Friday, 12 August 2022

கயத்தாறு தரிசனம் - நூல் ஆய்வுரை.

                                          கயத்தாறு தரிசனம்.

கயத்தாறு - ஒரு கலங்கரை விளக்கு.
(இது கப்பியறை முனைவர் வ. இராயப்பன் எழுதிய கயத்தாறு தரிசனம் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய அணிந்துரை.)
ஓர் ஊரில் ஐம்பதாண்டுகள், நூறாண்டுகள் வாழ்பவர்களுண்டு. அவர்களிடம் அவ் ஊரின் பெயர் காரணம் என்ன அல்லது அவ் ஊரின் சிறப்புகள் என்னென்ன என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஒற்றை வார்த்தையில் சொல்லும் பதில் தெரியாது என்பதாகத்தானிருக்கும்.
ஆனால் கயத்தாறு தரிசனம் என்னும் இந்தக் கலங்கரை விளக்கை எழுதியிருக்கும் நூலாசிரியர் மதிப்புறு அறிவர் கப்பியறை வ. இராயப்பன் அவர்கள், தனது பணிநிமித்தமாக வெறும் ஐந்தரை ஆண்டுகள் வசித்த ஓர் ஊரைப் பற்றி வாசகர்களை வசீகரிக்கும் விதத்தில், எழுதியிருப்பது வியப்பிலும் வியப்பு.
சுமார் அரை நூற்றாண்டுக் காலம் தனது வாழ்க்கையை அளப்பரிய ஆசிரியர்ப் பணிக்கு அற்பணித்தவர். பணி ஓய்வுக்குப் பின் தனது படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து முத்தான மூன்று படைப்புகளைப் படைத்து விட்டு, நான்காவது படைப்பாக கயத்தாறு தரிசனம் என்னும் இந்நூலை ஆக்கியுள்ளார். முந்தைய மூன்று நூல்களில் இரண்டு நூல்கள் குமரி மண்ணின் மதிப்புமிகு மனிதர்களைப் பற்றியது. மற்றொரு நூல் இம்மண்ணின் சமூக போற்றுதலுக்குரியவர்கள் பற்றியது. இதில், ஆசிரியர் முதலாக இயல் இசை நாடக கலைஞர்கள் ஈறாக 45 வகையான தொழில் முனைவோர் பற்றி தெள்ளத் தெளிவாக வகுத்துத் தொகுத்து வாசகர்களுக்கு அருந்தேனாக்கித் தந்துள்ளார்.
இந்நூல் அம்மூன்றிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. ஓர் இடத்தின் வரலாற்றை விலாவாரியாக விவரித்து, ஓர் ஆய்வு நூலாகவே ஆக்கித் தந்துள்ளார். அதிலும் நூலின் பெயரை கயத்தாறு வரலாறு என்றில்லாமல் கயத்தாறு தரிசனம் என வைத்துள்ளது, அவர் அவ்வூர் மீது கொண்டுள்ள அபரிதமான மரியாதைக்கு அடையாளமாகும்.
தமிழகத்தில் தூத்துக்குடி என்றாலே அது முத்துக்கொழிக்கும் மாவட்டம் என்றுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். அங்கே வீரம் செறிந்து, ஆன்மீகம் தழைத்தோங்கி மிக அற்புதமான கலங்கரை விளக்காகத் திகழும் கயத்தாறு உள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? என்பது கேள்விக்குறியே. இங்கே தான் தமிழகத்தின் வீரத்திருமகன்களாக இருந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன், புலித்தேவன், சுப்ரமணியப்பாரதி, வ.ஊ.சி, பகத்சிங், அழகு முத்துக்கோன் போன்றோர் வாழ்ந்து, சுதந்திரப்போராட்டக் காலத்தில் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
கயத்தாற்றின் வரலாற்றை எழுதத் தொடங்கியிருக்கும் ஆசிரியர், அவ்விடத்தின் வரலாற்றைப் பற்றி மட்டும் எழுதியதோடு நின்று விடாமல் அங்கு வாழ்ந்து சுதந்திரத்திற்காக, கொடுமைக்கார வெள்ளையர்களை எதிர்த்து நின்று போராடிய வீரப்பாட்டிய கட்ட பொம்மனின் வரலாற்றை எழுதியிருக்கும் விதம் வித்யாசமானது.
எத்தனைப் புத்தகத்தில் வீரப்பாண்டியனின் வரலாற்றைப் படித்திருந்தாலும் அல்லது பல சினிமாக்களில் அவரின் வரலாற்றைப் பார்த்திருந்தாலும், இவர் இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பது போன்று படிப்போரின் உதிரத்தைச் சூடேற்றும் விதத்தில் உணர்ச்சிகரமாக எழுதியிருப்பதை படிக்கவும் முடியாது… பார்க்கவும் முடியாது… அந்த அளவிற்கு ஒவ்வொரு நிகழ்வுகளையும் அப்படியே வாசகர்களின் கண் முன்னே உயிரோட்டமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் படிக்கும் போது வாசகர்களின் கண்கள் குளமாகும்… உடம்பு சூடேறும்.
