Monday, 16 December 2019

பாலியலும் பலாக்காரமும் || SEXUAL HARASSMENT || KAMALA SELVARAJ SPEECH

பி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்?

பி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்?
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
தமிழகத்திலுள்ள சுமார் 750 கல்வியியல் (பி.எட்) கல்லூரிகளை ஒருகிணைத்து ஒரே பல்கலைக்கழகமாகச் செயல்படுவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம். இது ஆசிரியர் பயிற்சிக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த பத்து மாதங்களாக துணைவேந்தர் பதவியும், மூன்று ஆண்டுகளாக பதிவாளர் பதவியும், கடந்த ஆறு மாதமாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியும் காலியாக இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் அன்றாட, சீரான செயல்பாடுகளைச் சமாளிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தன.
இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகத்திற்கு நான்காவது துணைவேந்தராக முனைவர் என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம். பி.ஏ துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கல்வியியல் கல்லூரிக்கு, அத்துறையில் அனுபவம் இல்லாமல் வேற்று துறையில் பணியாற்றியவரை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பல்கலைக் கழகத்தின் மூன்று முக்கியப் பொறுப்புகளும் காலியாக இருந்த நிலையில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருப்பது திருப்திகரமானது. ஆனால், இப்பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் எண்ணிலடங்கா சவால்கள் உள்ளன. அவற்றையெல்லாம், இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறியானது.
கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர் பதவிக்கும், ஆறுமாதமாக காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (Controler of Examinations) பதவிக்கும் புதிதாக தகுதியானவர்களை நியமிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.
பல்கலைக் கழகத்தின் முதுகெலும்பான மூன்று முக்கியப் பதவிகளும் காலியாக இருந்ததால் கடந்த கல்வியாண்டு நடந்த பல்கலைக் கழகத் தேர்வு விடைதாள் திருத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வராமல் தேர்வு எழுதவில்லை எனவும், தேர்வே எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எழுதி மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வு முடிவு வெளியானது. இப்படிப்பட்ட குளறுபடிகளை சுட்டிகாட்டியப் பிறகும் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் இதுவரையிலும் பல்கலைக் கழகத்தால் எடுக்கப்படவில்லை.
இந்தக் குளறுபடிகள் நடந்ததினால் மறுதிருத்தம் (Revaluation) மறுகூட்டல் (Recounting) போன்றவற்றிற்கு விண்ணப்பித்து மூன்று மாதங்களாக மாணவர்கள் காத்திருந்தும், அதற்கான முடிவுகள் வராததால் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் பள்ளிகளில் வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னைக்கு விரைந்து முடிவு காணவேண்டியது துணைவேந்தரின் முதல் கடமையாகும்.
பொதுவாக ஒரு கல்லூரி தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டால் அக்கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கலாம் என்பது பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டத்தில் உள்ளது. ஆனால், இப்பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகள் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஆன பிறகும் நிரந்தர அங்கீகாரம் வழங்காமல் ஆண்டுதோறும் தொடர் இணைப்புக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கல்லூரிகள் அவதிக்குள்ளாகின்றன. இந்த நடைமுறையை நீக்கி, கல்லூரி தொடங்கி ஐந்தாண்டுகளான கல்லூரிகளுக்கு அவற்றின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர அங்கீகார ஆணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களின் நெறிமுறைகளுக்கு இணங்க முதல்வர்கள், பேராசிரியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒப்புதலுக்காக விண்ணப்பித்தால், தகுதியானவர்களுக்கு வேறு எந்த எதிர்பார்ப்புமின்றி ஒப்புதல் (Staff Approval) அளிக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் ஆசிரியர் தகுதி ஒப்புதல் பெறுவதற்குப் பல்கலைக்கழகத்திற்குப் பல ஆயிரங்களும் லட்சங்களும் செலவழிக்க வேண்டியுள்ளது. இது பேராசிரியர்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது. எனவே இந்த நடைமுறையை மாற்றுவதற்கு துணைவேந்தர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மொத்தம் ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் மிக குறைந்த அளவில் மட்டுமே ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு முடியும். அதனால், ஏழை எளிய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது படிப்பதற்கு விருப்பம் இருந்தும், படிப்பதற்கு இயலாத நிலை ஏற்படுகிறது.
எனவே தமிழகத்திலுள்ள ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகமான அரசு பி.எட். கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பல்கலைக் கழகம் தொடங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை ஒரு அரசு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அல்லது தனியார் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஏழை மாணவர்களின் படிப்பிற்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை வசதியிலிருந்து கழிப்பறை வசதி வரை போதுமான அளவிற்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சில கல்லூரிகளில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட கல்லூரிகளில் மிகவும் நேர்மையான முறையில், நேர்மையான கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படி தரம் இல்லாமல் நடத்தப்படும் கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரிக்கு வராமலே படிக்கலாம் என்ற முறையில், மாணவர்களுக்கு அட்மிஷன் கொடுத்து தேர்வு மட்டும் எழுத வைக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். இப்படி அநியாயமாக நடக்கும் கல்லூரிகளை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்குத் துணைவேந்தர் துணிச்சலாக முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும், தற்போது மத்திய அரசு, ஆசிரியர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நான்காண்டு கால பி.எட். கல்வி முறையை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த நடைமுறையை தமிழகத்தில் அனைத்து பி.எட். கல்லூரிகளும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றால், ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சியளித்து வருங்காலத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி கல்வித்துறையைக் கரையான் அரிக்காமல் பாதுகாப்பதற்கு இயலும்.
முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்,
அருமனை. மின்னஞ்சல்: drkamalaru@gmail.com
Comments

