மாணவர்களுக்கு இது ஒரு மாணிக்கம்.
எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டியவர்கள் நம் நாட்டு மாணவச் செல்வங்கள். அதனால்தான் எதிர்கால இந்தியாவின் தலையெழுத்து வகுப்பறைகளில் நிர்ணையிக்கப்படுகிறது எனக் கோத்தாரிக் கல்விக்குழு தீர்க்கத்தரிசனமாகக் கூறியுள்ளது.
இப்படிப்பட்ட மாணவ மாணவிகளை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கவேண்டியது யார் பொறுப்பு? இப்படியொரு கேள்வியை முன் வைத்தால் அதற்குள் வருபவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த மகத்தான பொறுப்பை இவ்விருவரும் செவ்வனவே செய்கின்றார்களா? என மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தால் அதற்குக் கிடைக்கும் விடை வேப்பம் குருந்தைப் போல் மிகவும் கசப்பாகவே இருக்கும்.
எங்கோ ஒரு மூலையில் சில பெற்றோரும் ஆசிரியரும் தங்களின் பொறுப்பைக் கரிசனையாக எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கரிசனத்தை எத்தனை மாணவ மாணவியர் கருத்தாகக் கொண்டு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், அதுவும் நமக்கு ஆறுதல் தருவதாக அமையாது.
மாதா, பிதா, குரு இந்த மூன்று சொற்களும் மகத்துவம் வாய்ந்த தெய்வத்தினும் முன் நிற்பவை.
ஆனால், இந்தச் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து பள்ளி வகுப்பறையில் குருவைக் குத்திக் கொலை செய்யும் நிலைமைக்கும் தாலோலித்து வளர்த்த மாதா, பிதாவைத் தாங்கி பிடிக்கும் தருணத்தில் தனிமைப்படுத்தும் நிலைக்கும் நம் மாணவர் சமுதாயமும் இளைஞர் பட்டாளமும் துணிந்து இறங்கியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில்தான் “மாணவர்களின் வளமான வாழ்விற்கு…” என்னும் தலைப்பில் அருமையான இந்நூல் தமிழகத்தில் தவழ்ந்து வருகிறது.
யார் இதைத் தவழ விட்டிருக்கிறார்? உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் தாரக மந்திரத்திற்குப் பாத்திரமானவர். கூரியக் கல்வி அறிவும் சீரிய நிர்வாகத் திறனும் கொண்டவர். தொடர்ந்து ஈரேழாண்டுகளாகப் படந்தாலுமூடு, கிரேஸ் கல்விக் குழுமத்தின் நிர்வாகியாகத் திறம்படப் பணியாற்றி வருபவர், ஆசிரியர் பட்டப்படிப்புடன் வணிகவியல் முதுகலைப்பட்டம் பெற்றுத் தற்போது முனைவர் பட்டத்திற்காய் முனைந்து ஆய்வுப்பணியைச் செய்து கொண்டிருப்பவர், சிறந்த மனிதநேயப் பண்பாளர் திரு. இரா. மத்தியாஸ் அவர்களே ஆவார்.
நாலிரண்டு ஆண்டுகளாக என்னோடு நெருங்கிப் பழகி, மனம் திறந்து பேசி, நாட்டு நடப்புகளை அலசி, நட்புக்கு இலக்கணமாகத் திழும் இவர் மாணவர்களின் மனங்களைக் கவ்வி இழுக்கும் அளவுக்கு இப்படியொரு புத்தகத்தைப் புனைந்திருப்பது அடியேனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
ஏனென்றால் தலைசிறந்த கல்வியாளர்களோ, பல்கலைக்கழகப் பேராசிரியர்களோ, மனநல வல்லுநர்களோ எழுத வேண்டிய ஓர் ஆக்கப்பூர்வமான நூலை இவரால் எப்படி எழுத முடிந்தது? என்பதுதான் அந்த ஆச்சரியம்.
