Saturday, 30 June 2018

இணையத்தில் தேர்வு முடிவுகள்: பள்ளிகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஆபத்து.


இணையத்தில் தேர்வு முடிவுகள்: பள்ளிகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஆபத்து.

சமீபத்தில் கடந்த கல்வியாண்டிற்கான சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
முன்பெல்லாம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவும் தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட நாளில் வெளிவரும் எனத் தெரிந்து விட்டால், அவ்வளவுதான், அதன் பிறகு உறக்கவும் இருக்காது, பசியும் வராது. அவ்வளவு எதிர்பார்ப்போடு மாணவர்கள் காத்திருப்பார்கள்.
தேர்வு முடிவு வெளியிடும் தேதி அறிவித்து விட்டால், மறுநாள் செய்திதாள் எப்பொழுது வரும் என வழி மீது விழி வைத்துக் காத்திருப்பது, தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் கூடதான். பத்திரிகையில் தேர்வு முடிவு பார்ப்பதோடு மட்டும் நின்று விடாமல், தேர்வு முடிவு வெளிவரும் அன்று காலையிலையே, அவரவர் படித்தப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்து விடுவார்கள்.
தேர்வு முடிவை அறிந்த உடன் வெற்றி பெற்ற மாணவர்கள் இனிப்புகளை வாங்கி, பள்ளித் தலைமையாசிரியர் தொடங்கி, தங்களுக்குப் பாடம் கற்பித்த ஒவ்வோர் ஆசிரியர் மற்றும் உற்றார், உறவினர், சக மாணவர்கள் என அனைவருக்கும் வழங்கி, தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொள்வார்கள்.
ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு அவர்களுக்கு அருளாசி வழங்கி வாழ்த்துவார்கள். இது மாணவர்களுக்குப் பெரும் மனநிறைவைத் தருவதோடு இரட்டிப்பு மகிழ்சியையும் ஏற்படுத்தும்.
இந்த இனிப்பு வழங்கும் நிகழ்வு ஒரு நாளோடு முடிந்து போவதல்ல. குறைந்தது ஒரு வாரமாவது தங்கள் வீட்டில் வருவோர், போவோர் அனைவருக்கும் இனிப்பு பகருதல் தொடரும். ஒருவேளை தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் ஏதேனும் ஆசிரியர்கள் பள்ளியில் வராமல் இருந்தால் அவர்களின் வீடுதேடிச் சென்று இனிப்பு வழங்கி, அவர்களிடம் ஆசிபெற்றால் மட்டுமே மாணவர்கள் நிம்மதியடைவார்கள். இதற்கு மாணவர்களின் பெற்றோரும் முழு ஒத்துழைப்பு நல்குவார்கள்.
முன்பெல்லாம் தற்போதைய தேர்வு முடிவுகள் போல், தேர்வு எழுதுவோரில் பெரும்பாலானோர் வெற்றி பெறுவது என்பது கானல் நீராகத்தான் இருக்கும். அதிலும் முதல் வகுப்பில் வெற்றி பெறுவது என்பதும், தற்போது உள்ளது போல் சிலப் பாடங்களுக்கு முழு மதிப்பெண் பெறுவது என்பதும் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் அவர்களின் தனித் திறமையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட உயர் படிப்பிற்கு வழிகாட்டுவதை ஆசிரியர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களின் அறிவுரையை அப்படியே வேத வாக்காகக் கருதி அவ்வாறே தங்களின் எதிர்காலக் கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேறினார்கள்.
அதுபோலவே தேர்வில் தோல்வியுற்று சோர்ந்து போய், அடுத்து என்னச் செய்யவதுதென்றுத் தெரியாமல் திக்குமுக்காடியிருக்கும் மாணவர்களையும் மிகுந்த கருணை உள்ளத்தோடு அழைத்துப் பேசி, அவர்களுக்கு வேண்டிய அறிவுரை வழங்கி, ஆறுதல் படுத்துவதையும் தங்களின் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
ஆசிரியர்களின் தேற்றுதலும் ஆற்றுப்படுத்துதலும் தோல்வியுற்ற மாணவர்களுக்குப் பெரும் புண்ணிற்குக் கிடைத்த அருபெரும் மருந்தாகவே இருந்தது. இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தோல்வி பற்றியக் கவலையை நீக்கி, எதிர்கால வாழ்க்கைப் பற்றியப் பயத்தைப் போக்கி இயல்பான, மகிழ்வான வாழ்க்கைக்கு வழிகோலியது.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெறுவதென்பது அவ்வளவு சுலபமானக் காரியமல்ல. எனினும் தங்களிடம் படித்த மாணவர்களில் வெற்றி வெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல், இருவரையும் சமமாகக் கருதி அவரவருக்கு வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குவதில் அன்றைய ஆசிரியர்கள் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனர் என்றால் அது மிகையாகாது.
