Wednesday, 28 December 2022

                                       முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி…

(இது புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் எழுதியுள்ள
அகிலஒளி அய்யா வைகுண்டர் என்னும் நாவலுக்கு அடியேன் எழுதியுள்ள ஆய்வுரை)
உலக வரலாற்றில், நாட்டில் எங்கு அதிகமாக அநீதியும் அக்கிரமும் நடக்கிறதோ அங்கே, இறைவனின் அருளால் அவதாரப் புருஷர்கள் அவதரித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது வரலாறு.
அந்த வரலாற்றுக்குச் சான்று பகிர்ந்து நிற்பதுதான் இந்தியாவின் தென்கோடியில் கலியழிப்பதற்கு வந்த அய்யா வைகுண்டரின் அற்புதமான அவதாரம். அந்த வரலாற்றை அகில ஒளி அய்யா வைகுண்டர் என்னும் புதுமையானப் புத்தகமாக்கியுள்ளார் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள்.
புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் முத்தமிழ் தவழ்ந்து விளையாடும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்குக் கிடைத்தத் தவப்புதல்வர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, நல்லாசிரியராகி,… தலைமயாசிரியராய் உயர்வுப் பெற்று… பேராசிரியராகும் பேறுபெற்றவர்.
இலக்கிய மேடைகளில், இவரின் இலக்கிய முழக்கம் தேனினும் இனிதாகி, கேட்போரை மெய்மறக்க வைக்கும். ஆன்மீக அரங்குகளில் இவரின் அமுதினுமினிய உரைவீச்சு, அந்த ஈசனையே இணங்க வைக்கும்.
புதினம்… கவிதை… கட்டுரை… எனப் புத்தகம் பல படைத்துப் பாருக்குப் பரிசளித்தவர். காவியம்… காப்பியம் எழுதுவது கூட இவருக்குக் கைவந்த கலை. இவற்றை படிப்பவர்கள் உள்ளம் உருகி… சிந்தை தெளிந்து… வாழ்வில் வசந்தம் பெறுவது திண்ணம்.
பள்ளிகளிலும் கல்லூரியிலும் பணியாற்றிய போது மாணவர்களின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்தவர். இவரின் பாதச்சுவட்டைப் பின்பற்றியப் பலர் இன்று இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் மின்னும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றார்கள் என்றால் மிகையல்ல.
தேசியமும் தெய்வீகமும் இவருக்கு இரு விழிகள். அதனால் பாரதக் கலாச்சாரப் பேரவையின் செயலாளராக அரும்பெரும் செயல்களைச் செய்து வருகிறார். அதோடு மரபுசார் மீட்பு குழு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மரவுகளை மீட்டெடுப்பதற்கு மிகவும் துணிச்சலுடன் அரசாங்கத்தோடும், அரசு அதிகாரிகளோடும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறார். அதன் மூலம் பல உரிமைகளை மீட்டெடுத்து பாரதக் கலாச்சாரத்திற்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.
இப்படி இலக்கியம்… ஆன்மீகம்… பாரதம்… பண்பாடு… ஆகியவற்றிற்காக இவர் ஆற்றியுள்ள அரும் பெரும் பணிக்காக, இலக்கியச் செம்மல், கவிமணி விருது உட்பட பல்வேறு விருதுகள் இல்லம் தேடி வந்து இவரை கௌரவித்துள்ளன.
இப்பெரும் புலவரால் புனையப்பட்டுள்ள அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்று நூல், அய்யாவை, அந்நெறி சார்ந்த மக்கள் மட்டுமின்றி, அவரை அறியாத, அவையத்திலுள்ள பொதுநிலை மக்களும் எளிதில் புரிந்து, தெரிந்து கொள்ளும் விதமாக மிகவும் எளிய… இனிய… கவிதை வடிவில் வடித்திருப்பது வியப்புக்குரியது.
