Tuesday, 30 January 2018

எழுத்தாளனும் எழுத்தும் முரண்படக் கூடாது: ஞாநியே சான்று

எழுத்தாளனும் எழுத்தும் முரண்படக் கூடாது: ஞாநியே சான்று
(இக்கட்டுரை 30-01-2018 அன்று ietamil E Journal இல் பிரசுரமானது



ஞாநியைப் பற்றி பேசும் முன்பு, என் சக நண்பர் ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த நண்பரும் நானும் ஒருதாயின் வயிற்றில் பிறவாத அண்ணன் தம்பிகள். இரண்டு பேருமே சமகாலத்தில் எழுத்திலும் பேச்சிலும் ஒன்று போல் சிந்திப்பவர்கள். பட்டிமன்றம்… வாழ்த்தரங்கம்… கவியரங்கம்… என எத்தனை எத்தனயோ மேடைகளை இரண்டு பேரும் பகிர்ந்திருக்கிறோம்.
வழக்கம் போல் அன்றும் ஒரு பட்டிமன்ற மேடை… பட்டிமன்றத்தலைப்பு அறிவியல் வளர்ச்சி சார்ந்ததாக இருந்தது. நானும் எனது நண்பரும் எதிரும் புதிருமாகப் பேசினோம். அறிவியல் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பேசிய அவர், மக்களின் மூடநம்பிக்கைப் பற்றி பிடிபிடியென ஒரு பிடிபிடித்து விட்டார். நானும், அவரது பேச்சைக் கேட்டு மூக்கில் விரல் விட்டு அப்படியே அமைதியாகிப் போனேன்.

