வீடு தேடி வரும் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை வேண்டும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கிடுப் பார்க்கும் போது பிற
அனைத்துத் துறைகளை விடவும் தகவல் தொழில் நுட்பத்துறை வியத்தகு வளர்ச்சியையும்
முன்னேற்றத்தையும் கண்டுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி, செல்போன், சினிமா, இன்டர்நெட், இமெயில் என நீண்டு
கொண்டேப் போகிறது இதன் பட்டியல்.
இன்றையக் காலகட்டத்தில் இவையொன்றும் புதுமையுமல்ல... வியப்புமல்ல... ஆனால்,
இவையனைத்தும் இன்று நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளன.
இந்தியாவிற்கென்று ஒரு பண்பாட்டு, நாகரிகம் உண்டு. இங்குக் கடைபிடித்து வரும் பண்பாட்டையும் நாகரிகத்தையும்
உலக நாடுகளே மதித்துப் போற்றுகின்றன.
பெரும்பாலான அண்டை நாட்டினர் இந்தியாவின் உறவு முறைகளையும் குடும்ப அமைப்பு
முறைகளையும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இது
இந்தியாவிற்குப் பெரும் கொளரவத்தையும் இந்தியர்களுக்கு நன்மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்
விஷயமாகும்.
ஆனால், இந்தியாவில் சின்னத்திரைகள் மூலம் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்
மற்றும் ஆபாச விளம்பரங்கள், இந்நாட்டின் சுய கொளரவத்தையும் இந்தியர்களின் நற்பெயரையும்
கடுமையாகப் கெடுத்துள்ளன.
முன்பெல்லாம் வர்த்தக விளம்பரங்கள் தினசரி மற்றும் வார, மாத பத்திரிகைகள்
மூலம் மட்டுமே பிரசுரிக்கப்பட்டு வந்தன.
அதுவும் வர்த்தகத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெறும் விதத்தில் உயர்
தரத்திலான விலைமதிப்பற்ற பெருள்களுக்கு மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டன.
சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் காந்தியடிகள் நடத்தி வந்த
பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார். விளம்பரங்கள் கூட மக்களை ஏமாற்றும் ஒரு வித்தை
என்றே அவர் கருதினார்.
என்றாலும், தரமான பொருள்களை மக்கள் விரைவாக அறிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதற்கு விளம்பரங்கள்
ஏதுவானால் அவற்றை வரவேற்பதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால், இன்று நிலைமை நேர்மாறாக மாறிவிட்டது. தரமான பொருள்களும் தேவையான பொருள்களும்
என்றில்லாமல் தேவையற்ற, தரமற்ற பொருள்களுக்கும் விளம்பரம் நிர்பந்தம் என்ற
சூழ்நிலை உருவாகியுள்ளது.
அந்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் மட்டுமின்றி இன்று தொலைக்காட்சி,
இன்டர்நெட், இமெயில் ஆகியவை வாயிலாக வீடுதேடி வரத் தொடங்கியுள்ளன.
அதிலும் எப்படிப்பட்ட பொருள்களுக்கு எப்படிப்பட்ட விளம்பரங்கள்
ஒளிபரப்பப்படுகின்றன என்பதுதான் அதிர்ச்சியானது.
பெண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும், அவர்கள் பருவ காலங்களில் பயன்படுத்தும்
விரலளவு பொருள்களுக்கும்கூட விளம்பரம் செய்யத் தொடங்கியிருப்பதுதான் அதிர்ச்சியானது.
ஆரம்பத்தில்
இந்த விளம்பரங்களுக்கு வெறுமனே அந்தந்த ஆடைகளை மட்டுமே காட்டி ஒளிபரப்பி விளம்பரம்
செய்தனர்.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அந்த ஆடைகளை மட்டும் அணிந்து கொண்டு அரைகுறையாக,
அப்பட்டமாக பெண்களை வைத்து விளம்பரம் செய்கின்றனர். இது வீடுகளில், பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப்
பெரும் தர்மச் சங்கடத்தில் ஆழ்த்தி விடுகின்றது.
இந்த விளம்பரங்கள், ஒரு நாள் ஒரு
தடவை அல்லது இரண்டு தடவையல்ல நாள் முழுக்க ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையிடையே கால்
மணி நேரம், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
இந்த விளம்பரங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ தொலைக் காட்சிகளில் மட்டுமல்ல பெரிய
பெரிய சேட்லைட் தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது யாராலும் சகித்துக் கொள்ள இயலாததாகும்.
இந்த, ஆபாச விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குக்
கோடிக்கணக்கில் வருமானம் வரலாம். அதற்காக,
இந்த நிறுவனங்கள் ஏன் கோடானுகோடி குடிகளைக் கெடுக்க வேண்டும்?
பண்டைய காலத்தில் சினிமா தியேட்டர்களில் மட்டுமே எப்போதாவது ஆபாச
திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதுவும்
முழுக்க முழுக்க ஆபாச காட்சிகளாக இருக்காது.
இடையிடையே ஏதேனும் ஒன்றிரண்டு ஆபாசக் காட்சிகள், மின்னல் வேகத்தில் தோன்றி
மறைவனவாக இருக்கும். அப்படி இருந்தாலும்
அப்படங்களில் பெரியவர்கள் மட்டும் பார்க்கக் கூடியப் படம் என்பதைக் குறிப்பதற்காக ‘A’ (Adult
only) என்ற குறியீடு பொறிக்கப்
பட்டிருக்கும். இந்தக் குறியீட்டைப் பார்த்த
உடனையே இளைஞர்களும் பெண்களும் அம்மாதிரியானப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவார்கள்.
