Friday, 22 July 2011

அறப்பணிக்கு அறிவுடையோர் வேண்டும்.



             அறப்பணிக்கு அறிவுடையோர் வேண்டும்
                                     டாக்டர். கமல.செல்வராஜ்.

     தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இவ்விருத் தேர்வு முடிவுகளிலும் 85 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் வெற்றி பெற்றிருந்தனர்.
     அதோடு, அவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவீதமும் மிகவும் உச்ச நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு மாணவர் எஸ்.எஸ்.எல்.சி அல்லது பிளஸ் டூ தேர்வு எழுதி வெற்றி பெறுவதென்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. அப்படி வெற்றி பெற்றாலும் அவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும், ஆனால், வெற்றி பெறுபவர்கள் மிகுந்த அறிவுத்திறன் படைத்தவர்களாகவே இருந்தனர்.
     தற்போது, அந்நிலை முற்றிலும் மாறி தேர்வு விகிதமும் மதிப்பெண் விகிதமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன. முன்பெல்லாம், ஒரு பள்ளிக் கூடத்தில் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் நூறு சதவீதம் வெற்றி பெறுவதும் ஒவ்வொருப் பாடத்திற்கும் நூற்றுக்கு நூறு அல்லது இரு நூறுக்கு இருநூறு மதிப்பெண் பெறுவதென்பதும் கானல் நீராகவே இருந்தது.
     இவற்றையெல்லாம் பொய்யாக்கிக் கொண்டு, தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளில் தேர்வெழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நூறு சதவீத வெற்றியை ஈட்டுகின்றனர். அது போலவே ஒவ்வொருப் பாடத்திற்கும் அவற்றிற்கு வழங்கப்படும் முழு மதிப்பெண்களையும் பெற்றுப் பெருமைச் சேர்க்கின்றனர்.
     குறிப்பாக மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு முழு மதிப்பெண் பெறுவது இதுவரைக் குதிரைக் கொம்பாகவே இருந்தது. மொழிப்பாடங்களுக்கு எப்படிதான் சரியான விடை எழுதினாலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி ஒரு மதிப்பெண்ணாவது குறைத்து வழங்கவதுதான் மொழியாசிரியர்களிடையே இந்நாள் வரை இருந்து வந்த வழக்கம். தற்போது இந்த நடைமுறை வழக்கங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குக் கூட முழு மதிப்பெண்ணும் பெற்று புதுமைப் படைத்துள்ளனர் அறிவுசார்  மாணவ, மணிகள்.
     இவற்றில், என்ன வினோதம் என்றால், மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் பாட வாரியாக முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியரைப் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கண்டு அவர்களின் உயர் படிப்பு மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவைப் பற்றிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் செய்கின்றனர்.
     அவர்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் அனைவரும் தங்களின் எதிர்கால லட்சியம் கலெக்டராவது, இஞ்ஞினியராவது, டாக்டராவது அல்லது விஞ்ஞானியாவது என்றுதான் கூறுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட, இவர்களையெல்லாம் வர்த்தெடுக்கும் ஆசிரியராக வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதில்லை இதற்கு என்னக் காரணம் என்பதை மிகவும் தெளிவாக ஆய்ந்து நோக்க வேண்டும்.
     ஏனென்றால், இந்தத் தேசத்தையே மிகவும் சக்தியுடன் கட்டிக் காக்க வேண்டியவர்கள் கலெக்டர்களோ,மருத்துவர்களோ, இஞ்ஞினியர்களோ அல்லது விஞ்ஞானிகளோ அல்லர். அதற்கான முழுப் பொறுப்பும் திறனும் படைத்தவர்கள் ஆசிரியர்களே ஆவர். மற்றவர்களெல்லாம் ஓர் அங்கங்கள் மட்டுமே. இவ்வளவு உன்னதத் தன்மை வாய்ந்ததும் புனிதத்தன்மை வாய்ந்ததுமான ஆசிரியர்ப் பணியை ஏன் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர் விரும்பவில்லை என்பதுதான் கேள்விக்குறி.
     ஒரு காலத்தில் குருகுலக் கல்வியிலிருந்துத் தொடங்கி நவீன காலம் வரை அசிரியர் சமூகத்தின் மற்றும் ஆசிரியர் பணியின் மதிப்பும் மரியாதையும் மிகவும் உன்னத நிலையில் இருந்து வந்தது. அப்போது, மிகச் சிறந்த அறிவாளிகளும் பண்பாளர்களும் மட்டுமே ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி ஏற்று வந்தனர். அதனால், ஆசிரியர்கள் இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். அவர்கள் உருவாக்கும் மாணவர்களும் தலைசிறந்த அறிவாளிகளாகவும் போற்றி வணங்கும் பண்பாளர்களாகவும் திகழ்ந்தனர்.
     இப்படிப்பட்ட அறிவாளிகளிடமும் ஒழுக்கச் சீலர்களிடமும் கல்வி கற்று வந்த மாணவர்கள் அரசுத் துறை அதிகாரிகளாகவும் பிறத் துறைச் சார்ந்த வல்லுநர்களாகவும் தூய்மையான அரசியல்வாதிகளாகவும் வளர்ந்து, உயர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லச் செயல்களை மட்டுமே  செய்து வந்தனர். தீயச் செயல்களைச் சிந்தையாலும் செய்யாதவர்களாக இருந்தனர்.