அவரின் பேச்சின் சாராம்சம் இப்படியிருந்தது: “நமது மக்கள் எல்லோரும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போயுள்ளார்கள். லட்சக்கணக்கானப் பணத்தைச் செலவழித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு அதன் முன்பு மற்றவர்களின் கண்படாமல் இருப்பதற்கு ஒரு கள்ளிச் செடியைக் கட்டித் தொங்க விடுவார்கள். மட்டுமல்ல, அந்த வீட்டில் குடியேறிய பிறகு, அவர்களில் யாருக்காவது ஒரு சிறு நோய் வந்து விட்டால் உடனே, இது வீட்டின் வாஸ்து சாஸ்திரக் கோளாறு என்று அந்த வீட்டிலிருந்து வெளியேறவோ, வீட்டின் சிலப் பகுதிகளை இடித்து மாற்றியமைக்கவோ செய்து விடுவார்கள். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்”. இப்படி பல்வேறு விஷயங்களைத் தீப்பொறி் போல் முழங்கி ஏகப்பட்டக் கைத்தட்டலையும் பெற்றுவிட்டார்.
பட்டிமன்றம் முடிந்து, மேடையை விட்டு கீழிறங்கியதும் என்னிடம் வந்து, “இன்றைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்து, இன்று தங்கிவிட்டு நாளை காலையில் கிளம்பிப் போகலாம்” எனக் கட்டாயப்படுத்தினார். நானும் அவரது அன்புக்கு அடிமைப்பட்டு அப்படியே ஆகட்டும் என மறுபேச்சின்றிக் கூடவே, அவரது வீட்டிற்குச் சென்று விட்டேன்.
இதற்கு முன்பும் ஒன்றிரண்டு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்ததினால், அவரது வீடு மற்றும் வீட்டிலுள்ள சொந்தங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயம். அதனால் வீட்டில் சென்றதும் எனது கட்டாயத் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக அவரது அறையோடு இணைக்கப் பட்டிருந்த, அந்தக் கழிவறைக் கதவைத் திறந்தேன்.
அவ்வளவுதான்! உடனே அவர், “அண்ணே இப்ப நீங்க அங்க போகாதீங்க. கடந்த சில மாதங்களாக வீட்டில கொஞ்சம் பிரச்னையாகவே இருந்தது. அதனால ஒரு ஜோசியருட்டப் போய் விசாரிச்சேன். அப்ப அவரு சொன்னாரு, வீட்டிலக் கொஞ்சம் வாஸ்து பிரச்னை இருக்கு, அதனாலதான் இப்படி கஸ்டங்க வந்து சங்கடப் படுத்திட்டு இருக்கு. அது தீரணுமெண்ணா இந்த பாத்ரூம பயன்படுத்தாம இருக்கணும் அல்லது இத இடிச்சு தள்ளணுமுண்ணாரு. அதனால இப்ப இந்தப் பாத்ரூம பயன்படுத்தாம அடச்சே போட்டிருக்கேன்.” இப்படி மூச்சு விடாம பேசி முடிச்சிட்டாரு.
எனக்கோ அப்படியே மூச்சு நின்று விடும் போல இருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னால் முட நம்பிக்கைப் பற்றி வீர ஆவேசமாகப் பேசிய இந்த நாக்கு, இப்படி தனது வீட்டிற்குள் வாஸ்து… மண்ணாங்கட்டி… வார்த்தைகள் தடுமாறி… கண்டபடி திட்டத்தீர்க்க வேண்டும் போலவும், ஓங்கிக் கன்னத்தில் ஒரு அறை விடவா… என்றெல்லாம் மனதில் ஆவேசம் பொங்கியது. ஆனால்… என்ன செய்வது எல்லாவற்றையும் அடக்கிவிட்டு அமைதியானேன்.
இப்படித்தான் இன்றைய பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் எழுத்தும் ஒன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கையோ அதற்கு நேர் எதிர்மறையாக இருக்கும். தமிழில் ஒரு படைப்பாளி உருவாகிறார் என்றால் அவரது முதல் படைப்பு வரதட்சனைக்கு எதிராகவோ, சாதி சமயத்திற்கு எதிராகவோ இருக்கும். ஆனால் அவர்தான் பின்னாளில் அதிக வரதட்சணை வாங்குபவராகவும் சாதி சமயத்தில் வெறிபிடித்தவராகவும் மாறிவிடுவார்.
இந்நிலையில் தமிழில் விமர்சன இலக்கியத்தில் ஜாம்பவனாக திகழ்ந்த ஞாநி அவர்கள் சமீபத்தில் அனைத்திற்கும் முற்றுப் புள்ளியாகி விட்டார். போராட்ட உணர்வுடன், எதையும் எதிர்கொள்ளும் விதமான ஒரு துணிச்சல் மிக்க எழுத்தாளனின் அடையாளமாகவே அவரது எழுத்துகள் இருக்கும். உணர்ச்சியும் வேகமும் உந்து சக்தியும் மிக்க அவரது படைப்புகள், படிப்போரை பல மணிநேரம் சிந்திக்கத் தூண்டும். அதுபோல் விரைந்து செயலாற்றவும் துரத்தும்.
அப்படிப்பட்ட வித்தகனாகத் திகழ்ந்த அவர், தனது முற்றுப்புள்ளியான பூத உடலை முழுமையாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தானம் செய்திருந்தார். அவரின் அவாவிற்கிணங்க அவரின் பிள்ளைகளும் அப்படியே மருத்துவக் கல்லூரியில் அவரை தானமாக்கி அவருக்கு அழியா புகழுக்கு வழிகோலியுள்ளனர். ஞானியின் இந்த அரியச் செயலை நடிகர் கமலஹாசன் மிகவும் பாராட்டியிருந்தார். எனென்றால் “பாம்பறியும் பாம்பின் கால்” என்பதற்கிணங்க, அவரும் தனது மறைவுக்குப் பின்னால், உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக எழுதி வைத்துள்ளார்.
எனவே பேச்சாளர்களும் படைப்பாளர்களும் தங்கள் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்தும் முரண்பட்டு நிற்காமல் ஞானியைப் போல் நிஜ வாழ்க்கையிலும் ஞானமிக்கவர்களாக… தானமிக்கவர்களாக… நிஜமானவர்களாக… இருந்தால் வரும் தலைமுறையினரும் அவர்களின் நிழலைப் பின்பற்றி முன்மாதிரிகளாக மாறி வருவார்கள்.
(கட்டுரையாளர் டாக்டர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர்! கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! பேச: 9443559841)



Tuesday, 16 January 2018

பொங்கல் விடுமுறை


பொங்கல் 2018 : விடுமுறை கிடைத்தும் மாணவர்கள் துயரப்பட்டது ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை விடுமுறை வாரத்தின் கடைசி நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை கொண்டாடுவதற்கு அனைத்துப் பள்ளிக் கல்லூரி நிர்வாகங்களும் திட்டமிட்டிருந்தனர்.



