராமப்புறங்களில்தான் அதிகமான குளங்களும் ஆறுகளும் ஓடைகளும் நிறைந்திருக்கும். விருந்து வீடுகளில் சென்றால் அங்கிருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை, இது போன்ற நீர் நிலைகளில் அழைத்துச் சென்று குளிக்கச் செய்வதும், நீச்சல் பயிற்சியைக் கற்றுக் கொடுப்பதும் இயல்பான ஒரு வழக்கமாக இருக்கும்.
     இப்படி விருந்து வீடுகளுக்குச் செல்லும் போது எடுத்துக் கொள்ளும் நீச்சல் பயிற்சியானது பிற்காலத்தில் குழந்தைகளுக்கு நீர்நிலைகளினால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும்.
படிப்புக்கு உதவி
     கோடை விடுமுறையில் உறவுகளின் வீடுகளுக்கு விருந்திற்குச் சென்று திரும்பும் போது, அங்கிருந்து நல்ல விருந்தும் பண்டப் பலகாரங்களும் தந்தனுப்புவதோடு மட்டும் நின்று விடமாட்டார்கள். பெரும்பாலான உறவுகாரர்கள், தொடர்ந்து பள்ளியில் படிப்பதற்காக ஒரு சிறு தொகையாவது கொடுத்தனுப்புவார்கள். கூடவே அவர்களின் தகுதிக்கேற்ப புத்தாடைகளையும், புத்தகங்களையும் கூட வாங்கிக் கொடுப்பார்கள். இவை அனைத்தும் சாதாரணக் குடும்பங்களிலிருந்து பெரும் பணக்காரர்களின் குடும்பங்களில் வரை இயல்பாக நடந்தேறும்.
     இவற்றுடன் மட்டும் நின்று விடாமல் கூட்டுக் குடும்பத்துடன் வாழும் வீடுகளில் விருந்திற்குச் செல்றால், அங்கிருந்து குழந்தைகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்துண்ணும் மனநிலை, சகிப்பு தன்மை உட்பட பல்வேறு நற்குணங்களைக் கற்றுக் கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை.
     தற்போதையச் சூழ்நிலையில் இந்தக் குணாதிசையங்கள் அனைத்தும் போய், கோடை விடுமுறை வந்தால் கம்பியூட்டர் கல்வியும், டியூஷன் வகுப்புகளும் குழந்தைகளை அடிமைகளாக்கி விடுகின்றன. அதனால் இளைய சமுதாயத்திடம் உறவு என்ற செல்லின் அர்த்தமும், விருந்து என்ற சொல்லின் அருமையும், விளையாட்டு என்றச் சொல்லின்  அடையாளமும் இல்லாமலாகிப் போனது.
     கூடவே கூட்டுக் குடும்பம் என்னும் கோபுரம் சிதலமடைந்து, சின்னாபின்னமாகி உறவுகள் என்றச் சொல்லையே உச்சரிக்கத் தெரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டக் கதையாக மாறிவருகிறது. எதிர்காலத்தில், தனிக்குடித்தனம் என்பதும், வீட்டிற்கு ஒரு பிள்ளை என்ற சட்டமும் நம் நாட்டின் அடிப்படை மூலாதாரக் கோட்பாடான பண்பாட்டுக் கலாச்சாரத்திற்கு உலைவைப்பதாகவே மாறிவிடும்.
     எனவே கோடை விடுமுறையில் நம் குழந்தைகளை உறவுகளின் இல்லங்களுக்கு அனுப்பி நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ளவும், உறவுகளை வலுப்படுத்தவும் வழிவகுப்போம்.
                              
                                       

No comments:

Post a Comment