Thursday, 29 December 2011

உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரட்டும்


           உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரட்டும்...
     தமிழகத்தில் சட்டமன்றத்திற்கானப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசு அமைந்த உடன் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப் படுமா? என்ற ஓர் அச்சப்பாடு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பொது மக்களிடமும் இருந்து வந்தது.  இந்த ஐயப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு புதிய ஆட்சியமைந்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த புதிய அரசு முடிவு செய்து, தேர்தலையும் நடத்தி முடித்தது.
     தமிழகம் முழுவதும் நடந்தத் தேர்தலில் எவ்வித அசம்பாவிதங்களோ, அச்சப்பாடுகளோ இன்றி எதிர் பார்த்ததை விட மிகமிக அமைதியாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இவ்வளவு அமைதியாக தேர்தல் நடைபெறுவதற்குத் தேர்தல் ஆணையம் எடுத்த மிக சாதுர்ணியமான நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது அரசு மேற்கொண்ட நடைமுறையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடைபெற்றமைக்காக தமிழக மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சபாஷ் கூறிக் கொள்ளலாம்.  இத்தேர்தல் தமிழக மக்களின் அறிவுடைமைக்கு மிகுந்தச் சான்றுப் பகர்வதாக இருந்தது. 
     அதிலும் விசேஷமாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் எவரும் சிந்தைச் செய்யா வண்ணம் ஒவ்வொரு கட்சிகளும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்தனியே நின்றுத் தேர்தலைச் சந்தித்து தங்கள் சுய பலத்தை நிரூபித்துள்ளன.  இது சற்றும் எதிர்பாரத விதமாகவோ அல்லது  ஏமாற்றுத் தனமாக நடந்ததாகவோ இருக்கலாம்.  என்றாலும், மக்களுக்கிடையே தங்களுக்கிருக்கும் செல்வாக்கை நிருபிக்க ஒவ்வொரு அரசியல் சட்சிகளும் கூட்டணி இல்லை என்றாலும் தன்னந்தனியே தேர்தலைச் சந்தித்தது பாராட்டுக்குரியதே ஆகும்.
     எது எப்படி நடந்தாலும் தமிழகம் முழுவதும் சிற்றூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்து மாநகராட்சிப் பெருந் தலைவர் பதவி வரை மிக அதிக இடங்களில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் பிரதிநிதிகளே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சிப் பிரதிநிதிகளே பெரும்பான்மை வெற்றி பெற்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளாயிருப்பது வரவேற்கத்தக்கதே ஆகும்.
     எனெனில், அரசிடமிருந்து உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியானது எவ்வித பாரபட்சமும் இன்றி நேரடியாகவே கிடைத்து விடும்.  இதன் மூலம் ஆளும் சட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சிகளில் அதிக வளர்ச்சிப் பணிகள் நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
     கூடவே, உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில். கோடீஸ்வரன் முதல் குடிசை வாழ் மக்கள் வரை தங்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி மேலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழ்கள் பெறுவதற்கானப் பரிந்துரைக் கடிதங்கள் பெறுவது என அனைத்திற்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது.  இதனால், சில அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரங்களை விட அதிகமான அதிகாரம் ஊராட்சிப் பிரதிநிதிகளிடம் உள்ளன.
     ஓர் அரசு அதிகாரி தனதுக் கடமைக்காத்தான் மக்கள் பணியாற்றுவார்.  ஆனால், ஓர் உள்ளாட்சிப் பிரதிநிதி என்பவர் அப்படியல்ல.  அவர் எப்பொழுதுமே அந்தந்த ஊரிலுள்ள மக்களோடு மக்களாக வாழக் கூடியவர்.  அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நேரடியாக மக்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும்.  அதனால், அவர் தனதுக் கடமைக்காக மட்டும் பணியாற்றக் கூடாது.  அந்தந்த ஊர் மக்களின் முழு உரிமையையும் பெற்றுத்தரும் விதத்தில் பொறுப்புணர்ச்சியோடு கிராம மக்களின் உயர்ச்சியையும் மேன்மையையும் சிந்தையில் கொண்டு மிகவும் சீரிய முறையில் தன்னலமின்றி செயலாற்ற வேண்டும்.
     இந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் இன்னொரு வினோதமும் நடந்துள்ளது. அது வேறொன்றும் இல்லை; ஆளும் கட்சிக்கு அடுத்த படியாக பெரும்பாலான உள்ளாட்சிகளில் கட்சி அல்லது இயக்கங்கள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட எவ்வித கட்சியோ அல்லது இயக்கங்களோ சாராமல் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்கள் பெருவரியாக வெற்றி பெற்றுள்ளனர்.  இதன் மூலம் பொது மக்கள் கட்சி அல்லது சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்தில் நடுநிலையோடு செயல்படுபவர்களை அங்கீகரித்து ஆதரவு அளித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.  இது ஓர் ஆரோக்கியமான விஷயமாகும்.
     இப்படி இயக்கங்களைச் சாராமலோ அல்லது அரசியல் கட்சிகளைச் சாராமலோ சுயசார்புடன் நின்று வெற்றி பெற்றவர்களால் மக்களுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்கு இயலும்.  ஏனென்றால் ,அவர்களை எந்த அரசியல் கட்சிகளோ அல்லது இயக்கங்களோ கட்டுப்படுத்தாது.  அவர்கள் விரும்பியதை விரும்பியவாறே நேரடியாக மக்களுக்குச் செய்வதற்கு இயலும்.
