Monday, 30 December 2013


 

                                      தமிழ் மணம் கமழும் வெள்ளிப்பல்லக்கு

 

 

           வெள்ளிப்பல்லக்கை கண் கலங்க மனம் வெதும்ப சுவைத்தேன்.    இது   உம்மால்தான் நடந்ததா? இல்லை அந்த கம்பன்தான் தங்கள் கனவில் எழுந்தருளி எழத வைத்தானா? இயம்புங்கள் புலவரே இப்படைப்பின் இரகசியத்தை.

    

           தமிழ் மணம் கமழும் வெள்ளிப்பல்லக்கில் சொல்லாடல் ஆற்றுப் பெருக்கெடுத்தல்லவா ஓடுகின்றது? தமிழின் சுவையை, இனிமையை, அருமையை இதில் அறியார் வேறெங்கு அறிவார் அவ்வளவு அருமை! இனிமை! எளிமை!

    

          நாவலின் நுழைவாயில் தொடங்கி இறுவாயில் வரை படிப்போரை தமிழ் பசியாற்றவல்லவா செய்கின்றது.

    

          புலவரே! இப்படைப்பின் மூலம்  வெள்ளிப்பல்லக்கு கம்பனுக்கு மட்டுமல்ல உமக்கும்தான் காத்திருக்கின்றது.

    

          கவிச்சக்கிரவர்த்தி கம்பன் சோழநாடு மட்டுமன்றி சேரநாட்டிலும் கன்னல் தமிழால் கலைமகளையும் காட்சி தரச்செய்து கவியரசரனார் என்று பைந்தமிழையும் வெள்ளிப்பல்லக்கிலேற்றி படிப்போரைப் பரவசப்படுத்தியுள்ளீர்.

 

         மேலும் இன்னமுதச் சுவை நூல்கள் பலவும்  படைத்திட வாழ்த்துகிறேன்.

 

 

நூல் குறிப்பு:

 

 

                வெள்ளிப்பல்லக்கு என்பது புலவர் கு. இரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்ட கம்பன் பற்றிய ஒரு வரலாற்றுப் புதினமாகும்.  இதன் விலை ரூ.100/-   கிடைக்கும் இடம்:  சிவசக்தி கம்ப்யூடர்ஸ், மார்க்கெட்ரோடு, மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு 9487653265.

 

 

 

 

 

 

 

               
 



