Wednesday, 28 December 2022

                                       முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி…

(இது புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் எழுதியுள்ள
அகிலஒளி அய்யா வைகுண்டர் என்னும் நாவலுக்கு அடியேன் எழுதியுள்ள ஆய்வுரை)
உலக வரலாற்றில், நாட்டில் எங்கு அதிகமாக அநீதியும் அக்கிரமும் நடக்கிறதோ அங்கே, இறைவனின் அருளால் அவதாரப் புருஷர்கள் அவதரித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது வரலாறு.
அந்த வரலாற்றுக்குச் சான்று பகிர்ந்து நிற்பதுதான் இந்தியாவின் தென்கோடியில் கலியழிப்பதற்கு வந்த அய்யா வைகுண்டரின் அற்புதமான அவதாரம். அந்த வரலாற்றை அகில ஒளி அய்யா வைகுண்டர் என்னும் புதுமையானப் புத்தகமாக்கியுள்ளார் புலவர் கு. இரவீந்திரன் அவர்கள்.
புலவர் கு. இரவீந்திரன் அவர்கள் முத்தமிழ் தவழ்ந்து விளையாடும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்குக் கிடைத்தத் தவப்புதல்வர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, நல்லாசிரியராகி,… தலைமயாசிரியராய் உயர்வுப் பெற்று… பேராசிரியராகும் பேறுபெற்றவர்.
இலக்கிய மேடைகளில், இவரின் இலக்கிய முழக்கம் தேனினும் இனிதாகி, கேட்போரை மெய்மறக்க வைக்கும். ஆன்மீக அரங்குகளில் இவரின் அமுதினுமினிய உரைவீச்சு, அந்த ஈசனையே இணங்க வைக்கும்.
புதினம்… கவிதை… கட்டுரை… எனப் புத்தகம் பல படைத்துப் பாருக்குப் பரிசளித்தவர். காவியம்… காப்பியம் எழுதுவது கூட இவருக்குக் கைவந்த கலை. இவற்றை படிப்பவர்கள் உள்ளம் உருகி… சிந்தை தெளிந்து… வாழ்வில் வசந்தம் பெறுவது திண்ணம்.
பள்ளிகளிலும் கல்லூரியிலும் பணியாற்றிய போது மாணவர்களின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்தவர். இவரின் பாதச்சுவட்டைப் பின்பற்றியப் பலர் இன்று இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் மின்னும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றார்கள் என்றால் மிகையல்ல.
தேசியமும் தெய்வீகமும் இவருக்கு இரு விழிகள். அதனால் பாரதக் கலாச்சாரப் பேரவையின் செயலாளராக அரும்பெரும் செயல்களைச் செய்து வருகிறார். அதோடு மரபுசார் மீட்பு குழு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மரவுகளை மீட்டெடுப்பதற்கு மிகவும் துணிச்சலுடன் அரசாங்கத்தோடும், அரசு அதிகாரிகளோடும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறார். அதன் மூலம் பல உரிமைகளை மீட்டெடுத்து பாரதக் கலாச்சாரத்திற்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.
இப்படி இலக்கியம்… ஆன்மீகம்… பாரதம்… பண்பாடு… ஆகியவற்றிற்காக இவர் ஆற்றியுள்ள அரும் பெரும் பணிக்காக, இலக்கியச் செம்மல், கவிமணி விருது உட்பட பல்வேறு விருதுகள் இல்லம் தேடி வந்து இவரை கௌரவித்துள்ளன.
இப்பெரும் புலவரால் புனையப்பட்டுள்ள அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்று நூல், அய்யாவை, அந்நெறி சார்ந்த மக்கள் மட்டுமின்றி, அவரை அறியாத, அவையத்திலுள்ள பொதுநிலை மக்களும் எளிதில் புரிந்து, தெரிந்து கொள்ளும் விதமாக மிகவும் எளிய… இனிய… கவிதை வடிவில் வடித்திருப்பது வியப்புக்குரியது.