கயத்தாறு என அவ்விடத்திற்கு ஏன் பெயர் வந்தது? என்பதற்கு, நூலாசிரியர் மேலாட்டமானக் காரணங்களை மட்டும் எழுதாமல், அதை பற்றி புராண. இதிகாச, இலக்கிய, ஏடுகள், கல்வெட்டு மற்றும் அவ்வூர் மக்கள் கூறும் செவிவழிச் செய்திகள் அனைத்தையும் மிகத்துல்லியமாக ஒரு முனைவர் பட்ட ஆய்வாளரைப் போன்று ஆய்வுச் செய்து எழுதியுள்ளார். இதற்காகவே இவருக்கு இன்னொரு முனைவர் பட்டம் வழங்கலாம்.
யானையால் இப்பெயர் வந்தது, இராமன் சீதைக்காக தரையில் அம்பெய்து தண்ணீர் எடுக்க, அந்நீர் கசப்பாக இருந்ததால் வந்த பெயர், கள்ளர்கள் அதிகமாக இருந்ததால் வந்த பெயர் என எத்தனை எத்தனையோக் காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தக் காரணங்கள் அனைத்தையும் மிகவும் சுவாரசியமாகப் படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதியுள்ளார்.
பொதுவாகத் தமிழகத்தில் கோயில்கள் அதிகமுள்ள நகரம் மதுரை மாநகரம் என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் இந்நூலில் மதுரையை விட கயத்தாறில் அதிக கோயில்களும் பிற கிறிஸ்தவ, இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளதாகக் கூறி அவற்றை சிறியவை, பிரசித்திப் பெற்றவை எனப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். ஒவ்வொரு கோயிலின் தல வரலாறு, அக்கோயிலின் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது.
மேலும் கயத்தாறிலுள்ள இயற்கை வளம், நீர் ஆதாரங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் வளம், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், மக்களின் வாழ்க்கை முறை என எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் விவரித்துள்ளார்.
இவற்றுடன் கயத்தாறுக்கு வருகைப் புரிந்துள்ள அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சினிமாத்துறையினர் என அனைவரின் வருகையையும் தேதி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தனது சொந்த இடத்தில், அவரின் சொந்த செலவில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சிலை நிறுவியுள்ளார். அந்தச் சிலை திறப்பு விழாவிற்கு, அந்நாளைய இந்தியக் குடியரசுத்தலைவர் மேதகு நீலம் சஞ்சீவரெட்டி வருகைப்புரிந்துள்ளார். மட்டுமின்றி இன்று தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் மாண்பமை ஆர்.என். இரவி அவர்கள் தனது துணைவியாருடன் கயத்தாறு வந்து வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மரியாதைச் செலுத்தியுள்ள சம்பவத்தையும் நாள் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றிலிருந்து இந்நூலாசிரியர் உண்மையில் கயத்தாறை பற்றி எழுதுவதற்கு மிகக் கடினமான பிரயத்னம் செய்திருக்கிறார் என்பது வாசகர்கள் அனைவருக்கும் புரியும்.
இந்நூல் இன்றைய… நாளைய… வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒரு தலைசிறந்த வழிகாட்டி நூலாக அமையும் என்பது நிதர்சனமான உண்மை. மட்டுமின்றி கயத்தாறு வாழ் மக்களுக்கு இந்நூல் கிடைப்பதற்கரியப் பொக்கிஷமாகும்.
ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பின்னும் ஓய்வறியாது… துயிலறியாது… தழுக்காக… நூலாசிரியர் பணியாற்றி கொண்டிருக்கும் இந்நூலாசிரியர் கப்பியறை முனைவர் வ. இராஜப்பன் அவர்கள் இன்னும் பல படைப்புகளைப் படைத்து, தரணி போற்றும் படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற அனைவரும் அவரோடு கைகோப்போம்.
என்றும் சிநேகங்களுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.