Wednesday, 5 December 2018

நிஜம் சொல்லும் நினைவெல்லாம்...

நிஜம் சொல்லும் நினைவெல்லாம்...

அருமை சகோதரர் முனைவர் சு. மகேஷ்குமார் அவர்கள் ஒரு சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் வந்து ‘ஒரு நாவல் எழுதலாம் என நினைக்கிறேன்’ என்றார். நானும் ‘நல்ல விஷயம் அவசியம் எழுதுங்கள்’ என்றேன்.
அன்று, அத்துடன் முடிந்து போனது எங்கள் பேச்சும்… சந்திப்பும்… பின்னர் விரல் விட்டும் எண்ணும் நாள்களுக்குள் என்னிடம் வந்து ‘நாவலை எழுதி முடித்து விட்டேன் நீங்கள் இதற்கொரு வாழ்த்துரை எழுதித் தாருங்கள்’ எனக் கேட்டார்.
எனக்கு மிகுந்த ஆச்சரியாமாக இருந்தது. இவ்வளவு நாள்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடித்து விடமுடியுமா? அப்படியே நாவலின் தட்டச்சுப் பிரதியை வாங்கிப் படித்தேன். ஆஹா…என்ன அருமை… தனது வாழ்க்கையை அப்படியே, நினைவெல்லாம் என்னும் நாவலாக வடிவமைத்துள்ளார்.
படித்து முடித்தவுடன் என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்த வார்த்தைகளால் அந்நாவலுக்கு எழுதிய வாழ்த்துரை இதோ…
கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர். இனியப் பாடகர், அற்புதமான ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் எனப் பன்முகப் ஆளுமையுடன் அனைவருக்கும் அறிமுகமானவர் மார்த்தாண்டம் முனைவர் சு. மகேஷ் குமார் அவர்கள்.
நினைவெல்லாம் என்னும் இப் புதினம் மூலம் தனது ஆளுமையின் உச்சத்தை எட்டியுள்ளார் இவர்,
இரமேஷ் என்னும் ஒரேயொரு முதன்மைப் காதாப்பாத்திரத்தை மைப்படுத்தி, இவர் எழுதியுள்ள இப் புதினத்தை, நல்ல வாசகர்கள் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடலாம். ஆனால், அதில் கதையாக உரைக்கப்பட்டிருக்கும் நிஜங்களை ஏழு ஜென்மத்திற்கும் மறந்து விடமுடியாது.
தொல்காப்பியர் புனைந்திருக்கும் பெருங்கதையின் கூறுகளை வைத்துக் கொண்டு, இக்கதையை ஏதேனும் ஆய்வாளர்கள், ஆய்ந்து பார்த்தால், அவர்கள் தோற்றுப் போவது உறுதி.
நிலமும் நீரும் கடலும் மலையும் ஊரும் உலகும் இங்கே கற்பனையாக வருணிக்கப்படவில்லை. மாறாக மானிடக் குலத்தின் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கி மடிந்து கொண்டிருக்கும் இக்கலியுகக் காலத்தில், தந்தை - மகன் அன்பிற்கும், ஆசிரியர் – மாணவர் உறவிற்கும், ஒரு இலட்சியவாதி வாழ்க்கையில் ஜெயிப்பது நிச்சயம் என்பதற்கும் இலக்கணம் வகுத்திருக்கும் நிஜக்கதை.
கடந்த சில ஆண்டுகளாகக் கதாசிரியரோடு நேரடியாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகமாக அடியேனுக்கு வாய்த்துள்ளது. அதன் அடிப்படையில் அவரின் ஆளுமைகளை உற்று நோக்கும் போது, அவரின் அதே அற்புதமான குணாதிசையங்களை, இக்கதையின் முதன்மைப் கதாபாத்திரமான இரமேஷிடமும் காணமுடிகிறது.
அதனால் கதாசிரியர், அவரின் சுயக் கதையைத்தான் மையமாகக் கொண்டு, இப் புதினத்தை ஒரு சுயசரிதைக் கதையாகப் புனைந்துள்ளாரோ என்னும் ஐயப்பாடும் எழுகிறது. அவ்வாறென்றால், இக்கதை முழு வெற்றி பெற்றுள்ளது என்பதை ஐயமற இயம்பிட இயலும்.
கதாசிரியரின் இலக்கியப் பயணம், கவிதையில் தொடங்கி… கட்டுரையில் தொடர்ந்து… புதினம் வரை நீட்சிப் பெற்றிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
இவரின் இடைவிடாத முயற்சி, தொடர்ந்து நீடித்து, இதுபோல் நல்ல மனித நேயமிக்க பல்வேறு படைப்புகளை, வாசகர்களுக்கு படையலாக்கட்டும். அதற்கு நாமும் இணைந்தே ஆதரவு கரம் நீட்டுவோம்.
இந்நாவலை தமிழகத்தில் மிகவும் பிரபலமான காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நாவலின் விலை இரூபாய் 140/-
தொடர்புக்கு: முனைவர் சு. மகேஷ்குமார்
அழைக்க: 9443416772
0 times