அய்யாவின் வாழ்வியலை முழுமையாக அறிவதற்கு அகிலத்திரட்டு அம்மானை வழிகோலும். ஆனால் அதனை பாமரர்கள் படித்து உள்வாங்குவதற்கு இன்னொரு பண்டிதரரின் துணை வேண்டும். இந்நூல் அப்படியல்ல, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தாங்களாகவேப் படித்து புரிந்து கொள்ளும் விதத்தில் இனியக் கவிதை நடை.யில் படைத்தளித்திருப்பது வாசகர்களின் மனதை கொள்ளை கொள்வதாகும்.
மன்னராட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்களை அடிமைகள் போல் வழிநடத்தியக் காலத்தில், மன்னர்களின் ஆதரவோடு ஆட்டம் போட்ட மேட்டுக்குடி மக்களின் கொட்டத்தை அடக்கியதோடு மன்னராட்சிக்கே முற்றுப்புள்ளி வைக்கும் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார் இந்த அய்யா வைகுண்டர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பும் பெயர்களைக் கூட தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டும் உரிமையின்றி தவித்திருப்பதை இந்நூல் விளக்கியிருக்கும் விதம் வித்தியாசமானது. முடிசூடும் பெருமாள் என்று அய்யா வைகுண்டருக்கு, தன் பெற்றோர் சூட்டியப் பெயரையே மாற்றுவதற்கு மன்னன் ஆணை பிறப்பித்து, தன் படைகள் அனைத்தையும் சாஸ்தான் கோவில்விளைக்கு அனுப்பி, அப்பெயரை மாற்றுவதற்கு பெற்றோரை மிரட்டியுள்ளான்.
அந்த நிகழ்வுகளையெல்லாம் வீரப்பாண்டியக் கட்டப்பொம்மன் நாடகத்தில் வரும் வசனத்தைப் போல், கேட்போர் உதிரம் கொதிக்கும் படி புலவர் அவர்கள் நாடகப் பாணியில் வீரவசம் பேசுவது போல் தன் கவிபுலமையால் படைத்திருப்பது படிப்போரை கொதித்தெழ வைக்கிறது. இதோ அதற்கு சிறு சான்று:-
“முடிசூடும் பெருமாள் என்பது யார்?
எமது குழந்தை…! அடிமை இப்பெயரைச் சூட்டுவது அரச குற்றம் என்பதை நீ அறியாயோ!
அடிமைகளா? யாருக்கு யார் அடிமை? மண்ணின் மைந்தர்கள் நாங்கள்… வந்தேறிகள் நீங்கள்…
வாதம் செய்வதற்காக நாங்கள் வரவில்லை.
அப்படியானால் எதற்காக வந்தீர்கள்?
பெயர் மாற்றம் செய்துவிடு என எச்சரிப்பதற்காக வந்துள்ளோம் யாம்…
பெயர் மாற்றமா யாருக்கு…? சொந்த மண்ணில் பாடும் பறவைகளாய் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துபவர்கள் நாங்கள்… நாங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்?
இப்படி நூலின் ஆதிமுதல் அந்தம் வரை நாடகப்பாணியில் அமைத்திருப்பது, நூலை வாசிக்க கையில் எடுப்பவர்களை, வாசித்து முடியும் வரை தரையில் வைக்க விடாமல் உணர்ச்சிப் பூர்வமாக விறுவிறு என்று இழுத்துச் செல்கிறது.
அய்யா வைகுண்டரை பல விதங்களில் கொடுமைப்படுத்தி எப்படியாவது பணிய வைக்க வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும் என மேட்டுக்குடி மக்களும் மன்னனும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின. கடைசியாக மன்னனே அய்யாவிடம் மண்டியிட வேண்டிய அவல நிலை வந்தது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் உணர்ச்சிப் பிழம்பான வரிகளால் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றை படிக்கும் போது, அகிலத்திரட்டை எழுதுவதற்கு அரிகோபாலன் என்பவருக்குள்ளிலிருந்து அந்த வைகுண்டரே இயக்கினார் என்று கூறுவார்கள். அது போல் இந்த அகிலஒளி அய்யா வைகுண்டர் என்னும் இந்நாவலை எழுதும் போது, புலவர் கு. இரவீந்திரருக்குள்ளும் அய்யாவின் அருள் ஒளி இருந்து இயக்கியிருக்கும் என அடியேன் ஆணித்தரமாக நம்புகிறேன்.
அருமனை என்றும் சிநேகங்களுடன்…
07-06-2022 முனைவர் கமல. செல்வராஜ்.
(இந்நாவலைப் பெற்றுக்கொள்வதற்குத் தொடர்பு கொள்ள நாவலாசிரியரின் கைபேசி எண்: 9487653265)