Saturday, 30 November 2019

'நல்ல நாட்டுக்கு முதல்லே என்ன வேணும் தெரியுமா?'- என்.எஸ்.கிருஷ்ணன்

'நல்ல நாட்டுக்கு முதல்லே என்ன வேணும் தெரியுமா?'- என்.எஸ்.கிருஷ்ணன்

முனைவர் கமல.செல்வராஜ்
(கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி (நவம்பர் 29) இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது)
“ஒரு நல்ல நாட்டுக்கு முதல்லே என்னவேணும் தெரியுமா? உணவு என்பீங்க! இல்லை, உடை என்பீங்க! இல்லை. முதல்லே வேண்டியது – சிரிப்பு! ஆமாம்! சிரிப்புதான் முதலே வேணும்! அப்புறம்தான் உணவு, உடை அதெல்லாம் அப்படீன்னு நான் சொல்லலே! ரெம்ப பெரியவங்க எல்லாம் சொல்லியிருக்காங்க. ஒரு டாக்டர் சொல்லியிருக்காரு, நல்லா சிரிச்சிட்டா வியாதி வராதாம்! சிருப்பு ஒரு மருந்து: நம்ம வாழ்க்கைத் துயரத்துக்கெல்லாம் நல்ல மருந்து! அதனாலேதான் நீங்க சிரிக்கச் சிரிக்க எனக்கு ஆனந்தம்! ரெம்ப ஆனந்தம்! அதலே எனக்கு பெருமை… ஏன்னா நான் வந்தேனோ இல்லியோ, நீங்க சிரிச்சிட்டீங்க! நான் உங்களைச் சிரிக்க வைக்கிறேனே… அது, எனக்குப் பெருமைதானே. மக்களைச் சிரிக்க வைப்பது ஒரு தொண்டு! அப்படீன்ன, நான் தேசத்துக்குப் பெரியத் தொண்டு செய்த மாதிரி! மாதிரி என்ன மாதிரி தொண்டு செய்கிறேன்! அதனாலே நானும் ஒரு தேசத் தொண்டேன்னு சொல்லுங்க. நீங்க சொல்லாட்டி நானே சொல்லிக்கறேன்.”