இன்றையச் சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுதி விட்டு, தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பு வெற்றி பெறுவோமா இல்லை தோல்வியுறுவோமா என்ற பயத்திலையே தற்கொலைச் செய்து கொள்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மதிப்பெண் குறைந்து விட்டால் அதற்காகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருசில மாணவர்கள் இவ்வாறானக் கொடிய முடிவுக்கு ஆளாக விட்டாலும், தங்களின் எதிர்காலம் இத்தோடு தொலைந்து விட்டது என்ற நினைப்பில் மன அழுத்தத்தால் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் தங்கள் படிப்பு பற்றிய அல்லது பிரச்னைகள் பற்றிய விஷயங்களை ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு இயலாமையே ஆகும்.
ஆனால் முன்பெல்லாம் ஆசிரியர்கள் அப்படி இருப்பதில்லை. “ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்” என்னும் கல்வியாளர்களின் கருத்துக்கு இணங்க, பெற்றோருக்கும் மேலாக மாணவர்களிடம், ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி வந்தனர் என்பது நிதர்சனமான உண்மை.
அறிவியல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியின் காரணமாக தற்போது, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்து ஒருசில நாள்களுக்குள்ளையே வெளியிடப்படுகின்றன. அப்படி வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் அனைத்தும் இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளியிடப்படுவதால், மாணவர்கள் பத்திரிகையைப் பார்த்தோ, பள்ளியில் சென்றோ, ஆசிரியர்களிடம் கேட்டோ தங்களின் தேர்வு முடிவையோ, மதிப்பெண்ணையோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.
அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அவர்களின் கைகளில் இருக்கும் செல்போன் மூலமே தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள், தேர்வு முடிவுகளை இணையத்தளம் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்ட பின்னர், வெற்றி பெற்றலோ, தோல்வியுற்றாலோ, அவர்கள் படித்தப் பள்ளியை நாடிச் செல்வதுமில்லை, கற்பித்த ஆசிரியர்களைத் தேடிச் செல்வதுமில்லை.
முன்புபோல் தேர்வு முடிகள் வந்த பிறகுப் பள்ளியின் பக்கமே மாணவர்கள் செல்வதில்லை. கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்குவதோ, அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதோ அடியோடு இல்லாமலாகிப் போயிற்று. தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தாங்கள் கற்பித்துக் கொடுத்த மாணவர்கள் இனிப்புடன் வருவார்கள், தங்களிடம் வாழ்த்து வாங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு சில உத்தமமான ஆசிரியர்கள் காத்திருப்பார்கள். அவர்களின் நிலை, அந்தோ பரிதாபம் “இலவு காத்தக் கிளியின்” கதையாகத்தான் மாறிவிடும்.
இப்படி தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்பு மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களைச் சந்திக்காமல் இருப்பதும், அவர்களிடமிருந்து வாழ்த்து பெறாமல் இருப்பதும் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே இருக்கும் உறவை வெகுவாகப் பாதிக்கிறது. மட்டுமின்றி முன்பு போல் மாணவர்களுக்குப் போதிய அறிவுரை வழங்கவோ, வழிகாட்டவோ ஆசிரியர்களால் இயலவில்லை.
ஒருவேளை சில மாணவர்கள், தேர்வில் தோற்றுப் போயிருக்கலாம் அல்லது அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதனால் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் உண்டாகலாம் அல்லது தீராத கவலையும் கௌவிக் கொள்ளலாம். அவற்றை ஆசிரியர்களிடம் அல்லது சரியான நபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். பெற்றோரும் ஒருவேளை தங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டச் சூழ்நிலையில் மாணவர்கள் தங்களின் மனக் குமுறல்களை ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியமானதாகும். அவ்வாறு மாணவர்கள் தங்களிடம் கூறும் பிரச்னைகளின் அடிப்படையில் அவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரையும் வழிகாட்டலும் வழங்க வேண்டியது இயல்பானது.
