Monday, 25 January 2016

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்…

                                           சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்…

     காட்சிக்கு எளியவர், பழகுவதற்கு இனியவர், பண்பாட்டில் சிறந்தவர், சிந்தனையில் வல்லவர், கதை, கவிதை, கட்டுரை, நாடகம், வரலாறு  எழுதுவதில் தணியாதத் தாகம் கொண்டவர். தமிழையும் ஆங்கிலத்தையும் சரிநிகராகக் கையாளுவதோடு, பன்மொழிப் புலமைப் பெற்று பல அரிய நூல்களை மொழியாக்கம் செய்தவர், யார் அவர்? அறிவதற்கு ஆவலா? அவர்தான் குமரித்தோழன். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, தற்போது ஆசிரியர் பயிற்றுநராகப் பணி உயர்வு பெற்று ஆசிரியர்களுக்கே ஆசிரியராகத் திகழ்கிறார்.
     இவரது புதிய வெளியீடாகத் தற்போது வெளிவந்திருக்கும் நூல் “இரண்டாம் பிறவி” என்ற சிறுகதைத் தொகுப்பு. “வாழ்க தமிழ்” என்னும் சிறுகதையில் தொடங்கி “குழிதோண்டிய குடி” எனத் தொடர்ந்து “திணிப்பு” என முடியும் கதை வரை மொத்தம் 25 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது இத்தொகுப்பு.
     இதுவரை கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவராக விளங்கிய குமரித்தோழன் இப்போது முதல் முதலாகச் சிறுகதைகள் எழுதுவதில் தன் சிந்தையைக் கொஞ்சம் திசைத் திருப்பியுள்ளார்.
     சிறுகதை எழுதுவது அவ்வளவு சிரமான விஷயமல்ல. இயல்புக்கு மாறான விஷயங்களைக் கொஞ்சம் உற்று நோக்கும் கழுகுப் பார்வையும், கொஞ்சம் அதிகமாகச் சிந்திக்கும் ஆற்றலும், கூடவே கொஞ்சம் கற்பனைத் திறனும் எழுதியே தீர வேண்டும் என்ற அதீத ஆசையும் இருந்தால் மட்டும்  போதும் யார் வேண்டுமானாலும் சிறுகதை எழுதிவிடலாம்.
     ஆனால், அந்தக் கதைகளுக்குள் இருக்கும் கருவை வைத்துத்தான் அக்கதாசிரியர் கதை எழுதுவதற்குத் தகுதியுடையவரா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க முடியும். அந்த வகையில் முதல் முதலாகக் சிறுகதைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் குமரித்தோழன் அவர்களை நாம் கைக்குலுக்கி வரவேற்கலாம். ஏனென்றால் அவர் ஒவ்வொரு கதையிலும் சுட்டிக் காட்டியிருக்கும் கதைக்கருவானது, ஒவ்வொரு நாளும்  நம் கண்முன் காணும் காட்சி போல் உள்ளது. அதுவே அவருக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி.
     “இரண்டாம் பிறவி” என்னும் சிறுகதையில், அவர் கையாண்டிருக்கும் கதைச் சொல்லும் உத்தி மிகமிக அற்புதமானது. மட்டுமல்ல அக்கதையின் மூலம், இச்சமுதாயத்தில் புகைப் பழக்கத்தினால் ஒவ்வொரு நாளும் இல்லை இல்லை ஒவ்வொரு நொடியும் மரணப்போராட்டத்தில் மாண்டுக்கொண்டிருக்கும் லட்சோபம் லட்சம் இளைஞர்களை, மரணப் பள்ளத்தாக்கில் தள்ளி விடாமல், மீண்டும் உயிர் பெற்று வாழ்வதற்கு வழிசொல்லும் விதம் வியப்புக்குரியது.
     ஒரு வாசகன், ஒரு படைப்பாளியின்  படைப்பைப் படித்து முடிக்கும் போது, அது அவனைத் துவண்டுப் போக விடாமல், தூக்கி நிறுத்துவதற்கு வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படைப்பும், அப்படைப்பாளியும் வெற்றி பெற்றதாகக் கருதுவதற்கு முடியும். அந்த வகையில் “இரண்டாம் பிறவி” என்ற கதை முழு வெற்றி பெற்றுள்ளது                               என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். இந்த ஒரு படைப்புக்காகவே குமரித்தோழனுக்கு ஒரு வீரவாள் பரிசளிக்கலாம். மட்டுமல்ல இந்தக் கதையை நிச்சயமாகப் பல்கலைக்கழகப் பாடநூலில் பாடமாக வைப்பதற்குப் பரிந்துரைக்கலாம்.