“என்னப்பா, கிருஷ்ணன் ஐயாயிரம் வாங்குறான் பத்தாயிரம் வாங்குகிறான்… அவனுக்கு சினிமாவிலே அது கொடுக்கிறாங்க… இது கொடுக்கிறாங்க … என்று நீங்க சொல்லலாம். ஆனா, நான் சொல்றேன், எனக்கு அதெல்லாம் லட்சியம் இல்லே. எனக்கு முக்கியம் சந்தோஷம்தான்! நான் சந்தோஷப்படணும், மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தணும், அது தவிர பணம் சம்பாதிச்சுடணும். மாடிகட்டணும். ஏரோபிளேன்ல ஏறி ஆகாசமெல்லாம் பறக்கணும் என்கிற ஆசை எனக்கில்லை. இப்போ, சொல்லுங்க… நான் ஒரு தேச பக்தனா இல்லியா?
“எல்லா பிறவிங்கள்லேயும் மானிடப் பிறவிதான் ரொம்பச் சிறந்ததுன்னு சொல்றாங்க. அரிதரிது மானிடராய்ப் பிறப்பரிதுன்னு பாட்டுக்கூட இருக்குது. ஆனா, மனிதன் எதிலே சிறந்தவன்? புலி – மனிதனை விட ரொம்ப அழகா இருக்கு. குரங்கு நம்ம விட நல்லா நடக்குது! குருவி – நம்மைவிட நல்லா கூடு கட்டுது! மனிதன் உயர்ந்தவன் என்றால் அழகால் அல்ல. நடையால் அல்ல. திறமையால் அல்ல… சிரிப்பால்! மனிதன் சிரிக்கத் தெரிந்தவன்! ஆகவே மனிதன் உயர்ந்தவன்! மற்ற பிராணிகளுக்கும் சந்தோஷம் உண்டு! ஆனா, சிரிக்கத் தெரியாது.”
தர்பாரின் ‘Chummakizhi’ பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
நாய் கூட ஆனந்தத்திலே வாலை ஆட்டுது, ஆனா, சிரிக்காது! மனிதன் ஒருத்தனுக்குத்தான் சிரிக்கத் தெரியும். இந்தச் சிரிப்பு இருக்குதே அது எங்கே இருந்து வருது நல்ல மனசிலே இருந்து வருது! ஆகவே மனுசனுக்கு மனசு இருக்குது! அதனால்தான் அவன் சிரிக்கிறான். ஆகவேதான் மனுசன் உயர்ந்தவனாகிறான்.”
சிரிப்பைப் பற்றி இப்படி நீண்ட நெடிய ஒரு விளக்கத்தைக் கொடுத்திருப்பது யாரென்று யோசிக்கிறீர்களா? அவர்தான் நம் நாட்டில் சினிமாத்துறைக்கு முன்னோடியாக விளங்கிய நாடகத்துறையில் நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து மக்கள் மனங்களிலெல்லாம் என்றும் நீங்கா இடம் பிடித்து தன் சிந்தனையாலும், சொல்லாலும் வையகம் முழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘சிரிப்பு மேதை’, ‘வள்ளல்’, ‘கலைவாணர்’ என்றெல்லாம் கலைத்துறையால் போற்றிப் புகழப்படும் நாஞ்சில் சுடலையாண்டி கிருஷ்ணன் என்னும் என்.எஸ். கிருஷ்ணன்.
1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் நாள் சென்னை, பச்சையப்பன் கல்லூரி தமிழ் மன்ற ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய போதுதான் சிரிப்பு பற்றி இப்படியொரு அற்புதமான விளக்கத்தை கொடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”
என்னும் பொய்யா மொழிக்கேற்ப ஓர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பேச்சாளர் என பன்முக ஆளுமைத் தன்மையைத் தன்னகத்தேக் கொண்டு 1908 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 29 ஆம் நாள் முக்கடலும் சங்கமித்து முத்தமிழும் தழைத்தோங்கும் கன்னியாகுமரி மாவட்டம் தலைநகராம் நாகர்கோவிலில் சுடலையாண்டி, இசக்கியம்மாள் தம்பதியரின் முத்தான மூன்றாவது மகனாக வையகம் கண்டார் என்.எஸ். கிருஷ்ணன்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரால் ‘கிட்டன்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த என்.எஸ்.கிருஷ்ணன் தனது அளப்பரிய நடிப்பு திறத்தால் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தாலும் கேட்போரை சுண்டியிழுக்கும் காந்த சக்திவாய்ந்த நகைச்சுவை பேச்சாற்றலால் மக்கள் அனைவரையும் மதிமயங்கச் செய்ததாலும் 1947 இல் சென்னை திருவல்லிக்கேணியில் அன்றைய சட்டமன்ற சபாநாயகர் சிவசண்முகம் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார் என்.எஸ். கிருஷ்ணனுக்கு கலைவாணர் என்ற சிறப்புப்பெயரை வழங்கி கௌரவித்தார்.
தனது பேச்சும் நடிப்பும் மட்டுமல்ல அவரை இந்த அளவிற்குக் குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்க வைத்தவை. அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னின்ற சில முதன்மை குணாதிசையங்களும் உண்டு.
