Monday, 28 October 2019

தர்மத்தின் இரகசியம் | SECRET OF DHARMA | KAMALA SELVARAJ SPEECH

பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும்.

பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும்.
(ietamil E Journal இல் 27-10-2019 பிரசுமானக் கட்டுரை)
Diwali 2019 Tamil Nadu tasmac target : பள்ளிப் பருவத்தில் பொங்கல், ஓணம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் எப்பொழுது வரும் என கைவிரலை மடக்கி மாதங்களையும், நாள்களையும் கணக்குக் கூட்டிக்கொண்டேயிருப்போம் நண்பர்களுடன். இந்தப் பண்டிகைகள் வரும்போது, நல்ல உணவும், நிறையப் பலகாரங்களும், புத்தாடையும் கிடைக்கும் என்பது எங்களுக்கெல்லாம் குஷியான விஷயம்தான்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எங்களைப் படுகுஷியாக்கும் விஷயங்கள் வேறு சில உண்டு. அவை ஓணத்திற்கு ஊஞ்சலாடுவது, பொங்கலுக்கு மாடுவிரட்டு, தீபாவளிக்குப் பட்டாசு வெடித்தல், கிறிஸ்மஸ்சுக்கு குடில் கட்டுதல் ஆகியனவாகும். இவையெல்லாம் எங்களுக்குப் பலவகைப் பலகாரங்களை விடவும், புத்தம் புதிய ஆடைகளை விடவும் பேரானந்தத்தைத் தருபவை. மட்டுமின்றி நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறுதலிப்பதும் இவையேயாகும்.
ஆனால் இவற்றையெல்லாம் ஒவ்வொரு காரணத்தைக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வருகின்றனர் நமது அரசாங்கமும் அதிகாரிகளும். அவற்றில் முன்னணியில் நிற்பது தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது. ஒவ்வொரு பண்டிகைக்கும் காலாகாலமாக ஒரு விளையாட்டு அல்லது ஒரு பொழுது போக்குக் கடைபிடிப்பது, அந்தந்த பண்டிகையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதற்காகும்.
அந்த வகையில் தீபாவளியென்றால் பட்டாசு வெடிப்பது என்பது மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, பட்டாசு வெடிப்பதினால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுவிளையும் என்பதை காரணம்காட்டி, பட்டாசு வெடிப்பதை தடுப்பதற்குப் பல்வேறு விதமான கெடுபிடிகளைச் செய்து வருகின்றனர். ஒரு தீபாவளிப் பண்டிகையை மட்டும் நம்பி, பட்டாசு உற்பத்தியில் சிவகாசி உள்ளிட்ட எத்தனையோ இடத்தில், எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இன்று நமது நாடுமுழுவதும் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஏற்பட்டிருக்கும் பெரும் தீங்கு என்பது, சுற்றுச்சூழல் மாசுபடுதலை எங்கோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு விவசாயி வளர்த்து வந்த, ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவைசிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டின் கொடூரத்தை நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.
இதைபோன்ற ஒரு கொடூரமான மாசுபடுதல் ஆண்டுக்கு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படப் போவதில்லை. அதனால் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.
அதே நேரம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணைத்துள்ளது. அதோடு குறைந்தது ரூ.700 கோடிக்கு விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் அரசு உள்ளது. அதனால் “சரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும். தேவையான அளவு ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். மது வாங்க வருபவர்களை சரக்கு இல்லை எனத் திருப்பி அனுப்பக் கூடாது. டாஸ்மாக் பணியாளர்கள் யவரும் விடுமுறை எடுக்கக் கூடாது” என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளான, மக்களுக்கு எவ்விதத் தீங்குகளையும் ஏற்படுத்தாத, அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும், பெரும் தடைகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, இத்தனை கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
அரசாங்கம் ஒரு விசயத்திற்கு இலக்கு நிர்ணைக்கிறது என்றால் அது ஏதேனும் ஒரு விதத்தில் மக்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்? இத்தனை கோடிக்கு மது குடிப்பவர்களால், அந்த மகிழ்ச்சிகரமான நாளில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இந்த குடிகாரர்களால் எத்தனை சாலை விபத்துகள்? எத்தனை சண்டை சச்சரவுகள்? எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பங்கள்? வீட்டில் ஆக்கி வைத்த உணவை நிம்மதியாக உண்ண விடாமல் அடித்து நொறுக்கும் கொடுமை, ஏற்றி வைத்த தீபத்தை எரிய விடாமல் தூக்கி எறியும் தீங்கு, தனது நிம்மதியையும் கெடுத்து, குடும்பத்தின் அமைதியையும் இழக்க வைக்கும் கொடூரம், இவையெல்லாம் அரங்கேறும் அலங்கோலமான நாளாக அல்லவா தீபாவளி திருநாள் மாறிவிடும்?
மேலும் படிக்க : ட்ரைக்லோசன் பயங்கரம் – கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை
இத்தனை கொடூரங்களையும், இந்த மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைக்கும் ஆட்சியாளர்கள் ஒரு நிமிடமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இப்படிப்பட்ட அநியாயங்களைப் பண்டிகைகளின் எந்தப் பண்பாட்டுக் கூறுக்குள் அடக்குவதற்கு முடியும்? இத்தனை அநீதிகளையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றும் போதைப் பழக்கத்தை இந்த மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமலாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர், தனது ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதனால் குறைந்த பட்சம் இப்படிப்பட்ட பண்டிகை நாள்களிலாவது இந்த டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். அதோடு குடிமகன்களின் குடும்பங்களில் தீபாவளி தீபம் எவ்விதத் தீங்குகளுமின்றி ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகள் இம்மண்ணின் அடையாளமாகும்.