இவர் இந்நூலை ஓர் ஆய்வு நூல் போன்று மாணவர்களின் வாழ்வு வளம் பெறப் பெற்றோரின் பங்கு, ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் பங்கு எனும் மூன்று பிரிவுகளாகப் பகுத்துள்ளார்.
இந்த மூன்று பகுதிகளிலும் அவரவர்களின் கடமைகள், செயல்பாடுகள் எவை எவை என்பவற்றைச் சிறு சிறு கதைகள், புனித நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள், திருக்குறள், புறநானூறு, பழமொழி உட்பட பல்வேறு இலக்கிய, நீதி நூல்களின் மேற்கோள்கள், கல்வியாளர்கள், தேசத் தலைவர்களின் அறிவுரைகள் ஆகியவற்றை மேற்கோள்களாகச் சுட்டிக்காட்டியிருப்பது படிப்போருக்குச் சிறந்த மனவெழுச்சியைத் தருவதாக உள்ளது.
குறிப்பாக பெற்றோரின் பங்கு என்னும் பகுதியில், “ஒரு குழந்தையின் எதிர்காலம் முற்றிலும் தாயின் செயலில் அடங்கியிருக்கிறது” என்ற மாவீரன் நெப்போலியனின் கருத்தையும், ஆசிரியர் பகுதியில் “தாழ்மையாயிருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாயிருங்கள் தன்னலத்தை விட்டொழியுங்கள்” எனப் பகவத்கீதை இயம்பும் இயல்பையும், மாணவர்களின் பங்கைக் கூறுமிடத்து,
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றிலவர்க்கு” – என்னும் திருவள்ளுவரின்
திருவாய் மலர்ந்தருளலையும் எடுத்தியம்பியிருப்பது நன்மையும் இனிமையும் பயப்பதாயுள்ளது.
கூடவே ஒவ்வெருப் பகுதியிலும் அவரவர்களுக்கான உறுதிமொழியையும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவற்றில் முதல் பகுதியான பெற்றோரின் பங்கில் “தாய்த் திருநாட்டின் அனைத்து மக்களின் வாழ்வும் வளமும் என் குழந்தையின் வாழ்வு என எண்ணி வழி நடத்துவேன்” என்னும் உறுதி மொழி அனைத்துப் பெற்றோரும் தங்கள் நெஞ்சங்களில் வாஞ்சையுடன் நிலை நிறுத்த வேண்டியதாகும்.
இரண்டாம் மூன்றாம் பகுதிகளான ஆசிரியர்களின் பங்கு, மாணவர்களின் பங்கு ஆகியவற்றில் இந்தியத் திருநாட்டின் மேன்மைமிகு குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த டாக்டர் ஆ.பெ.அப்துல்கலாம் அவர்கள் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் நூலாசிரியர் பணிபுரியும் கிரேஸ் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் நேரடியாக உரையாடியபோது ஆசிரியர்கள், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய உறுதிமொழிகள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டார். அப்பட்டியலை அப்படியே இவர் கையாண்டுள்ளார். அவற்றில் “நான் ஆற்றும் ஆசிரியப்பணி ஓர் அரும்பணியாகும். நான், நல்லதொரு மாணவனை மட்டும் தயார் செய்யவில்லை, ஒரு நல்ல எதிர்கால குடிமகனை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதையுணர்ந்து பொறுப்புணர்சியோடு செயல்படுவேன்” என்பதின் மூலம் ஆசிரியர்களின் தட்டிக்கழிக்க முடியாதப் பொறுப்புணர்ச்சியை மிகுந்த பொறுப்போடு நிலைநிறுத்துகிறார்.
அதுபோலவே மாணவர்களுக்கான பங்களிப்பில் “நான் எனது விடுமுறை நாள்களில் எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்கச் சொல்லிக் கொடுப்பேன்” எனச் சமூக அக்கறையை ஊட்டி விடுவது எதிர்கலாத்தில் இச்சமூகத்தில் எழுத்தறிவின்மையை இல்லாமலாக்குவதற்கான அடித்தளமாகவே அமைந்துள்ளது.