தமிழ் சினிமா உலகில் தன்னை நாடி வந்தவர்களுக்கு வாரிவாரி வழங்கிய வள்ளல் தன்மை. நாடக மேடைகளிலும் திரையுலகிலும் சீர்த்திருத்தக் கருத்துகளைப் பேசிய முதல் தமிழ் நடிகர். தமிழ் திரையுலகில் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் விதத்தில் நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றிய முதல் நகைச்சுவை நடிகர். நகைச்சுவை நடிகரோடு தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் முதல் முதலில் பெற்றவர். தமிழ் சினிமாவில் காமெடி ஜோடி முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர். அறிவியல் அற்புதக் கருத்துகளைத் திரைப்படங்களில் புகுத்தி மக்களின் அறியாமை இருளை அகற்றிய பெருமைப் பெற்றவர்.
படிப்போரையும் கேட்போரையும் அதிசயிக்க வைக்கும் இந்தக் குணாதிசயங்களின் சொந்தக்காரர் பிறந்ததொன்றும் மாடமாளிகையில் அல்ல. கோடீஸ்வரக் குடும்பத்திலும் அல்ல. சாதாரணக் குடும்பம். வறுமைத் தாண்டவமாடிக் கொண்டிருந்தக் குடும்பம். அப்படியென்றால், எப்படிப் பள்ளிக் கல்லூரிகளில் சென்று படித்துப் பட்டங்களையும் பதவிகளையும் அடைய முடியும்? எனவே, கிட்டனின் படிப்பு நான்காம் வருப்புக்கு மேல் கிட்டாமல் போய் எட்டாக்கனியானது.
பள்ளிப்படிப்பு எட்டாக்கனியாகிய தன் பிள்ளை இனி வெட்டியனாகி விடுவானோ என்ற அச்சம் தன் பெற்றோரை ஆட்கொண்டது. அந்த அச்சத்தை நீடிக்க விடவில்லை இந்தக் கிட்டன். சிறு வயதிலிருந்தே கிட்டனுக்கு நாடகங்கள் பார்ப்பதும், நாடகங்களில் நடிப்பதிலும் அப்படியொரு கொள்ளை ஆசை. அதனால், படிப்பை விட்டக் கிட்டன், அப்படியே தன் வீட்டருகில், கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி பெயரில் இருந்த நாடகக் கொட்டகை கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்தான்.
காசு கொடுத்து, டிக்கெட் எடுத்து நாடகம் பார்க்க முடியாமல் ஏங்கித் தவித்த கிட்டனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலைக்குப் போகாமல் ஓய்வாய் இருக்கும் நேரங்களில் தன் தோழர்களை அழைத்து தானே கதை எழுதி அவற்றை நாடகமாகத் தன் வீட்டுத் திண்ணையிலையே நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டான் கிட்டன்.
கிட்டனுக்குள்ளே கிளர்ந்தெழுந்த நாடக மோகமும், தாகமும் பின்னாளில் அன்று தமிழகத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்த டி.கே.எஸ். நாடகக்குழுவின் பிரதான நகைச்சுவை நடிகராக்கியது.
நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்த அவர், அங்கு ஒரு நடிகராக மட்டும் இருக்கவில்லை. பாடல்களைப் பாடுவது மிருதங்கம் வாசிப்பது, ஆர்மோனியம் இசைப்பது, பரதநாட்டியத்துக்கான சொற்கட்டுகளைக் கூறுவது, ஓவியம் தீட்டுவது., ஆடை அலங்காரம் செய்வது என சட்டென பல்துறை வித்தகரானார் கிட்டன். இதனால், வேறு பல நாடகக் கம்பெனிகளும் கிட்டனைத் தேடி வந்து தட்டிச் செல்ல முயற்சித்தன. காலத்தின் கோலத்திற்கேற்ப கிட்டன் தன்னை நாடி தேடி வந்த பல நாடகக் கம்பெனிகளிலும் நடித்து பிரபலமாகிவிட்டார். அதன் விளைவு அவரை உள்ளூரிலும் உள்நாட்டிலும் மட்டுமல்ல நடிகராக்கியது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நாடகம் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அங்கெல்லாம் தனக்கென நடிப்பில் ஒரு முத்திரையைப் பதித்து வெற்றிகொடி நாட்டினார்.
இவற்றையெல்லாம் கண்ணுற்ற கிருஷ்ணனின் நண்பர்கள், அவரின் நடிப்புத்திறனைப் பாராட்டி ஒரு விழா எடுத்தனர். அந்த விழாவில், அப்போது பெயரும் புகழும் பெற்று விளங்கிய கோட்டார் சதாவதானி செய்குத்தம்பி பாவலர், என்.எஸ், கிருஷ்ணனைப் பாராட்டித் தங்கப்பதக்கம் வழங்கினார். அப்போது, அவர் “நம் நாஞ்சில்நாட்டு இளம்சிங்கம் கிருஷ்னன் வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப்போகிறான். அவனுடைய புகழால் வருங்காலத்தில் நம் நாஞ்சில்நாடு மட்டுமல்லாது, தமிழ்நாடே பெருமையடையப் போகிறது: என வாழ்த்தினார். அன்றைய, அந்தத் தீர்க்கத்தரிசனமான வாழ்த்து இன்றும் கலைவாணரின் கீர்த்திக்கு மணிமகுடமாக விளங்குகிறது.
அறிவியல் வளர்ச்சியும் கால மாற்றமும் நாடகத்துறையை பின்னுக்குத் தள்ளிவிட்டு சினிமாத்துறையை முன்னிறுத்தத் தொடங்கியது. அத்துறையிலும் கிருஷ்னன் முன்னணியில் இருந்தார்.
நாடகத்துறையில் அவருக்கிருந்த பழுத்த அனுபவம் சினிமாத்துறையில் சுலபமாக வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தது. சினிமாத்துறையில் அவர் வெறும் ஒரு நடிகராக மட்டும் தொடரவில்லை. படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்து விட்டார். இதனால் 1939 இல் அசோகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாகப் பட நிறுவனம் ஒன்றை கிருஷ்ணன் ஆரம்பித்தார். அதன் மூலம் அன்று பிரபலமான பல திரைப்படங்களைத் தயாரித்து திரையிட்டு வெற்றிவாகைச் சூடினார்.