முனைவர் கமல. செல்வராஜ்
ஒரு வாரத்திற்கு முன்பே வகுப்பாசிரியர் சொல்லி விட்டார் “இந்த முற நம்ம வகுப்புதான் ரெம்பச் சிறப்பாப் பொங்கல் விழாவ கொண்டாடணும், அதனால நீங்க எல்லாரும் நான் சொல்லிற மாதிரி ஒவ்வொருத்தரும் உங்க வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருளக் கொண்டு வரணும். சுரேஷ், பச்சரிசி…, கிறிஸ்டி, சர்க்கரை… அப்துல், கரும்பு…” என பட்டியலும் போட்டு முடித்தார்.
“எண்ணக்கி டீச்சர் பொங்கல் வைக்கிறது…” என மாணவர்களிடமிருந்து
ஒருமித்தக் குரல் எழும்ப “வரக்கூடிய சனிக்கிழம போகிப்பொங்கல், அதனால நாம வெள்ளிக்கிழமை பொங்கல் கொண்டாடலாம்” என ஆசிரியர் அறிவிக்க மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தின் உச்சத்திற்கேச் சென்று விட்டார்கள்.
நாளை வெள்ளிக்கிழமை டீச்சர் சொன்ன மாதிரி பொங்கல் விழாக் கொண்டாடுவதற்கு அனைத்து மாணவர்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டப் பொருள்களுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கரைபுரண்டோடும் உற்சாகத்துடனும் தயாராக இருந்தனர். அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிக நேரம் மாணவர்களிடையே நீடிக்கவில்லை.
ஏனென்றால் வியாழக்கிழமை மாலை அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் மிகவும் சோகம் கலந்த முகத்துடன் வகுப்பில் வந்து “நாள பள்ளி கல்லூரிகளுக்கு நம்ம அரசாங்கம் லீவு அறிவிச்சிருக்கு. அதனால நமக்குப் பொங்கல் கொண்டாடுவதற்கு முடியாம போயிட்டுது…” என அறிவிக்க, வாழ்க்கையில் விடுமுறை என்றாலே துள்ளிக் குதிக்கும் மாணவர்கள் அன்று ஏதோ சோகச் செய்தியை ஆசிரியர் அறிவித்தது போல் உணர்ந்து துயரத்தின் உச்சத்திற்கேச் சென்று விட்டனர்.
Pongal Celebration at school, Tamilnadu Government
முனைவர் கமல.செல்வராஜ்
இது தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து தொடங்கி, கன்னியாகுமரி வரை ஒவ்வொருப் பள்ளி மட்டுமல்லக் கல்லூரியிலும் நடந்த எதார்த்தமானச் சம்பவம். இப்படியொரு ஏமாற்றமான சூழ்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்படுவதற்குக் காரணம், தமிழக அரசு வழக்கத்திற்கு மாறாக பொங்கல் பண்டிகைத் தொடங்குவதற்கு முந்தின நாளான ஜனவரி 12-ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் திடீரென விடுமுறை அறிவித்ததாகும்.
பொங்கல் பண்டிகை விடுமுறை வாரத்தின் கடைசி நாளாக இருந்ததால் அதற்கு முந்தின நாள் வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அனைத்துப் பள்ளிக் கல்லூரி நிர்வாகங்களும் திட்டமிட்டிருந்தனர். மட்டுமன்றி பெரும்பாலானப் பள்ளிகளில், ஆண்டு விழாக்கள் நடத்துவதற்குகூடத் திட்டமிட்டு அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில் அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
அரசு இந்த அதிரடி விடுமுறை அறிவிப்பு வெளியிட்டதற்குப் பல்வேறு பின்னணிக் காரணிகள் இருந்துள்ளன. அவற்றில் முக்கியமானதாக அறியப் படுவது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்திலுள்ளப் அரசுப் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து பெரும்பாலும் ஸ்தம்பித்திருந்தது.
அதனால் பொதுமக்கள் கடுமையான அதிருப்தி அடைந்திருந்தனர். மட்டுமின்றி, பொங்கல் விடுமுறைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று உறவினர்களைச் சந்திப்பதற்கும் இயலாமல் தவித்திருந்தனர். பொதுமக்களின் இந்தச் சிரமத்தைப் போக்குவதற்காக, தமிழகத்திலுள்ளப் பள்ளி கல்லூரிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்கூட்டி விடுமுறை அளித்து விட்டு, தமிழகத்திலுள்ளத் தனியார் பள்ளி கல்லூரிகள் இயக்கும் வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்குவதற்குத் திட்டமிட்டு, அதற்கான முன் ஏற்பாடுகளும் நடந்துள்ளன. அதற்காகத்தான் இந்த அதிரடி விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அதிரடி விடுமுறையினால், பள்ளி கல்லூரிகளில் பாதிக்கப் பட்டது பொங்கல் விழா மட்டுமல்ல. ஜனவரி 12 ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். இந்நாள் தேசிய இளையோர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இத்தினத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பெரும்பாலானப் பள்ளி கல்லூரிகளில், பல்வேறு விதமான நிகழ்வுகளும் போட்டிகளும் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் பெரும்பாலான பள்ளிக் கல்லூரிகளில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவும், கருத்தரங்குகளும், போட்டிகளும் அறிவிக்கப் பட்டு அதற்கான ஆயத்தப்படுத்தல்களும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இந்த அதிரடி விடுமுறை அறிவிப்பு தகர்த்தெறிந்து விட்டது.
இது பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு பெரும் சிரமங்களையும் மாணவ மாணவியருக்கு மன உளச்சலையும் ஏற்படுத்தியிருக்கும். எனவே வரும் காலங்களில் இயற்கைக்கு மாறுபட்ட அதிரடி விடுமுறைகளை அரசு அறிவிக்கும் போது, அது சார்ந்து எழும் பிரச்னைகளையும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு அதிரடி விடுமுறை அறிவிப்பது அறிவுப் பூர்வமாக இருக்கும்.