Wednesday, 9 October 2019

3 முக்கியப் பதவிகள் காலியிடம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தேர்வு குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?

3 முக்கியப் பதவிகள் காலியிடம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தேர்வு குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?


October 08, 2019 01:58:07 pm 


TNTEU B.Ed Result 2019: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி ஆகிய அனைத்து பி.எட். கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம். இது இந்தியாவில் பி.எட். கல்லூரிகளுக்கு மட்டுமான முதல் பல்கலைக் கழகம் என்னும் பெருமைக்குரியது.
தமிழகம் முழுவதும் சுமார் 750 பி.எட். கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் தங்கசாமி ஓய்வு பெற்று சுமார் பத்து மாதங்கள் கடந்து விட்டன. அதன் பிறகு அந்தப் பதவிக்கு இதுவரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லை.

மேலும் இப்பல்லைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பதிவாளர் பதவியும் காலியாகவே உள்ளது. அந்தப் பொறுப்பை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக (Controler of Examinations) இருந்த முனைவர் இரவீந்திரநாத் தாகூர் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தார். அவரும் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு பணிநிறைவுப் பெற்றார். அதன் பிறகு இதுவரை அந்தப் பணிக்கும் எவரையும் நிரந்தரமாக நியமிக்கவில்லை. அதற்குப் பதிலாக அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்களிடம் அவ்விரு பதவிக்கானப் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளனர்.
ஒட்டுமொத்தத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் இல்லாமல் ‘கேப்டன் இல்லாத கப்பலாக’ இப்பல்கலைக் கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

TNTEU B.Ed Result 2019 Faults: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் குளறுபடி