நடிப்பு திறனில் மட்டும்தான் என்,எஸ்.கே இமயத்தை எட்டிவிட்டார் என எண்ணிவிட்டால் அது தவறாகி விடும். நகைச்சுவைப் பேச்சிலும் அவர் தன்னிகரின்றி விளங்கினார் என்பதற்கு எண்ணிலாச் சான்றுகள் உள்ளன.
எழுத்தாளர்கள் சேர்ந்து நடத்திய மாநாடு ஒன்றில் கலைவாணரான ‘நாவல்லாளரை’ அழைத்துப் பேச வைத்தனர். விட்டு வைத்தாரா கிட்டன். எழுத்தாளர்களை எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா? தனது நா வல்லமையை “எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை’ யைத் தொட்டு எழுதிகிறார்கள் தெரியுமா? சிலர் பெரு ‘மை’ யில் எழுதுகிறார்கள். வேறுசிலர் பொறா ‘மை’ யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெரு ‘மை’ யைத் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழ ‘மை’ யிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள் மடமை, கயமை. பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய ‘மை’ கள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும் எனப் பேசினார். இதனால் எழுத்தாளர்கள் கிருஷ்ணனை அழைத்ததுப் பெருமை என எண்ணி மகிழ்ந்தனர்.
இது போலவே ஒரு முறை கலைவாணரைப் பெண்கள் கூடி நடத்திய கூட்டத்திற்கு அழைத்திருந்தனர். அக்கூட்டத்திற்கு அவரும் மனைவி மதுரமும் சேர்ந்து சென்றிருந்தனர். அங்கே அவர் பேசத் தொடங்கினார் “சகோதரிகளே! தாய்மார்களே! நீங்கள் எல்லோருமே பூ வச்சிருக்கீங்க, சிலபேரு ரோஜாப்பூ வச்சிருக்கீங்க, சிலர் மல்லிகை, முல்லை, கனகாம்பரம் என்று பலவகையான பூக்களை வச்சிருக்கீங்க . அதனாலேயே பெண்களுக்கு பூவையர் என்று பெயர் இந்தப் பூக்கள் எல்லாம் இன்னிங்கு வைச்சா நாளைக்குத் தூக்கி எறிய வேண்டியப் பூக்கள். இதெல்லாம் மலரும் பூக்கள், மலர்ந்த மறு நாளே வாடும். வாடாமல் வளரும் பூவே சிறந்த பூ. அந்தச் சிறந்த பூ என்ன பூவென்னு சொல்லுங்கப் பார்க்கலாம்” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களைப் பார்த்துக் கேட்டார்.
பலரும் விழித்தனர். கேட்பவர் நகைச்சுவை மன்னர் என்பதால் ஒரு பெண் “சிரிப்பு” என்றார், கலைவாணர் புன்முறுவல் பூத்தார். தான் சரியான விடை கூறிவிட்டதாக அந்தப் பெண்ணும் சிரித்தார். கூட்டத்தினரும் சிரித்தனர்.
அடுத்து, கலைவாணர், “பாத்தீர்களா! இதுவும் ஓரளவிற்கு வளரும் பூதான். ஆனால், தொடர்ந்து வளராது. இதோ பேச ஆரம்பிச்சதும் நின்னிருச்சு, நிக்காம தடைபடாமல், வளந்துகிட்டேயிருக்கிற பூ “சேமிப்பூ”தான்.
ஒரளவு நீங்க சேமிப்பு செய்து விட்டு அப்படியே விட்டுவிட்டால் கூட வட்டியின் மூலம் அது வளரும். ஆகையால், சேமிப்புதான் சிறப்பூ, பெண்களாகிய நீங்கள் சேமிக்கத் தொடங்கணுமுங்கிறதை வற்புறுத்தத்தான் இந்தக் கூட்டம். ஆகவே, சேமிப்பே சிறந்த பூ” என்று கூறி முடித்தார்.
இப்படி, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறிந்து, உணர்ந்து அதற்கு ஏற்ப சமயோஜிதமாய் பேசி, கேட்போரை ஒரு சில நிமிடம் மெய் மறக்கச் செய்யும் வல்லமை இந்த கிருஷ்ணனைத் தவிர வேறு எந்த கிருஷ்ணர்களுக்கு வரும் என்பது இன்றளவும் கேள்விக் குறியே. இதனால்தான்,
கலைவாணரின் இத்தனை அருங்குணங்களையும் நன்குணர்ந்த அறிஞர் வ.ரா-, கலைவாணரை பற்றி குறிப்பிடும் போது
“தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் மகான் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தை சில நிமிடங்களுக்கேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொதுநன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை” என்கிறார். இது முழுக்க முழுக்க உண்மையானக் கருத்தே ஆகும்.
இப்படி நடிப்பு, பேச்சு, பாட்டு எனப் பன்முக மூச்சோடு வாழ்ந்த கலைவாணரின் பேச்சும் மூச்சும் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதியோடு முற்றுப்பெற்றது.
இப்படிப்பட்ட கலைவாணரை இதுவரை முந்திச் செல்லவோ அல்லது பின்னுக்குத் தள்ளவோ எவரும் பிறக்கவில்லை என்பதுதான் விந்தை. அதுவே உண்மை.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)