ஆனால் தற்போதைய இணையதள தேர்வு முடிவுகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சந்திக்க வாய்ப்பளிக்காத நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் மன அழுத்தமே பெரும்பாலான மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவுக்குக் கொண்டுச் செல்கிறது.
வளர்ந்து வரும் நவீன உலகில் அறிவியல் தொழில் நுட்ப வளர்சியும் இணையதளச் சேவையும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத விதத்தில் பின்னிப்பிணைந்துள்ளன. என்றாலும் இவற்றால் ஏற்படும் மனித உறவுகளின் இடைவெளியானது மிகவும் அபத்தமானச் சூழ்நிலைக்கு மனிதனை இட்டுச் செல்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.
(இக் கட்டுரை 24 - 06 - 2018 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)

Thursday, 21 June 2018

தூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை?

தூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளால் தினம் சாகிற குடும்பங்கள் எத்தனை?
தூத்துக்குடி துயரத்தின் வடுக்கள் இன்னும் நீங்கவில்லை. அரசியல், சமூக தளங்களில் தூத்துக்குடி நிகழ்வுகளின் தாக்கம் மறைய இன்னும் காலம் பிடிக்கும்! ஸ்டெர்லைட் ஆலையை முடுவதற்காக நடந்த நீண்ட நெடியப் போராட்டம் 13 பேரின் உயிரைப் பறித்த ரத்தக்கறையோடு முடிவுக்கு வந்துள்ளது. ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
13 உயிர்களைப் பறிகொடுத்த உறவுகளுக்கு என்றும் தீராத துக்கம்… உயிரிழந்த குடும்பத்திற்கு பல லட்சம் கொடுத்து சமாளித்ததாக ஆளும் அரசிற்கு நிம்மதி… மேலும் ஆலையை இழுத்து மூடியதால் அடுத்தத் தேர்தலிலும் தங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற இரட்டிப்பு நம்பிக்கை அரசிற்கு… ஆலைக்குச் சீல் வைத்ததை அறிந்தவுடன் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என போராட்டக்காரர்களுக்கு மகிழ்ச்சி!
மக்களை தூண்டிவிட்டு, அமைதியான போராட்டக்களத்தை ஆர்பரிக்க வைத்து இன்னுயிர்கள் போனால் என்ன? வெற்றி (?) கிடைத்து விட்டதாக இறுமாப்பில் அரசியல் கட்சிகள் சில! யார் உத்தரவிட்டார்களோ இல்லையோ நாம் சுட்டுவிட்டோம், செத்தவர்கள் செத்துவிட்டார்கள், இனி போராட்டமும் இல்லை- பாதுகாப்பும் வேண்டாம்… என்ற நிம்மதியில் போலீசார். இது தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் முடிவு.
ஆர்ப்பாட்டங்கள் அடங்கி விட்டன. ஆனால் எதிர் விளைவுகள் சுலபத்தில் அடங்கிவிடாது. ஸ்டெர்லைட்டை நம்பி நாடு முழுவதும் சிறியதும் பெரியதுமாக 800 தொழிற்சாலைகள் இயங்கின. இவற்றை நம்பி பணிபுரிந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர்!
இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவிகிதத்தை ஸ்டெர்லைட் ஈடு கட்டியிருக்கிறது. இனி தாமிர தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்ப வேண்டிய தேவை எழலாம். அதனால் ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பு, பொருளாதாரத்தை நிச்சயம் தாக்கும்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழல் பாதிப்பு உண்டு என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தால் பாதிப்பு இல்லையா? இந்தியாவில் அனல் மின் நிலையங்களே வேண்டாம் என முடிவெடுத்துவிட முடியுமா? இன்று நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் சுமார் 90 சதவிகித மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமாக கிடைப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது.
