Monday, 25 January 2016

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்…

                                           சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்…

     காட்சிக்கு எளியவர், பழகுவதற்கு இனியவர், பண்பாட்டில் சிறந்தவர், சிந்தனையில் வல்லவர், கதை, கவிதை, கட்டுரை, நாடகம், வரலாறு  எழுதுவதில் தணியாதத் தாகம் கொண்டவர். தமிழையும் ஆங்கிலத்தையும் சரிநிகராகக் கையாளுவதோடு, பன்மொழிப் புலமைப் பெற்று பல அரிய நூல்களை மொழியாக்கம் செய்தவர், யார் அவர்? அறிவதற்கு ஆவலா? அவர்தான் குமரித்தோழன். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, தற்போது ஆசிரியர் பயிற்றுநராகப் பணி உயர்வு பெற்று ஆசிரியர்களுக்கே ஆசிரியராகத் திகழ்கிறார்.
     இவரது புதிய வெளியீடாகத் தற்போது வெளிவந்திருக்கும் நூல் “இரண்டாம் பிறவி” என்ற சிறுகதைத் தொகுப்பு. “வாழ்க தமிழ்” என்னும் சிறுகதையில் தொடங்கி “குழிதோண்டிய குடி” எனத் தொடர்ந்து “திணிப்பு” என முடியும் கதை வரை மொத்தம் 25 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது இத்தொகுப்பு.
     இதுவரை கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவராக விளங்கிய குமரித்தோழன் இப்போது முதல் முதலாகச் சிறுகதைகள் எழுதுவதில் தன் சிந்தையைக் கொஞ்சம் திசைத் திருப்பியுள்ளார்.
     சிறுகதை எழுதுவது அவ்வளவு சிரமான விஷயமல்ல. இயல்புக்கு மாறான விஷயங்களைக் கொஞ்சம் உற்று நோக்கும் கழுகுப் பார்வையும், கொஞ்சம் அதிகமாகச் சிந்திக்கும் ஆற்றலும், கூடவே கொஞ்சம் கற்பனைத் திறனும் எழுதியே தீர வேண்டும் என்ற அதீத ஆசையும் இருந்தால் மட்டும்  போதும் யார் வேண்டுமானாலும் சிறுகதை எழுதிவிடலாம்.
     ஆனால், அந்தக் கதைகளுக்குள் இருக்கும் கருவை வைத்துத்தான் அக்கதாசிரியர் கதை எழுதுவதற்குத் தகுதியுடையவரா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க முடியும். அந்த வகையில் முதல் முதலாகக் சிறுகதைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் குமரித்தோழன் அவர்களை நாம் கைக்குலுக்கி வரவேற்கலாம். ஏனென்றால் அவர் ஒவ்வொரு கதையிலும் சுட்டிக் காட்டியிருக்கும் கதைக்கருவானது, ஒவ்வொரு நாளும்  நம் கண்முன் காணும் காட்சி போல் உள்ளது. அதுவே அவருக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி.
     “இரண்டாம் பிறவி” என்னும் சிறுகதையில், அவர் கையாண்டிருக்கும் கதைச் சொல்லும் உத்தி மிகமிக அற்புதமானது. மட்டுமல்ல அக்கதையின் மூலம், இச்சமுதாயத்தில் புகைப் பழக்கத்தினால் ஒவ்வொரு நாளும் இல்லை இல்லை ஒவ்வொரு நொடியும் மரணப்போராட்டத்தில் மாண்டுக்கொண்டிருக்கும் லட்சோபம் லட்சம் இளைஞர்களை, மரணப் பள்ளத்தாக்கில் தள்ளி விடாமல், மீண்டும் உயிர் பெற்று வாழ்வதற்கு வழிசொல்லும் விதம் வியப்புக்குரியது.
     ஒரு வாசகன், ஒரு படைப்பாளியின்  படைப்பைப் படித்து முடிக்கும் போது, அது அவனைத் துவண்டுப் போக விடாமல், தூக்கி நிறுத்துவதற்கு வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படைப்பும், அப்படைப்பாளியும் வெற்றி பெற்றதாகக் கருதுவதற்கு முடியும். அந்த வகையில் “இரண்டாம் பிறவி” என்ற கதை முழு வெற்றி பெற்றுள்ளது                               என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். இந்த ஒரு படைப்புக்காகவே குமரித்தோழனுக்கு ஒரு வீரவாள் பரிசளிக்கலாம். மட்டுமல்ல இந்தக் கதையை நிச்சயமாகப் பல்கலைக்கழகப் பாடநூலில் பாடமாக வைப்பதற்குப் பரிந்துரைக்கலாம்.