Tuesday, 13 December 2022

 தேசிய மொழிகள் தினம்: தேசியக் கவிக்கு மரியாதை.

பாரத தேசம் ஆண்டாண்டுக் காலமாக அன்னியனின் பிடியில் அகப்பட்டு, சுதந்திரத்திற்காகப் தீவிரப் போராட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் சுதந்திரம் கிடைக்கும் என்பதை கனவில்கூட எண்ணிப் பார்க்க முடியாது. அந்த வேளையில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று” எனக் கூக்குரல் எழுப்பி வெள்ளையனைத் திக்குமுக்காடச் செய்தவன் முண்டாசுக் கவிஞன் சுப்பிரமணியப்பாரதி.
சுதந்திர வேள்விக்குப் துப்பாக்கியும் வாளும் எடுக்காமல் தன் மனதில் எழுந்த சுதந்திர வேள்வியை, எழுதுகோல் என்னும் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைத் தோட்டாக்களாக்கி வெள்ளையனின் நெஞ்சிற்கு நேராக தீப்பந்தங்களாக பாச்சியவன் இந்த எட்டையபுரத்து சிங்கக்குட்டி.
சுதந்திரம் கிடைத்து விடும் என்பது திண்ணம். அதன் பிறகு கல்வியில், கலாச்சாரத்தில், கலையில், மொழியில், பொருளாதாரத்தில், தொழில்துறையில், தொலைத்தொடர்பில் இத்தேசத்தை எப்படி, ஒன்றுபட்ட வளம் மிக்க தேசமாக மாற்ற வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையில் திளைத்திருந்தான் அவன்.
அதனால்தான் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்றான் முறுக்கு மீசைக்காரன். அவன் கூற்றுப்படி ஒருவன் எட்டுத்திக்கும் செல்ல வேண்டும் என்றால் அவனுக்குப் பல்மொழிப்புலமை வேண்டும் என்பதை அவன் நன்குணர்ந்திருந்தான். அதனை அவனே நிருபித்துக் காட்டினான். ஹிந்தி, சமஸ்கிருதம் உட்படக் கிட்டத்தட்டப் பன்னிரண்டு மொழிகளில் அவன் புலமை பெற்றிருந்தான் என்று இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்குச் சான்றாகத்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” என்கிறான். இத்தனை மொழிகளின் அருமைப் பெருமைகளைத் தெரிந்திருந்து, உலகிற்கு உணர்த்தியதால்தான் இன்று, பாரதியின் பிறந்த தினமான டிசம்பர்- 11 ஐ இந்த ஆண்டு முதல் தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தினத்தை அனைத்து மாநில அரசுகளும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என அனைத்து இடங்களிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடவும் வலியுறுத்தியுள்ளது. இது பாரதிக்குக் கிடைத்திருக்கும் கௌரவமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் கௌரவம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இன்றுள்ள அளவிற்கு தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சி இருக்கும் என்பதை கற்பனையில்கூட நினைத்துப் பார்ப்பதற்கு முடியாது. என்றாலும் அந்த அக்கினிக் குஞ்சின் கனவில் இப்படியொரு எண்ணம் தோன்றி, அன்று அது கவிதையாகி… நின்று நிஜமாகியிருக்கிறது. அது “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்பது.
இன்று யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து உலகமே நம் ஒவ்வொருவரின் உள்ளம் கைக்குள் வந்துள்ளது. அதனால் மத்திய அரசாங்கம் இன்று காசியில் பாரதியாருக்கும் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இருந்த உறவை நிரூபிக்கும் விதத்தில் காசி தமிழ் சங்கம் மூலம் தமிழ் கலாச்சார விழாவை நடத்தி பாரதிக்கு மகுடம் சூட்டி வருகிறது.
கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை
பேச: 9443559841
அணுக: drkamalaru@gmail.com
இந்தக் கட்டுரை ie tamil இணைய வழி இதழில் 10-12-2022 அன்று பிரசுரமானது.

Thursday, 3 November 2022

 

                  

                      உள்ளத் துளிகள்...

                 கவிதை நூல் உள்ளோட்டம்.

                   உண்மைத் துளிகள்.           


                      முனைவர் கமல. செல்வராஜ்

                      அழைக்க: 9443559841

                      அணுக: drkamalaru@gmail.com

                      பார்க்க: drkamal voice (youtube)

     கடந்து செல்லும் பாதைகளில், பார்வையில் படுபவை… செவிகளில் ஒலிப்பவை… யாவையும் கவிஞனுக்குக் கருப்பொருளாகி, கவிதையாக… கதையாக… காவியமாக… கட்டுரையாக… பிறப்பெடுக்கும்.

     இவற்றில் கவிதையென்பது பெட்டிக்கடையில் இருக்கும் மிட்டாயைப் பார்க்கும் போது, சிறுகுழந்தைகளுக்கு எப்படி அதை வாங்கி இருசிக்க வேண்டும் என்னும் ஆவா வருமோ அதுபோல, வாசகர்களுக்கும் வாசிக்க வேண்டும் என்னும் உந்துதல் உள்ளத்துக்குள் எழ வேண்டும். அந்த ஈர்ப்பு சக்தியை எந்த ஒரு கவிஞனால் கொடுக்க முடியுமே அந்த கவிஞன், வாசகர்களின் உள்ளங்களில் நிலைத்து வாழ்ந்து கொண்டேயிருப்பான்.

