காலத்தை வெல்லும் கலப்பை.
சமகாலத்துத்
தேவைகள், பிரச்னைகள், சமூகப் பொருளாதார மாற்றங்கள், கலாச்சாரப் பண்பாட்டு பரிணாமம்
போன்றவைகளின் வெளிப்பாடுகளே நாவல் இலக்கியங்கள்.
சமகாலச் சம்பவங்களை
உள்வாங்கி அவற்றை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் படைத்தளிக்கும் வல்லமைப் படைத்தவர்களே
தலைசிறந்த படைப்பாளிகள்.
அவ்வகையில் சமீபத்தில்
வெளிவந்திருக்கும் என். சுவாமிநாதனின் “கலப்பை” என்னும் நாவல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சட்டப்படிப்பை
முடித்துவிட்டு, பத்திரிகைத்துறையில் நுழைந்து… பேச்சுக் கலையில் பிரபலமாகி… எழுத்துத்துறையில்
கால் பதித்து… புதிதனத்திற்குள் புதியவராய் புகுந்துள்ளார் இந்தச் சுவாமிநாதன்.
பார்ப்பவர்களிடம்
பண்பட்டப் பேச்சு… பழகுகிறவர்களிடம் நாகரிகமான நடைமுறை… பத்திரிகைத்துறையில் அவலங்களைச்
சுட்டிக்காட்டுவதில் அச்சமின்மை… எறும்பும் தோற்றுப்போகும் சுறுசுறுப்பு… எப்பொழுதும்
புன்னகைத் ததும்பும் இளம் முகம்… இவையே இவரது அடையாளங்கள்.
நாவல் என்றாலே
காதலும் சாதலும், அவலமும் அக்கிரமும், விரக்தியும் வெறுப்பும் அரசியலும் வரலாறும் என்பவை
மட்டுமே கருப்பொருளாய் அமைந்திருக்கும். இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டு, வேறு எவராலும்
சிந்தித்துப் பார்பதற்கே முடியாத அளவில், சமகாலத்திற்கு மிகவும் தேவையான இயற்கை விவசாயத்தைப்
பற்றி மிகவும் துணிச்சலுடன் நாவல் எழுதுவதற்கு ஒருவர் துணிந்திருக்கிறார் என்றால்,
உண்மையில் அவரோடு, இந்த நாடே கைகுலுக்கிக் கொள்ள
வேண்டும்.
இந்த நாடு இயற்கையோடு
இயைந்து வாழ்ந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, எங்கோ வெகுதூரத்தில் சென்று கொண்டிருக்கின்றது.
இயற்கைக்கு மாறான உணவுமுறை, விவசாயப் பொருள்களில் நச்சுத் தன்மை கலப்பு, விளைநிலங்களை
அழித்து வீட்டுத் தளங்களாக மாற்றுதல் எனக் காலத்தின் கோலங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில்
இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி இப்படியொரு நாவலைப் படைத்தளித்திருப்பது பாராட்டுக்குரியது.
பரமசிவம் என்றொரு இளம் கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்து, அவனை இயற்கை விவசாயத்தின்
மீது திடமான நாட்டம் கொள்ளச் செய்து, அவன் மூலமே கதையை நகத்திச் செல்லும் விதம் மிகவும்
அற்புதமாக உள்ளது.
ஆரம்பகாலத்தில்
பரமசிவத்தின் புதிய முயற்சிக்குத் தன் தந்தை சிவதாணுவிடமிருந்தோ, சுந்தரபுரம் ஊர்மக்களிடமிருந்தோ
எதிர்பர்த்த அளவிற்கு ஆதரவு இல்லாத நிலையை உருவாக்கி, பின்னர் படிப்படியாக தனது லட்சியத்தில்
நிலைத்து நின்று, முதலில் எதிர்த்து நின்ற அனைவரும் பின்னர், பரமசிவத்தின் பக்கம் சாய்ந்து
இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கதையை நிறைவு செய்திருப்பது, வாசகர்களுக்கு
இயற்கை விவசாயத்தின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுவே இந்நாவலின்
வெற்றிக்கு முதல் படியாகும்.
நாவலுக்கே உரித்தான
நில வருணனையிலிருந்து தொடங்கி உவமை, பழமொழி, நகைச்சுவை என, அனைத்துத் தன்மைகளையும் ஒருங்கே பெற்று, வட்டார
மொழிநடையின் வாசனையோடு விறுவிறுவென நாவல் நகர்ந்து செல்லும் விதம் வாசகர்களுக்கு விருந்தளிப்பதாக
உள்ளது.
“தை பிறந்தால்
வழி பிறக்கும்”, “போக்கற்றவன் போலீஸ்காரன்” போன்ற பழமொழிகளுக்கு நாவலாசிரியர் அளித்திருக்கு
விளக்கங்கள் வாசகர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மொத்தத்தில்
இந்நாவல் நவீன கால மக்களின் வாழ்க்கைப் பின்னணிக்கு மிகவும் உகந்ததாகவும் எதிர்கால
வாழ்வாதாரத்திற்கு ஏற்றமளிப்பதாகவும் மின்னித் துலங்குகிறது. எனவே பல்கலைக் கழகங்களின்
பாடதிட்டத்தில் இந்நாவலை பாடமாக்கினால் விவசாயத்தின் வாசனையே இல்லாமல் வளர்ந்து வரும்
பட்டதாரி இளைஞர்களுக்கு மீண்டும் விவசாயத்தின் மீது ஒரு நம்பிக்கையூட்டும் ஒரு கருவியாக
இந்நாவல் மாறும் என்பது திண்ணம்.
தொடர்புக்கு: என். சுவாமிநாதன்
7401329409
தொடர்புக்கு: என். சுவாமிநாதன்
7401329409