Sunday, 24 March 2013

முத்துக்களே முனைப்புடன் எழுதுங்கள்


முத்துக்களே முனைப்புடன் எழுதுங்கள்
    
                                           டாக்டர் கமல. செல்வராஜ்
     மண்ணில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்வில் ஏதேனும் ஒரு நிகழ்வு மாற்றத்தை உருவாக்கியதாக இருக்கும்.  அந்த மாற்றம் அவர்களை, வாழ்க்கையின் அதி உன்னத நிலைக்கும் வழி வகுத்திருக்கலாம் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் வழிமறித்து விட்டிருக்கலாம்.
     எது எப்படியாயினும், அது அவர்களின் நிகழ்கால கர்மப் பலனாகவே இருக்கும்.  வாழ்க்கையின் உயர்ச்சியும், வீழ்ச்சியும் அவரவர் கையில்தான் இருக்கின்றது.  அதை எவராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது.
     அந்த வகையில் இவ்வருடம் தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ முத்துக்கள் பொதுத் தேர்வு எழுதப் போகும் நிலையை மலங்கரை விளக்கு மூலம் கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்க அவா கொள்கிறேன்.
     அருமை முத்துகளே! நீங்கள்தான் இத்தேசத்தின் சொத்துக்கள்.  அப்படி நினைக்கும் போதே ஓர் ஆசிரியரின் நிலையில் இருந்து கொண்டு அல்லது ஒரு பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து கொண்டு உங்களின் உள்ளங் கைகளைத் தொட்டு முத்தம் தரவே மனம் தூண்டுகிறது.  ஏனென்றால், நீங்கள் அவ்வளவு மகத்துவம் வாய்ந்தவர்கள்; மதிப்பு மிக்கவர்கள்.
     இத்தருணத்தில் உங்களை, ஈன்றெடுத்தப் பெற்றோரும் அறிவூட்டிய ஆசிரியர்களும் உங்கள் மீது எவ்வளவு எதிர்பார்ப்பை மிகுந்த ஏக்கத்தோடு வைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் மனப்பூர்வமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.  அந்த எதிர்பார்ப்பும், ஏக்கமும் அவர்களின் பெருமைக்காக அல்ல;  உங்களின் உயர்வுக்காக என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
     இவ்விரு நிலைகளிலும் பயிலும் நீங்கள் எழுதும் தேர்வுகள் உங்களின் எதிர்கால ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டுபவையாக அமைய வேண்டும்.  இவ்விரு நிலைகளிலும் நீங்கள் பெறும் மதிப்பெண்கள்தான் உங்களின் எதிர்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் அளிப்பவையாக இருக்கும்.
     எனவே, இனி இருக்கும் குறைந்த நாள்களை நீங்கள் கடமை உணர்வோடும், கண்ணியத்தோடும் படிப்பிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
     அதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.  அது உங்கள் மனதை தூய்மையாக்க வேண்டும்; எளிமையாக்க வேண்டும்.  மனச்சுமை சுத்தமாக இல்லாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.  படிப்பைத் தவிர, படிக்கும் பாடத்தைத் தவிர வேறு எதையும் மனதிற்குள் புகுத்திவிட முயலாதீர்கள்.
     நீங்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டாக இருந்தாலும், டி.வி. பார்ப்பதாக இருந்தாலும், கம்பியூட்டரில் அதிக நேரம் செலவளிப்பதாக இருந்தாலும், செல்போனில் பேசிபேசியே உங்கள் நேரத்தை வீணடிப்பதாக இருந்தாலும் இல்லை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலையே கில்லாடிகளாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வையுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளை இடவில்லை.
     ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சம் நாள்களுக்கு ஓரம் கட்டி வையுங்கள் என்று அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன்.  அப்படி, ஓரம் கட்டி வைத்து விட்டீர்களே என்றால், நீங்கள் இப்போதைக்கு எதை சாதிக்க வேண்டுமோ அதை மிகச் சுலபமாகச் சாதித்து விடமுடியும் என்பதே எனது திடமான நம்பிக்கை.
     அதன் பிறகு, நீங்கள் அவற்றையெல்லாம், இப்போது பயன்படுத்துவதை விட பன்மடங்கு அதிக நேரம் பயன்படுத்தலாம். நேரத்தை செலவழிக்கலாம்.