     நம் நாட்டில் நிலவிலுள்ள பஞ்சாயத்துராஜ் திட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதற்கு அதிக நிதி ஒதுக்கப் படுகிறது. இந்த நிதியைக் கொண்டு பத்து அல்லது 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஊராட்சியையும் தன்னிறைவுப் பெற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு இயலும்.  மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கப்படும் நிதியோடு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு உட்பட்ட எம்.எல்.ஏ தொகுதி, எம்.பி. தொகுதி நிதிகளையும் அவர்களிடமிருந்து முயற்சி செய்து ஒத்துழைத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு, செய்தால் உள்ளாட்சி அமைப்புகளை மிகவும் விரைவாக குறுகிய கால அளவிற்குள் தன்னிறைவுப் பெற்ற உள்ளாட்சிகளாக மாற்றலாம்.  உள்ளாட்சிகளைப் பொறுத்த வரை மக்கள் அதிகம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்க வேண்டும் சேதமில்லாத சாலை வசதி இருக்க வேண்டும் ஓரளவிற்கு தெரு விளக்கு வசதி இருக்க வேண்டும் நிறைவான போக்கு வரத்து வசதி வேண்டும் அவ்வளவுதான். இவ்வளவையும் செய்து விட்டாலே ஓர் உள்ளாட்சி தன்னிறைவு பெற்றதாக மாறி விடும்.
     இவற்றுடன், மக்கள் அவர்களின் தனிப்பட்டத் தேவைகளான ரேஷன் கார்ட் பெறுதல், முதியோர், விதவை, ஆதரவற்றோர் பென்ஷன் பெறுதல் சில முக்கிய சான்றிதழ்கள் பெறுதல் ஆகியவற்றிற்காக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அடிக்கடி அணுகுவார்கள்.  அவர்களின் அந்தச் சேவைகளையும் எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி இன்முகத்துடன் அவர்களுடன் பேசி, பழகி அதிகாரிகளை அணுகி அதிக சிரமப்படுத்தாமல் பெற்றுத் தந்தால் யாராக இருந்தாலும் முழு திருப்தியடைவார்கள். கூடவே உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். அவர்களின் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட பிரதிநிதிகளுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
     இப்படிப்பட்ட நல் எண்ணம் உள்ளாட்சிப் பிரதிகளாகத் தேர்வு செய்யப் பட்டிருக்கும் அனைவர் மனதிலும் எழ வேண்டும். என்றால் மட்டுமே உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரச் செய்து அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் இடம் பிடிக்க இயலும்.
     இவற்றையெல்லாம் தவிர்த்து, எப்படியோ மக்களை ஏமாற்றி தற்பொழுது வெற்றி பெற்று விட்டோம்.  இனி ஐந்து ஆண்டுகள் நானே ராசா.. நானே மந்திரி... என்னை யாரும் அசைக்க முடியாது என்ற அகங்காரத்திலும் ஆணவத்திலும் மக்கள் பிரதிநிதிகள் நடந்து விட்டால் அது இந்த சமுதாயத்திற்குப் பெரும் தீங்கு விளைவித்ததாகவே மாறிவிடும்.
     மேலும், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் உள்ளாட்சிப் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் பெரும் தொகையை முழுமையாக அந்தந்தக் காரியங்களுக்காகவே செலவழிக்க வேண்டும்.  கான்டிராக்டர்கள் மூலம் வேலைகள் செய்யும் போது அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு கமிஷன் பெறுவதற்காகக் கண்மூடி விட்டால் கான்டிராக்டர்கள் மொத்தமாகவே உங்களுக்கு முடிவுக் கட்டி விடுவார்கள்.   அதுபோலவே உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள அதிகாரிகளும் பணியாளர்களும் கூட கான்டிராக்டர்களிடம் கமிஷன் பெறுவதில்தான் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவார்கள்.  அவர்களுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாதகமாகச் செயல்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த ஊராட்சிகளையே விலைக்கு வாங்கி விடுவார்கள்.
     எனவே, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கான்டிராக்டர்களிடம் கமிஷன் பெற்று வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் வேலைகளுக்காக அரசு மூலம் ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்து, பெரும் தொகையை கொள்ளையடித்து தன் குடும்பத்தை வாழ வைக்கலாம் என்றோ கருதக் கூடாது.
     அப்படிக் கருதிவிட்டால், இன்றைய மக்கள் அவ்வளவு அறிவிலிகள் அல்லர் என்பதை நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும்.  அவர்கள் அனைத்து விஷயங்களிலும் நல்ல விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.  நீங்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருந்தாலும் உங்களையும் கேள்வி கேட்கும் அதிகாரமும் அறிவும் சாதாரணப் பொது மக்களிடமும் உள்ளது, அந்த அடிப்படையில் பொது மக்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்து உங்களுக்குத் தண்டனை வழங்கி பாடம் புகட்டி விடுவார்கள்.
     இதற்குச் சான்றாகத்தான் இன்று மாநில கட்சிகளிலிருந்து தேசிய கட்சிகள் வரையுள்ள தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும்  சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பது. ஐந்து ஆண்டுகாலம் அனுபவிக்க வேண்டிய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து லஞ்சத்திலும் ஊழலிலும் உருண்டவர்கள் இன்று வெட்கமும் மானமும் கெட்டு, சூடு, சுரணையற்று தன்மானத்தை இழந்து நடைப் பிணங்களாக சிறைக்குள்ளே வெந்து தணிகிறார்கள்.  அப்படிப் பட்டவர்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் கடந்தப் பொதுத் தேர்தலிலும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சரியான, முழுமையானப் பாடத்தைப் புகட்டி விட்டார்கள்.
     இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தற்போது உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இந்த ஐந்தாண்டுக் காலம் தங்களின் உள்ளாட்சிகளில் நேர்மையாக, முறையாக, திறமையாகச் செயல்பட்டு உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலரச் செய்ய வேண்டும்.
                       நன்றி: சமுதாய நண்பன் நவம்பர் 2011.