Thursday, 3 November 2022

 

                  

                      உள்ளத் துளிகள்...

                 கவிதை நூல் உள்ளோட்டம்.

                   உண்மைத் துளிகள்.           


                      முனைவர் கமல. செல்வராஜ்

                      அழைக்க: 9443559841

                      அணுக: drkamalaru@gmail.com

                      பார்க்க: drkamal voice (youtube)

     கடந்து செல்லும் பாதைகளில், பார்வையில் படுபவை… செவிகளில் ஒலிப்பவை… யாவையும் கவிஞனுக்குக் கருப்பொருளாகி, கவிதையாக… கதையாக… காவியமாக… கட்டுரையாக… பிறப்பெடுக்கும்.

     இவற்றில் கவிதையென்பது பெட்டிக்கடையில் இருக்கும் மிட்டாயைப் பார்க்கும் போது, சிறுகுழந்தைகளுக்கு எப்படி அதை வாங்கி இருசிக்க வேண்டும் என்னும் ஆவா வருமோ அதுபோல, வாசகர்களுக்கும் வாசிக்க வேண்டும் என்னும் உந்துதல் உள்ளத்துக்குள் எழ வேண்டும். அந்த ஈர்ப்பு சக்தியை எந்த ஒரு கவிஞனால் கொடுக்க முடியுமே அந்த கவிஞன், வாசகர்களின் உள்ளங்களில் நிலைத்து வாழ்ந்து கொண்டேயிருப்பான்.

     அப்படிப்பட்டக் கவிதையை எழுதுவதற்கு வயது வரம்பும் நீண்ட நெடிய அனுபவமும் அவசியமில்லை. கொஞ்சம் வித்யாசமான சிந்தனையும் கற்பனையாற்றலும் இருந்தால் தாராளமாகும்.

     அந்த வகையில் உள்ளத்துளிகள் என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பை உருவாக்கியிருக்கும் இளவல் சு.கி. மனோஷ் கைலாஸ் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்.

     இவர் தனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே வாசிப்பை நேசிப்பவராய் வளர்ந்துள்ளார். அதனால் பள்ளிப்பருவம் முடியும் முன்பே தன் உள்ளத்தில் பட்டதெல்லாம் கவிதையாக்கி, இப்படியொருக் கவிதை நூலுக்குப் பிதாமகனாகியுள்ளார்.

     தமிழ்மொழி, தமிழ் கவிஞர்கள், இத்தேசத்தை நேசித்தத் தலைவர்கள், அன்பு, அழகு, அருவி, இயற்கை, இளமை, இறைவன், மரம், செடி, கொடி, காற்று, கடல், வானம், வாழ்வு, வசந்தம், சாதனை, சோதனை, வேதனை, இளையோர், முதியோர், பெற்றோர், ஆசிரியர், கனவு, நனவு, நட்பு, நடப்பவை, நடக்காதவை, விவசாயி, வியாபாரி என நூற்றுக்கும் அதிகமான உள்ளத்துளிகளை வண்ணக் கவிதைகளாக்கியுள்ளார்.

    அந்த உள்ளத்துளிகளில் ஒருசில சிறு துளிகள் இதோ:-

விசாயிகளைப் பாடதக் கவிஞர்கள் யவரும் இலர் என்றே சொல்லலாம். இதோ இந்த இளங்கவிஞனின் உள்ளத்திற்குள் விவசாயிகள் எப்படிப் பதிந்துள்ளார்கள் என்பதை விதைத்தோன் துயரம் என்னும் கவிதையில் இப்படிப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

                உலகிற்கே சோறிட்டவன்

                  இன்று உறங்காமல் வாடுகின்றான்

                  வாழ்க்கை மூச்சு நின்றிடவே

                  ஈசனிடம் வேண்டுகிறான்.  கையில் காகிதத்தோடும் எழுதுகோலோடும் மட்டுமே பழகிக் கொண்டிருக்கும் இந்த வயதில், கலப்பையைக் கையில் பிடித்து, சேற்றோடு உறவாடிக் கொண்டிருக்கும் உழவனின் வலியும் வேதனையும் இந்தக் கவிஞக்கு இவ்வளவு அத்துப்பிடியென்றால், நாளை இந்தக் கவிஞனை உலகமே எட்டிப் பார்க்கும் என்பதே உண்மை.

     வாழ்க்கையின் மகத்துவத்தைப் பற்றி கவிதை வடிக்கவும் கவிஞன் மறக்கவில்லை. புகழ் என்னும் பொருளில் புதைந்துள்ள தத்துவம் இதோ:-

                   நிலையானப் புகழொன்று வேண்டுமென்றால்

                   சிறுமணிக் குற்றமும் இல்லையெனில்

                   புகழ்தனை தேடவே நிறையநாட்கள்

                   அதை கெடுக்கவே நேரிடும் சில நொடிகள்.

     இளமையின் துடிப்பு கவிஞனின் வயது . ஆனால் அவன் அறிவின் முதிற்சிக்கு இக்கவிதையே சாட்சி.

     இப்படி ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும் போது வாசகனின் உள்ளத்திற்குள் ஏதோ ஓர் உணர்ச்சியும் எழுச்சியும் தோன்றும். அதுவே இக்கவிஞனின் புகழ்ச்சி.

     பிறப்பால் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர், பள்ளிப்படிப்பில் தமிழை இரண்டாம் மொழியாகப் படித்தவர் இந்த இளம் கவிஞர். இப்பள்ளிப் பருவத்திலையே தமிழ்மொழி மீது தீராக் காதல் கொண்டு, கன்னிப் படைப்பைத் தமிழ்மொழியில் ஆக்கியிருக்கும் ஆற்றலை எப்படி மெச்சுவது.

     இந்தப் படைப்பை ஆஹா… ஓகோ… அருமை… அற்புதம்… ஆனந்தம்… என்றெல்லாம் உச்சிமீது வைத்து மெச்சுவதற்கு அடியேன் ஆசைப்படவில்லை.

     ஆனால் இனிவரும் படைப்புகள் அனைத்தும் இப்படி மெச்சுவதற்குரியதாக இருக்கும் என்பதற்கான அச்சாரம் இங்கே அமைக்கப் பட்டிருக்கிறது என்பதுவே அடியேனின் அசைக்க முடியாத எண்ணம்; அதுவே திண்ணம்.

     எனவே நம் கன்னித் தமிழுக்குத் தன்னை தாரைவார்த்துள்ள, கன்னிக் கவிஞனை இருகரம் நீட்டி வரவேற்போம்… உச்சிமோந்து வாழ்த்துவோம்…   

    

 

அருமனை                             என்றும் சிநேகங்களுடன்…

03-07-2022                               முனைவர் கமல. செல்வராஜ்.