     இப்பொழுது உங்கள் மனதிற்குள் ஓர் ஐயப்பாடு ஆழ்க்கொண்டிருக்கலாம். அது, ஐயோ! என்னால் இவ்வளவு பாடங்களையும் இனி இருக்கும் நாள்களுக்குள் படித்து முடிப்பதற்கு முடியும? என்னால் நன்றாக தேர்வு எழுத முடியுமா? என்ற ஐயப்பாடு.
     இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த ஐயப்பாட்டை அப்படியே மனதிலிருந்து அடியோடு அகற்றி விடுங்கள்.  அதற்குப் பதில், நிச்சயமாக என்னால் படிக்க முடியும், வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை திடமாகத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
     பள்ளியிலும் வகுப்பறைகளிலும் ஆசிரியர்களோடு நல்ல உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  பாடங்களைப் படிக்கும் போது ஏதேனும் ஐயப்பாடுகள் எழுந்தால் அவற்றை எவ்வித தயக்கமும் இன்றி ஆசிரியர்களோடு கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுங்கள்.
     வகுப்பறை நண்பர்களோடு சகஜமாக பழகுங்கள்.  அவர்களில் யாரேனும் உங்கள் மனநிலையோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் இருந்தால், அவர்களுள் ஒன்றிரண்டுப் பேரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு கலந்துரையாடல் மூலம் படித்தால், மிகக் கடினமானப் பாடப் பகுதிகளைக் கூட மிகச் சுலபமாகப் புரிந்து கொண்டு மனதில் நிலை நிறுத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று விடலாம்.
     இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை விட அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அமைதியாக இருந்து படிப்பதுதான் உங்கள் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் அதிக பலன் தருவதாக இருக்கும்.  இந்த நேரத்தில் படிப்பதெல்லாம் அப்படியே மனதிற்குள் ஆழமாகப் பதிந்து விடும்.
     வீடுகளில் பெற்றோரின் கோபதாபங்களுக்கும் சண்டை, சச்சரஙுகளுக்கும் சிறிதளவும் இடம் கொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  வீட்டில் நல்ல அமைதியான, அன்பான சூழ்நிலை உருவானால்தான் உங்கள் மனநிலை சமநிலைப்படும்.  அதுவே, உங்கள் வெற்றிக்கு நூறு சதவீத உத்தரவாதத்தை உருவாக்கித் தரும்.
     ஓயாமல் புத்தகமும் கையுமாக இருக்காமல் உடம்புக்கு ஓய்வு தேவைப்படுகிறது என உணர்ந்தால் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.  அது உங்கள் உடல் நிலைக்கும், மனநிலைக்கும் தேர்வு நேரத்தில் நன்மைப் பயக்கும்.
     அதிக பசியோடும், உடல் சோர்வோடும் இருந்து நீண்ட நேரம் படிக்க வேண்டாம்.  அதனால் நேரம் வீணாகுமே தவிர படிப்பது எதுவும் மனதிற்குள் நிற்காது.  அளவான உணவும், தெளிவான சிந்தனையும், திடமான உடல் நிலையும், அமைதியான சூழ்நிலையுமே உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
     அன்பான முத்துக்களே! உங்களை நீங்களே நம்புங்கள்.  உங்களிடம் சர்வ வல்லமை அதீதமாக உள்ளது.  உங்களிடம் இல்லாதது வேறு எவரிடமும் இல்லை.  இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே தவிர வேறுவேறல்ல.  ஆனால், அவரவர் ஆற்றலை ஆறிந்து, உணர்ந்து செயலாற்றினால் வாழ்க்கையின் உன்னத நிலையை மிகச் சுலபமாக அடைந்து விட முடியும்.
                           முத்துக்களே!
                           நீங்கள் நினைத்தால்
                           துரும்பையும் தூணாக்கலாம்
                           புல்லையும் புல்லாங்குழலாக்கலாம்...
அப்புறம் ஏன் இந்தத் தேர்வில் மட்டும் வெற்றி கொள்ள இயலாது? துணிந்து எழுதுங்கள்... தெரிந்து எழுதுங்கள்... தெளிந்து எழுதுங்கள்... வெற்றி உங்களுடையது.
     உங்களின் நீண்ட, நெடிய வாழ்க்கையில் இவ்விரு நிலைகளிலும் நீங்கள் பெறும் வெற்றியும் மதிப்பெண்ணும்தான் உங்களுக்கு மணிமகுடமாக அமையும்.  இதை உணருங்கள்... உயருங்கள்... வாழ்த்துகள்.