சரி போகட்டும்! நேரடியாக ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பயன் பெற்ற தொழிலாளர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு? “தண்ணீருக்குள் மீன் அழுதால் அதை யார் அறிவார்…? என்பது போல் அந்த ஆலையில் பணிபுரிந்த சுமார் 5000 (ஐயாயிரம்) குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கண்ணீரில் கரைந்து நடுத்தெருவில் நிற்கிறதே இவர்களின் கண்ணீருக்கு யார் தீர்வு காண்பார்? இவர்களின் மறுவாழ்விற்கு யார் துணை நிற்பார்? ஐயாயிரம் பேர் என்பது வெறும் ஐயாயிரம் தனிமனிதர்கள் அல்ல ஐயாயிரம் குடும்பங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஐயாயிரம் குடும்பங்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு நான்கு பேர் என்ற சராசரி விகிதாசாரத்தில் பார்த்தால்கூட இருபதாயிரம் பேருடைய வாழ்க்கை ஒரே நாளில் நடுவீதிக்கு வந்திருப்பது வேதனையிலும் வேதனை. இன்று முதல் இவர்களின் வாழ்வாதாரம் என்ன? இந்தக் குடும்பங்களிலிருந்து பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் படிப்பிற்கு என்ன உத்தரவாதம்? இவற்றையெல்லாம் யார் சிந்தித்துப் பார்த்தார்கள்?
மக்கள், போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த போராட்டத்தின் அனைத்து நன்மை தீமைகளையும் அதற்கான அதிகாரிகள் மற்றும் நவீன தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு அலசி ஆராய்ந்த பின்பு, அதன் அடிப்படையில் குறைகளைக் களைந்து, மக்களின் பாதுகாப்புக்கு எவ்வித குந்தகமும் விளையாத விதத்தில் உத்தரவாதம் கொடுத்து, அந்த ஆலையைத் தொடர்ந்து செயல்பட வழிவகைச் செய்வதுதான் ஓர் அறிவு சார்ந்த அரசின் தலையாயக் கடமை.
அதைத் தவிர்த்து மக்கள் எதற்காகவோ உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதற்காக, ஆளும் அரசு அவசரப்பட்டுத் தொழிற்சாலைகளை இழுத்து மூடுவதற்கு முன் வந்தால் அது எந்த வகையில் நியாயமானது? இப்படிப் போராட்டங்களுக்குப் பயந்து ஆலைகளை பூட்டுப்போடுவதற்குத் தொடங்கினால், எத்தனை ஆலைகளுக்குப் பூட்டுப் போடுவார்கள்?
மக்கள் போராட்டத்திற்கு பயந்து, தொழிற்சாலைக்குப் பூட்டுப் போட்ட இந்த அரசால் ஒரு சிறு தொழிற்சாலையையாவது தொடங்கி பத்து இளைஞர்களுக்காவது வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியுமா? அல்லது இவ்வாலையை மூடுவதற்கு பின்னணியிலிருந்து செயல்படும் அரசியல்வாதிகளால் தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி அதில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியுமா?
ஒரு வேளை மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் நல்லெண்ணம் கொண்ட அரசாக இந்த அரசு இருந்தால் ஏன் தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தினம் தினம் எத்தனையோ போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்தேறிக் கொண்டிருகிறதே அதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு ஏன் இன்னும் பூட்டுப் போடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு?
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஆளும் அரசே நடத்தும் டாஸ்மாக் சரக்கைக் குடித்து உடல்நலம் கெட்டு சின்னாபின்னமாகி தினம் தினம் எத்தனை பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குடும்பத் தலைவனை இழந்தும், இளம் வாலிப பிள்ளைகளை அநியாயமாக இழந்தும் நிற்கதியற்று அனாதைகளாக மாறியிருக்கிறார்கள் என்பதும் இந்த அரசிற்குத் தெரியாத ஒன்றா? அதன்பிறகும் ஏன் அவற்றை நாளுக்கு நாள் புதிது புதிதாக நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள்?
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பின்னணியிலிருந்தும் முன்னணியிலிருந்தும் மக்களை இயக்கிய அரசியல்வாதிகளால் ஏன் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஒருங்கிணைத்து அத்தனை டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு போராட்டம் நடத்தி அவற்றை மூடவைக்க முடியவில்லை?
மக்கள் வாழாதப் பகுதியில் இப்படிப்பட்டத் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டியதுதானே? என சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் ஒன்றைப் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவுதான் மக்கள் வாழாத காட்டிலோ, பாலைவனத்திலோ தொழிற்சாலைத் தொடங்கினாலும், அங்கு இந்த தொழிற்சாலையின் வளத்தைப் பயன்படுத்தி அப்பகுதிகளில், மக்கள் பல்வேறு சிறுசிறு வியாபாரங்களிலிருந்து, சிறு தொழில்கள் வரைத் தொடங்கி, அப்புறம் அங்கேயே குடியேறி பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையினாலே அவ்விடம் பெரும் நகரமாக மாறிய வரலாற்றைதானே நாடு முழுவதும் நாம் பார்க்க முடிகிறது. இதுதானே தூத்துக்குடியிலும் நடந்துள்ளது.