     இதோடு மட்டும் நின்றுவிடவில்லை, இத்தொகுப்பின் ஏழாவது கதையாக இடம் பெற்றுள்ளது “தார மந்திரம்” என்னும் கதை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இரவு வேளையில் வேறு யாருக்கும் தெரியாமல் நடக்கும் உரையாடலைத் “தலையணை மந்திரம்” என்பார்கள். அந்தத் தலையணை மந்திரத்தினால் இதுவரை நல்ல விஷயங்கள்  நடந்ததாக வரலாறு இல்லை. மனைவியின் தலையணை மந்திரத்தால், இதுவரை குடும்பத்தில் அல்லது ஊரில் குழப்பங்களும் கலகங்களும் மட்டுமே நடப்பது வழக்கம்.
     ஆனால், இந்தப் படைப்பாளி இந்தக் கதையைப் படிப்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் மிகவும் வித்தியாசமாகவே படைத்துள்ளார். வாடைகைக்கார் ஓட்டும் ஒருவர் தன் தொழிலில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அத்தொழிலையும் விட்டுவிட்டு, அவர் அதுவரை ஓட்டி வந்த காரையும் ராசியில்லாதக் கார் என்றுகூறி, அக்காரை விற்று விடுவதற்கு முடிவு செய்ததாக தனது மனைவியிடம் கூறுகிறார். ஆனால், அவரின் அதிபுத்திசாலி  மனைவியோ, இரவு நேரத்தில் தன் கணவனை எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படிக் கவனித்து விட்டு, அவனிடத்தில் கூறியத் தலையணை மந்திரத்தால், அவன் மறுநாள் காலையில் எவ்வித மறுப்பும் கூறாமல், அதேகாறை எடுத்துக் கொண்டு மறுபடியும் அவனது தொழிலுக்குச் செல்கிறான்.
      தலையணை மந்திரம் பற்றி இதுவரைச் சமுதாயத்தில் நிலவிவந்த ஒரு தவறானக் கருத்தைத் தகர்த்தெறிந்து விட்டு, அதே மந்திரத்தால்  ஒரு கணவனை எப்படி மாற்றிவிடமுடியும் என்பதற்கு மிகப் பொருத்தமான ஒரு கதையாக இக்கதையைப் படைத்துள்ளார் கதாசிரியர். இக்கதையை ஒவ்வொரு தாய்மார்களும் படித்தால், அவர்களின் வீட்டிலுள்ள, எப்பேர்பட்டக் கணவனையும் தன்வயப்படுத்தி விடுவதற்கான மந்திரமும் தந்திரமும், தைரியமும் கிடைத்துவிடும் என்பது நிஜம்.
     இப்படி ஒவ்வொரு கதையையும் பற்றி எழுதினால், பல பக்கங்கள் பயன்பட்டுப்போகும். என்றாலும், படைப்பாளியின் ஒட்டு மொத்தமான கதைகளின் சாராம்சத்தை எடுத்துக் கூறுவதாக இருந்தால்,  அநீதியும் அக்கிரமமும் நிறைந்த சமூகத்தில் மதுவாலும், புகையாலும், வாதினாலும், சூதினாலும், திரைப்படத்தாலும், வேலையில்லாமையினாலும் சீரழிந்து சின்னாபின்னமாகிக்  கொண்டிருக்கும் இளைஞர்களைத் தூக்கி நிறுத்தி துலங்கச் செய்வதற்கானப் பெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் கதாசிரியர். அவரது முயற்சி நிச்சயம் இளைஞர் பட்டாளங்களுக்கிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
     நல்லக் கல்வியாளர்களின் கைகளில் இக்கதைகள் கிடைத்தால், நிச்சயம் இவை பள்ளி, கல்லூரிப் பாடநூல்களில் பாடமாக வைக்கப்பட்டு எண்ணிலடங்கா மாணவர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தும் என்பது உறுதி.  
                           நூல் வெளியீடு:  முதற்சங்கு பதிப்பகம்
                           நூல் விலை: ரூ.80/-
                           நூலாசிரியர் தொடர்புக்கு: 9486012720     