     அப்படிப்பட்டக் கவிதையை எழுதுவதற்கு வயது வரம்பும் நீண்ட நெடிய அனுபவமும் அவசியமில்லை. கொஞ்சம் வித்யாசமான சிந்தனையும் கற்பனையாற்றலும் இருந்தால் தாராளமாகும்.

     அந்த வகையில் உள்ளத்துளிகள் என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பை உருவாக்கியிருக்கும் இளவல் சு.கி. மனோஷ் கைலாஸ் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்.

     இவர் தனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே வாசிப்பை நேசிப்பவராய் வளர்ந்துள்ளார். அதனால் பள்ளிப்பருவம் முடியும் முன்பே தன் உள்ளத்தில் பட்டதெல்லாம் கவிதையாக்கி, இப்படியொருக் கவிதை நூலுக்குப் பிதாமகனாகியுள்ளார்.

     தமிழ்மொழி, தமிழ் கவிஞர்கள், இத்தேசத்தை நேசித்தத் தலைவர்கள், அன்பு, அழகு, அருவி, இயற்கை, இளமை, இறைவன், மரம், செடி, கொடி, காற்று, கடல், வானம், வாழ்வு, வசந்தம், சாதனை, சோதனை, வேதனை, இளையோர், முதியோர், பெற்றோர், ஆசிரியர், கனவு, நனவு, நட்பு, நடப்பவை, நடக்காதவை, விவசாயி, வியாபாரி என நூற்றுக்கும் அதிகமான உள்ளத்துளிகளை வண்ணக் கவிதைகளாக்கியுள்ளார்.

    அந்த உள்ளத்துளிகளில் ஒருசில சிறு துளிகள் இதோ:-

விசாயிகளைப் பாடதக் கவிஞர்கள் யவரும் இலர் என்றே சொல்லலாம். இதோ இந்த இளங்கவிஞனின் உள்ளத்திற்குள் விவசாயிகள் எப்படிப் பதிந்துள்ளார்கள் என்பதை விதைத்தோன் துயரம் என்னும் கவிதையில் இப்படிப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

                உலகிற்கே சோறிட்டவன்

                  இன்று உறங்காமல் வாடுகின்றான்

                  வாழ்க்கை மூச்சு நின்றிடவே

                  ஈசனிடம் வேண்டுகிறான்.  கையில் காகிதத்தோடும் எழுதுகோலோடும் மட்டுமே பழகிக் கொண்டிருக்கும் இந்த வயதில், கலப்பையைக் கையில் பிடித்து, சேற்றோடு உறவாடிக் கொண்டிருக்கும் உழவனின் வலியும் வேதனையும் இந்தக் கவிஞக்கு இவ்வளவு அத்துப்பிடியென்றால், நாளை இந்தக் கவிஞனை உலகமே எட்டிப் பார்க்கும் என்பதே உண்மை.

     வாழ்க்கையின் மகத்துவத்தைப் பற்றி கவிதை வடிக்கவும் கவிஞன் மறக்கவில்லை. புகழ் என்னும் பொருளில் புதைந்துள்ள தத்துவம் இதோ:-

                   நிலையானப் புகழொன்று வேண்டுமென்றால்

                   சிறுமணிக் குற்றமும் இல்லையெனில்

                   புகழ்தனை தேடவே நிறையநாட்கள்

                   அதை கெடுக்கவே நேரிடும் சில நொடிகள்.

     இளமையின் துடிப்பு கவிஞனின் வயது . ஆனால் அவன் அறிவின் முதிற்சிக்கு இக்கவிதையே சாட்சி.

     இப்படி ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும் போது வாசகனின் உள்ளத்திற்குள் ஏதோ ஓர் உணர்ச்சியும் எழுச்சியும் தோன்றும். அதுவே இக்கவிஞனின் புகழ்ச்சி.

     பிறப்பால் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர், பள்ளிப்படிப்பில் தமிழை இரண்டாம் மொழியாகப் படித்தவர் இந்த இளம் கவிஞர். இப்பள்ளிப் பருவத்திலையே தமிழ்மொழி மீது தீராக் காதல் கொண்டு, கன்னிப் படைப்பைத் தமிழ்மொழியில் ஆக்கியிருக்கும் ஆற்றலை எப்படி மெச்சுவது.

     இந்தப் படைப்பை ஆஹா… ஓகோ… அருமை… அற்புதம்… ஆனந்தம்… என்றெல்லாம் உச்சிமீது வைத்து மெச்சுவதற்கு அடியேன் ஆசைப்படவில்லை.