அய்யாவின் வாழ்வியலை முழுமையாக அறிவதற்கு அகிலத்திரட்டு அம்மானை வழிகோலும். ஆனால் அதனை பாமரர்கள் படித்து உள்வாங்குவதற்கு இன்னொரு பண்டிதரரின் துணை வேண்டும். இந்நூல் அப்படியல்ல, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தாங்களாகவேப் படித்து புரிந்து கொள்ளும் விதத்தில் இனியக் கவிதை நடை.யில் படைத்தளித்திருப்பது வாசகர்களின் மனதை கொள்ளை கொள்வதாகும்.
மன்னராட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்களை அடிமைகள் போல் வழிநடத்தியக் காலத்தில், மன்னர்களின் ஆதரவோடு ஆட்டம் போட்ட மேட்டுக்குடி மக்களின் கொட்டத்தை அடக்கியதோடு மன்னராட்சிக்கே முற்றுப்புள்ளி வைக்கும் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார் இந்த அய்யா வைகுண்டர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பும் பெயர்களைக் கூட தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டும் உரிமையின்றி தவித்திருப்பதை இந்நூல் விளக்கியிருக்கும் விதம் வித்தியாசமானது. முடிசூடும் பெருமாள் என்று அய்யா வைகுண்டருக்கு, தன் பெற்றோர் சூட்டியப் பெயரையே மாற்றுவதற்கு மன்னன் ஆணை பிறப்பித்து, தன் படைகள் அனைத்தையும் சாஸ்தான் கோவில்விளைக்கு அனுப்பி, அப்பெயரை மாற்றுவதற்கு பெற்றோரை மிரட்டியுள்ளான்.
அந்த நிகழ்வுகளையெல்லாம் வீரப்பாண்டியக் கட்டப்பொம்மன் நாடகத்தில் வரும் வசனத்தைப் போல், கேட்போர் உதிரம் கொதிக்கும் படி புலவர் அவர்கள் நாடகப் பாணியில் வீரவசம் பேசுவது போல் தன் கவிபுலமையால் படைத்திருப்பது படிப்போரை கொதித்தெழ வைக்கிறது. இதோ அதற்கு சிறு சான்று:-
“முடிசூடும் பெருமாள் என்பது யார்?
எமது குழந்தை…! அடிமை இப்பெயரைச் சூட்டுவது அரச குற்றம் என்பதை நீ அறியாயோ!
அடிமைகளா? யாருக்கு யார் அடிமை? மண்ணின் மைந்தர்கள் நாங்கள்… வந்தேறிகள் நீங்கள்…
வாதம் செய்வதற்காக நாங்கள் வரவில்லை.
அப்படியானால் எதற்காக வந்தீர்கள்?
பெயர் மாற்றம் செய்துவிடு என எச்சரிப்பதற்காக வந்துள்ளோம் யாம்…
பெயர் மாற்றமா யாருக்கு…? சொந்த மண்ணில் பாடும் பறவைகளாய் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துபவர்கள் நாங்கள்… நாங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்?
இப்படி நூலின் ஆதிமுதல் அந்தம் வரை நாடகப்பாணியில் அமைத்திருப்பது, நூலை வாசிக்க கையில் எடுப்பவர்களை, வாசித்து முடியும் வரை தரையில் வைக்க விடாமல் உணர்ச்சிப் பூர்வமாக விறுவிறு என்று இழுத்துச் செல்கிறது.
அய்யா வைகுண்டரை பல விதங்களில் கொடுமைப்படுத்தி எப்படியாவது பணிய வைக்க வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும் என மேட்டுக்குடி மக்களும் மன்னனும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின. கடைசியாக மன்னனே அய்யாவிடம் மண்டியிட வேண்டிய அவல நிலை வந்தது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் உணர்ச்சிப் பிழம்பான வரிகளால் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றை படிக்கும் போது, அகிலத்திரட்டை எழுதுவதற்கு அரிகோபாலன் என்பவருக்குள்ளிலிருந்து அந்த வைகுண்டரே இயக்கினார் என்று கூறுவார்கள். அது போல் இந்த அகிலஒளி அய்யா வைகுண்டர் என்னும் இந்நாவலை எழுதும் போது, புலவர் கு. இரவீந்திரருக்குள்ளும் அய்யாவின் அருள் ஒளி இருந்து இயக்கியிருக்கும் என அடியேன் ஆணித்தரமாக நம்புகிறேன்.
அருமனை என்றும் சிநேகங்களுடன்…
07-06-2022 முனைவர் கமல. செல்வராஜ்.
(இந்நாவலைப் பெற்றுக்கொள்வதற்குத் தொடர்பு கொள்ள நாவலாசிரியரின் கைபேசி எண்: 9487653265)



Tuesday, 13 December 2022

 தேசிய மொழிகள் தினம்: தேசியக் கவிக்கு மரியாதை.