     



  

Friday, 22 January 2016

கவிஞர் கமல செல்வராஜின் ‘கூந்தலைத் தட்டி முடி’ கவிதைத்தொகுதி பெண் சமூக தகுதி நிலை

கவிஞர் கமல செல்வராஜின் ‘கூந்தலைத் தட்டி முடி’ கவிதைத்தொகுதி
                                            பெண் சமூக தகுதி நிலை



 - முனைவர் இரா.நி.ஸ்ரீகலா
  உதவிப்பேராசிரியை
  தமிழ்த்துறை உயராய்வு மையம்
  தெ.தி. இந்துக் கல்லூரி
  நாகர்கோவில்.


முன்னுரை:

                      கன்னியாகுமரி மாவட்ட அருமனை என்னும் ஊரை பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் கமல செல்வராஜ். இவரது முதல் கவிதைத் தொகுதி கூந்தலைத் தட்டி முடி என்பதாகும்.  இவர் ஒரு சிறந்த கட்டுரையாளரும் கூட.  படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.  கல்விப் பணியோடு இலக்கியப் பணியிலும் பத்திரிக்கைப் பணியிலும் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர்.  சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நம்பிக்கையூட்டும் எழுச்சிமிகு கருத்துக்களை இளைய சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதில் வல்லவர்.
இதனைத் தொடர நுழைக
இவரது “கூந்தலைத் தட்டி முடி” என்னும் கவிதைத் தொகுதியின் தலைப்பே பெண்ணினத்தை எழுச்சிக் கொள்ள அறைகூவல் விடுக்கிறது.  பொறுத்தது போதும் பொங்கியெழு என்றது போல் சமூக சிக்கல்களையும் இன்னல்களையும் கண்டு மனம் தளராமல் துவண்டு விடாமல் தலைவிரித்து வேதனையில் மூழ்கி சிக்கி சிதையாமல் கூந்தலைத் தட்டி முடிந்து கொள்…. புதுமை மிக்க பெண் சமூகத்தைப் பார்க்கலாம் என்று அழைப்பது போல் உள்ளது.

சமூக மதிப்பீடு:

இவரது முதல் கவிதையான
மாதவியாயினும்
மாடியில் வாழ்ந்தால்
கண்ணகிப்பட்டம்!
கண்ணகியாயினும்
குடிசையில் வாழ்ந்தால்
மாதவிப்பட்டம்….! (கூ.த.முடி.ப. 42)

              என்னும் கவிதையானது சமூகம் பெண்ணை மதிப்பீடு செய்வதைக் குறிப்பிடுகிறது.  பெண்ணின் கற்பை மதிப்பீடு செய்வது கூட ஒரு வகையில் பணம் தான்.  கற்புத்தன்மையோடு மன உறுதியோடு வாழ்ந்தாலும் கூட ஏழை என்ற ஒரே காரணத்திற்காக அவள் மாதவியாகவே எளிதில் சித்தரிக்கப்படுகிறார்.  ஆனால் கற்பு நெறியிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்தாலும் அவள் வசதி படைத்தவள் என்பதால் கண்ணகியாகவே புனையப்படுகிறாள்.  கற்பில் கூட ஏழை பணக்காரர் பாகுபாடு காணப்படுவதை இவரது கவிதை உணர்த்துகிறது.  பெண்ணை மதிப்பீடு செய்வது அவளது மனவலிமையை விட பணவலிமையே ஆகும்.