     ஆனால் இனிவரும் படைப்புகள் அனைத்தும் இப்படி மெச்சுவதற்குரியதாக இருக்கும் என்பதற்கான அச்சாரம் இங்கே அமைக்கப் பட்டிருக்கிறது என்பதுவே அடியேனின் அசைக்க முடியாத எண்ணம்; அதுவே திண்ணம்.

     எனவே நம் கன்னித் தமிழுக்குத் தன்னை தாரைவார்த்துள்ள, கன்னிக் கவிஞனை இருகரம் நீட்டி வரவேற்போம்… உச்சிமோந்து வாழ்த்துவோம்…   

    

 

அருமனை                             என்றும் சிநேகங்களுடன்…

03-07-2022                               முனைவர் கமல. செல்வராஜ்.

                 

             

          

 

Saturday, 22 October 2022

கேரளாவில் பிரமாண்ட ஜடாயு சிலை.

 

               கேரளாவில் பிரமாண்ட ஜடாயு சிலை.

     நம் நாட்டின் பாரம்பரிய, கலாச்சாரத்தின் மீது எவ்வளவுதான் தாக்குதல்கள் நடந்தாலும், அவை பல யுகங்களையும் தாண்டி இன்றும் உயிரோட்டமாக, மக்களின் அன்றாட வாழ்க்கையோடு புரையோடிக்கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல சான்றாதாரங்கள் இருக்கின்றன.

     அதற்கு அடியாளமாக திகழக்கூடியவை புராண, இதிகாசங்கள். இவற்றின் மூலம் பாரதத்தேசம் அடைந்திருக்கும் பெருமைக்கும் புகழுக்கும் அளவேயில்லை. அதனால்தான் பாரம்பரிய, கலச்சாரத்திற்கு இத்தேசம் இன்று உலகிற்கே குருவாகத் திகழ்கிறது.

     அந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் உலகின் மிகப்பெரிய ஜடாயு சிற்பம்.  நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் ‘தெய்வத்தின் நாடு’ என்னும் பெருமைக்குரியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் சடயமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த உலகின் மிகப்பெரிய ஜடாயு சிற்பம். இதனை உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் என்றும் கூறுகின்றனர்.

                  வானுயர்ந்த சிலை.   

     இன்று சர்வதேச சுற்றுலா மையமாக அமைந்திருக்கும் இவ்விடம், 65 ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயத்திற்கு மேல்பரப்பில் 75 அடி உயரத்துடனும் 150 அடி அகலத்துடனும் வான் மேகங்கள் வருடிச் செல்லும் கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்து, காண்போரை வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் வானுயர்ந்து நிற்கிறது இந்த ஜடாயு சிற்பம்.

     இராமாயணத்தில், இராமனும் சீதையும் வனவாசம் செய்து வந்தபோது, சீதாபுராட்டியை,  இராவணன் நயவஞ்சகமாகக் கவர்ந்து புஸ்பவாகனத்தில் கொண்டுப் பறந்து சென்றுள்ளான். அப்பொழுது ஜடாயு என்ற கழுகு அவனை தடுத்து, சீதாதேவியை அவனிடமிருந்து மீட்பதற்குப் போராடியுள்ளது. அதனால் கோபமடைந்த இராவணன் தனது கையிலிருந்த வாளால் ஜடாயுவை வெட்டியுள்ளான். அதில், அதன் ஒரு சிறகு வெட்டுப்பட்டுப் பறப்பதற்கு முடியாமல் துடிதுடித்து கீழே பாறையின் மீது விழுந்துள்ளது. அந்தப் பாறையின் மீதுதான் இப்பொழுது இந்த பிரமாண்டமான ஜடாயு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இற்கையான கல்லினாலும் சிமெண்ட் கலவையினாலும் மிகவும் நுட்பமான கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஜடாயு வெட்டுண்ட சிறகுகளின் காட்சி பார்ப்போரைப் பரவசமடையச் செய்யும். இந்த சிற்பத்தின் அடிப்பகுதி ஒரு குகை போல் அமைக்கப்பட்டு, அதன் உள்ளே, இராமாயணக் காட்சிகளை வருணிக்கும் ஓவியங்களும், இராமாயணச் சினிமா காட்சிகளை டிஜிட்டல் முறையில் காண்பிக்கும் டிஜிட்டல் தியேட்டரும் உருவாக்கப்பட்டு அவற்றின் வேலைகள் மிக விரைவில் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன.

                      மோட்சம்.    