இதோடு இன்னொரு விவாதத்தையும் இதுபோன்ற அதிபுத்திசாலிகள் முன் வைக்கின்றனர். அது, இதுபோன்ற தொழிற்சாலைகளினால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் பரவுகிறது என்ற பீதியை பீத்துகின்றனர். அப்படியென்றால் ஆண்டாண்டு காலமாக அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் எத்தனைபேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? அப்படியென்றால் நாடுமுழுவதும் உள்ள புற்று நோய்க்கு இந்த ஓர் ஆலை தான் காரணமா? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தல்லவா பிதற்ற வேண்டும்.
எது எப்படியோ போராட்டம் முடிந்தது. ஆலையும் மூடியாகிவிட்டது. இனி அங்குப் பணியாற்றிய, குறைந்தப் பட்சம் நிரந்தரப் பணியாளர்களுக்காவது அரசு மாற்று நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும். ஒருவேளை அங்கு பணியாற்றியப் பணியாளர்கள் அரசு பணிக்குத் தகுதியற்றவர்களாக இருந்தால், அவர்களின் குடும்பத்திலுள்ள தகுதியான ஒருவருக்காவது வேலை வழங்க வேண்டும்.
வேலையிழந்துள்ளவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகள் பள்ளி கல்லூரிகளில் கல்வி கற்கிறார்கள் என்றால் அவர்களின் படிப்பு செலவு அனைத்தையும் அரசே ஏற்றெடுக்க வேண்டும். அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காவிட்டால், வேலையில் அமர்த்தும் வரை அவர்களின் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மட்டுமின்றி இந்த ஆலையை நிரந்தரமாக மூடாமல் அப்பகுதி மக்கள் அச்சப்படும் விதத்தில் அவ்வாலையில் இருக்கும் குறைகளைக் களைந்து மக்களின் ஐயப்பாட்டிற்கு போதிய உத்தரவாதமளித்து மீண்டும் அந்த ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு, அந்த ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளிக்க வேண்டும். அதுதான் தொழில் வளத்தை பேண விரும்பும் ஒரு அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
(இக்கட்டுரை 09-06-2018 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது.)

Show more reaction

Sunday, 3 June 2018

வன்முறை ஆபத்து.






இக்கட்டுரை 01-06-2018 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது .

வன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை?

ரஜினிகாந்தைப் போல, வன்முறை என்கிற ஒரு சமூக தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியம் நமது
அரசியல் கட்சிகளுக்கு ஏன் இல்லாமல் போனது?
ரஜினிகாந்த், தூத்துக்குடியில் பேசியிருப்பது சராசரி வாக்கு அரசியல் அல்ல! சமூகத்தில் புரையோடி வரும் வன்முறை புற்றுக்கு, வார்த்தைகளால் அறுவை சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார் என்றே அதை குறிப்பிடலாம்! வன்முறை என்கிற ஒரு சமூக தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியம் நமது அரசியல் கட்சிகளுக்கு ஏன் இல்லாமல் போனது?
சாதாரணமாக ஊர்புறங்களில் இயல்பாக ஒரு பழமொழியைப் பயன்படுத்துவார்கள்… ‘கோழியக் கொல்லப் பிடித்தாலும் … கியோ கியோ… வளர்க்கப் பிடித்தாலும் கியோ… கியோ… எனக் கரையும்’ என்பதுதான் அந்தப் பழமொழி. அதே நிலைதான் இன்று தமிழகத்திலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
சமீபக்காலமாக தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் அது நல்லதா இல்லை கெட்டதா என எதுவும் ஆராய்ந்துப் பார்க்காமல் போராட்டம் நடத்துவது என்பது விளையாட்டுப்பிள்ளைத் தனமாகிவிட்டது. மீத்தேன் திட்டத்திலிருந்து தொடங்கி… தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து… கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம் எதிர்ப்பு போராட்டம்… வரைப் போராட்டப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை யாரும் சிறிதளவுகூட எதிர்பார்க்காத விதத்தில் விபரீதமாக மாறியுள்ளது. போலீசாரின் துப்பாகிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் கொடூரச் செயல் என்றே எல்லோராலும் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் அதன் பின்னணியில் நடந்திருக்கும் செயல்களையும், தமிழகத்தில் வளர்ந்து வரும் நாசகாரத்தின் கோர முகத்தையும் எண்ணிப் பார்ப்பவர்களோ, அதற்காகக் குரல் கொடுப்பவர்களோ தமிழகத்தில் எவரும் இலர்.
