பல்கலைக் கழகங்களைப் பண்பாளர்களின் கூடாரமாக்குவோம்.
“ பணப்புயல் இங்கே
பகிரங்கமாக வீசுவதால்
பெட்டிக்கடை வைக்க வேண்டியவர்கள்
பேராசிரியர்களாகிறார்கள்
விஞ்ஞானியாக வேண்டியவர்கள்
விறகு வெட்டச் செல்கிறார்கள்.”
இது கவிஞர் வில்லவனின் கவிதை வரிகள்.
இவ்வரிகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லையென்றேக் கருதுகிறேன். சதாரண அறிவுடைய அனைவருக்கும் ஒரு வாசிப்பில் புரிந்து விடும். இவ் வரிகளை எழுதிய கவிஞரும் சாதாரணமானவரல்ல, பல ஆண்டுகாலம் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதனால், இக்கவிதை வரிகளை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் வேலை வாங்குவதற்குப் பணத்தின் பங்கைக் கேட்டும் கண்டும் உணர்ந்தும் எழுதுயுள்ளார்.
ஒரு காலத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களை நியமிக்கும் போது அவர்களின் கல்வித் தகுதி, அறிவுத்திறன் இவற்றின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இன்று இந்த நிலைமை நேர் தலைகீழாக மாறியுள்ளது.
இப்பொழுதெல்லாம் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களாவதற்குத் தகுதியும் திறமையும் வேறெந்தப் பண்பு நலன்களும் தேவையில்லை வெறுமனே பணம் மட்டும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் கல்லூரிகளில் அல்ல பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாகி விடலாம்.
அதனால்தான், கவிஞர் மிகுந்த ஆதங்கத்தோடும் ஆதாரத்தோடும் ஆணித்தரமாகக் கூறுகிறார் “பெட்டிக்கடை வைக்க வேண்டியவர்களெல்லாம் பேராசிரியர்களாகிறார்கள்” என்று. இது இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்திற்குப் பொருந்துமோ இல்லையோ தமிழகத்தில் நூறு சதவீதம் பொருந்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் நியமனத்திலிருந்துத் தொடங்கித் துணைவேந்தர் நியமனம் வரைக்கும் பணம் மட்டுமே தகுதி என்றாகி விட்டது. அதுவும் பேராசிரியர்களுக்கு பல லட்சங்களும் துணைவேத்தர்கள் நியமனத்திற்கு கோடிகள் வரையும் தொட்டு விட்டது.
பல லட்சங்களை அள்ளிக் கொடுத்து பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் ஆகிறவர்கள், அங்குப் படிக்கும் மாணவர்களின் படிப்பைப் பற்றியோ, பல்கலைக் கழகத்தின் மேன்மைப் பற்றியோ இம்மியளவும் சிந்திப்பதும் இல்லை செயல்படுவதும் இல்லை. அவர்களும் அரசியல்வாதிகளைப் போன்று, அவர்கள் வேலை வாங்குவதற்காக முதலீடுச் செய்த லட்சங்களை எந்தெந்த வகைகளில் வட்டியும் முதலுமாக மீட்டெடுக்கலாம் என்பதில் முழு மூச்சாக ஆராட்சியில் இறங்குகிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு எப்படி பணம் ஈட்ட முடியும் லஞ்சம் வாங்க முடியும் என்று நமக்குள் ஒரு வினா எழுவது நியாயம்தான். அவர்களுக்கும் மிகவும் நாகரிகமான வழிமுறைகள் இருக்கின்றன,
தமிழகத்தில் அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏதேனும் பல்கலைக் கழகங்களின் கீழ் ஏதேனும் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்காக பல்கலைக் கழகத்தின் அனுமதியோ, அந்தந்த மாநில அரசின் அனுமதியோ அல்லது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (N C E R T) அனுமதியோ பெற வேண்டுமென்றால் அதற்காகப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் இந்த லட்சங்களை முதலீடு செய்து ‘பெயருக்கு ஆசிரியர்களான’ பேராசிரியர்களை ஆய்வுச் செய்வதற்காக அனுப்புகின்றனர்.
இவர்கள் அங்குச் சென்று அக்கல்லூரியின் உள் கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் அந்தந்த மாநில அரசின் அல்லது பல்கலைக் கழக்கத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அமைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பதை ஆதாரப் பூர்வமாக ஆய்வுச் செய்து அந்த அறிக்கையை அந்தந்த மாநில அரசுக்கு அல்லது சம்பந்தப் பட்டப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இவர்கள் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் அரசு அல்லது பல்கலைக் கழகங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்வித வசதியும் செய்யப்பட்டிருக்காது. அப்படிப்பட்ட இடங்களில் அந்த கல்வி நிறுவன நிர்வாகிகளுடன் பேரம் பேசுவார்கள். அந்த பேரம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரைக்கும் போகும்.
