Wednesday, 2 January 2013

அரக்கர்களின் கொலைவெறி அடங்குவது எப்போது?


              அரக்கர்களின் கொலைவெறி அடங்குவது எப்போது?

     வையகத்து உயிரினங்களில் மாண்புடையது மனித இனம்.
பகுத்தறிவென்னும் ஆறாவது அறிவுடன் தோன்றி, வையகம் ஆளும் தகுதிப் பெற்றதும் இந்த மனித இனம் மட்டும்தான்.
     ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துதல், பரஸ்பரம் மாறிமாறி உதவிகள் செய்தல் போன்ற மேன்மைப் பொருந்திய அனைத்துக் குணாதிசையங்களும் இந்த மாண்புமிகு மனித குலத்திற்கு மட்டுமே உரித்தானவை.
     ஒருவரை ஒருவர் அண்டிப் பிழைக்காமல், தனக்குத் தானேத் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொண்டு அமைதியான, அருமையான வாழ்க்கையைத் தொடரக் கடமைப்பட்டவன் மனிதன்.
     கடவுளை முழுமையாக நம்புகிறவர்கள் மனிதர்கள். அதனால், கடவுளின் சாயலில் மனிதன் மட்டுமேப் படைக்கப்பட்டிருக்கின்றான் என ஆணித்தரமாக நம்புகின்றனர்.  இவ் அபூர்வ படைப்பு இவ்வையகத்தில் மனித குலத்தின் தனித்துவமாகும்.
     இத்தனைச் சிறப்புறு மனித குலத்தின் இன்னுயிர் என்பது விலை மதிக்க இயலாதது.  அந்த இன்னுயிருக்குச் சொந்தக்காரன் மனித குலத்தைப் படைத்தவன் மட்டுமே ஆவான்.  அவனுக்கு மட்டுமே இயற்கையாகவே அதனை ஈந்ததுப் போன்று நீக்கவும் உரிமையுண்டு.
     ஆனால், சமீபகாலமாக நம் நாட்டில் நடைபெறும் மனித உயிர்கள் மீதானத்   தாக்குதல்கள்,    அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்கின்றன.  பணத்திற்காக, காதலுக்காக, சாதி, மதத்திற்காக,   போதையின் வேகத்தில் நண்பர்களுக்குள்ளாக என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொலைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
     நம் மூதாதையர் காலங்களில் மனித கொலை என்பது எண்ணிப் பார்ப்பதற்குக் கூட இயலாதது.   ஏதேனும் தவிர்க்க இயலாத காரணத்திற்காக ஒரு கொலை நடந்து விட்டால்  அந்த ஊரேப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விடும். கொலைக்காரனுக்கு எதிராக, எவ்விதக் கருத்து வேற்றுமையும் இன்றி ஊரேத் திரண்டு ஒற்றுமையுடன் நின்று குரல் கொடுக்கும்.
     இதனால், கொலைச் செய்யப்பட்ட மறுநிமிடமே, குற்றவாளி கைது செய்யப்பட்டு, ஒருசில மாதங்களில் அவனுக்கு நீதிமன்றம் மூலம் கடுமையானத் தண்டனை வழங்கப்படும்.  இதனால், கொலைக் குற்றங்கள் செய்பவர்கள் அக்கொடியச் செயலைச் செய்வதற்கு, அஞ்சி நடுங்கி வந்தனர்.
     காலத்தின் கோலத்தில், இன்று மனிதக் கொலைகள் அன்றாட, சாதாரண நிகழ்வாக மாறி வருகின்றன.  இப்படி, அன்றாடம் நடைபெறும் கொலைகளுக்குச் சக மனிதர்களிடையே எதிர்ப்போ அல்லது நீதிமன்றங்களில் கடுமையான தண்டனையோ  இல்லாமலாகி விட்டன.
     அன்றாடம் நடைபெறும் கொலைகளின்  காரணங்களையும் பின்னணிகளையும் ஆய்ந்துப் பார்த்தால், அவை, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
     தான் காதலித்தப் பெண் தன்னைக் காதலிக்கவில்லை என்றக் காரணத்திற்காகப் பட்டப்பகலில் அவள் வேலை செய்து கொண்டிருக்கும் அலுவலகத்தில் சென்று, சக ஊழியர்களின் முன்னிலையில் கதறகதற வெட்டி, குத்திக் கொடூரமாய்க் கொலை செய்யும் வினோதச் செயல் நம் நாட்டில் அசாதரணமாக அரங்கேறுகின்றது.
     ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து, சாதி மாறியோ அல்லது மதம் மாறியோ பெற்றோருக்கு விருப்பமின்றி திருமணம் செய்து கொண்டால், அவர்களை பெற்றோரே அடியாட்களை ஏவி விட்டு மக்கள் நடமாடும் தெரு வீதிகளில் ஓடஓட, கதற கதற வெட்டிச் சாய்க்கும் உயிர்களின் எண்ணிக்கை அளவிடற்கரியதாக மாறி வருகின்றது.
     பணத்திற்கும்   பொருள்களுக்கும் வேண்டி வீட்டில் வயோதியர்களோ அல்லது பெண்களோ மட்டும் இருப்பதை நோட்டமிடுகின்றனர். பின்னர்,   இரவென்றோ, பகலென்றோப் பாராமல் வீட்டினுள்ளேப் புகுந்து அப்பாவி உயிர்களை வெட்டி வீழ்த்துகின்றனர். அதோடு, வீட்டிலிருந்து  பணத்தையும் கூடவே அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அங்க உறுப்புகளோடு அறுத்துச் செல்லும் அநியாயமும் நம் கண்ணெதிரே அரங்கேறுகின்றன.
     எவ்வளவோ படித்தும் பண்பட்டும் அறிவு முதிர்ச்சியின்றி மதத்திற்காகவும் கடவுளுக்காகவும் முட்டி மோதி, சண்டையிட்டு சச்சரவுச் செய்து, மனித உயிர்களைப் பலிவாங்கும் போக்கு இன்றும் நீடிக்கின்றது.
     இறைவனின் படைப்பில் ஒன்று பட்டிருக்கும் மனித குலத்திற்குள் சாதி(தீ)’ என்னும் கொடிய நோயைப் புகுத்தி, அதற்குள்ளே உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் பாகுபாட்டை ஏற்படுத்தி, தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்காய் சாதி(தீ)’ கலவரங்களால் சாம்பலாகிப் போகும் மனித உயிர்கள் எத்தனை?
     இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அரசியல் காழ்ப்புணர்சிகளுக்காக வெட்டி வீழ்த்தப்படும் உயிர்களும் அடித்து நொறுக்கப்படும் உடைமைகளும் கணக்கிலடங்காதவை.
     இவையெல்லாம் தவிர்த்து நம் நாட்டில் வினோதமாய் மலிவாகிப் போன மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி... அறிவு மங்கி... அநியாயமாய் பழிவாங்கப்படும் உயிர்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுவது?
     கேட்பாரும் பராமரிப்பாருமின்றி  பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகளில் அறிவிலிகளாய்... அப்பாவிகளாய்... வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி தினம் தினம் பலிகடாகளாகும் உயிர்களின் எண்ணிக்கை எத்தனை?
     இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டேச் சென்றால் நம்மிடையே நடக்கும் அநியாய மனித உயிர் பலி என்பது நம்மை பீதிக்குள்ளாக்கி, இனி மனித பிறவியே வேண்டாம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.
     அறிவாற்றலுடன் சிந்திக்கும் பெண்கள் இப்படிப்பட்ட உலகில் ஏன் குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவற்றை அநியாயமாகப் பலிகொடுக்க வேண்டும் என நினைத்து வருங்காலங்களில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதைத் தவிர்த்தால்கூட ஆச்சரியப்படவில்லை என்றேக் கருதத் தோன்றுகிறது.
     பெற்றெடுத்தப் பிள்ளை பள்ளிக்குச் சென்று பாடங்களை நன்றாகப் படித்து அறிவுப் பெற்று... பண்பட்டு... பக்குவப்பட்டு... வளர்ந்து... பெரிய மனிதனாய் வருவான் என்ற ஏக ஆவலோடுப் பள்ளிக்கு அனுப்பினால், அவன் தனக்கு அறிவூட்டிய ஆசிரியரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொன்று விட்டு கொலைக் காரனாக வருகின்றான்.  வகுப்பறையில் அறிவூட்டும் ஆசிரியர்களின் உயிருக்குக்கூட உத்தரவாதம் இல்லையே என்ற ஏக்கம் என்றுத் தணியும்? எப்படித் தணியும்?
     பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சென்று பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டிப் பெற்றோரைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புகின்றனர்.  ஆனால், அங்கே சக மாணவர்களால் ராக்கிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதற்கு ஒத்துளைக்காத போது வெறித்தனமாய் கொலை செய்து தூக்கி வீசும் கோமாளித் தனத்திற்கு என்று விடிவு காண்பது?
     இத்தனைக் கொடுமைகளும் நாம் வாழும் சமகாலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  இந்த அநியாயங்களும் அக்கிரமங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தோங்குவதற்கான காரணகர்த்தாக்கள் யார்? இற்றிற்கு திரைசீலை இட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியப் பொறுப்பு யாருடையது? என்பதைச்  சமூக அக்கரையுடையவர்கள் சிந்திக்க வேண்டாமா?
     அப்படி, ஒருவர் ஆழமாக அலசி ஆராயத் தொடங்கினார் என்றால் அவருக்குக் கிடைக்கும் விடையும், விடிவும் இவையாகத்தான் இருக்கும்.
     அவற்றில் முதன்மையானது, நாட்டில் நடக்கும் இவ்விதமான கொடூரப் பலி வாங்கல்களைக் கண்டும் கேட்டும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்காமல் செவிடாகி... குருடாகி... செயலற்றுப் போயிருக்கும் ஆட்சியாளர்களே ஆகும்.
     இரண்டாவதாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெறும் கொலைகளைப் புலனாய்வுச் செய்து நீதியோடும் நியாயத்தோடும் வெட்ட வெளிச்சமாக்கி அதற்குக் காரணமானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், ஏதோ ஒரு காரணத்திற்காகக் கொலையாளிகள் தப்பிப்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாண்டு கொலைகளை மூடி மறைப்பதற்குப் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் லஞ்சமாக வாங்கும் போலீஸ் துறையின் துரோகச் செயல்களாகும்.
     மூன்றாவதாக, நீதியும் நேர்மையும் இரு கண்களாகக் கொண்டுச் செயல்பட வேண்டிய நீதிமன்றங்கள் கூட இன்று லஞ்ச, லாவண்ணியத்திற்கு அடிமையாகி, நீதிகளையும் தீர்ப்புகளையும் கொலையாளிகளுக்குச் சாதகமாக்கி அவர்களை குற்றத்திலிருந்து லகுவாக விடுதலையாக்கி தப்பித்துச் செல்ல வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
     நான்காவதாக, சமூகத்தின் ஒரு பிரிவினர் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் சாதி, சமய, இன, மொழி ஆகியவற்றின் நலன் கருதியோ இப்படிப்பட்ட சமூக விரோத கொலையாளிக் கும்பல்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை குற்றத்திலிருந்து தப்பிக்க நேரடியான ஆதரவும் அரவணைப்பும் கொடுக்கின்றனர்.  இந்நாட்டின் பிரதமராய்யிருந்த ராஜூகாந்தியைக் கொன்றவர்களை ஆதரித்து அவர்களுக்குக் கொடுத்திருக்கும் தண்டனையை நிறைவேற்ற தடையாக இருப்பவர்களே இதற்குப் பொருத்தமான சான்றாதாரமாவார்கள்.
     ஐந்தாவதாக, இப்படிப்பட்ட கொலைக் குற்றம் போதிய தடயங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் கொலையாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகின்றது. அது மீண்டும் நமது நாட்டு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதிகளின் அனுமதிக்காகக் கொண்டுச் சென்று, அவர்களால் அனுமதியளிக்கப்படாமல் அவர்களின் அலுவலகத்திலையே தூங்கிவிடுகின்றது.
     ஆறாவது, இந்த கொலைக் குற்றங்களைச் செய்வதற்குச் சாதாரண மனிதர்களைத் தூண்டி விடும் போதைப் பொருள்களைத் தடை செய்யாமல் அவற்றை அரசாங்கமே மனசாட்சியின்றி நேரடியாக விற்பனைச் செய்வது.
     இந்த இழிநிலைகளையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு துடைத்து எறிவதற்குத் துணிச்சலுள்ள ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நம் நாட்டில் வரவேண்டும்.  என்றால் மட்டுமே மாண்புடைய மனித உயிர்கள் இன்னலின்றி இன்பமாய் வாழ்ந்து இயற்கையாய் இறையடிச் சேரமுடியும்.       

                                                                   சமுதாய நண்பன் செப்டம்பர் 2012.