பெண்ணை உதாசீனப்படுத்த நினைக்கும் சமூகம் முதலில் அவளது கற்பிலே பிழையைக் காண்கிறது. கற்பில் பிழையைச் சமூகம் கண்டாலும் கவிஞருக்குப் பெண் என்பவள் புனிதத் தன்மையுடையவள்.  அவளை சகல வல்லமையும் பொருந்தியவளாகவே காண்கிறார்.  அகிலத்தை ஆட்சி செய்யும் திறமையும் ஆலயமெல்லாம் அபிஷேகம் செய்யும் புனிதமும் உடையவள் பெண் இத்தனை இருந்தும் பெண் தன்னை நினைத்து புலம்பும் நிலை காணப்படவே செய்கிறது.  அதற்கான இரகசியம் என்ன என்று கேட்கிறார்.  வாழ வழியின்றி வறுமையின் காரணமாக சிவப்பு விளக்கின் கீழ் சிதைந்த வாழ்க்கையை சிங்கார வாழ்க்கையாக மேற்கொள்ளும் பெண்களை நுகர்கின்ற ஆண் வர்க்கம் அப்பெண்ணை பட்டப் பகலில் பலர் முன்னே பார்த்தால் அவளை இழிபொருளாக கருதுகின்றனர்.  அத்தகைய ஆண் சமூகத்தை சந்தர்ப்பவாதிகள் என்று சித்தரிக்கின்றார்.

பெண்ணடிமைத்தனம்:
காலங்கள் மாறினாலும் கணினியுகம்  வந்தாலும் பெண் என்றும் அடிமையாகவேத் திகழ்கிறாள்.
 
நீ
பிள்ளையாய் இருந்தபோது
தந்தைக்கு அடிமையாம்
இல்லறம் புகுந்தபின்
தலைவனுக்கு அடிமையாம்
வயோதிகம் அடைந்த பின்னே
மகனுக்கு அடிமையாம்! (கூ.த.முடி – ப. 46)

                       பெண்ணின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன.  அவற்றை ஒவ்வொன்றாக அடுக்குகிறார்.  பெண்ணின் வீழ்ச்சிக்கு சாதியும் மதமும் இனமும் குலமும் அணிவகுத்து நிற்பதோடு மட்டுமல்லாமல் கருவுக்குள்ளையே இனம் கண்டு இல்லாமல் ஆக்க அறிவியல் தொழில்நுட்பம் ‘ஸ்கேனும்’ வந்தாச்சு.  ஆகவே விழிப்போடு செயல்படு என்று கூறியதோடு
 
  யனைக்குத் தான்
தன்வலிமை தெரியாது என்பர்
யானைக்கு மட்டுமல்ல
பெண்ணே
உனக்கும்
உன்
வலிமை தெரியாது! (கூ.த.முடி. ப. 46)

குழந்தை வளர்ப்பு:
எதிர்கால கனவுகளோடு படித்து பட்டம் பெறுகின்ற இளைஞர்கள் வேலைதேடி திரியும் அவலநிலையை ஆசிரியர் காண்கிறார்.  அவர்கள்  வாழ வழிகாட்ட வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம்.  அவ்வெண்ணத்தைச் செயல்படுத்த அவர் தாய் ஸ்தானத்திலிருந்து பேசுகிறார். தாய் என்பவள் தரணியில் எல்லாமாகத் திகழ்கிறாள்.  தன் குழந்தைக்கு நல்லனவற்றைக் கற்றுக் கொடுக்கும் நல்லாசானாகவும் அவளேத் திகழ்கிறாள்.  ஈன்ற மகனைச் சான்றோனாக்குவதிலும் சமூகப் பொறுப்புள்ளவனாக்குவதிலும் சமூகத்தை எதிர்கொள்கின்ற பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் தாயின் பங்களிப்பும் பொறுப்பும் அதிகம்.  தன் மகனுக்கு ஒரு தாய் ஆறுதல் கூறுவதைப் போல் கூறுகிறார்.
 
“கையை நீட்டிக்
காட்டிடுவேன்
பாரதம் இங்கே
பாரப்பா
பரந்து விரிந்த
பரப்புதனில்
இரும்புக் கரங்கள்
உனக்கிருக்கு
நெஞ்சில் உறுதி
நிறைந்திருக்கு
நம்பிக்கை ஆண்டும்
பிறந்திருக்கு….. (கூ.த.முடி.  ப 91)

பெண் மனதின் உறுதித் தன்மையை இது காட்டுகிறது.