அதோடு, இவர்கள் பயணிப்பதற்குச் சொகுசுக் கார்கள், தங்குவதற்குக் குளுகளு அறைகள், அனுபவிப்பதற்கு அவர்களின் விருப்பத்திற்கு எற்றார் போல் ‘அனைத்தும்’ தாராளமாகக் கிடைக்கும். இந்த மதி மயக்கத்திலும் கிறக்கத்திலும் அங்கு இல்லாத வசதிகளெல்லாம் இவர்களின் பேனா முனைகளினால் இருப்பதாக எழுதி, பொய்யும் புரட்டுமான அறிக்கைச் சம்மந்தப்பட்டத் துறைகளுக்கு அனுப்பப்படும்.
இந்தப் பச்சோந்திகளின் மனசாட்சியற்ற அறிக்கைகளின் அடிப்படையில் அந்தந்தத் துறைகளின் அனுமதியும் அக்கல்லூரி நிர்வாகிகளுக்குக் கிடைத்து விடும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்குப் போதிய கழிவறை வசதிகள் கூட இல்லாமல் மாட்டுக் கொட்டகைப் போன்ற இடங்களெல்லாம் கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள்,அசிரியர் பயிர்ச்சி நிறுவனங்கள் எனப் பெயர் பலகை மாட்டப்பட்டு மாணவர்களிடம் அட்மிஷனுக்காக பணம் பட்டுவாடச் செய்யும் இடங்களாக இயங்கி வருகின்றன.
இந்தப் பகல் கொள்ளை ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடம் எம்.பில்., பி.எச்.டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வுச் செய்யும் மாணவர்களின் கதியும் ‘அதோகதி’ ஆகிறது.
ஆய்வு மாணவர்களின் ஆய்வேட்டில் கையெழுத்துப் போடுவதற்கே பல ஆயிரங்களுக்கும் கூடவே தங்க ஆபரணங்களுக்கும் நோட்டமிடும் சூடு, சொரணையற்ற ‘பெயருக்கு ஆசிரியர்கள்’ ஏராளம்... தாராளம்... இவர்களைத் தட்டிக் கேட்பதற்கோ அல்லது இந்த ஈனச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கோ எந்த அரசும் தயாரில்லை, அரசியல், மாணவர், ஆசிரியர் அமைப்புகளும் தயாரில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.
எவ்விதத் தகுதியும் இல்லாமல் பேராசிரியர்களாகிறார்கள் அதன் பிறகாவது தங்களின் தகுதியையும் திறமையையும் மேம்படுத்திக் கொள்வார்களா? என்றால் அதுவும் இல்லை. தேர்வு நேரங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதைப் போன்று இந்தப் பேராசிரியர்கள் ஏதேனும் ஆய்வுக் கட்டுரைச் சமர்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது கருத்தரங்கங்களில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலோ வேறு பல்கலைக் கழகத்தில் அல்லது வேறு நாடுகளிலுள்ள பேராசிரியர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளை அல்லது ஆய்வு அறிக்கைகளை அப்படியேக் காப்பியடித்து சிறிதளவு கூட நாணமோ,வெட்கமோ இன்றி இவர்கள் பெயரில் பிரசுரித்து விடுகின்றனர்.
கடந்த ஆண்டு, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் வெளிநாட்டிலுள்ள இரு பேராசிரியர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையை இணையதளத்திலிருந்து அப்படியே காப்பியடித்து தனது பெயரில் ஆய்வுப் பட்டத்திற்காக சமர்பித்து விட்டார். இது சம்மந்தப்பட்ட வெளிநாட்டுப் பேராசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அது மக்கள் தொடர்பு சாதனங்கள் வழியாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு, அந்தப் பல்கலைக் கழகத்தின் பெயரே துர்நாற்றம் வீசும் அளவிற்கு வந்து விட்டது.
இச்சம்பவம் ஒன்று மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தது. இது போன்று ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் செய்யும் அறிவுத் திருட்டிற்கு அளவே இல்லை. அவை அனைத்தும் ஏதேனும் விதங்களில் கண்டுபிடிக்கப் பட்டாலும் அவை, பல்கலைக் கழகங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் எனக் கருதி அப்படியே மூடி மறைக்கப்படுகின்றன.
