Friday, 26 May 2017

பரிசுத்தவானுக்கோர் பாமாலை...

                                       பரிசுத்தவானுக்கோர் பாமாலை...
                                        
                                  

     தமிழ் இலக்கியத் தடாகத்தில், கவிதை இலக்கியத்திற்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.
     பரந்து விரிந்த நிலப்பரப்பில், துரும்பிலிருந்து தூண் வரைக்கும், கடுகிலிருந்து கடல் வரைக்கும், காதலிலிருந்து கடவுள் வரைக்கும் கவிதைக்குக் கருவாகும்.
     அவ்வகையில் கவிஞர் இரா. ரசல்ராஜ் அவர்கள் ஆக்கியளித்திருக்கும் கண்டேன் விடியல் கன்னியின் மடியில் என்னும் இக் கவிதைப் புதையல் பரிசுத்தவானாகிய இயேசு பிரானின் மகிமையை மாசற பறைசாற்றுவதாகும்.
     பிதாமகனின் வாழ்வியலை, முதல் முதலில் பாமாலையில் காவியமாக்கிய மகிமை கவிஞர் கண்ணதாசனுக்குரியது.
      கவிதையின் இனிமை, எளிமை, மகிமை இவை மூன்றிற்கும் முன்னுதாரணம் பகரும் ஒரு நூல் கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியமன்றி இன்னொன்று இருப்பதற்கு இயலாது.
     அவ் அற்புதமான காவியத்தைப் படித்தவர்கள், கவிஞர் இரசல்ராஜின் இந்தக் கவிதைப் புதையலைப் படிப்பார்களாயின், இயேசு காவியத்திலிருக்கும் அதே சுவை, எளிமை, இனிமை ஆகிய அனைத்தையும் இதிலும் நுகர்வதற்கும்,அனுபவிப்பதற்கும் இயலும் என்பது திண்ணம்.
     வெண்ணிற வானத்துப் பொன்னிறப் பூக்கள் என்னும் கவிதை நூல் மூலம் தமிழ் இலக்கியத்திற்குள் தடம் பதித்த இக்கவிஞர் ஓர் உன்னதமான தமிழாசான்.
     கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் பழமையும் பெருமையும் வாய்ந்த கார்மல் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் இக் கவிஞர் பன்முகத் திறன் கொண்டவர்.
     இவ்வரிய இலக்கியப் பூங்காவிலிருந்து கவிஞர்களாய்… பேச்சாளர்களாய்… நடிகர்களாய்… பாடகர்களாய்… படைப்பாளர்களாய்… பரிணமித்துப் பூத்துக் குலுங்கிக்  கொண்டிருக்கும் மாணவப் பிரமாக்கள் எண்ணில.
     அப்பழுக்கற்ற ஆசிரியருக்கு உரித்தான, அத்தனை குணாதிசயங்களும் அடிபணிந்துள்ளன இவரிடத்தில். தான்னிடம் கற்கும் மாணாக்கர்களை தலைமாணாக்கராக்க வேண்டும் என்ற அவா இவரின் அடி மனதிற்குள் ஆழமாகப் பதியம் போட்டுள்ளது.
     ஆன்மீகத்தின் அடி ஆழத்தைத் தொட்டு விட்ட அனுபவத்தின் வெளிப்பாடாகவே இக்கவிதைத் தொகுப்பு உள்ளது. ஆண்டவர் நாமத்தை மகிமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் கவிதைத் தொகுப்பு முழுவதும் புரையோடியுள்ளது.
     என்றாலும் அதையும் தாண்டி சமூக அவலங்களையும், இளைஞர்களின் இதயங்களையும் சுட்டிக் காட்டுவதற்கும், தொட்டுக் காட்டுவதற்கும் கவிஞர் விட்டுப் போகவில்லை.
     அதற்குச் சான்று பகர்வதுதான் நம்பிக்கை நங்கூரம் என்னும் கவிதை.
                     உனக்குள் நம்பிக்கை
                     நூறு சதம் இருந்தால்
                     மலை உன்சொல் கேட்கும்.
                     கடலும் உந்தன்
                     கால்தொட்டு
                     வணங்கும்.   என்னும் நம்பிக்கை வரிகளால்  இளைஞர்களின் இதயங்களில் இதமாய் இடம் பிடித்துள்ளார் கவிஞர்.
     உறவுகள் என்பது உலகம் தோன்றிய அன்று முதல் இன்று வரை உணர்வுகளோடுப் பின்னிப் பிணைந்துக் கிடப்பது. சில நேரங்களில் இந்த உறவுகளுக்குள் ஊனங்கள் ஏற்படலாம்.
     உறவுகளுக்குள் எத்தனைதான் ஊனங்கள் ஏற்பட்டாலும், அது மரபை மீறிச் செல்லாது என்பதற்கு உதாரணம் காட்டுகிறார் இக்கவிஞர்.
                 மகன் தவறு செய்தால்
                 தந்தை
                 தண்டிப்பார்; கண்டிப்பார்.
                 கடைசியில் மன்னிப்பார்.
                 அதுபோல் கடவுளும்
                 மன்னித்தார்.
                 இதுதான் அன்றும்
                 இன்றும் என்றும்
                 தந்தை மகன் உறவு.
                 தரணியில் இருக்கும் மரபு…  என உலகை உலுக்கிய அலகை என்னும் கவிதை மூலம் உறவுகளின் வரன்முறைகளையும், சமூக மரபுகளையும் கோடிட்டுக் காட்டி ஆன்மீகத்தின் வழி சமூக நீதிகளை நெறிமுறைப் படுத்த முயன்றுள்ளார் புதுமை கவிஞர்.
     முன்னுரையும், தெளிவுரையுமின்றி ஒரே மூச்சில் படித்துத் தெளிவுறும் அளவிற்குத் தெளிந்த நீரோடையாக இக் கவிதைப் புதையல் உள்ளது. 
     இந்த ஆற்புதப் புதயலை ஆக்கித் தந்திருக்கும் இக் கவிஞர், கடவுளுக்காய் காலத்தால் அழியாத காவியம் படைக்க அருள் புரிய, அந்தப் பரம் பொருளை இறைஞ்சுவோம்.
                         
                          நூலுக்கு: கவிஞர் இரா. ரசல்ராஜ்
                                    கைபேசி: 9488881645                    
  
                       
     
    
    

      

No comments:

Post a Comment