இந்நிலையில், கடந்த 2018 – 19 ஆம் கல்வியாண்டிற்கானத் தேர்வு முடிவுகள் இப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. அதனால் தமிழகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான பி.எட். மாணவர்கள் மிகுந்த மன உளச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதாத மாணவர்களுக்குத் தேர்வு எழுதியதாக அனைத்துப் பாடத்திற்கும் மதிப்பெண்ணுடன் ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு எழுதவில்லை ஆப்சென்ட் என ரிசல்ட் வந்துள்ளது. பல்கலைக்கழக அளவில் ரேங் கிடைக்கும் அளவிற்கு மார்க் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒற்றை இலக்க மார்க் மட்டுமே கிடைத்து தோல்வியடைந்ததாக ரிசல்ட் வெளியாகியுள்ளது.
இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனை எத்தனையோ குளறுபடிகள் அந்த தேர்வு முடிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மத்தியிலும், சமுதாயத்தின் முன்பும் பல விதமான அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தக் குளறுபடிகள் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அதிலிருந்து தப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் ‘விடைத்தாள் தொடர்பான, பார்கோட்டை ஸ்கேன் செய்வதில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்டு, புதியப் பட்டியல் வெளியிடப்படும்’ எனத்தெரிவித்திருந்தார்.
அதனை நம்பிய மாணவர்கள், புதிய ரிசல்ட் வரும் போது தங்களின் குழப்பத்திற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, ஓரளவிற்கு மன அமைதியடைந்திருந்தனர். ஆனால் அந்த அமைதி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதற்குள் “பாம்பு கொத்தியவன் தலையில் இடிவிழுந்த கதை” என ஊருக்குள் ஒரு பழமொழிக் கூறுவார்கள். அதற்கிணங்க, புதிய ரிசல்ட் இன்று வரும்… நாளை வரும்… என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் இப்படியொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
பல்கலைக்கழகம் வெளியிட்டத் தேர்வு முடிவில் யாராவது தேர்ச்சிப் பெறாமல் இருந்தால் அவர்கள் ரூ.750 செலுத்தி விடைத்தாள் மறுதிருத்துதலுக்கு (Revaluation) விண்ணப்பிக்கலாம். யாருக்காவது விடைதாளின் நகல் பெறவேண்டும் அல்லது மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றால் தலா ரூ. 300 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தத் தவறையும் பல்கலைக்கழகம் செய்து விட்டு அந்தத் தவறுகளுக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்தாமல், இப்படி மாணவர்கள் மீது அநியாயமாகப் பணச்சுமையும் ஏற்படுத்தியுள்ளது எந்த வகையில் நியாயம்? என தேர்வு எழுதிவிட்டு நல்ல மார்க்குடன் கூடிய ரிசல்ட்டிற்காகக் காத்திருந்து, தேர்வே எழுதவில்லை என ரிசல்ட் வந்த ஒரு ஏழை மாணவியின் தந்தை, தனது கண்கள் கலங்க கேட்கிறார். இதற்கு இந்தப் பல்கலைக் கழகத்தின் பொறுப்பு மிக்க பொறுப்பாளியாக(!) இருக்கும் பதிவாளர் என்னப் பதில் சொல்லப் போகிறார்?
மட்டுமின்றி பல்கலைக்கழகம் இத்தனை தவறுகளையும் செய்திருப்பதை அறிந்தும், தமிழக அரசும், கல்வித்துறையும் இதற்கு எந்தப் பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பதின் இரகசியம் என்ன? தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஓயாமல் ஓடோடிச் சென்று ஆய்வு நடத்தும் தமிழக ஆளுநர், ஏன் தான் வேந்தராக இருந்து, தனது நேரடி கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும், இப்பல்கலைக்கழகத்தில் இவ்வளவு பெரியத் தவறு நடந்து பல்லாயிரம் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாயிருந்தும் அதைப் பற்றி கேட்காமல் இருக்க வேண்டும்?
இந்த வினாக்களுக்கெல்லாம் விடை கூறும் விதமாக பாதிக்கப் பட்டிருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பணம் செலுத்தி மறுதிருத்தல், மறுகூட்டல், விடைதாள் நகல் பெறுதல் என ‘வெந்த புண்ணில் மீண்டும் வேல் பாய்ச்சி பணம் பறிப்பதை’ உடனடியாக நிறுத்தி விட்டு, பொறுப்பு பதிவாளர் முன்பு கூறியது போல், ரிசல்ட்டில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை நிவர்த்திச் செய்து, உடனடியாக புதிய ரிசல்ட் வெளியிடுவது பல்கலைக்கழகத்திற்கும், கல்வித்துறைக்கும் கௌரவத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
(இக்கட்டுரை ietamil E Journal இல் 08.10.2019 அன்று பிரசுரமானது)  

Thursday, 3 October 2019

கல்நெஞ்சையும் கரைய வைக்கும் காந்தியம்:


கல்நெஞ்சையும் கரைய வைக்கும் காந்தியம்


     (இக்கட்டுரை 02-10-2019 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)
 எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை தினமும் பத்திரிகைப் படித்து வருகிறேன். அப்படி நான் படிக்கும் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகளுக்குப் பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதைப் படித்துக்கொண்டேயிருக்கிறேன். அவற்றில் எத்தனைத் தீர்ப்புகள் இன்று வரை என் இதயத்தில் பதிந்திருக்கிறது என்றால் அது கேள்விக்குறியே.

ஆனால் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், ஓர் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த நூதனமானத் தண்டனை ஒன்று, இன்றும் என் இதயத்தில் பசுமரத்தாணிபோல் இதமாய் இடம் பிடித்திருக்கிறது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகேயுள்ள மதுரவாயல் என்ற இடத்தில் ஒரு விவசாயியை கொலை செய்ய முயன்றதாக புரசைவாக்கம், ரங்கநாதன் எம். எல். எ மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ரங்கநாதன். அந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

