புதுக் கவிதையில் மானுடம்
அளந்து அளவிடற்கு இயலாத பரப்பளவைத் கொண்டது தமிழ்
இலக்கியம். புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், நீதிநூல்கள், அறநூல்கள், அகம்,
புறம் தழுவிய இலக்கண நூல்கள் என விரிந்து… பரந்து… கொண்டேச் செல்லும் இதன் எல்கை.
கட்டுரை, கவிதை என்னும் இருவேறு வடிவங்களைக்
கொண்ட இவ்விலக்கியம், ஆரம்பக் காலத்தில் முழுக்க முழுக்க கவிதை வடிவத்தைத் தன்னகத்தேக்
கொண்டு சிறப்புற்று விளங்கியது.
அக்காலத்துக் கவிதை இலக்கியம் முழுவதும் இறைவனையும்
அரசனையும் மையப் பொருளாகவும் காதலையும் வீரத்தையும் கருப்பொருளாகவும் கொண்டு மரவோடு
ஒட்டி உறவாடி நின்றது. பாமரர்களால் படித்து அறிந்து கொள்ள முடியாமல், பண்டிதர்களால்
மட்டுமே உய்த்துணரும் நிலையில் கவிதை இலக்கியம் கோலோச்சி நின்றது.
காலத்தின் கட்டாயத்திற்கும் மக்களின் மனநிலைக்கும்
உட்பட்டு இருபதாம் நூற்றாண்டின் முற்காலத்தில் இக்கவிதை இலக்கியத்தின் வடிவம் மாறுபட்டது;
பாடுபொருள் வேறுபட்டது. அதன்பின் மரபுக்கவிதை என்ற வடிவம் மாறுபட்டு புதுக்கவிதை என்ற
வடிவம் உருப்பெற்றது. இறைவனும் அரசனும் மட்டுமே பாடுபொருள் என்ற நிலைமாறி மக்களும்
மாக்களும் பாடுபொருளாயின.
பண்டிதர்களால் மட்டும் படித்து, ருசிக்க முடிந்த
கவிதையை பமரர்களும் படித்து… சுவைத்து… ரசித்து… ஆனந்த நர்த்தனமாடும் அளவிற்கு ஆக்கித்
தந்தனர் மகாகவி பாரதியார் தொடங்கிய புதுவரவுக் கவிஞர்கள்.
புதுக் கவிதையில் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது
என்ற நெறிமுறை ஏதும் இல்லை. எதையும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற முழு சுதந்திரம்
இருந்தது. அதனால், சிறிது சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட புதுக் கவிதைப் புனைந்தார்கள்.
அக்கவிதைகள் மானுடத்தின் அன்றாடத் தேவையிலிருந்து தொடங்கி அவர்களின் உள்ளுணர்வுகளின்
அடியாழத்தைவரை படம் பிடித்துக் காட்டின.
அதற்கு அத்தாட்சியாகத்தான் முண்டாசுக் கவிஞன்
பாரதி இவ்வையகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வளர்ச்சிக்கு சோறும், அறிவு
வளர்ச்சிக்குக் கல்வியும் வேண்டும் எனக் கருதினான். அதனால்தான் அவன்;
“வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
– இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்” என்றார்.
மேலும் ஒருவன் வயிராற உண்ண உணவில்லாமல் இருந்தால்
இவ்வையகத்தை என்னச் செய்ய வேண்டும் என்பதை;
“தனியொருவனுக்கு உணவில்லையெனில் – இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்” – என்கிறான்.
இதிலிருந்தே
புதுக்கவிதைகளில் மானுடத்தின் பேச்சும்… மூச்சும்… பதிவாகத் தொடங்கின.
இப்படிப் பாரதியால் புதுக்கவிதைகளில் தொடங்கி
வைக்கப்பட்ட மானுடச் சிந்தனைகள் பிற்கால புதுக்கவிஞர்களால் புதுப்பொலிவுற்றுத் திகழ்வதைக்
கண்கூடாகக் காண முடிகிறது. கல்வியின் சிறப்பு, பெண்விடுதலை, சாதி, மத ஒற்றுமை, இளைஞர்
நலன், பண்பாடு பேணுதல், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத அழிப்பு, மொழிவளர்ச்சி என மானுடம்
பற்றிய எத்தனையோ உயரிய விஷயங்களில் தங்களின் சிந்தனையைத் திருப்பியுள்ளார்கள் புதுக்கவிஞர்கள்.