இந்நிலையில்தான் தூத்துக்குடி போராட்டக் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறி, உதவித் தொகையும் வழங்கி விட்டு பத்திரிகையாளர்களின் மத்தியில் பேசியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் குரலானது, தமிழகத்து மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் ஈர்ப்பதாக ஒலித்துள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஓர் இளைஞனைப் பார்த்து ரஜினி ஆறுதல் கூறிய போது நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே. என அந்த இளைஞன் கூறிய உடனேயே “நான் யாரும் இல்லை. உங்களைப் போல் ஒரு சாதாரண மனிதன்தான். அதனால்தான் என்னை உங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் என்னிடம் இப்படி கேள்வி கேட்பதற்கு உங்களுக்குப் பயிற்சியளித்திருப்பவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும்’ என அந்த இளைஞனுக்குப் பதிலடி கொடுத்திருப்பதிலிருந்து, அவரின் தெளிவானச் சிந்தனையும், பேச்சும், எதையும் ஆய்ந்தறிந்து உற்று நோக்கும் தன்மையும் தெளிவாகப் புலப்படுகிறது.
இப்படி இந்த இளைஞனை ரஜினிகாந்திடம் கேள்வி கேட்பதற்குப் பயிற்சியளித்தவர்களால், ஏன் இந்த இளைஞனை கலவரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பயிற்சியளிக்க இயலவில்லை என்பது நடுநிலையாளர்களின் கேள்வி. மட்டுமல்ல ஒருவேளை அந்தப் பயிற்சியாளர்கள்தான் இந்த இளைஞனைக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு கருவியாக ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? என்பதும் இன்னொரு நியாயமானக் கேள்வி.
எனவே இப்படி கேள்விக் கேட்ட இளஞனை, அது அவனின் சாமர்த்தியம் என நினைத்து சும்மா விட்டுவிடக்கூடாது. போலீசார் அல்லது கலவரத்தை ஆய்வதற்காக அமைக்கப் பட்டிருக்கும் விசாரணைக் கமிஷன் இந்த இளைஞனை கரிசனையாகக் கருதி, இவனிடம் மிகவும் கருதலையோடு விசாரணை நடத்தி கலவரத்தின் உண்மை நிலையினை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
“தமிழகத்தில் விஷமிகளும், சமூக விரோதிகளும் அதிகரித்து விட்டார்கள் இவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்திற்கு தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த இரண்டாம்தர அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பது கேலிக்கூத்தானது.
ஏனென்றால் தங்களால் தைரியமாகக் கூறமுடியாத ஒரு கருத்தை இவரால் எப்படி கூற முடிந்தது என்ற ஆதங்கத்தில்தான் இவர்கள் இப்படி கூக்குரல் போடுகின்றனர். இதுவரை ஒரு போராட்டம் அல்லது கலவரம் என்றால் மக்கள் மத்தியில் அதற்குச் சாதகமாகப் பேசி, அவர்களின் அனுதாபத்தைப் பெற்று வந்த அரசியல் தலைவர்களுக்கு ரஜினியின் வெளிப்படையான, யதார்த்தமான கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இயலவில்லை. இதனால் மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்குக் கேள்விக்குறியாகி விடுமோ என்ற ஐயப்பாடு இவர்களைக் கவ்விக் கொண்டுள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்து முற்றிலும் உண்மையானது. தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் கலவரமானது மக்களால் உருவானதல்ல, சமூக விஷமிகளாலும், விரோதிகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது என்பதில் எள்ளளவிற்கும் சந்தேகமில்லை. இக்கலவரத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பங்கு உண்டு என்பது வெறும் வெட்டிப் பேச்சல்ல. அது நிதர்சனமான உண்மை. எனவே அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது முழுமையான, நியாயமான விசாரணைக்கு அடையாளமாகும்.
