முத்துக்களே முனைப்புடன் எழுதுங்கள்
டாக்டர்
கமல. செல்வராஜ்
மண்ணில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்வில் ஏதேனும் ஒரு
நிகழ்வு மாற்றத்தை உருவாக்கியதாக இருக்கும்.
அந்த மாற்றம் அவர்களை, வாழ்க்கையின் அதி உன்னத நிலைக்கும் வழி
வகுத்திருக்கலாம் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் வழிமறித்து
விட்டிருக்கலாம்.
எது
எப்படியாயினும், அது அவர்களின்
நிகழ்கால கர்மப் பலனாகவே இருக்கும்.
வாழ்க்கையின் உயர்ச்சியும், வீழ்ச்சியும் அவரவர் கையில்தான் இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது.
அந்த வகையில் இவ்வருடம் தமிழகத்தில் பத்து
மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ முத்துக்கள்
பொதுத் தேர்வு எழுதப் போகும் நிலையை மலங்கரை விளக்கு மூலம் கொஞ்சம் அசைபோட்டுப்
பார்க்க அவா கொள்கிறேன்.
அருமை முத்துகளே! நீங்கள்தான்
இத்தேசத்தின் சொத்துக்கள். அப்படி
நினைக்கும் போதே ஓர் ஆசிரியரின் நிலையில் இருந்து கொண்டு அல்லது ஒரு பெற்றோரின்
ஸ்தானத்தில் இருந்து கொண்டு உங்களின் உள்ளங் கைகளைத் தொட்டு முத்தம் தரவே மனம்
தூண்டுகிறது. ஏனென்றால், நீங்கள் அவ்வளவு
மகத்துவம் வாய்ந்தவர்கள்; மதிப்பு
மிக்கவர்கள்.
இத்தருணத்தில் உங்களை, ஈன்றெடுத்தப் பெற்றோரும்
அறிவூட்டிய ஆசிரியர்களும் உங்கள் மீது எவ்வளவு எதிர்பார்ப்பை மிகுந்த ஏக்கத்தோடு
வைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் மனப்பூர்வமாக எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த எதிர்பார்ப்பும், ஏக்கமும் அவர்களின்
பெருமைக்காக அல்ல; உங்களின் உயர்வுக்காக என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும்.
இவ்விரு நிலைகளிலும் பயிலும் நீங்கள்
எழுதும் தேர்வுகள் உங்களின் எதிர்கால ஒளிமயமான வாழ்வுக்கு வழிகாட்டுபவையாக அமைய
வேண்டும். இவ்விரு நிலைகளிலும் நீங்கள்
பெறும் மதிப்பெண்கள்தான் உங்களின் எதிர்கால உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும்
உத்தரவாதம் அளிப்பவையாக இருக்கும்.
எனவே, இனி இருக்கும் குறைந்த நாள்களை
நீங்கள் கடமை உணர்வோடும், கண்ணியத்தோடும் படிப்பிற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே
ஒன்றுதான். அது உங்கள் மனதை தூய்மையாக்க
வேண்டும்; எளிமையாக்க
வேண்டும். மனச்சுமை சுத்தமாக இல்லாமல்
இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
படிப்பைத் தவிர, படிக்கும் பாடத்தைத் தவிர வேறு எதையும் மனதிற்குள் புகுத்திவிட
முயலாதீர்கள்.
நீங்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டாக
இருந்தாலும், டி.வி. பார்ப்பதாக இருந்தாலும், கம்பியூட்டரில் அதிக நேரம்
செலவளிப்பதாக இருந்தாலும், செல்போனில் பேசிபேசியே உங்கள் நேரத்தை வீணடிப்பதாக
இருந்தாலும் இல்லை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலையே கில்லாடிகளாக இருந்தாலும்
அவற்றையெல்லாம் ஒதுக்கி வையுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளை இடவில்லை.
ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சம் நாள்களுக்கு
ஓரம் கட்டி வையுங்கள் என்று அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன். அப்படி, ஓரம் கட்டி வைத்து விட்டீர்களே
என்றால், நீங்கள் இப்போதைக்கு எதை சாதிக்க வேண்டுமோ அதை மிகச் சுலபமாகச் சாதித்து
விடமுடியும் என்பதே எனது திடமான நம்பிக்கை.
அதன் பிறகு, நீங்கள் அவற்றையெல்லாம், இப்போது
பயன்படுத்துவதை விட பன்மடங்கு அதிக நேரம் பயன்படுத்தலாம். நேரத்தை செலவழிக்கலாம்.