பெண்கள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லக்கூடாது;
புத்தகங்களைப் படிப்பதை மட்டுமின்றி, கையினால் தொடுவதுகூட பவம் என்றிருந்த நிலையை மாற்றிட,
ஒரு புதுக்கவிஞன் எழுச்சியோடு இப்படி எழுதுகிறான்;
“பெண்ணே
அகிலமெல்லாம்
ஆட்சி செய்யும்
வல்லமை உனக்குண்டு
ஆலயமெல்லாம் அபிஷேகம் செய்யும்
புனிதமும் உனக்குண்டு”.
பள்ளிக்குச்
செல்வதும் படிப்பதும் என்ன, ஆலயங்களுக்குள்ளே சென்று பூஜை செய்வதற்கான தகுதியையும்
பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படி அற்புதமாய் சித்தரிக்கிறார் இக்கவிஞர்.
பெண்களைத் தொடர்ந்து இளைஞர்கள் நிலையும் இன்று
இளக்காரமாக்கப்படுகிறது. படித்துப் பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பின்மை, சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில்
முன்னேற ஆக்கமும் ஊக்கமும் இன்மை, போதைப் பொருள்களை விற்பதற்கு இளைஞர்களை
ஈடுபடுத்துதல்
என இளைய சமூகத்தின் நிலைப் பரிதாபகரமானது. இந்நிலையில் இந்த இளைஞர்களின் சக்தியைப்
புரிந்து கொண்ட ஒரு கவிஞர் இளைஞர்களுக்கு இப்படிப்
புத்தி கூறுகிறார்.
“இளைஞனே/ நீ
ஆரதனைக் கூடத்தின்
அர்ச்சனைப் பூ… நீ
நீ நினைத்தால்
துரும்பையும் தூணாக்கலாம்
புல்லையும் புல்லாங் குழலாக்கலாம்
மண்ணையும் பொன்னாக்கலாம்
நீ எழுந்து நடைபோடு
ஒரு கால் முன்னே செல்ல
இன்னொரு கால்
பின் வாங்காது
என்பதை உணர்ந்துகொள்”
இதோடு மட்டும் நின்றுவிடவில்லை, இன்னொருக் கவிதை
இளைஞர்களிடம் நம்பிக்கைக் கொள்ளச் சொல்கிறது.
“நம்பிக்கை நார் மட்டும்
நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும்
ஒங்வொன்றாக வந்து
ஒட்டிக்கொள்ளும்
கழுத்து மாலையாகவும்
தன்னைத்தானே கட்டிக்கொள்ளும்”
இப்படி
இளைஞர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுப்பதின் மூலம் அவர்கள் தங்கள் சக்தியை உணர்ந்து
நல்வழிப்படுவதற்கு ஏதுவாகும்.
சாதீயச் சண்டைகளும் சமய மோதல்களும் நாளுக்கு
நாள் நம் நாட்டில் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சியும் மக்களிடையே
ஒற்றுமை உணர்வும் சீர்குலைந்து போகின்றன. இந்நிலையில் இந்த வேறுபாடுகளைக் களைந்து அனைத்துச்
சமயத்தவரும் ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஒரு கவிஞர் தம் புதுக்கவிதையால் இப்படிப் புத்திமதி
கூறுகிறார்;
“இராமனா? புத்தனா?
இயேசுவா? அல்லாவா?
ஆண்டவன் யாரென்று
அலசிப் பார்க்காதீர்
இராமனும் புத்தனும்
இயேசுவும் அல்லாவும்
பக்தனை இரட்சிக்கும்
உத்தமர் என்றே உணர்ந்திடுவீர்!”
இந்தக் கவிஞனோடு நின்றுவிடவில்லை, இன்னொரு கவிஞன்
இப்படி எழுதுகிறான்;
“கோயிலை மசூதியை ஆலயத்தை
இடிப்பவனாய் இருக்காதே
கீதையைப் பைபிளைக் குர்ஆனைப்
படிப்பவனாய் இரு.”