பாரத தேசம் ஆண்டாண்டுக் காலமாக அன்னியனின் பிடியில் அகப்பட்டு, சுதந்திரத்திற்காகப் தீவிரப் போராட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் என்பதை கனவில்கூட எண்ணிப் பார்க்க முடியாது. அந்த வேளையில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” எனக் கூக்குரல் எழுப்பி வெள்ளையனைத் திக்குமுக்காடச் செய்தவன் முண்டாசுக் கவிஞன் சுப்பிரமணியப்பாரதி.
சுதந்திர வேள்விக்குப் துப்பாக்கியும் வாளும் எடுக்காமல் தன் மனதில் எழுந்த சுதந்திர வேள்வியை, எழுதுகோல் என்னும் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி வெள்ளையனின் நெஞ்சிற்கு நேராக தீப்பந்தங்களாக பாச்சியவன் இந்த எட்டையபுரத்து சிங்கக்குட்டி.
சுதந்திரம் கிடைத்து விடும் என்பது திண்ணம். அதன் பிறகு கல்வியில், கலாச்சாரத்தில், கலையில், மொழியில், பொருளாதாரத்தில், தொழில்துறையில், தொலைத்தொடர்பில் இத்தேசத்தை எப்படி, ஒன்றுபட்ட வளம் மிக்க தேசமாக மாற்ற வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையில் திளைத்திருந்தான் அவன்.
அதனால்தான் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்றான் முறுக்கு மீசைக்காரன். அவன் கூற்றுப்படி ஒருவன் எட்டுத்திக்கும் செல்ல வேண்டும் என்றால் அவனுக்குப் பல்மொழிப்புலமை வேண்டும் என்பதை அவன் நன்குணர்ந்திருந்தான். அதனை அவனே நிருபித்துக் காட்டினான். ஹிந்தி, சமஸ்கிருதம் உட்படக் கிட்டத்தட்டப் பன்னிரண்டு மொழிகளில் அவன் புலமை பெற்றிருந்தான் என்று இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்குச் சான்றாகத்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” என்கிறான். இத்தனை மொழிகளின் அருமைப் பெருமைகளைத் தெரிந்திருந்து, உலகிற்கு உணர்த்தியதால்தான் இன்று, பாரதியின் பிறந்த தினமான டிசம்பர்- 11 ஐ இந்த ஆண்டு முதல் தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தினத்தை அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடவும் வலியுறுத்தியுள்ளது. இது பாரதிக்குக் கிடைத்திருக்கும் கௌரவமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் கௌரவம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இன்றுள்ள அளவிற்கு தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி இருக்கும் என்பதை கற்பனையில்கூட நினைத்துப் பார்ப்பதற்கு முடியாது. என்றாலும் அந்த அக்கினிக் குஞ்சின் கனவில் இப்படியொரு எண்ணம் தோன்றி, அன்று அது கவிதையாகி… நின்று நிஜமாகியிருக்கிறது. அது “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்பது.
இன்று யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து உலகமே நம் ஒவ்வொருவரின் உள்ளம் கைக்குள் வந்துள்ளது. அதனால் மத்திய அரசாங்கம் இன்று காசியில் பாரதியாருக்கும் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இருந்த உறவை நிரூபிக்கும் விதத்தில் காசி தமிழ் சங்கம் மூலம் தமிழ் கலாச்சார விழாவை நடத்தி பாரதிக்கு மகுடம் சூட்டி வருகிறது.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை
பேச: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
இந்தக் கட்டுரை ie tamil இணைய வழி இதழில் 10-12-2022 அன்று பிரசுரமானது.