     ஆனால், தற்போது ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்கு அரசு நிர்ணைத்திருக்கும் குறைந்த பட்ச மதிப்பெண், வயது வரம்பு மற்றும் பிறத் தகுதிகளைப் பார்க்கும் போது, பிற அனைத்துத்துறைப் படிப்பிற்கும் உள்ள தகுதி மற்றும் மதிப்பெண்களை விட மிகவும் மோசமான நிலையிலையே உள்ளது.  ஒரு மாணவர் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெறும் குறைந்த பட்ச மதிப்பெண்ணிலிருந்து ஒரு சிறிய சதவீத மதிப்பெண் அதிகமாகப் பெற்றிருந்தாலே அவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்குத் தகுதிப் பெற்று விடுகின்றனர். அதோடு, வயது வரம்பும் இல்லையென்றாகி விட்டது. 
     நிலைமை இப்படி இருப்பதினால்தான் சிறந்த அறிவும் நல்ல தகுதியும் திறமையும் பெற்றிருக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஆசிரியர்  பயிற்சிப் பெறுவதற்கும் ஆசிரியர் பணி செய்வதற்கும் ஆர்வம் காட்டாமல் பிறப் படிப்புகளுக்கும் வேலைகளுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
     இதனால், ஆசிரியர் பயிற்சிப் பெற வரும் மாணவர்களின் கல்வித்தரமும் அறிவுத் திறனும் ஒழுக்கச் சீலமும் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. இப்படிப்பட்டவர்களிடம் கல்வி கற்றுப் பல்வேறுத்துறை அதிகாரிகளாகவும் அரசுப் பணியாளர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் வருபவர்கள் சமூக விரோத செயல்களான லஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் ஆகியச் செயல்களில் ஈடுபட்டு தங்களின் மதிப்பையும் மரியாதையையும் இழந்து கூடவே இத்தேசத்தின் வளர்ச்சியையும் கெடுத்து மொத்தத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்களாக மாறுகின்றனர்.
     இந்நிலை ஒரு புறம் இப்படி இருக்க, இன்னொரு புறம் ஆசிரியர் பயிற்சி முடித்து, அப்பணிக்கு வருபவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம், கெளரவம், பிறச் சலுகைகள் அனைத்துமே பிறத்துறைச் சார்ந்த அரசுப் பணியாளர்களை விட மிகவும் குறைவாகவே உள்ளன.
     இந்நிலைகளையெல்லாம் அடியோடு மாற்றி விட்டு ஆசிரியர் பணியைத் இத்தேசத்தின் மிக உன்னதப் பணியாக மாற்றியாக வேண்டும். கூடவே, ஆசிரியர்களைத் தலைசிறந்த அறிவாளிகளாகவும் சமூகத்தில் ஈடிணையில்லா அந்தஸ்துக்கு உரியவர்களாகவும் மாற்றியாக வேண்டும்.
     அப்பொழுதுதான், தற்போது இத்தேசம் முழுக்க புரையோடிப்போய் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் லஞ்சம், ஊழல், ஒழங்கீனம் ஆகியத் தேசத்திற்கு ஒவ்வாத தீயச் செயல்களையெல்லாம் வேரும் வேரடி மண்ணுமின்றி அகழ்ந்தெடுத்து அகற்ற முடியும். அதற்காக அரசு தானாக முன்வந்து ஆசிரியர் பயிற்சிப் பெறுவதற்குத் தற்போதிருக்கும் நடைமுறைகளையெல்லாம் அகற்றி விட்டு புதிய ஆக்கபூர்வமான நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
     புதிய நடைமுறைகளில் ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்குக் குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சதவீதம் என்றாக்க வேண்டும். கூடவே வயது வரம்பும் 25 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதோடு, ஏதேனும் ஒரு முறையில் இவர்களுக்கு ஒரு நுழைவுத் தேர்வு நடத்தினால் கூட நல்லதாகவே இருக்கும்.
     மேலும், ஆசிரியர் பயிற்சி முடித்த ஒரு சில வருடங்களுக்குள் வேலை வாய்ப்பு என்ற உத்தரவாதம் இருக்க வேண்டும். அதற்காகத் தேவையானவர்களை மட்டும் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்துப் பயிற்சியளிக்க வேண்டும். அதோடு, பிற கெளரவமான பணியில் இருப்பவர்களுக்கு வழங்குவது போல் ஊதியம், சமூக அந்தஸ்து மற்றும் கெளரவம் போன்றவை ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டும்.
     இவற்றுடன், தற்பொழுது ஆசிரியர்கள் தான்தோன்றித் தனமாக சங்கங்கள் அமைத்து எதற்கெடுத்தாலும் போராட்டங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையை முற்றிலுமாக அகற்றி விட்டு ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். அதன் மூலம் ஆசிரியர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தி ஆசிரியர்களை நாகரிகமான முறையில் வழிநடத்த வேண்டும். மேலும், மாணவர்களிடம் நடைமுறைக்கு ஒவ்வாத முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     இவற்றையெல்லாம் நடைமுறைப் படுத்தினால் ஆசிரியர் பயிற்சிக்கு மகத்துவம் கூடும். கல்வியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் ஆசிரியர்   பணியை நாடி வருவர். இதன் மூலம் ஆசிரியர் பணியை  உலகின் உன்னதப் பணியாக்கி அனைவரையும் உத்தமர்களாக்கலாம்.
                       நன்றி:  சமுதாய நண்பன் ஜூன் – 2011.
.