     ஜடாயு, இராவணால் வெட்டுண்டு கிடந்த அவ்வழியே, இராமன் சீதாதேவியை தேடிச் சென்றுள்ளார். அப்பொழுது ஜடாயூவின் இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டு பாரிதாபமடைந்து அதற்கு மோட்சமளித்துள்ளார். அதற்கு அடையாளமாக இராமனின் பாதம் பட்டதின் அடையாளம் அப்பாறையின் அருகில் அமைந்துள்ளது. அதனை சுற்றுலா பயணிகள் பரவசத்துடன் வணங்கிச் செல்கின்றனர்.

                     வற்றா ஊற்று.

    இராவணனால் வெட்டுண்டு பாறையில் விழுந்த ஜடாயுவிற்குத் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அதனால் அது தனது கூரிய அலகினால், அந்தப் பாறையில் கொத்தியுள்ளது. அப்பொழுது அந்தப் பாறையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியோறியுள்ளது. அன்று முதல் இன்று வரை அந்த இடத்தில் தண்ணீர் வற்றாமல் ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கிறது. இதனை ஒரு நீராளியாகப் பாதுகாத்து வருகின்றனர்.

     இதில் ஒரு வினோதம் என்னவென்றால், ஒரு பெண்ணிற்கு ஆபத்து நேர்ந்த போது, அதிலிருந்து அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய ஒரு பறவைக்காக இந்த சிற்பம் அமைக்கப்பட்டிருப்பதால் இதனை பெண்களின் பெருமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அற்பணித்துள்ளனர்.

                     ராமர் கேயில்.

     இ்ந்த ஜடாயு சிற்பத்தின் அருகில் 18 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான இராமர் கோயில் உள்ளது. முழுக்க முழுக்க கல்லினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பார்ப்பவர்கள் பிரமிக்கும் விதத்தில் கலைநுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக இருந்தாலும் இக்கோயிலின் உள்ளே செல்லும் போது, நம்மை அறியாமலே பக்திபரவசமடைந்து விடுவோம்.

                     கேபிள் கார்

இந்த மலையின் உச்சியில் சென்று ஜடாயூ சிற்பத்தைப் பார்த்து ரசிப்பதற்கு முதலில் கீழிருந்து படிகட்டுகள் வயிலாக ஏறிச்செல்வதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது கட்டணத்துடன் கூடிய மிக அருமையான கேபிள் கார் வசதிச் செய்யப்பட்டுள்ளது. கேபிள் காரில் பயணக்கும் போது மலையின் இருபக்கமும் அமந்துள்ள பச்சைப்பசேலென்ற இயற்கைக் காட்சி மனதிலுள்ளப் பயத்தை நீக்கி ஒரு ரம்மியமான மனநிலையை உருவாக்கும். அதோடு மலையின் உச்சியில் நின்று சுற்றும்முற்றும் பார்த்தால்… அப்பப்பா… மேகக்கூட்டம் நம் தலைமயிரைத் தடவிச் செல்கிறதோ… என்று நினைக்கும் அளவிற்கு பக்கத்தில் வந்து செல்வதை அனுபவிப்பதற்கு முடியும். அதோடு கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் இறைவனின் இலவச கொடையாம்  இயற்கை கொஞ்சிக்குலாவும் காட்சிகள் நம் நெஞ்சை அப்படியே இதமாகக் கொள்ளைக் கொள்ளும்  

     என்ன இன்னும் கற்பனையா? அப்படியே தீபாவளி விடுமுறைக்கு ஜடாயூ சிற்பத்தை ஒரு சுற்று சுற்றி வருவதற்கு இப்போதோ கொல்லத்திற்கு டிக்கட் புக் பண்ணிவிடுங்க. அப்புறம் ஒன்றை நினைவில் வச்சிருங்க… அங்க, உங்க பிளாஸ்டிக் பொருள்கள் எதுவும் எடுத்துச் செல்லாதிங்க… வாட்டர் பாட்டிலும் தூக்கீட்டுச் செல்லாதிங்க… அதுக்கும் அனுமதியில்லிங்க. அப்படியெண்ண அங்க எவ்வளவு சுத்தமா இருக்கும் என்று நினைத்துப் பாருங்க… சும்மாவா சர்வதேச சுற்றுலா தலமென்று சொல்லி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளைக் கூட அப்படியே சுண்டி இழுத்திருக்காக நம்ம கேரளாக்காரங்க.

(இக்கட்டுரை தினமலர் தீபாவளிமலர் 2022 இல் பிரசுரமானது)

                             முனைவர் கமல. செல்வராஜ்

                             அருமனை.

                                      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

              

      

.

Friday, 12 August 2022

கயத்தாறு தரிசனம் - நூல் ஆய்வுரை.