ஆகா
என்னே அற்புதம் இதைவிட மத ஒற்றுமைக்கு இன்னொரு கவிதை வேண்டுமா? என்றல்லவா நினைக்கத்
தோன்றுகிறது.
இதோடும் நின்றுவிடவில்லைக் கவிஞர்களின் கனவுகள்.
இதோ இந்தக் கவிஞரைப் பாருங்கள்; இவர் எப்படிச் சிந்திக்கிறார் என்று;
“இந்துவே திரண்டு வா என்றோ
கிறிஸ்தவனே கிளம்பி வா என்றோ
இஸ்லாமியனே எழுந்து வா என்றோ
எழுப்பாதீர் முழக்கம்
மனிதனே இணைந்து வா
என்று முழங்கி
மானுடத்தை இனியேனும்
மகத்துவப் படுத்துங்கள்”
இந்தக்
கவிதைகளைக் கற்றுணர்ந்த பிறகும், ஒருவருக்கு மதபேதம் வருமாயின் அவர் நிச்சையம் மனிதராக
இருக்கவே முடியாது.
புதுக்கவிஞர்கள் தங்கள் கவனத்தைத் தமிழ் மீதும்
செலுத்தியுள்ளனர், தங்கத்தின் மீதும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் இன்று தமிழ் மொழிக்கு
ஒரு சவால் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆங்கில மொழியின் மீது தீராதத் தாகம் கொண்டு, தங்கள்
பிள்ளைகளை ஆங்கில மொழியில் கற்க வைப்பதில் குறியாக உள்ளனர். அதனால் அரசுப் பள்ளிகளில்கூட
இன்று ஆங்கிலவழிக் கல்விக் கற்பிக்கும் அவலநிலை நேர்ந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, பெற்றோரை, தங்கள் பிள்ளைகள்
அம்மா, அப்பா என்று அழைப்பதையே கௌரவக்குறைவாகக் கருதுகின்றனர். இந்த அவல நிலையைப் புரிந்து
கொண்ட ஒரு கவிஞர்:
“அதோ
அம்மா என்றவனை
அடிக்கிறாள் ‘மம்மி’
இதோ
அப்பா என்றவளை
முறைக்கிறார் டாடி” என்று கனல் கொட்டுகிறார். இந்த மனநிலை மக்களிடமிருந்து
மாறி அழகுத் தமிழுக்கு ஆராதனைச் செய்யும் பொருட்டு ஒரு கவிஞர்:-
“டாடி மம்மிக்கு
டாட்டாக் காட்டி
அம்மா அப்பா
என்றே நம்மை
அழகுத் தமிழில்
அறிமுகம் செய்வோம்” என்கிறார்.
இன்னும்
ஒரு கவிதையில்:-
வீதிகள் தோறும்
தாய்மொழி மழலைப்
பள்ளிகள் நிறுவி
அன்னியமொழி கான்வென்ட்டுக்கு
திண்டுக்கல் பூட்டுப்
போட்டுச் சாத்துவோம்” எனச் சவுக்கடி
கொடுக்கிறார்.
தமிழர்களின் பண்பாடாகத் திருமணத்தின் போது தாலிகட்டும்
பழக்கம் இருந்தது. அந்தத் தாலி ஆரம்பகாலங்களில் பெயரளவுக்குத் தங்கம் வைத்துச் செய்யப்பட்டு
வந்தது. ஆனால் இன்று இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. தாலிக்குத் தங்கம் என்ற நிலைமாறி,
தங்கமே தாலி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதனால், தங்கத்தின் விலையோ நாளுக்கு நாள்
வானத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது.
சாதாரண பாமர மக்களால் இந்தத் தங்க விலைக்கு ஈடுகொடுத்துத்
தாலிக்குத் தங்கம் வாங்கி, தங்கள் இல்லங்களில் இருக்கும் பெண்களை திருமணம் முடித்துக்
கொடுப்பதற்கு முடியாமலே போகிறது. இதனால், எத்தனையோ ஏழை எளிய வீட்டுப் பெண்கள் வயது
முதிர்ந்த பிறகும் திருமணம் நடக்காமல் முதிர் கன்னியர்களாகவே மாறி வருகின்றனர். இந்த
இழிநிலையைக் கண்ணுற்ற ஒரு கவிஞர்:-
“தாங்காத தங்கவிலை
ஏறுமென்றால்
தாலிக்குமிங்கே
தங்கம் வேண்டாமென்போம்
தாரத்திற்கு
மஞ்சள் கயிறு போதுமென்போம்
தர்மத்தைக் காத்திடவே
தயங்காது நின்றிடுவோம்” என்று எச்சரிக்கிறார்.