சமூகக் கொடுமைகள்:
பெண்ணிற்குச் சமூகம் பலவிதமானக் கொடுமைகளை இழைக்கின்றது.  காலம் காலமாக பெண் இழிவாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவது வரதட்சணையால். வரதட்சணை பெண்ணின் வாழ்க்கையை எவ்வாறு சீரழிக்கிறது என்பதை காட்சிப்படுத்துகிறார்.  பணம் இருந்தால் பெண்ணின் நிறம் ஒரு பொருட்டல்ல.  பெண் பார்க்கும் போது வரதட்சணை சற்றுக் குறைவானால் பெண்ணின் நிறத்தைக் காரணம் காட்டி தட்சணையை அதிகப்படுத்துகின்றனர்.

வரதட்சணை கேட்டார்
சற்றே குறைவு
வேண்டாம் பெண்ணு
கறுப்பா இருக்க
வந்த வேகத்தில்
திரும்பிப் போனார்…. (கூ.த.முடி.ப. 109)

      இதனால் மனம் கலங்கிய பெண் தீயில் குளித்து தன் உயிரை மாய்த்து விட்டாள்.  அவளது நிறம் கருமையாக இருந்தாலும் உள்ளம் வெண்மை நிறமானது.  அந்த வெள்ளை உள்ளம் தீக்கிரையாகி வெந்து தணிந்தது என்று வேதனைப்படுகிறார்.  அந்த வெள்ளை உள்ளத்தைப் பற்றி சமூகம் கவலைப் படுவதுமில்லை.  இவ்வாறு வரதட்சணைக் கொடுமையில் தீயில் கருகி தன்னை அழிக்கும் பெண் சமூகத்தின் மீது கவிஞர் இரக்கப்படுகிறார். வரதட்சணைக் கொடுமைக் கெதிராகவும் குரல் கொடுக்கிறார்.  நாடு தன் கையில் கிடைத்தால்
 
பெண்ணினம் என்றும்
போற்றிடவே இங்குக்
கழுத்தை நெரிக்கும்
தட்சணையைக் களைந்திடுவேன்
வரதட்சணையை ஒழித்திடுவேன்!

என்று அறைகூவல் விடுக்கிறார்.
விதவை மறுமணத்தை ஆதரிக்கும் கவிஞர் விலைமாது கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று சூளுரைக்கிறார்.  சமூகச் சீர்கேடுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்வதால் அச்செயலை விரட்டியடிப்போம் என்கிறார்.

ஏமாற்றுத்தனம்:
காதல் அது அன்பின் ஆதாரம்.  உன்னதமான உணர்வு காதல் எதையும் எதிர்பார்ப்பதில்லை.  ஆனால்  அத்தகைய காதல் என்னும் அன்பினை தவறான ஆயுதமாக பல ஆண்கள் இன்று பயன்படுத்தி காசு பணத்திற்கு ஆசைப்பட்டு பெண்களை ஏமாற்றி அவர்களைப் படுகுழியில் தள்ளுகின்றனர். சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற இந்நிகழ்வை, வேடதாரி ஆண்களை வேஷம் என்ற தலைப்பில் வேஷம் கலைக்கிறார் கவிஞர். இத்தகைய ஏமாற்று பேர்வழிகளை அடையாளம் காணத் தெரியாமல் பெண்கள் மீண்டும் மீண்டும் காதல் என்னும் வலையில் சிக்கி சீரழிகின்ற நிலையை ஆசிரியர் விளக்குகிறார்.
பெண் தன்னை தன் இருப்பை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும் சமூகத்தில் ஆங்காங்கே மது என்னும் கொடிய பழக்கத்திற்கு அடிமையான ஆண்களால் பெண் படுகின்ற பாட்டிலிருந்து இன்னும் மீளவில்லை.  அடித்து உதைத்து வாயில் துணியை வைத்து அமுக்கும் மதுக் கொடூரர்களின் கொடுஞ்செயலைப் பார்த்து கவிஞர் வேதனைப் படுகிறார்.  இத்தகைய பெண்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்க வழி தெரியாமல் அவதிப்படும் நிலையை காண முடிகிறது.
பெண்ணிற்குத் திருமணம் ஆன உடனே சமூகம் அவள் முன் வைக்கின்ற அடுத்த கேள்வி ‘குழந்தை பாக்கியம்’.  இது கிடைக்க சற்று தாமதமானால் கூட உதவாக்கரை, என்றும் மலடி என்றும் குடும்பமும் சமூகமும் வார்த்தைகளால் கொன்றுவிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடப்பதையும் கவிஞர் தன் பாடலில் காட்ட தவறவில்லை.