Sunday, 24 November 2019

மாற்றங்கள் இயல்பாக நடக்கட்டும்!

மாற்றங்கள் இயல்பாக நடக்கட்டும்!
 November 17, 2019 12:30:24 pm(IEtamil Article)
முனைவர் கமல. செல்வராஜ்
சாந்த சொரூபன், சபரிகிரிவாசன், கானகவாசன், கலியுக வரதன், அன்னதானப் பிரபு, ஏழைகளுக்கு ஈசன், எங்கும் நிறைந்த பரம்பொருள், ஏகாந்தவாசன் இப்படி எத்தனை எத்தனையோ பெயர்களுக்குச் சொந்தகாரன் சபரிமலை ஐயப்பன்.
இந்தப் பெயர்களெல்லாம் வெறும் உதட்டளவில் யாரோ ஒரு சிலரால் உச்சரிக்கப்படுபவை அல்ல, மாறாக கோடானுகோடி பக்தர்களின் உள்ளத்தின் அடிநாளத்திலிருந்து சரணகோஷமாய் எழும் பக்தி பரவசத்தின் வெளிப்பாடு.
அவலும் பொரியும்… நெய்யும் கதளிப்பழமும்… இருமுடிக் கட்டில் தாங்கி, தலையில் சுமந்து… பெரும் நதியும், அடர்ந்த காடும்… வானுயர்ந்த மலையும் கடந்து சாமியே… ஐயப்போ… சாமி சரணம்… ஐயப்ப சரணம்… என்னும் சரண கோஷத்தோடு செல்லும் ஐயப்பப் பக்தர்களுக்காக வனத்திலுள்ள கொடிய விலங்குகளாம் புலியும் கரடியும், சிங்கமும் யானையும் கூட வழிமாறிச் செல்லும் அற்புதக் காட்சிதான் அந்த சாந்த சொரூபனின் பேரருளுக்குச் சாட்சி.
வானமும் பூமியும் எப்படி அன்று முதல் இன்று வரை மாற்றமும், சந்தேகமும் இன்றி இயங்குகிறதோ அதுபோல்தான் சபரிமலை என்றால் ஆண்களும், பருவமடையா சிறுமிகளும், வயோதிக பெண்களும் செல்லும் புனித இடம் என்பது நிரந்தரமாக இருந்தது.
காலம் கலிகாலம்… அதனால்தான் ஐயப்பனுக்கு கலியுகவரதன்… என்றொரு பெயரும் வந்ததோ என்று இப்பொழுதுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏன்றால் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்” என ஊருக்குள் கூறும் பழமொழியைப் போன்று, கடந்த ஆண்டு சபரிமலையில் ஆண் பெண் பேதமின்றி யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதுவரை சாந்தமாய் இருந்த சாந்த சொரூபனின் சன்னிதி, தீப்பிளம்பு போல் போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ், ராணுவம், பக்தர்கள் கைது, ஜெயில், தண்டனை என களேபரமாக மாறியது. பயபக்தியோடு ஐயனைத் தரிசிக்க வந்து கொண்டிருந்த பக்தர்கள் பயத்தில் உறைந்து போனார்கள். அதனால் வழக்கமாக வரும் பக்தர்களில் பாதிக்கும் அதிகமானோர் ஐயனைத் தரிசிக்காமல் வேதனையோடு வீட்டிற்குள்ளே முடங்கியும் போனார்கள். எப்படியும் அத்தனைக் களோபரக் காட்சிகளையும் தாங்கிக் கொண்டு கடந்த ஆண்டு கடந்து விட்டது.
இந்த ஆண்டு இன்று(நவ.17) முதல் மீண்டும் சபரிமலை சீசனுக்காக நடை திறக்க உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ஆன்லைன் புக்கிங் மூலம் இந்த ஆண்டும் சில அமைப்புகள் சார்பில் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஐயனின் அருளால் இந்த ஆண்டு, கேரளா மாநில அரசின் நடைமுறையில் ஒரு எதிர்பாராத மாற்றம் நேர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே அமல்படுத்தியே தீருவோம் என அடம் பிடித்து சுயவிளம்பரத்திற்காகச் சபரிமலைக்கு வந்த பெண்களுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுத்த கேரள அரசு, இந்த ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு வரவேண்டாம், அவர்களுக்குப் எவ்வித தனிப்பட்டப் பாதுகாப்பும் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. இது ஐயப்ப பக்தர்களிடையே பேரானந்தத்தை ஏற்படுத்தி, பெருமூச்சுவிட செய்துள்ளது.
எனக்கு சுய அறிவு வந்தது முதல், தந்தையின் கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு சபரிமலைக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்றுவருபவன் நான். என்னிடத்தில் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கலாமா? வேண்டாமா? எனக் கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வேன் அனுமதிக்கலாம் என்று. ஆனால் அதற்கான வழிமுறை மட்டும் இதுவல்ல என உரக்கச் சொல்வேன்.
எனென்றால் எனது சிறுவயது முதல் தற்போது வரை சபரிமலைக்குச் சென்று வருவதிலிருந்து, எத்தனேயோ நடைமுறை மாற்றங்கள் சபரிமலைக்குள் வந்துள்ளது. அதில் முதல் மாற்றம் முன்பெல்லாம் சபரிமலை சீசனுக்கு அதாவது நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் மகரஜோதி வரை மட்டும்தான் சபரிமலை நடை திறக்கப்படும். அதன் பிறகு அடுத்த ஆண்டு சீசனுக்குத்தான் நடைதிறக்கப்படும். இந்த நடைமுறை மிக உறுதியாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சீசனுக்கு பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் நாளிலிருந்து ஒரு வாரகாலம் வரை பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி முன்பெல்லாம் சபரிமலைக்கு மலையேறத் தொடங்கும் பகுதியான பம்பையில் இருக்கும் கணபதி கோயிலில் கூட பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் தற்போது பம்பை வரை எந்த வயது பெண்களானாலும் செல்வதற்கு அனுமதி உண்டு. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் குறிப்பிடலாம்.
இந்த மாற்றங்கள் எதுவும், எவரும் நீதிமன்றத்தில் சென்று வழக்குத் தொடுத்து வாதாடிப் பெற்றவையல்ல. எல்லாம் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பாகவே நிகழ்ந்தவை. அதுபோலவே சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு எவரும் வழக்குத் தொடுக்க தேவை இல்லை. அது அந்தந்த காலத்திற்கு ஏற்ப இயல்பாகவே நடந்தேறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் எனக்கில்லை.
அதுவரை பெண்களின் சகவாசமே வேண்டாம் என வனவாசம் செய்யும் அந்த சாந்த சொரூபனின் சன்னதி சாந்தமாக இருக்கட்டும். நாட்டின் நாலா திசையிலிருந்தும் வரும் அவரின் கோடானுகோடி பக்தர்கள் சாந்தியோடும், சமாதானத்தோடும் அந்த அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனின் அருளைப் பெற்று செல்லட்டும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கல்வியாளர்- பட்டிமன்ற பேச்சாளர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

Saturday, 16 November 2019

வள்ளுவர் கூறும் இல்லற உளவியல்

வள்ளுவர் கூறும் இல்லற உளவியல்


November 07, 2019 05:49:54 pm (ietamil E Journal)

இவ்வையகத்தில் கிடைப்பதற்கரியப் பெரும் பேற்றினைப் பெற்றவர்கள் மனித குலத்தினர். சுயமாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைச் செயல்படுத்தவும் இவர்களால் மட்டுமே இயலும். பேச்சும் எழுத்தும் இவர்களுக்கேச் சொந்தம். சிரிப்பும் உணர்வும் இவர்களின் வரப்பிரசாதம்.
மனிதன் தன் உள்ளத்திற்குள் எழும் எண்ண அலைகளை வெளிக் கொணர்வதற்கு உதவும் ஒரு மிகப் பெரிய ஆயுதமே பேச்சும் எழுத்தும் ஆகும். இவற்றின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்வதுதான் இலக்கியமாகும்.
இவ்விலக்கியங்களுள் மனித வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் அடங்கிக் கிடக்கும். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதின் வாயிலாக மனித வாழ்க்கையை மாண்புடையதாக ஆக்கிக் கொள்ள இயலும்.

