Saturday, 22 October 2022

கேரளாவில் பிரமாண்ட ஜடாயு சிலை.

 

               கேரளாவில் பிரமாண்ட ஜடாயு சிலை.

     நம் நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரத்தின் மீது எவ்வளவுதான் தாக்குதல்கள் நடந்தாலும், அவை பல யுகங்களையும் தாண்டி இன்றும் உயிரோட்டமாக, மக்களின் அன்றாட வாழ்க்கையோடு புரையோடிக்கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல சான்றாதாரங்கள் இருக்கின்றன.

     அதற்கு அடியாளமாக திகழக்கூடியவை புராண, இதிகாசங்கள். இவற்றின் மூலம் பாரதத்தேசம் அடைந்திருக்கும் பெருமைக்கும் புகழுக்கும் அளவேயில்லை. அதனால்தான் பாரம்பரிய, கலச்சாரத்திற்கு இத்தேசம் இன்று உலகிற்கே குருவாகத் திகழ்கிறது.

     அந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் உலகின் மிகப்பெரிய ஜடாயு சிற்பம்.  நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் ‘தெய்வத்தின் நாடு’ என்னும் பெருமைக்குரியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் சடயமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த உலகின் மிகப்பெரிய ஜடாயு சிற்பம். இதனை உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் என்றும் கூறுகின்றனர்.

                  வானுயர்ந்த சிலை.   

     இன்று சர்வதேச சுற்றுலா மையமாக அமைந்திருக்கும் இவ்விடம், 65 ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயத்திற்கு மேல்பரப்பில் 75 அடி உயரத்துடனும் 150 அடி அகலத்துடனும் வான் மேகங்கள் வருடிச் செல்லும் கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் வானுயர்ந்து நிற்கிறது இந்த ஜடாயு சிற்பம்.

     இராமாயணத்தில், இராமனும் சீதையும் வனவாசம் செய்து வந்தபோது, சீதாபுராட்டியை,  இராவணன் நயவஞ்சகமாகக் கவர்ந்து புஸ்பவாகனத்தில் கொண்டுப் பறந்து சென்றுள்ளான். அப்பொழுது ஜடாயு என்ற கழுகு அவனை தடுத்து, சீதாதேவியை அவனிடமிருந்து மீட்பதற்குப் போராடியுள்ளது. அதனால் கோபமடைந்த இராவணன் தனது கையிலிருந்த வாளால் ஜடாயுவை வெட்டியுள்ளான். அதில், அதன் ஒரு சிறகு வெட்டுப்பட்டுப் பறப்பதற்கு முடியாமல் துடிதுடித்து கீழே பாறையின் மீது விழுந்துள்ளது. அந்தப் பாறையின் மீதுதான் இப்பொழுது இந்த பிரமாண்டமான ஜடாயு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இற்கையான கல்லினாலும் சிமெண்ட் கலவையினாலும் மிகவும் நுட்பமான கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஜடாயு வெட்டுண்ட சிறகுகளின் காட்சி பார்ப்போரைப் பரவசமடையச் செய்யும். இந்த சிற்பத்தின் அடிப்பகுதி ஒரு குகை போல் அமைக்கப்பட்டு, அதன் உள்ளே, இராமாயணக் காட்சிகளை வருணிக்கும் ஓவியங்களும், இராமாயணச் சினிமா காட்சிகளை டிஜிட்டல் முறையில் காண்பிக்கும் டிஜிட்டல் தியேட்டரும் உருவாக்கப்பட்டு அவற்றின் வேலைகள் மிக விரைவில் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன.

                      மோட்சம்.    

     ஜடாயு, இராவணால் வெட்டுண்டு கிடந்த அவ்வழியே, இராமன் சீதாதேவியை தேடிச் சென்றுள்ளார். அப்பொழுது ஜடாயூவின் இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டு பாரிதாபமடைந்து அதற்கு மோட்சமளித்துள்ளார். அதற்கு அடையாளமாக இராமனின் பாதம் பட்டதின் அடையாளம் அப்பாறையின் அருகில் அமைந்துள்ளது. அதனை சுற்றுலா பயணிகள் பரவசத்துடன் வணங்கிச் செல்கின்றனர்.