மேலும் ஒவ்வொரு படமும் நடித்து முடித்து வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட
தணிக்கைக் குழுவிற்கு முன்னர் திரையிடப்பட்டு, அவர்கள் சம்மதம் தெரிவித்தால்
மட்டுமே அப்படங்கள் திரையிடப்படும்.
ஒருவேளை திரை அரங்குகளில் ஆபாசப் படங்கள் வெளியிட்டாலும் அதை விரும்பி
திரையரங்குகளில் சென்று பார்ப்பவர்கள் மட்டுமே கெட்டுப் போவார்கள்.
ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல கண்ணைக் கூச வைக்கும் விளம்பரங்கள்
சின்னத் திரைகள் மூலம் மக்களைத் தேடி வீடுகளுக்கே வந்து விடுகின்றன. இதனால், சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள்,
மாணவர்கள் என்றில்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களும் கெட்டுப் போவதற்கான
வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்படி விளம்பரங்கள் மூலமாக பெண்களை மட்டும் ஆபாசமாகக் காட்டவில்லை. அந்தப் பட்டியலில் இப்பொழுது ஆண்களையும்
சேர்த்துள்ளனர். ஆண்கள் அணியும்
உள்ளாடைகளான பனியன், ஜட்டிக்கும் விளம்பரம் செய்கின்றனர்.
ஆண்கள் அணியும் ஜட்டி விளம்பரத்திற்கு, ஆண்கள் வெறும் ஜட்டியை மட்டும்
அணிந்து கொண்டு ஹாயாக காட்சிக் கொடுக்கின்றனர்.
அதுபோலவே பனியன் விளம்பரத்திற்கும் செய்கின்றனர்.
முன்பெல்லாம் பெண்களை வைத்து ஆபாச விளம்பரங்கள் தயாரித்து வந்த விளம்பர
மற்றும் தொழில் நிறுவனங்கள் தற்போது ஆண்களையும் அந்தப் பட்டியலுக்குள் கொண்டு
வந்துள்ளன.
அதுபோல், பெண்களின் உள்ளாடைகளை மட்டும் காண்பித்து விளம்பரம் செய்த
நிறுவனங்கள் தற்போது அவர்கள் அதே ஆடைகளை அணிந்த நிலையில் விளம்பரம் செய்யத்
தொடங்கியுள்ளன.
இதே
நிலை இப்படியேத் தொடர்ந்தால் அரசு, குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கருத்தரிப்பை தடுப்பதற்காக ஆண்களும் பெண்களும்
அணிந்துக் கொள்வதற்காக நிரோத், காண்டம் போன்ற பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என
விளம்பரப்படுத்தி வருகிறது. ஒருவேளை
இந்தப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இவற்றின் விற்பனையை அதிகரிப்பதற்காக,
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் இவற்றை அணிவது எப்படி? பயன்படுத்துவது எப்படி? என்று நேரடியாக செய்முறை விளம்பரங்களை
சின்னத்திரைகள் மூலம் விளம்பரப்படுத்தினால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே
தோன்றுகிறது.
இது
மாதிரியான அபத்தமான ஆபாச விளம்பரங்களை தொலைக்காட்சி, இன்டர்நெட், இமெயில் போன்றவை
மூலம் ஒளிபரப்பாமல் தடைச் செய்ய வேண்டியதோ அல்லது கட்டுப்படுத்த வேண்டியதோ தமிழக
அரசின் தலையாயக் கடமையாகும்.
அதற்காக, இதுபோன்ற மக்கள் தொடர்புச் சாதனங்கள் மூலம் விளம்பரம் செய்வதைத்
தணிக்கைச் செய்வதற்கு அரசு சார்பில் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களோ அல்லது விளம்பர நிறுவனங்களோ ஏதேனும் விளம்பரங்களை மக்கள்
தொடர்புச் சாதனங்கள் மூலம் ஒளிபரப்ப வேண்டும் என்றால் அவற்றை தணிக்கைக் குழுவிடம்
சமர்பித்து அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்
என்ற நியதியை சட்டமாக்க வேண்டும்.
மிக
விரைவில் இந்த நடைமுறையை அரசு கொண்டு வந்தே ஆக வேண்டும். இல்லையேல் நம் நாடு மிக விரைவில் அன்னிய
நாடுகளின் கலாச்சாரத்திற்கு ஒத்துப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.
அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் இங்குள்ள இளைஞர்கள் மிக விரைவில் தங்கள்
வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள். அதோடு
இந்தியாவின் மகத்துவத்திற்கு மிகவும் அரணாக இருந்து வரும் ஆன்மீக, பண்பாட்டு,
கலாச்சாரத்திற்கு சேதம் ஏற்பட்டு விடும்.
அதன் மூலம் இந்தியா தனது சுய கொளரவத்தையும் இந்தியர்கள் தங்களின்
மதிப்பையும் இழக்க நேரிடும் என்பது மட்டும் நிஜமாகும்.
சமுதாய நண்பன் ஆகஸ்ட் 2012 இதழில் பிரசுரமானது.