                    மலங்கரை விளக்கு  பிப்ரவரி 2013 இதழில் பிரசுரமானது.
  
     











































  
                                                

         

Wednesday, 2 January 2013

அரக்கர்களின் கொலைவெறி அடங்குவது எப்போது?


              அரக்கர்களின் கொலைவெறி அடங்குவது எப்போது?

     வையகத்து உயிரினங்களில் மாண்புடையது மனித இனம்.
பகுத்தறிவென்னும் ஆறாவது அறிவுடன் தோன்றி, வையகம் ஆளும் தகுதிப் பெற்றதும் இந்த மனித இனம் மட்டும்தான்.
     ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல், பரஸ்பரம் மாறிமாறி உதவிகள் செய்தல் போன்ற மேன்மைப் பொருந்திய அனைத்துக் குணாதிசையங்களும் இந்த மாண்புமிகு மனித குலத்திற்கு மட்டுமே உரித்தானவை.
     ஒருவரை ஒருவர் அண்டிப் பிழைக்காமல், தனக்குத் தானேத் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொண்டு அமைதியான, அருமையான வாழ்க்கையைத் தொடரக் கடமைப்பட்டவன் மனிதன்.
     கடவுளை முழுமையாக நம்புகிறவர்கள் மனிதர்கள். அதனால், கடவுளின் சாயலில் மனிதன் மட்டுமேப் படைக்கப்பட்டிருக்கின்றான் என ஆணித்தரமாக நம்புகின்றனர்.  இவ் அபூர்வ படைப்பு இவ்வையகத்தில் மனித குலத்தின் தனித்துவமாகும்.
     இத்தனைச் சிறப்புறு மனித குலத்தின் இன்னுயிர் என்பது விலை மதிக்க இயலாதது.  அந்த இன்னுயிருக்குச் சொந்தக்காரன் மனித குலத்தைப் படைத்தவன் மட்டுமே ஆவான்.  அவனுக்கு மட்டுமே இயற்கையாகவே அதனை ஈந்ததுப் போன்று நீக்கவும் உரிமையுண்டு.
     ஆனால், சமீபகாலமாக நம் நாட்டில் நடைபெறும் மனித உயிர்கள் மீதானத்   தாக்குதல்கள்,    அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்கின்றன.  பணத்திற்காக, காதலுக்காக, சாதி, மதத்திற்காக,   போதையின் வேகத்தில் நண்பர்களுக்குள்ளாக என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொலைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
     நம் மூதாதையர் காலங்களில் மனித கொலை என்பது எண்ணிப் பார்ப்பதற்குக் கூட இயலாதது.   ஏதேனும் தவிர்க்க இயலாத காரணத்திற்காக ஒரு கொலை நடந்து விட்டால்  அந்த ஊரேப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விடும். கொலைக்காரனுக்கு எதிராக, எவ்விதக் கருத்து வேற்றுமையும் இன்றி ஊரேத் திரண்டு ஒற்றுமையுடன் நின்று குரல் கொடுக்கும்.
     இதனால், கொலைச் செய்யப்பட்ட மறுநிமிடமே, குற்றவாளி கைது செய்யப்பட்டு, ஒருசில மாதங்களில் அவனுக்கு நீதிமன்றம் மூலம் கடுமையானத் தண்டனை வழங்கப்படும்.  இதனால், கொலைக் குற்றங்கள் செய்பவர்கள் அக்கொடியச் செயலைச் செய்வதற்கு, அஞ்சி நடுங்கி வந்தனர்.
     காலத்தின் கோலத்தில், இன்று மனிதக் கொலைகள் அன்றாட, சாதாரண நிகழ்வாக மாறி வருகின்றன.  இப்படி, அன்றாடம் நடைபெறும் கொலைகளுக்குச் சக மனிதர்களிடையே எதிர்ப்போ அல்லது நீதிமன்றங்களில் கடுமையான தண்டனையோ  இல்லாமலாகி விட்டன.
     அன்றாடம் நடைபெறும் கொலைகளின்  காரணங்களையும் பின்னணிகளையும் ஆய்ந்துப் பார்த்தால், அவை, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
     தான் காதலித்தப் பெண் தன்னைக் காதலிக்கவில்லை என்றக் காரணத்திற்காகப் பட்டப்பகலில் அவள் வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலகத்தில் சென்று, சக ஊழியர்களின் முன்னிலையில் கதறகதற வெட்டி, குத்திக் கொடூரமாய்க் கொலை செய்யும் வினோதச் செயல் நம் நாட்டில் அசாதரணமாக அரங்கேறுகின்றது.
     ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து, சாதி மாறியோ அல்லது மதம் மாறியோ பெற்றோருக்கு விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டால், அவர்களை பெற்றோரே அடியாட்களை ஏவி விட்டு மக்கள் நடமாடும் தெரு வீதிகளில் ஓடஓட, கதற கதற வெட்டிச் சாய்க்கும் உயிர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியதாக மாறி வருகின்றது.
     பணத்திற்கும்   பொருள்களுக்கும் வேண்டி வீட்டில் வயோதியர்களோ அல்லது பெண்களோ மட்டும் இருப்பதை நோட்டமிடுகின்றனர். பின்னர்,   இரவென்றோ, பகலென்றோப் பாராமல் வீட்டினுள்ளேப் புகுந்து அப்பாவி உயிர்களை வெட்டி வீழ்த்துகின்றனர். அதோடு, வீட்டிலிருந்து  பணத்தையும் கூடவே அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அங்க உறுப்புகளோடு அறுத்துச் செல்லும் அநியாயமும் நம் கண்ணெதிரே அரங்கேறுகின்றன.
     எவ்வளவோ படித்தும் பண்பட்டும் அறிவு முதிர்ச்சியின்றி மதத்திற்காகவும் கடவுளுக்காகவும் முட்டி மோதி, சண்டையிட்டு சச்சரவுச் செய்து, மனித உயிர்களைப் பலிவாங்கும் போக்கு இன்றும் நீடிக்கின்றது.
     இறைவனின் படைப்பில் ஒன்று பட்டிருக்கும் மனித குலத்திற்குள் சாதி(தீ)’ என்னும் கொடிய நோயைப் புகுத்தி, அதற்குள்ளே உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் பாகுபாட்டை ஏற்படுத்தி, தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்காய் சாதி(தீ)’ கலவரங்களால் சாம்பலாகிப் போகும் மனித உயிர்கள் எத்தனை?
     இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அரசியல் காழ்ப்புணர்சிகளுக்காக வெட்டி வீழ்த்தப்படும் உயிர்களும் அடித்து நொறுக்கப்படும் உடைமைகளும் கணக்கிலடங்காதவை.
     இவையெல்லாம் தவிர்த்து நம் நாட்டில் வினோதமாய் மலிவாகிப் போன மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி... அறிவு மங்கி... அநியாயமாய் பழிவாங்கப்படும் உயிர்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுவது?
     கேட்பாரும் பராமரிப்பாருமின்றி  பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகளில் அறிவிலிகளாய்... அப்பாவிகளாய்... வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி தினம் தினம் பலிகடாகளாகும் உயிர்களின் எண்ணிக்கை எத்தனை?
     இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டேச் சென்றால் நம்மிடையே நடக்கும் அநியாய மனித உயிர் பலி என்பது நம்மை பீதிக்குள்ளாக்கி, இனி மனித பிறவியே வேண்டாம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.
     அறிவாற்றலுடன் சிந்திக்கும் பெண்கள் இப்படிப்பட்ட உலகில் ஏன் குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவற்றை அநியாயமாகப் பலிகொடுக்க வேண்டும் என நினைத்து வருங்காலங்களில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதைத் தவிர்த்தால்கூட ஆச்சரியப்படவில்லை என்றேக் கருதத் தோன்றுகிறது.
     பெற்றெடுத்தப் பிள்ளை பள்ளிக்குச் சென்று பாடங்களை நன்றாகப் படித்து அறிவுப் பெற்று... பண்பட்டு... பக்குவப்பட்டு... வளர்ந்து... பெரிய மனிதனாய் வருவான் என்ற ஏக ஆவலோடுப் பள்ளிக்கு அனுப்பினால், அவன் தனக்கு அறிவூட்டிய ஆசிரியரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொன்று விட்டு கொலைக் காரனாக வருகின்றான்.  வகுப்பறையில் அறிவூட்டும் ஆசிரியர்களின் உயிருக்குக்கூட உத்தரவாதம் இல்லையே என்ற ஏக்கம் என்றுத் தணியும்? எப்படித் தணியும்?
     பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சென்று பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டிப் பெற்றோரைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புகின்றனர்.  ஆனால், அங்கே சக மாணவர்களால் ராக்கிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதற்கு ஒத்துளைக்காத போது வெறித்தனமாய் கொலை செய்து தூக்கி வீசும் கோமாளித் தனத்திற்கு என்று விடிவு காண்பது?