                     வற்றா ஊற்று.

    இராவணனால் வெட்டுண்டு பாறையில் விழுந்த ஜடாயுவிற்குத் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அதனால் அது தனது கூரிய அலகினால், அந்தப் பாறையில் கொத்தியுள்ளது. அப்பொழுது அந்தப் பாறையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியோறியுள்ளது. அன்று முதல் இன்று வரை அந்த இடத்தில் தண்ணீர் வற்றாமல் ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கிறது. இதனை ஒரு நீராளியாகப் பாதுகாத்து வருகின்றனர்.

     இதில் ஒரு வினோதம் என்னவென்றால், ஒரு பெண்ணிற்கு ஆபத்து நேர்ந்த போது, அதிலிருந்து அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய ஒரு பறவைக்காக இந்த சிற்பம் அமைக்கப்பட்டிருப்பதால் இதனை பெண்களின் பெருமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அற்பணித்துள்ளனர்.

                     ராமர் கேயில்.

     இ்ந்த ஜடாயு சிற்பத்தின் அருகில் 18 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான இராமர் கோயில் உள்ளது. முழுக்க முழுக்க கல்லினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பார்ப்பவர்கள் பிரமிக்கும் விதத்தில் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக இருந்தாலும் இக்கோயிலின் உள்ளே செல்லும் போது, நம்மை அறியாமலே பக்திபரவசமடைந்து விடுவோம்.

                     கேபிள் கார்

இந்த மலையின் உச்சியில் சென்று ஜடாயூ சிற்பத்தைப் பார்த்து ரசிப்பதற்கு முதலில் கீழிருந்து படிகட்டுகள் வயிலாக ஏறிச்செல்வதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது கட்டணத்துடன் கூடிய மிக அருமையான கேபிள் கார் வசதிச் செய்யப்பட்டுள்ளது. கேபிள் காரில் பயணக்கும் போது மலையின் இருபக்கமும் அமந்துள்ள பச்சைப்பசேலென்ற இயற்கைக் காட்சி மனதிலுள்ளப் பயத்தை நீக்கி ஒரு ரம்மியமான மனநிலையை உருவாக்கும். அதோடு மலையின் உச்சியில் நின்று சுற்றும்முற்றும் பார்த்தால்… அப்பப்பா… மேகக்கூட்டம் நம் தலைமயிரைத் தடவிச் செல்கிறதோ… என்று நினைக்கும் அளவிற்கு பக்கத்தில் வந்து செல்வதை அனுபவிப்பதற்கு முடியும். அதோடு கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் இறைவனின் இலவச கொடையாம்  இயற்கை கொஞ்சிக்குலாவும் காட்சிகள் நம் நெஞ்சை அப்படியே இதமாகக் கொள்ளைக் கொள்ளும்  

     என்ன இன்னும் கற்பனையா? அப்படியே தீபாவளி விடுமுறைக்கு ஜடாயூ சிற்பத்தை ஒரு சுற்று சுற்றி வருவதற்கு இப்போதோ கொல்லத்திற்கு டிக்கட் புக் பண்ணிவிடுங்க. அப்புறம் ஒன்றை நினைவில் வச்சிருங்க… அங்க, உங்க பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் எடுத்துச் செல்லாதிங்க… வாட்டர் பாட்டிலும் தூக்கீட்டுச் செல்லாதிங்க… அதுக்கும் அனுமதியில்லிங்க. அப்படியெண்ண அங்க எவ்வளவு சுத்தமா இருக்கும் என்று நினைத்துப் பாருங்க… சும்மாவா சர்வதேச சுற்றுலா தலமென்று சொல்லி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளைக் கூட அப்படியே சுண்டி இழுத்திருக்காக நம்ம கேரளாக்காரங்க.

(இக்கட்டுரை தினமலர் தீபாவளிமலர் 2022 இல் பிரசுரமானது)

                             முனைவர் கமல. செல்வராஜ்

                             அருமனை.

                                      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

              

      

.