                                          கயத்தாறு தரிசனம்.

கயத்தாறு - ஒரு கலங்கரை விளக்கு.
(இது கப்பியறை முனைவர் வ. இராயப்பன் எழுதிய கயத்தாறு தரிசனம் என்னும் நூலுக்கு அடியேன் எழுதிய அணிந்துரை.)
ஓர் ஊரில் ஐம்பதாண்டுகள், நூறாண்டுகள் வாழ்பவர்களுண்டு. அவர்களிடம் அவ் ஊரின் பெயர் காரணம் என்ன அல்லது அவ் ஊரின் சிறப்புகள் என்னென்ன என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஒற்றை வார்த்தையில் சொல்லும் பதில் தெரியாது என்பதாகத்தானிருக்கும்.
ஆனால் கயத்தாறு தரிசனம் என்னும் இந்தக் கலங்கரை விளக்கை எழுதியிருக்கும் நூலாசிரியர் மதிப்புறு அறிவர் கப்பியறை வ. இராயப்பன் அவர்கள், தனது பணிநிமித்தமாக வெறும் ஐந்தரை ஆண்டுகள் வசித்த ஓர் ஊரைப் பற்றி வாசகர்களை வசீகரிக்கும் விதத்தில், எழுதியிருப்பது வியப்பிலும் வியப்பு.
சுமார் அரை நூற்றாண்டுக் காலம் தனது வாழ்க்கையை அளப்பரிய ஆசிரியர்ப் பணிக்கு அற்பணித்தவர். பணி ஓய்வுக்குப் பின் தனது படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து முத்தான மூன்று படைப்புகளைப் படைத்து விட்டு, நான்காவது படைப்பாக கயத்தாறு தரிசனம் என்னும் இந்நூலை ஆக்கியுள்ளார். முந்தைய மூன்று நூல்களில் இரண்டு நூல்கள் குமரி மண்ணின் மதிப்புமிகு மனிதர்களைப் பற்றியது. மற்றொரு நூல் இம்மண்ணின் சமூக போற்றுதலுக்குரியவர்கள் பற்றியது. இதில், ஆசிரியர் முதலாக இயல் இசை நாடக கலைஞர்கள் ஈறாக 45 வகையான தொழில் முனைவோர் பற்றி தெள்ளத் தெளிவாக வகுத்துத் தொகுத்து வாசகர்களுக்கு அருந்தேனாக்கித் தந்துள்ளார்.
இந்நூல் அம்மூன்றிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. ஓர் இடத்தின் வரலாற்றை விலாவாரியாக விவரித்து, ஓர் ஆய்வு நூலாகவே ஆக்கித் தந்துள்ளார். அதிலும் நூலின் பெயரை கயத்தாறு வரலாறு என்றில்லாமல் கயத்தாறு தரிசனம் என வைத்துள்ளது, அவர் அவ்வூர் மீது கொண்டுள்ள அபரிதமான மரியாதைக்கு அடையாளமாகும்.
தமிழகத்தில் தூத்துக்குடி என்றாலே அது முத்துக்கொழிக்கும் மாவட்டம் என்றுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். அங்கே வீரம் செறிந்து, ஆன்மீகம் தழைத்தோங்கி மிக அற்புதமான கலங்கரை விளக்காகத் திகழும் கயத்தாறு உள்ளது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? என்பது கேள்விக்குறியே. இங்கே தான் தமிழகத்தின் வீரத்திருமகன்களாக இருந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன், புலித்தேவன், சுப்ரமணியப்பாரதி, வ.ஊ.சி, பகத்சிங், அழகு முத்துக்கோன் போன்றோர் வாழ்ந்து, சுதந்திரப்போராட்டக் காலத்தில் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
கயத்தாற்றின் வரலாற்றை எழுதத் தொடங்கியிருக்கும் ஆசிரியர், அவ்விடத்தின் வரலாற்றைப் பற்றி மட்டும் எழுதியதோடு நின்று விடாமல் அங்கு வாழ்ந்து சுதந்திரத்திற்காக, கொடுமைக்கார வெள்ளையர்களை எதிர்த்து நின்று போராடிய வீரப்பாட்டிய கட்ட பொம்மனின் வரலாற்றை எழுதியிருக்கும் விதம் வித்யாசமானது.
எத்தனைப் புத்தகத்தில் வீரப்பாண்டியனின் வரலாற்றைப் படித்திருந்தாலும் அல்லது பல சினிமாக்களில் அவரின் வரலாற்றைப் பார்த்திருந்தாலும், இவர் இந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பது போன்று படிப்போரின் உதிரத்தைச் சூடேற்றும் விதத்தில் உணர்ச்சிகரமாக எழுதியிருப்பதை படிக்கவும் முடியாது… பார்க்கவும் முடியாது… அந்த அளவிற்கு ஒவ்வொரு நிகழ்வுகளையும் அப்படியே வாசகர்களின் கண் முன்னே உயிரோட்டமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் படிக்கும் போது வாசகர்களின் கண்கள் குளமாகும்… உடம்பு சூடேறும்.
கயத்தாறு என அவ்விடத்திற்கு ஏன் பெயர் வந்தது? என்பதற்கு, நூலாசிரியர் மேலாட்டமானக் காரணங்களை மட்டும் எழுதாமல், அதை பற்றி புராண. இதிகாச, இலக்கிய, ஏடுகள், கல்வெட்டு மற்றும் அவ்வூர் மக்கள் கூறும் செவிவழிச் செய்திகள் அனைத்தையும் மிகத்துல்லியமாக ஒரு முனைவர் பட்ட ஆய்வாளரைப் போன்று ஆய்வுச் செய்து எழுதியுள்ளார். இதற்காகவே இவருக்கு இன்னொரு முனைவர் பட்டம் வழங்கலாம்.
யானையால் இப்பெயர் வந்தது, இராமன் சீதைக்காக தரையில் அம்பெய்து தண்ணீர் எடுக்க, அந்நீர் கசப்பாக இருந்ததால் வந்த பெயர், கள்ளர்கள் அதிகமாக இருந்ததால் வந்த பெயர் என எத்தனை எத்தனையோக் காரணங்கள் கூறப்படுகின்றன. அந்தக் காரணங்கள் அனைத்தையும் மிகவும் சுவாரசியமாகப் படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதியுள்ளார்.
பொதுவாகத் தமிழகத்தில் கோயில்கள் அதிகமுள்ள நகரம் மதுரை மாநகரம் என்றுதான் கருதப்படுகிறது. ஆனால் இந்நூலில் மதுரையை விட கயத்தாறில் அதிக கோயில்களும் பிற கிறிஸ்தவ, இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களும் உள்ளதாகக் கூறி அவற்றை சிறியவை, பிரசித்திப் பெற்றவை எனப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். ஒவ்வொரு கோயிலின் தல வரலாறு, அக்கோயிலின் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கும் பாங்கும் பாராட்டுக்குரியது.
மேலும் கயத்தாறிலுள்ள இயற்கை வளம், நீர் ஆதாரங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் வளம், மருத்துவமனைகள், போக்குவரத்து வசதிகள், மக்களின் வாழ்க்கை முறை என எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் விவரித்துள்ளார்.
இவற்றுடன் கயத்தாறுக்கு வருகைப் புரிந்துள்ள அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சினிமாத்துறையினர் என அனைவரின் வருகையையும் தேதி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தனது சொந்த இடத்தில், அவரின் சொந்த செலவில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சிலை நிறுவியுள்ளார். அந்தச் சிலை திறப்பு விழாவிற்கு, அந்நாளைய இந்தியக் குடியரசுத்தலைவர் மேதகு நீலம் சஞ்சீவரெட்டி வருகைப்புரிந்துள்ளார். மட்டுமின்றி இன்று தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் மாண்பமை ஆர்.என். இரவி அவர்கள் தனது துணைவியாருடன் கயத்தாறு வந்து வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மரியாதைச் செலுத்தியுள்ள சம்பவத்தையும் நாள் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றிலிருந்து இந்நூலாசிரியர் உண்மையில் கயத்தாறை பற்றி எழுதுவதற்கு மிகக் கடினமான பிரயத்னம் செய்திருக்கிறார் என்பது வாசகர்கள் அனைவருக்கும் புரியும்.
இந்நூல் இன்றைய… நாளைய… வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒரு தலைசிறந்த வழிகாட்டி நூலாக அமையும் என்பது நிதர்சனமான உண்மை. மட்டுமின்றி கயத்தாறு வாழ் மக்களுக்கு இந்நூல் கிடைப்பதற்கரியப் பொக்கிஷமாகும்.
ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பின்னும் ஓய்வறியாது… துயிலறியாது… தழுக்காக… நூலாசிரியர் பணியாற்றி கொண்டிருக்கும் இந்நூலாசிரியர் கப்பியறை முனைவர் வ. இராஜப்பன் அவர்கள் இன்னும் பல படைப்புகளைப் படைத்து, தரணி போற்றும் படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற அனைவரும் அவரோடு கைகோப்போம்.
என்றும் சிநேகங்களுடன்…
முனைவர் கமல. செல்வராஜ்.