இப்பொழுது உங்கள் மனதிற்குள் ஓர் ஐயப்பாடு
ஆழ்க்கொண்டிருக்கலாம். அது, ஐயோ! என்னால்
இவ்வளவு பாடங்களையும் இனி இருக்கும் நாள்களுக்குள் படித்து முடிப்பதற்கு முடியும? என்னால் நன்றாக தேர்வு
எழுத முடியுமா? என்ற
ஐயப்பாடு.
இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது,
இந்த ஐயப்பாட்டை அப்படியே மனதிலிருந்து அடியோடு அகற்றி விடுங்கள். அதற்குப் பதில், நிச்சயமாக என்னால் படிக்க
முடியும், வெற்றிபெற
முடியும் என்ற நம்பிக்கையை திடமாகத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
பள்ளியிலும் வகுப்பறைகளிலும் ஆசிரியர்களோடு
நல்ல உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பாடங்களைப் படிக்கும் போது ஏதேனும் ஐயப்பாடுகள் எழுந்தால் அவற்றை எவ்வித
தயக்கமும் இன்றி ஆசிரியர்களோடு கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுங்கள்.
வகுப்பறை நண்பர்களோடு சகஜமாக
பழகுங்கள். அவர்களில் யாரேனும் உங்கள்
மனநிலையோடு ஒத்துப் போகக் கூடியவர்கள் இருந்தால், அவர்களுள் ஒன்றிரண்டுப் பேரை
உங்களுடன் சேர்த்துக் கொண்டு கலந்துரையாடல் மூலம் படித்தால், மிகக் கடினமானப்
பாடப் பகுதிகளைக் கூட மிகச் சுலபமாகப் புரிந்து கொண்டு மனதில் நிலை நிறுத்தி
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று விடலாம்.
இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருந்து
படிப்பதை விட அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அமைதியாக இருந்து படிப்பதுதான்
உங்கள் மனநிலைக்கும் உடல்நிலைக்கும் அதிக பலன் தருவதாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பதெல்லாம் அப்படியே
மனதிற்குள் ஆழமாகப் பதிந்து விடும்.
வீடுகளில் பெற்றோரின் கோபதாபங்களுக்கும்
சண்டை, சச்சரஙுகளுக்கும் சிறிதளவும் இடம் கொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நல்ல அமைதியான, அன்பான சூழ்நிலை
உருவானால்தான் உங்கள் மனநிலை சமநிலைப்படும்.
அதுவே, உங்கள் வெற்றிக்கு நூறு சதவீத உத்தரவாதத்தை உருவாக்கித் தரும்.
ஓயாமல் புத்தகமும் கையுமாக இருக்காமல்
உடம்புக்கு ஓய்வு தேவைப்படுகிறது என உணர்ந்தால் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்
கொள்ளுங்கள். அது உங்கள் உடல் நிலைக்கும்,
மனநிலைக்கும் தேர்வு நேரத்தில் நன்மைப் பயக்கும்.
அதிக பசியோடும், உடல் சோர்வோடும் இருந்து
நீண்ட நேரம் படிக்க வேண்டாம். அதனால்
நேரம் வீணாகுமே தவிர படிப்பது எதுவும் மனதிற்குள் நிற்காது. அளவான உணவும், தெளிவான சிந்தனையும், திடமான
உடல் நிலையும், அமைதியான சூழ்நிலையுமே உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்
என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
அன்பான முத்துக்களே! உங்களை நீங்களே
நம்புங்கள். உங்களிடம் சர்வ வல்லமை அதீதமாக
உள்ளது. உங்களிடம் இல்லாதது வேறு எவரிடமும்
இல்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே
தவிர வேறுவேறல்ல. ஆனால், அவரவர் ஆற்றலை
ஆறிந்து, உணர்ந்து செயலாற்றினால் வாழ்க்கையின் உன்னத நிலையை மிகச் சுலபமாக அடைந்து
விட முடியும்.
முத்துக்களே!
நீங்கள் நினைத்தால்
துரும்பையும் தூணாக்கலாம்
புல்லையும் புல்லாங்குழலாக்கலாம்...
அப்புறம் ஏன்
இந்தத் தேர்வில் மட்டும் வெற்றி கொள்ள இயலாது? துணிந்து எழுதுங்கள்...
தெரிந்து எழுதுங்கள்... தெளிந்து எழுதுங்கள்... வெற்றி உங்களுடையது.
உங்களின் நீண்ட, நெடிய வாழ்க்கையில்
இவ்விரு நிலைகளிலும் நீங்கள் பெறும் வெற்றியும் மதிப்பெண்ணும்தான் உங்களுக்கு
மணிமகுடமாக அமையும். இதை உணருங்கள்...
உயருங்கள்... வாழ்த்துகள்.
மலங்கரை விளக்கு பிப்ரவரி 2013
இதழில் பிரசுரமானது.