எவ்வளவுதான் கல்வியில் சிறந்தாலும் பொருளாதாரத்தில்
உயர்ந்தாலும் அறிவியலில் வளர்ந்தாலும் இன்னும் நம்மிடையே தீண்டாமைத் தாண்டவமாடிக் கொண்டுதான்
இருக்கின்றது. இதனைத் தீர்த்துக் கட்டுவதற்குத் துணிந்தவர்கள் எத்தனை எத்தனையோபேர்.
அவர்களில் கவிஞர்களின் பங்கும் அளவிடற்கரியது. ஒரு கவிஞன் தீண்டாமையை தீர்த்துக் கட்ட
முடிவெடுத்துவிட்டான். இதோ அவனின் கவிதைக் கணையாளி.
“தீண்டாமைக் கொசுக்களைத்
தீர்த்துக்கட்ட
நிலப்பிரபுத்துவச் சாக்கடையை
நிர்மூலப்படுத்துவோம்”
பொருளாதார ஏற்றத்தாழ்வுதான் தீண்டாமைக்குக் காரணம்.
அதனால் நிலப்புரபுத்துவத்தை இல்லாமல் ஆக்குவதுதான் இதற்குச் சரியான தீர்வாக அமையும்
என்கிறார். மேலும் ஒரு கவிஞர் கூறும் போது:-
“தீண்டாமையென்பது
தீயினும் கொடுமை
அதைத்
தீர்த்துக்கட்டுவது
நாட்டுக்குப் பெருமை” என்கிறார்.
நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் விசாயிகள்.
விவசாயத்தால் மட்டுமே ஒரு நாட்டை மிக உன்னதமான வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
அதனால்தான் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் வாசகத்தை நம் நாட்டின்
தாரக மந்திரமாகக் கொண்டுள்ளோம். அப்படிப்பட்ட உழவர்களைப் பற்றி ஒரு கவிஞர் தமது கவிதை
வரிகளில்:-
“நாங்கள் சேற்றில்
கால் வைத்தால்தான்
நீங்கள் சோற்றில்
கைவைக்க முடியும்” என்று உழவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறார்.
அதோடு மட்டும் நின்று விடாமல், மனித வாழ்க்கை,
உழைப்பை நம்பியே இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட
“கைரேகைப் பார்ப்பவனே
கையில் இல்லை தனரேகை
தளராமல் ஏர்பிடித்து
தரிசுகளில் நாம் கீறும்
தரை ரேகையே நமது
தனரேகை” என்று
உழவுக்கும்
உழைப்பிற்கும் மேலும் மேன்மையூட்டுகிறார்.
உழைப்பின் பயனை நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும். உழைப்பினால் மடுடுமே அனைத்து
வளங்களையும் பெற முடியும். உழைக்காதவர்கள் மனிதர்கள் அல்ல; அவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடு
என எச்சரிக்கிறார் ஒரு கவிஞர்.
“விதைக்க மறந்தவனே
உனக்கேன் அறுவடை ஞாபகம்
உரிமையின் தூது
கடமையின் கைகளிலாதான்
தந்தனுப்பப்படுகிறது.” இப்படி எத்தனையோ கவிதைகள் உழைப்புக்கு, உயர்வும்
உணர்வும் கொடுத்து எழுதப்பட்டுள்ளன.
இச்சமூகத்தில் வாழும் அனைத்து மக்களும் பொருளாதார
ஏற்றத்தாழ்வுகளின்றி சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்வதற்காக அரசு எத்தனையோ திட்டங்களைத்தீட்டி
மக்களுக்காக அர்ப்பணிக்கிறது. அந்தத் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக உரிய மக்களிடம்
சென்றுச் சேருகின்றனவா என்றால் அது மிகப்பெரியக் கேள்விக்குறியாகவே இருக்கும். இந்தப்
பரிதாபநிலையைப் பார்த்த ஒரு படைப்பாளி தனது உணர்வை இப்படி கவிதையாய் படைத்துள்ளார்.