பெற்றோரின் பங்கில் குடும்பத்திலிருந்து தொடங்கி விருந்தோம்பல் வரை மொத்தம் 24 சிறு சிறு தலைப்புகளில் அரும்பெரும் கருத்துகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். அவற்றில் குழந்தைகளின் திறனறிதல் என்னும் பொருளுக்குள் “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் திறன் பற்றி நன்குத் தெரிந்திருக்க வேண்டும். கூடவே அவர்களின் போக்கையும் உணர்ச்சிக் கிளர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு அவர்களை வழிநடத்த தாமும் தமது அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
இது இந்த நாட்டில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் மீது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை இன்றைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருப்பதே இந்நாட்டில் மாணவர்களும் இளைஞர்களும் வாழ்க்கையில் வெறுப்புற்று வழி தவறிச் செல்வதற்கும் வாழ்க்கையை அநியாயமாக மாய்த்துக் கொள்வதற்கும் காரணமாகிறது.
பெற்றோர்கள் பிள்ளைகளின் திறமைகளையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் அறிந்துகொண்டு அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டுமே தவிர பிள்ளைகளின் திறமைக்கு மீறிய செயல்களைச் செய்யவோ, படிக்கவோ தூண்டக்கூடாது. அதுபோலவே அவர்களின் விருப்பு வெறுப்புகளைப் பிள்ளைகள் மீது திணிக்கவும் முற்படக் கூடாது. அதனால்தான் இதுபோன்ற விபரீத விளைவுகள் பிள்ளைகள் மத்தியில் பெருகி வருகின்றன.
இதுபோன்று ஆசிரியர்களின் பணிகளைப் பற்றி விளக்கும் போது “ஆசிரியர்கள் கல்வி வழிகாட்டிகள்” என்னும் தலைப்பிலிருந்து தொடங்கி “இதயங்களில் இடம்பிடித்தல்” எனத் தொடர்ந்து “கலையார்வம்” வரை பதினைந்து பொருள்களுக்குள் தனது சிந்தனையோட்டத்தைச் சிற்பம் போல் வடிவமைத்துள்ளார்.
கூடவே மாணவர் பகுதியில் மாணவர்கள் யார்? என்பதற்கு “மாணவர்கள் என்போர் மாண்புடையவர்கள்” என விளக்கமளிப்பதோடு “பெற்றோரைக் கனப்படுத்துதல்,”
“தீய பழக்கங்களைக் கைவிடுதல்” எனத் தொடர்ந்து “தேர்வுக்குத் தயாராகுதல்” வரை 21 தலைப்புகளில் மாணவர்களின் மனநிலையை ஒரு மனநல வித்தகரைப் போன்று அறிந்து, தெளிந்து மிக அற்புதமான கருத்துகளை அருமருந்தாகத் தந்துள்ளார்.
எதிர்கால இந்தியாவின் எழுச்சிமிகுத் தீபங்களாகத் திகழ வேண்டிய மாணவர்கள் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டு இப்படியொரு நூலை ஆக்கித் தந்திருக்கும் ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.
இவரது தீவிர வாசிப்பும் ஆழ்ந்த அனுபவமும் மேலும் பல நல்ல நூல்களை நல்குவதற்கு வாழ்த்துவோம்! புத்தகத்தை மாணவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக வாங்கி வழங்குவோம்.
குறிப்பு: “மாணவர்களின் வளமான வாழ்விற்கு” என்னும் நூல் திரு. இரா. மத்தியாஸ் அவர்களால் எழுதி “காவ்யா” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும். இது, அந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரை. நூலின் விலை ரூ.120 நூல் கிடைக்கும் இடம்.
காவ்யா, 16,இரண்டாம் குறுக்குத்தொரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
போன்: 044-23726882, 9840480232.
நூலாசிரியரின் தொடர்புக்கு: 9487574425.