அதற்கு அந்த நீதிபதி, ரங்கநாதன் மக்கள் பிரதிநிதியானதினால் இந்த வழக்கிலிருந்து அவர் தெளிவு பெற்றாக வேண்டும். அதற்காக அவர் தொடர்ந்து ஐந்து நாள்கள் மதுரையிலுள்ள காந்தி மியூசியத்தில் அமர்ந்து, காந்தியடிகளின் சத்திய சோதனை நூலைப் படிக்க வேண்டும். அதன் பின்னர் சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி போதனா மையத்தில் பத்து நாள்கள் அமர்ந்திருந்து சத்திய சோதனை உள்ளிட்டக் காந்தியடிகளின் புத்தகங்களைப் படித்து, தனது மனதையும், அறிவையும் சரி செய்து கொண்டால்தான், தனது தொகுதி மக்களுக்கு அவரால் சேவை செய்ய முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புதமான உண்மையுள்ளது. இவ்வுலகில் பகவத்கீதையிலிருந்து தொடங்கி… பைபிளில் தொடர்ந்து… குரான் வரை எத்தனை எத்தனையோ புனித நூல்கள் உள்ளன. ஆனால், ஒரு குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒவரிடம், அந்தப் புனித நூல்களெயல்லாம் படிக்கச் சொல்லாமல், ஒரு மனிதனால் எழுதப்பட்ட சுயசரிதை நூலைப் படித்துப் புத்தி தெளிவுற, ஒரு நீதிபதி உத்தரவிடுகிறார் என்றால், அந்த மனிதன் எவ்வளவு பெரிய மாமனிதனாக… அவரது ஆத்மா எவ்வளவு தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
அப்படிப்பட்ட மாமனிதனாகிய மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைதான் நம் தேசம் உச்சத்தில் வைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறது, அவரின் வாழ்க்கை மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஒரு திறந்த புத்தகம். இல்லையில்லை புனிதப் புத்தகம். அப்புத்தகம் படித்து மகிழ்வதற்குரியதல்ல. படித்துத் தெளிவதற்குரியது. படித்து மறப்பதற்குரியதல்ல, மாறுவதற்குரியது.
ஏன் நான் இதை உங்களோடு உரக்க உரைக்கின்றேன் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை பத்திரிகையாளர்கள் மகாத்மாவை பேட்டி கண்டுள்ளனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக அவர் பதிலளித்துள்ளார் மகாத்மா. பேட்டியின் இறுதியில் ஒரு பத்திரிகையாளர் மகாத்மாவைப் பார்த்து இப்படியொரு கேள்வியை முன்வைத்துள்ளார். அண்ணல் அவர்களே! இந்த தேசத்து இளைஞர்களுக்கு உங்களின் செய்தி என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கு சற்றும் சிந்திக்காமல், ஒரு நொடிப்பொழுதுகூட தாமதிக்காமல் அந்த அண்ணல் அளித்த பதில் என்ன தெரியுமா? என் வாழ்க்கையே என் செய்தி (MY LIFE IS MY MESSAGE) என்பதுதான். நான் ஒரு தீவிரமான வாசிப்பை நேசிப்பவன் என்பதின் அடிப்படையில் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன், இதுவரையிலும் இப்படியொரு பதிலுரைத்த எந்தவொரு தலைவரையும் நான் கேட்டதும் இல்லை, கண்டதுமில்லை. இனியும் என்னால் உறுதியாகக் கூற முடியும், இப்படி உரைப்பதற்கு தகுதியான ஒரு தலைவன் இந்த மண்ணில் இனி பிறப்பதற்கும் வாய்ப்பில்லை.
“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்” என தர்மத்திற்கு ஆழமான ஓர் அர்த்தத்தை உணர்துகிறது அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஐயா வைகுண்டரின் வாழ்வியல் நூல். அந்த அடிப்படையில் தன்குலத்தோருக்கு எதிரே வரும் இன்னொரு குலத்தோரை எட்டிப்போ… எட்டிப்போ… எனச்சொல்லி, ஒதுங்கிப்போன தாழ்குலத்தோரை கட்டித்தழுவி, பூநூல் அணிவித்து புனிதராக்கிய உத்தமரல்லவா அண்ணல் காந்தி. அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் யார் இந்த மண்ணில் இருப்பார்.
எங்கு தொடங்கினேனோ அங்கேயே முடிப்பதற்கு விளைகின்றேன். நீதிபதி கற்பகவிநாயகத்தால் 15 நாள்கள் காந்தியடிகளின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களைப் படிப்பதற்குத் தண்டனைப் பெற்றாரே ரங்கநாதன் எம். எல். ஏ, அந்த 15 நாள்களும் முடிந்த பிறகு என்ன சொன்னார் தெரியுமா? இனி நான் என் வாழ்நாளில் இதுபோன்ற எந்த ஒரு தவறையும் செய்யமாட்டேன். மகாத்மாவின் சத்திய சோதனை என்னை ஆட்கொண்டது. அதன் மூலம் அறிவுற்றேன்… தெளிவுற்றேன்… நான் யார் என்பதை உணர்வுற்றேன்.. இனிதான் என் வாழ்க்கையைத் தொடங்கப்போகிறேன் என்று.
அண்ணலின் இந்த 150 வது பிறந்த நாளில் எப்படி நம் இல்லங்களில் நமக்குப் பிடித்தமான புனித நூல்களை வைத்திருக்கின்றோமோ அதுபோல் அவரின் சத்திய சோதனை நூலையும் வைத்திருப்போம். வரும் தலைமுறைக்கு அவரின் வாழ்க்கையையே பாடமாக்குவோம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)