“அணைக்கட்டுகளில்
திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியே பாய்கிறது” – என்கிறார்.
இதோடு மட்டும் நின்று விடாமல் இன்னொரு கவிஞர்
“சுதந்திர வெளிச்சம்
சேரியில் விழாமல்
மாளிகை நிழல்களே
மறைத்து விடடன” என்று ஏங்குகிறார்.
இக் கவிதைகளை மேலாட்டமாகப் படிக்காமல் ஆழமாகப்
படிக்கும் போதுதான் இதன் அர்த்தம் என்னவென்றுப் புரியும். ஏழைகளுக்காகக் குரல் கொடுக்க
எங்கள் எழுத்துகளாலும் முடியும் என்பதை இக்கவிஞர்கள் எப்படி நிரூபித்திருக்கிறார்கள்
என்பதை உணரும்போது நமக்கும் மெய்சிலிர்க்கிறது.
எவ்வளவுதான்
பிரிவினைகள் நமக்குள்ளே இருந்தாலும் நாமெல்லாம் இந்தியத்தாயின் தவப்புதல்வர்கள் என்பதில்
ஒன்றுபடுவோம்! பெருமைக் கொள்வோம். இந்த வகையில் நம் தேசத்திற்கு எவ்வகையிலும் ஊறுவிளைவிக்காமல்
கட்டிக்காப்பது நம் கடமையன்றோ? அதனை ஒரு கவிஞர் எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்:-
“எந்த
மதம் ஆனாலும்
இந்தியாவில்
பிறந்தவர்கள்
இந்தமண்ணின்
குழந்தைகள்
ஒரு
நாட்டின் நதிநீரை
ஒரு
தாயின் பாலாக
உண்டு
வளர்ந்தவர்கள்”
இது எவ்வளவு இயல்பான, எதார்த்தமான உண்மை. ஊட்டிவிடும் அன்னையின் கரங்களை எவரேனும் வெட்டிவிடுவதுண்டா?
இல்லை ஈன்றெடுத்தத் தாயைத் தலைகுனிய வைப்பதுண்டா? அதுபோன்று நமக்கு, உண்ண உணவும் உறங்க
இடமும் சுவாசிக்கக் காற்றும் தந்தருளும் பாரத அன்னையை வேற்றுமையிலும் ஒற்றுமையோடு நின்றுக்
கட்டிக்காப்பது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். இதனையே இன்னும் ஒரு கவிஞர் இப்படி
எழுதுகிறார்.
“துளிகள்தான்
நாம்
என்றாலும்
குடத்தில்
எடுத்து நம்மைக்
குறைக்க
முடியாதபடி
கலந்து
கொள்வோம்
ஒரு
கடலாவோம்.”
இவ்வரிகள் இந்தியத் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும்
ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தேசத்தின் ஒற்றுமையைப்
பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை; படைக்காதப் படைப்பாளிகளில்லை. தேசத்தின் ஒற்றுமையே நம்
வாழ்க்கைக்குப் பலம் என்றுக் கருதுவோர் கவிஞர்கள்.
இதோ இந்தக் கவிஞர்
இப்படி எழுதுகிறார்:-
“எல்லாத்
தளைகளில் இருந்தும்
என் மானுடம்
விடுதலையாக
ஒரு முகமாகி
எழுந்தால்
ஒரு நொடி
போதும்…”
இவ்வரிகள் அனைத்து இந்தியக் குடிமகனுக்கும் சுவாசக் காற்றாகட்டும்;
எங்கும் பேச்சாகட்டும்.
இப்படிப் புதுக்கவிதைகள்
என்பது வெறுமனே கவிஞர்களால் பொழுதுப்போக்கிற்காக எழுதப்படுபதல்ல; அவற்றிற்குள்ளே மானுடத்தின்
மகத்தும் ததும்பி வழிகிறது. அதை நுகர்ந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!!
இக்கட்டுரை
23-1-2015 அன்று நாகர்கோவில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது.