Tuesday, 12 July 2016

எழுத்தறிவித்தவன் – நூல் ஆய்வுரை.

                               எழுத்தறிவித்தவன் – நூல் ஆய்வுரை.

     எழுத்தறிவித்தவர் இறைவன். எழுதுவதற்கென்றே பிறந்தவர் சகோதரர் சி. வின்சென்ட் அவர்கள். தொடர்ந்து இருமூன்று நூல்கள் முத்தாகத் தந்தவர்.

     இஃது ஏழாவது முத்து - எழுத்தறிவித்தவன்.
     இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம். அதில் வின்சென்ட் அவர்கள் ஒரு விசித்திரமானவர். உண்ண உணவும், அருந்த நீரும் இல்லையென்றாலும் இவருக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், காகிதமும் எழுதுகோலும் இல்லையென்றால் இவரது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் கூட நீடிக்குமா? என்பது அந்த இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
     பட்டமும் பதவியும் இவரை அண்டவே இல்லை. ஆனால், பட்டமும் பதவியும் உள்ளவர்கள் இவர் அருகில் அண்டவே முடியாது. எதையும் அறிய வேண்டும் என்றப் பரந்துபட்ட எண்ணமும் ஆய்ந்துணர வேண்டும் என்ற அவாவும் இவரது அறிவாற்றலுக்கு ஆணிவேர்கள்.
     வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது அறிவாளிகளும், தத்துவவித்தகர்களும், இலக்கியப் படைப்பாளிகளும் அவர்கள் வாழ்ந்த சமகாலத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவோ, அங்கீகரிக்கப் பட்டதாகவோ இல்லை.
     மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்நிலை, சில இறை தூதர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வாழ்ந்து முடிந்த பின்னர்தான் அவர்களின் மகத்துவம் இவ்வையகத்தில் மலர்ந்திருக்கிறது. அதன்பிறகுதான் அவர்கள் மரியாதைக்குரியவர்களாகவும் ஆராதனைக்குரியவர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.
     அதே நிலையில்தான் இன்று சகோதரர் வின்சென்ட் அவர்களும் உள்ளார். அவரை ஆதரிப்பாரும் இலர்; அவரது அறிவுத்திறனை அறிவாரும் இலர். என்றாலும் எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் காட்டாற்று வெள்ளம்போல் தன் உள்ளத்தில் எழும் எண்ண அலைகளை எழுதுகிறார்… எழுதுகிறார்… எழுதிக்கொண்டேயிருக்கிறார்… இன்று இவர் எவராலும் அறியப்படாமல் போனாலும் எழுத்துலகில், எழுத்தாளர் மத்தியில் இருவருக்கும் ஓர் இடம், இன்றல்லது நாளை அல்லது என்றோ ஒருநாள் காத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்போது இன்று தூற்றப்படுபவர்கள், நாளை போற்றப்படுவர் என்ற வரிசையில் இவரும் இடம் பெறுவார்.
     எழுத்தறிவித்தவர் என்ற இந்நூலில் எழுத்து என்றால் என்ன? புத்தகம் என்றால் என்ன? கல்வெட்டு எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் உருவான விதம், இன்றைய கல்வெட்டுகள், காகித அறிமுகம், செம்மொழித் தமிழ், ஆதி மனிதன் பேசிய மொழி என்னும் பல்வேறு தலைப்புகள் பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார்.
     இவை அனைத்தும் விவிலியம் கூறும் கருத்துகளின் அடிப்படையில் ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன. விவிலியத்தை அடியொற்றி எழுதியிருந்தாலும் அக்கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகத் திருக்குறள், நாலடியார்,  அவ்வையார் போன்ற இலக்கிய நூல்களும், தமிழ், ஆங்கிலம், மலையாள மொழி நூல்கள், தினசரி பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்துள்ள கருத்துகளையும் கையாண்டுள்ளார். நிறைவு பகுதியில் பொது அறிவு வினாவிடைத் தொகுப்பும் இணைத்துள்ளார்.
                இவர்,
                நித்தம் உழைத்து
                நித்திரையைத் தவிர்த்து
                அறுசுவையை வெறுத்து
                சத்தமின்றி எழுத்துலகில்
                சாதிக்கத் துடிக்கிறார்…!
                இவருக்கு இணைந்தே
                கரம் கொடுத்து
                தூக்கி நிறுத்துவோம் எழுத்துலகில்
                சோதரர்களே!
                தோளோடு தோள் கொடுப்போம்
                தோழர்களே!
                           
                நூல் பெறுவதற்கு:  சி. வின்சென்ட்
                                   ஒற்றால்விளை
                                   சிதறால் அஞ்சல் 629 151
                                   கன்னியாகுமரி மாவட்டம்.

                                   செல்: 9751519114