தமிழ்நாடு பி.எட். ரிசல்ட் குளறுபடி:

தமிழ்நாடு பி.எட். ரிசல்ட் குளறுபடி: ஒரு லட்சம் மாணவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது கல்வித் துறை?

(இக்கட்டுரை 28-9-2019 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி என சுமார் 750 பி.எட். கல்லூரிகளை உள்ளடக்கி சென்னையில் இயங்கி வருவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம். இந்தியாவிலையே பி.எட். கல்லூரிகளுக்கென்று தொடங்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமைக்குரியது.
ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ ஆசிரியர்கள் இப்பல்கலைக் கழகத்தில் பி.எட். கல்விப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு படித்த சுமார் ஒரு லட்சத்தி 16 ஆயிரம் மாணவ ஆசிரியர்களுக்கு, கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் இறுதிவரைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்தன. அந்தத் தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் செப்.24 ஆம் தேதி இரவு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

அந்த முடிவைப் பார்த்த பி.எட். மாணவ ஆசிரியர்களும் அவர்களைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும், பெற்றோர்களும் மீள முடியாத அதிர்ச்சிக்குள்ளாயினர். ஏனென்றால் தேர்வு எழுதி விட்டு பல்கலைக் கழக ரேங்க் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு ‘இலவு காத்த கிளி போல்’ மூன்று மாதங்களாகக் காத்திருந்த பலருக்கு கிடைத்தப் பரிசு என்ன தெரியுமா? அவர்கள் தேர்வே எழுதவில்லை, தேர்வுக்கு ஆப்சென்ட் ஆயிருக்கிறார்கள் என்பதுதான். அதனைப் பார்த்ததும் மாணவ ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோரும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உட்பட்டுள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க, இன்னொருப் பக்கம் தேர்வு எழுதுவதற்கு இம்முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமலும் கல்லூரிக்குப் போகாமலும் இருந்து, கல்லூரிப் பேராசிரியர்களால் இன்டேனல் மார்க்கூட அனுப்பாத மாணவ ஆசிரியர்களுக்கு, இன்டேனல் மார்க்குடன் ரிசல்ட் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும், ‘அப்பப்பா… இது என்னடா முட்டாள் தனம்’ என மூக்கின் மேல் விரல் வைத்து புலம்பித் திரிகின்றனர். பல மாணவ ஆசிரியர்களுக்குத் தேர்வு எழுதியும், அனைத்துப் பாடங்களும் ஆப்சென்ட் என வந்துள்ளன. அதோடு சில கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவ ஆசிரியர்களுக்கு சில பாடங்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன பிறப்பாடங்களுக்கு ஆப்சென்று என வந்துள்ளது.
மேலும் ஏராளமான மணவ ஆசிரியர்களுக்கு சிங்கிள் டிஜிட் (ஒற்றை இலக்கு மதிப்பெண்) மார்க்குடன் ரிசல்ட் வந்துள்ளது. இப்படி குளறுபடி மேல் குளறுபடியாக வெளியாயிருக்கும் தேர்வு முடிவினால் பாதிக்கப்பட்ட பயிற்சியாசிரியர்களும் பெற்றோரும் மனக்குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.
எவ்வித தவறோ அல்லது குளறுபடிகளோ இல்லாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வெளியிட வேண்டிய தேர்வு முடிவை இவ்வளவு அலட்சியமாக வெளியிட்டிருக்கும் பல்கலைக் கழகத்தின் மேதாவிகள் மீது யார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
தேர்வு எழுதியும், எழுதவில்லை என முடிவு வந்திருக்கும் மாணவ ஆசிரியர்களுக்கு யார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதெல்லாம் கேள்விக்குறிதானா? இல்லை இதற்கெல்லாம் தகுந்த விடையும் நடவடிக்கையும் உண்டா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கவிதை- கட்டுரை- பட்டிமன்றம் என அழுத்தமாக தடம் பதித்து வருபவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)