இலக்கியத்தைப் படைக்கும் ஒரு படைப்பாளி, அந்த இலக்கியத்தைப் படிக்கும் மக்களின் உள்ளோட்டத்தைப் புரிந்து கொண்டுப் படைத்தால், அவ்விலக்கியம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். அதோடு இவ்வையகம் உள்ளளவும் நிலைபெற்றும் நிற்கும்.
அதுபோலவே இலக்கியங்களைப் படிக்கும் வாசகர்களும் அவ்விலக்கியத்தின் வாயிலாக, அப்படைப்பாளி வாசகர்களுக்கு எதை உணர்த்த விளைகிறார் என்பதை நன்குணர்த்தல் வேண்டும். இவ்விரு கூறுகளும் செவ்வனவே செயல்பட்டால் மட்டுமே, ஓர் இலக்கியம் முழுமையாக வெற்றிப் பெறவும், மக்களுக்குப் பயன்படவும் செய்யும்.
இவ்வண்ணம் மக்களின் உளவியலை உணர்ந்து கொண்டுப் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்கள், அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பது கண்கூடு.
உளவியல் என்பது “மனிதனின் புறச்செயல்களை உற்று நோக்கி, முறையாக ஆய்ந்து, அதன் மூலம், அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்வு கொண்டுள்ளன என்பதை தெளிவு படுத்துவதே ஆகும்”. என்பது உளவியலார் கருத்து. இந்தக் கருத்தியல் கோட்பாட்டை இலக்கியத்தோடுப் பொருத்திப் பார்க்கும் போது தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் எவ்வளவு உளவியல் வல்லுநனர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இந்தப் புலப்பாட்டை வள்ளுவத்தின் புலவி நுணுக்கத்திலிருந்து தொடங்குவதே பொருத்தமாகும்.
ஏனென்றால், இவ்வதிகாரம் முழுவதையும் பொய்யா மொழியார் உளவியல் அடிப்படையில் அலசியுள்ளார்.
ஓர் அருமையானக் குடும்பம், கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது கணவனுக்கு இயல்பாகத் தும்மல் வந்தது… என்ன செய்வது அவன் தும்மியும் விட்டான்…!
அவ்வளவுதான் அருமை மனைவிக்கு ஆவேசம் வந்தது. அவள், அவனைப் பார்த்து, “நான் இங்கிருக்க உங்களை வேறு யார் நினைத்ததால் தும்மினீர்?” என்றாள். அப்படி வினவியதோடு மட்டும் நின்று விட்டாளா? இல்லை, அவனை விட்டு விலகியும் சென்றுவிட்டாள். அதோடும் நின்று விட்டாளா? இல்லை அழுதழது, புலம்பி புலம்பி ஒருவழியாக்கிவிட்டாள். இதோ கேளுங்கள் வள்ளுவர் கூற்றை.
“வழத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.”
பெரும் பாடுபட்டு ஒரு வழியாக அவளிடம் சமரசம் செய்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டு அப்பாடா தப்பித்தோம், பிழைத்தோம் என்றிருக்கும் போது, மீண்டும் அதே “தும்மல்” வந்து முட்டிவிட்டது அவனுக்கு.
அடா… ஆண்டவனே! இப்பொழுதுதானே ஒரு பூகம்பம் வந்து அடங்கி விட்டது. அதற்குள் மீண்டும் ஒரு சுனாமி வந்து விடுமோ என்றெண்ணி, தும்மலை வெளியே தெரியாமல், சத்தமில்லாமல் அடக்குவதற்கு முற்பட்டான்.
ஆஹா…! அப்படியே கொந்தளித்து விட்டாளே…! “நான் இங்கிருக்க உமக்கு வேண்டப்பட்டவர்கள் உம்மை உள்ளுவதை எனக்குத் தெரியாமல் இருக்கத் தும்மலை மறைக்கின்றீரோ” என்று அழுது புரண்டு அமர்களம் பண்ணி விட்டாளே…! இதனை,
“தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று.”
வள்ளுவனார் உளவியல் வல்லுநர் என்பதற்கு இதை விட வேறொரு சான்று பகர்தல் அவசியமோ?
உளவியல் என்பது இருவேறு மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நம் செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்வது. அதன் அடிப்படையில் மனைவியின் மனநிலையைப் புரிந்து கொண்ட கணவன் அவளின் மனநிலைக்கு ஏற்ப தன் செல்பாட்டை எப்படி மாற்றிக் கொள்கிறான் என்பதை வள்ளுவர் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இப்படி திருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை. இதன் மூலம் மனித குலத்திற்கு விளக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கும் உளவியற் கோட்பாடுகள் தொடரும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக : drkamalaru@gmail.com )





Monday, 28 October 2019

தர்மத்தின் இரகசியம் | SECRET OF DHARMA | KAMALA SELVARAJ SPEECH

பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும்.

பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும்.
(ietamil E Journal இல் 27-10-2019 பிரசுமானக் கட்டுரை)
Diwali 2019 Tamil Nadu tasmac target : பள்ளிப் பருவத்தில் பொங்கல், ஓணம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் எப்பொழுது வரும் என கைவிரலை மடக்கி மாதங்களையும், நாள்களையும் கணக்குக் கூட்டிக்கொண்டேயிருப்போம் நண்பர்களுடன். இந்தப் பண்டிகைகள் வரும்போது, நல்ல உணவும், நிறையப் பலகாரங்களும், புத்தாடையும் கிடைக்கும் என்பது எங்களுக்கெல்லாம் குஷியான விஷயம்தான்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எங்களைப் படுகுஷியாக்கும் விஷயங்கள் வேறு சில உண்டு. அவை ஓணத்திற்கு ஊஞ்சலாடுவது, பொங்கலுக்கு மாடுவிரட்டு, தீபாவளிக்குப் பட்டாசு வெடித்தல், கிறிஸ்மஸ்சுக்கு குடில் கட்டுதல் ஆகியனவாகும். இவையெல்லாம் எங்களுக்குப் பலவகைப் பலகாரங்களை விடவும், புத்தம் புதிய ஆடைகளை விடவும் பேரானந்தத்தைத் தருபவை. மட்டுமின்றி நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறுதலிப்பதும் இவையேயாகும்.
ஆனால் இவற்றையெல்லாம் ஒவ்வொரு காரணத்தைக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வருகின்றனர் நமது அரசாங்கமும் அதிகாரிகளும். அவற்றில் முன்னணியில் நிற்பது தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது. ஒவ்வொரு பண்டிகைக்கும் காலாகாலமாக ஒரு விளையாட்டு அல்லது ஒரு பொழுது போக்குக் கடைபிடிப்பது, அந்தந்த பண்டிகையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதற்காகும்.
அந்த வகையில் தீபாவளியென்றால் பட்டாசு வெடிப்பது என்பது மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, பட்டாசு வெடிப்பதினால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுவிளையும் என்பதை காரணம்காட்டி, பட்டாசு வெடிப்பதை தடுப்பதற்குப் பல்வேறு விதமான கெடுபிடிகளைச் செய்து வருகின்றனர். ஒரு தீபாவளிப் பண்டிகையை மட்டும் நம்பி, பட்டாசு உற்பத்தியில் சிவகாசி உள்ளிட்ட எத்தனையோ இடத்தில், எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இன்று நமது நாடுமுழுவதும் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஏற்பட்டிருக்கும் பெரும் தீங்கு என்பது, சுற்றுச்சூழல் மாசுபடுதலை எங்கோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு விவசாயி வளர்த்து வந்த, ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவைசிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டின் கொடூரத்தை நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.
இதைபோன்ற ஒரு கொடூரமான மாசுபடுதல் ஆண்டுக்கு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படப் போவதில்லை. அதனால் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.
அதே நேரம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணைத்துள்ளது. அதோடு குறைந்தது ரூ.700 கோடிக்கு விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் அரசு உள்ளது. அதனால் “சரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும். தேவையான அளவு ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். மது வாங்க வருபவர்களை சரக்கு இல்லை எனத் திருப்பி அனுப்பக் கூடாது. டாஸ்மாக் பணியாளர்கள் யவரும் விடுமுறை எடுக்கக் கூடாது” என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளான, மக்களுக்கு எவ்விதத் தீங்குகளையும் ஏற்படுத்தாத, அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும், பெரும் தடைகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, இத்தனை கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது?
அரசாங்கம் ஒரு விசயத்திற்கு இலக்கு நிர்ணைக்கிறது என்றால் அது ஏதேனும் ஒரு விதத்தில் மக்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும்? இத்தனை கோடிக்கு மது குடிப்பவர்களால், அந்த மகிழ்ச்சிகரமான நாளில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? இந்த குடிகாரர்களால் எத்தனை சாலை விபத்துகள்? எத்தனை சண்டை சச்சரவுகள்? எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பங்கள்? வீட்டில் ஆக்கி வைத்த உணவை நிம்மதியாக உண்ண விடாமல் அடித்து நொறுக்கும் கொடுமை, ஏற்றி வைத்த தீபத்தை எரிய விடாமல் தூக்கி எறியும் தீங்கு, தனது நிம்மதியையும் கெடுத்து, குடும்பத்தின் அமைதியையும் இழக்க வைக்கும் கொடூரம், இவையெல்லாம் அரங்கேறும் அலங்கோலமான நாளாக அல்லவா தீபாவளி திருநாள் மாறிவிடும்?
மேலும் படிக்க : ட்ரைக்லோசன் பயங்கரம் – கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை
இத்தனை கொடூரங்களையும், இந்த மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைக்கும் ஆட்சியாளர்கள் ஒரு நிமிடமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இப்படிப்பட்ட அநியாயங்களைப் பண்டிகைகளின் எந்தப் பண்பாட்டுக் கூறுக்குள் அடக்குவதற்கு முடியும்? இத்தனை அநீதிகளையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றும் போதைப் பழக்கத்தை இந்த மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமலாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர், தனது ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதனால் குறைந்த பட்சம் இப்படிப்பட்ட பண்டிகை நாள்களிலாவது இந்த டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். அதோடு குடிமகன்களின் குடும்பங்களில் தீபாவளி தீபம் எவ்விதத் தீங்குகளுமின்றி ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகள் இம்மண்ணின் அடையாளமாகும்.