பெண் முன்னேற்றம்:

                  இத்தகைய கொடுமைகள் பெண்ணிற்கு ஒரு பக்கம் நிகழ்ந்தாலும் மறுபக்கம் அவள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறாள் அடுப்படிக்குள் முடங்கிக் கிடந்தப் பெண்கள் இன்று அடுக்களை விட்டு பள்ளிக்குச் சென்று பாடங்கள் நன்றாய்க் கற்றுப் பாரினில் பாகுபாடில்லாமல் பண்புடன் வாழும் புதுமையைக் கண்டு உள்ளம் இனிப்பதாக கூறுகிறார். இது கவிஞரது உள்ளத்து உணர்வாகவேத் தோன்றுகிறது. வுpதவை மறுமணம் மலர்ந்ததைக் கண்டு பாரதி மீண்டு வந்தால் வியப்பார் என்று கூறும் கவிஞர் தன் வியப்பையே கூறுகிறார். துறை தோறும் பெண்கள் வளர்ச்சிப் பெற்றதையும் மாதர்க்காக மாதர் சங்கங்கள் இருப்பது எல்லாமே பெண்ணின் முன்னேற்றத்தையே காட்டுகிறது.

பெண்ணின் மௌனம்:-

பெண் ஆற்றல் மிகுந்தவள். ஆண் உடலளவில் ஆற்றல் மிகுந்தவன். ஆனால் பெண் மனதளவில் ஆற்றல் மிகுந்தவள். பெண்ணின் பேச்சை விட அவளது மௌனம் பல மடங்கு சக்தி வாய்ந்தது. காதலியின் மௌனப் பார்வை காதலன் இதயத்தில் கல்லறையின் மீது ஜனன மரண எழுத்துக்களாய் திகழ்கின்றது.  உதட்டளவு பேச்சை விட உள்ளத்தால் பேசுவதே இதயத்தில் உறைந்து விட்டது.  இவ்வாறு பெண்ணின் மௌனம் ஆணின் சக்தியாக திகழ்கின்றது.

முடிவுரை:

                 பாரதி காலத்து பெண்ணிற்கு இருந்த சிக்கல்கள், பிரச்சினைகள் கொடுமைகள் ஓரளவுக்கு ஒழிந்தாலும் பெண் சமூகம் புதிது புதிதாக பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது.  பெண்ணை புற உணர்வுகளால் அடிமைப் படுத்த முடியாத நிலையில் சமூகம் அவளை அகவுணர்வுகளால் காயப்படுத்தவே செய்கிறது.  இந்நிலை மாறினால் மட்டுமே பெண் புதுமைப் பெண்ணாக தோற்ற மளிக்க முடியும் என்பது கருத்து.  இம்மாற்றம் வரும்  என்பதில் கவிஞருக்கு நம்பிக்கை உள்ளது.
 
  கவலை வேண்டாம்
அகிலமெல்லாம்
உன்னாட்சி
நடக்கும் நாள்
ஒன்றுண்டு
ஆண்டவனே நினைத்தாலும்
மாறாது இச் சபதம்
பெண்ணினமே
கூந்தலைத தட்டி முடி….

என்ற நம்பிக்கை விதையைப் பெண்ணினத்திற்கு விட்டுச் செல்கிறார்.

[இக்கட்டுரை "தமிழ் இலக்கியங்களில் பெண் - சமூகத் தகுதி நிலை" என்னும் தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை SREE வித்தியா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கு - ஆய்வுக்கோவை நூலில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.]
இக்கட்டுரையை எழுதிய பேராசிரியை முனைவர் R.N.SREEKALA அவர்களுக்கு எனது அகம்மகிழ்ப் பாராட்டுகள்.