     இத்தனைக் கொடுமைகளும் நாம் வாழும் சமகாலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  இந்த அநியாயங்களும் அக்கிரமங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தோங்குவதற்கான காரணகர்த்தாக்கள் யார்? இற்றிற்கு திரைசீலை இட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியப் பொறுப்பு யாருடையது? என்பதைச்  சமூக அக்கரையுடையவர்கள் சிந்திக்க வேண்டாமா?
     அப்படி, ஒருவர் ஆழமாக அலசி ஆராயத் தொடங்கினார் என்றால் அவருக்குக் கிடைக்கும் விடையும், விடிவும் இவையாகத்தான் இருக்கும்.
     அவற்றில் முதன்மையானது, நாட்டில் நடக்கும் இவ்விதமான கொடூரப் பலி வாங்கல்களைக் கண்டும் கேட்டும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் செவிடாகி... குருடாகி... செயலற்றுப் போயிருக்கும் ஆட்சியாளர்களே ஆகும்.
     இரண்டாவதாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெறும் கொலைகளைப் புலனாய்வுச் செய்து நீதியோடும் நியாயத்தோடும் வெட்ட வெளிச்சமாக்கி அதற்குக் காரணமானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், ஏதோ ஒரு காரணத்திற்காகக் கொலையாளிகள் தப்பிப்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாண்டு கொலைகளை மூடி மறைப்பதற்குப் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் லஞ்சமாக வாங்கும் போலீஸ் துறையின் துரோகச் செயல்களாகும்.
     மூன்றாவதாக, நீதியும் நேர்மையும் இரு கண்களாகக் கொண்டுச் செயல்பட வேண்டிய நீதிமன்றங்கள் கூட இன்று லஞ்ச, லாவண்ணியத்திற்கு அடிமையாகி, நீதிகளையும் தீர்ப்புகளையும் கொலையாளிகளுக்குச் சாதகமாக்கி அவர்களை குற்றத்திலிருந்து லகுவாக விடுதலையாக்கி தப்பித்துச் செல்ல வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
     நான்காவதாக, சமூகத்தின் ஒரு பிரிவினர் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் சாதி, சமய, இன, மொழி ஆகியவற்றின் நலன் கருதியோ இப்படிப்பட்ட சமூக விரோத கொலையாளிக் கும்பல்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை குற்றத்திலிருந்து தப்பிக்க நேரடியான ஆதரவும் அரவணைப்பும் கொடுக்கின்றனர்.  இந்நாட்டின் பிரதமராய்யிருந்த ராஜூகாந்தியைக் கொன்றவர்களை ஆதரித்து அவர்களுக்குக் கொடுத்திருக்கும் தண்டனையை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களே இதற்குப் பொருத்தமான சான்றாதாரமாவார்கள்.
     ஐந்தாவதாக, இப்படிப்பட்ட கொலைக் குற்றம் போதிய தடயங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகின்றது. அது மீண்டும் நமது நாட்டு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதிகளின் அனுமதிக்காகக் கொண்டுச் சென்று, அவர்களால் அனுமதியளிக்கப்படாமல் அவர்களின் அலுவலகத்திலையே தூங்கிவிடுகின்றது.
     ஆறாவது, இந்த கொலைக் குற்றங்களைச் செய்வதற்குச் சாதாரண மனிதர்களைத் தூண்டி விடும் போதைப் பொருள்களைத் தடை செய்யாமல் அவற்றை அரசாங்கமே மனசாட்சியின்றி நேரடியாக விற்பனைச் செய்வது.
     இந்த இழிநிலைகளையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு துடைத்து எறிவதற்குத் துணிச்சலுள்ள ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நம் நாட்டில் வரவேண்டும்.  என்றால் மட்டுமே மாண்புடைய மனித உயிர்கள் இன்னலின்றி இன்பமாய் வாழ்ந்து இயற்கையாய் இறையடிச் சேரமுடியும்.       

                                                                   சமுதாய நண்பன் செப்டம்பர் 2012.