(இக்கட்டுரை 13-01-2018 அன்று ie tamil E Journal இல் பிரசுரமானது)

புதுப் பொங்கல் சபதம்!

புதுப் பொங்கல் சபதம்!

(இக்கவிதை  13-01-2018 ie tamil E Journal இல் பிரசுரமானது.)

பொங்கல், தமிழர்களின் தனிப் பெரும் பண்டிகை! உழவர்களின் திருவிழா... உழைப்பின் திருவிழா இது! பொங்கல் விழா மேன்மையை சொல்லும் கவிதை இது!
கவிஞர் கமல.செல்வராஜ்
O
இப் புண்ணியப் பூமியில்
நித்தம் புலர்ந்தெழும்
செங்கதிரோனுக்கு
புத்தம் புது மண்பானையில்
வெண்பொங்கல்!
நெற்கதிரும் நற்கரும்பும்
மஞ்சளுடன் நவதானியமும்
ஐம்பூதங்களின் பரிசளிப்பு!
O
வீட்டிற்கு வெள்ளை
முற்றத்தில் மாக்கோலம்
வீதியில் தோரணம்
மாட்டுக்கு மரியாதை
புத்தாடையுடன் புன்சிரிப்பும்
பொங்கும் பொங்கலுக்கு
அடையாளம்!
O
மண்ணைப் பொன்னாக்கும்
உழவனுக்கு மரியாதை
வீறுகொண்டுத்
துள்ளிக் குதித்தோடும்
காளையை அடக்கிடும்
வீரருக்கும் மரியாதை
புல்லுக்கும் பூண்டிற்கும்
மரியாதை
இது
தை பிறந்ததால்
வந்த மரியாதை!
O
குடிசையும் மாடியும்
மகிழ்ந்து கொண்டாடும்
சமத்துவப் பொங்கல்
இதுவே
தமிழினத்தின்
தனித்துவப் பொங்கல்!
O
இனி
போகியோடு “ஒக்கிக்கும்”
விடை கொடுப்போம்
ஒருபோதும் இயற்கைக்கு
இடையூறு செய்யோமென
புதுப் பொங்கல் சபதமேற்போம்…!
(கவிஞர் கமல.செல்வராஜ், கல்வியியல் கல்லூரியின் முதல்வர். ஆய்வுப் பட்டம் பெற்ற முனைவர்! கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841. அணுக: drkamalaru@gmail.com)
r