     இதோடு மட்டும் நின்றுவிடவில்லை, இத்தொகுப்பின் ஏழாவது கதையாக இடம் பெற்றுள்ளது “தார மந்திரம்” என்னும் கதை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இரவு வேளையில் வேறு யாருக்கும் தெரியாமல் நடக்கும் உரையாடலைத் “தலையணை மந்திரம்” என்பார்கள். அந்தத் தலையணை மந்திரத்தினால் இதுவரை நல்ல விஷயங்கள்  நடந்ததாக வரலாறு இல்லை. மனைவியின் தலையணை மந்திரத்தால், இதுவரை குடும்பத்தில் அல்லது ஊரில் குழப்பங்களும் கலகங்களும் மட்டுமே நடப்பது வழக்கம்.
     ஆனால், இந்தப் படைப்பாளி இந்தக் கதையைப் படிப்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் மிகவும் வித்தியாசமாகவே படைத்துள்ளார். வாடைகைக்கார் ஓட்டும் ஒருவர் தன் தொழிலில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அத்தொழிலையும் விட்டுவிட்டு, அவர் அதுவரை ஓட்டி வந்த காரையும் ராசியில்லாதக் கார் என்றுகூறி, அக்காரை விற்று விடுவதற்கு முடிவு செய்ததாக தனது மனைவியிடம் கூறுகிறார். ஆனால், அவரின் அதிபுத்திசாலி  மனைவியோ, இரவு நேரத்தில் தன் கணவனை எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படிக் கவனித்து விட்டு, அவனிடத்தில் கூறியத் தலையணை மந்திரத்தால், அவன் மறுநாள் காலையில் எவ்வித மறுப்பும் கூறாமல், அதேகாறை எடுத்துக் கொண்டு மறுபடியும் அவனது தொழிலுக்குச் செல்கிறான்.
      தலையணை மந்திரம் பற்றி இதுவரைச் சமுதாயத்தில் நிலவிவந்த ஒரு தவறானக் கருத்தைத் தகர்த்தெறிந்து விட்டு, அதே மந்திரத்தால்  ஒரு கணவனை எப்படி மாற்றிவிடமுடியும் என்பதற்கு மிகப் பொருத்தமான ஒரு கதையாக இக்கதையைப் படைத்துள்ளார் கதாசிரியர். இக்கதையை ஒவ்வொரு தாய்மார்களும் படித்தால், அவர்களின் வீட்டிலுள்ள, எப்பேர்பட்டக் கணவனையும் தன்வயப்படுத்தி விடுவதற்கான மந்திரமும் தந்திரமும், தைரியமும் கிடைத்துவிடும் என்பது நிஜம்.
     இப்படி ஒவ்வொரு கதையையும் பற்றி எழுதினால், பல பக்கங்கள் பயன்பட்டுப்போகும். என்றாலும், படைப்பாளியின் ஒட்டு மொத்தமான கதைகளின் சாராம்சத்தை எடுத்துக் கூறுவதாக இருந்தால்,  அநீதியும் அக்கிரமமும் நிறைந்த சமூகத்தில் மதுவாலும், புகையாலும், வாதினாலும், சூதினாலும், திரைப்படத்தாலும், வேலையில்லாமையினாலும் சீரழிந்து சின்னாபின்னமாகிக்  கொண்டிருக்கும் இளைஞர்களைத் தூக்கி நிறுத்தி துலங்கச் செய்வதற்கானப் பெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் கதாசிரியர். அவரது முயற்சி நிச்சயம் இளைஞர் பட்டாளங்களுக்கிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
     நல்லக் கல்வியாளர்களின் கைகளில் இக்கதைகள் கிடைத்தால், நிச்சயம் இவை பள்ளி, கல்லூரிப் பாடநூல்களில் பாடமாக வைக்கப்பட்டு எண்ணிலடங்கா மாணவர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தும் என்பது உறுதி.  
                           நூல் வெளியீடு:  முதற்சங்கு பதிப்பகம்
                           நூல் விலை: ரூ.80/-
                           நூலாசிரியர் தொடர்புக்கு: 9486012720     


     



  

No comments:

Post a Comment