இனி தமிழகத்தில் இதுபோன்ற கலவரங்கள் நடந்தால் தமிழக அரசு இரும்பு கரம் கொண்டல்ல எவ்வித ஈவு இரக்கமுமின்றி எஃகு கரத்தால் தடுத்தாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தமிழகத்தை போலி அரசியல்வாதிகளிடமிருந்தும், இதயமே இல்லாத ஈன சமூக விரோதிகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்கு முடியும்.
“தமிழகத்தில் இப்படியே போராட்டங்கள் தொடர்ந்தால், இங்கு தொழிற்சாலைகள் தொடங்க எவரும் முன் வரமாட்டார்கள். இதனால் தமிழகம் தொழில்துறையில் பின்தங்கி, இங்குள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுவார்கள்” என ரஜினிகாந்த் எச்சரிக்கை விட்டிருப்பதை தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் மிக உன்னிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் மிக விரைவில் உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி இன்னொரு சுமேலியாவாக மாறிவிடும் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம். அப்போது இங்குள்ள மக்களைக் காப்பாற்ற எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் வரமாட்டார். அவர்கள் சுகவாசத்தலங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் மட்டும் நிராகாரமின்றி மரணித்துக் கொண்டிருப்பார்கள்.
ரஜினியின் இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். 98ம் ஆண்டு தென் மாவட்ட கலவரங்கள் குறித்து மறைந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல்பாண்டியன் கமிஷன் அறிக்கையில், ‘தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாததால், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கலவரக்காரர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியிருப்பதற்கும், போலீஸ் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதற்கும் ரஜினிகாந்த் மிகவும் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுவும் வரவேற்க வேண்டிய விஷயமாகும்.
சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இயற்கையாக மரணமடைந்த போதே அக்கட்சி தொண்டர்கள் சுமார் 150-க்கும் அதிகமான அரசு பேருந்துகளை சேதப்படுத்தியுள்ளார்கள் என்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம். இது தமிழகத்தைத் தவிர இந்த உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஒரு சம்பவம். இதற்கும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அத்தனை அரசியல் கட்சி தலைவர்களும் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடாமல் வாய்பொத்தி மௌனம் சாதிக்கின்றனர். இதன் இரகசியம் என்ன?
தமிழகத்தின் நிலமை இப்படியே கேட்பாரற்று போய்க்கொண்டிருந்தால் இங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்பதை எவரேனும் சிந்தித்துப் பார்ப்பதுண்டா? இல்லை மக்கள்தான் சுயமாக உணர்கின்றார்களா? சமீபத்தில் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நடந்த தீவிரமானப் போராட்டத்தின் பேது, நடிகர் சிம்பு எவரும் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். “கர்நாடக மக்கள் தமிழகத்திலிருந்து செல்லும் மக்களுக்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுபோல் தமிழக மக்களும் கர்நாடக மக்களுக்கு ஒரு குவளை தண்ணீரைக் கொடுத்து வரவேற்க வைக்க வேண்டும்’’ என்பதுதான் அவரது கருத்து.
இரு மாநில மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் விதமான இதுபோன்ற கருத்து அப்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இக்கருத்தை ஏற்று தமிழகத்திலிருந்து வானங்களில் சென்ற ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் கர்நாடாகாவில் இருந்த மக்கள் தண்ணீர் கொடுத்து வரவேற்றனர்.
அது போல்தான் ரஜினிகாந்த் தூத்துக்குடிப் பிரச்னையில் தனது நியமானக் கருத்தை மிகவும் தெளிவாக, தைரியமாக முன் வைத்துள்ளார். இக்கருத்துகள் அனைத்தும் இன்றையச் சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை. அதனால் மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு தூத்துக்குடியில் ரஜினிகாந்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
அரசியலுக்கு வரவேண்டுமா? இல்லை வேண்டாமா? என்று இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்த ரஜினிக்கு தூத்துக்குடி வரவேற்பு அரசியலுக்கு வாருங்கள் ஆதரவு தருகிறோம் என்று அழைக்கும் ஒரு பச்சைக் கொடி வரவேற்பாகவும் சிவப்பு கம்பள வரவேற்பாகவும் அமைந்துள்ளது என்றே கருதலாம்.