பேராசிரியர்களின் நிலை இப்படியிருக்க பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் முறை இதிலும் விசித்திரமானது. முன்பெல்லாம் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அவர்களின் முன் அனுபவம், கல்வித்துறைக்கு அவர்கள் ஆற்றியிருக்கும் சேவைகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். அது முழுக்க முழுக்க தகுதி, திறமை இவற்றின் அடிப்படையில் மட்டுமே நடந்தது. பிற்காலங்களில் அந்த நிலைச் சற்று மாறி, அந்தந்தக் காலகட்டத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதேக் கட்சி சார்புடையவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, அந்நிலை மாறி அரசியல் சார்புடன் அதிக பணமும் தேவை என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்தப் பணம் லட்சங்களைத் தாண்டி கோடிகளைத் தொட்டுத் தற்போது பல கோடிகள் எனத் தொடர்கிறது.
இப்படி, பல கோடிகளைக் கொடுத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் பதவியைப் பெற்றுக் கொள்பவர்கள் எப்படி நியாயமாகவும் நீதியாகவும் செயல்பட முடியும்? அவர்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டு பதவிக் காலத்திற்குள் செய்திருக்கும் முதலீட்டிற்கு முதலும் முதலுக்கு முதலும் வட்டியும் வட்டிக்கு வட்டியும் எனக் குறைந்தது பத்து மடங்காவது அதிகமாகச் சம்பாதிக்கத்தான் செய்வார்கள். அதற்கு என்ன வழி?
இவர்களும் அதற்கெல்லாம் வழியைக் கண்டு பிடித்து வைத்துள்ளனர். இவர்கள், துணை வேந்தர் பதவியில் அமர்ந்த உடன் அப்பதவியைப் பார்க்காமல் கல்வி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த பிற அமைச்சர்களின் ஏஜென்டாக வேலை செய்யத் தொடங்குகின்றனர்.
புதிதாக ஏதேனும் கல்லூரி ஆரம்பிப்பதாக இருந்தால் அதற்கு அனுமதி அளிப்பதற்காக அரசுக்குக் கொடுக்க வேண்டும் அமைச்சருக்குக் கொடுக்க வேண்டும் என இடைத்தரகர்களைப் போன்று கல்லூரி நிர்வாகத்திடம் லட்சங்களையும் கோடிகளையும் மிகவும் சுலபமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அதோடு, இவர்கள்தான் பல்கலைக் கழகத்திற்குப் போதிய பேராசிரியர்களையும் பணியாளர்களையும் நியமிக்கின்றனர். அதற்காக ஒவ்வொரு பல்கலைக் கழகத் துணை வேந்தர்களும் தங்களுக்குச் சாதகமாக சில ஏஜென்டுகளை வைத்துள்ளனர். அவர்களை வைத்து புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட உள்ளவர்களிடம் பேரம் பேசுகின்றனர். ஒவ்வொருப் பணிக்கும் அந்தந்தப் பணிக்கேற்ப லட்சங்கள் பெருகிக் கொண்டேப் போகும். லட்சங்கள் கூடக்கூட பணியாளர்களின் தரம் குறைந்து கொண்டேப் போகும்.
மேலும், துணை வேந்தரே லஞ்சம் வங்கிக் கொண்டு பணியமர்த்தும் பேராசிரியர்கள் மற்றும் பிறப் பணியாளர்கள் எப்படி துய உள்ளத்தோடு பணியாற்றுவார்கள் அவர்களும் ஒரு பைலை ஒரு மேசையிலிருந்து அடுத்த மேசையில் வைப்பதற்குக்கூட லஞ்சத்தை எதிர் நோக்கியே நிற்பார்கள். இப்படி, கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் கட்டிக் காக்க வேண்டிய கல்வித் துறை கூட லஞ்ச லாவண்ணியத்தின் உறைவிடமாகி விட்டது. நன்குப் படித்தவர்களும் பண்டிதர்களும் பண்பாளர்களும் அமர்ந்து பணியாற்ற வேண்டியப் பல்கலைக் கழகங்கள் இன்று பண்பாடும் நாகரிகமுமற்ற காட்டுமிராண்டிகளின் கூடாரங்களாகி வருகின்றன.
இதனால்தான் ஒவ்வொரு தேர்வு நடக்கும் போதும் வினாத்தாள்கள் வெளியாவது, போலி மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது, தகுதியற்றக் கல்லூரிகளுக்கு அனுமதியளிப்பது எனப் பல்கலைக் கழகங்களே பல்வகைக் குற்றங்கள் நடக்கும் இடங்களின் தலைமையிடமாகச் செயல்படுகின்றது. இதனால், தகுதியான பேராசிரியர்களும் நிர்வாகத் திறனும் பண்பு நலன்களும் கொண்ட துணை வேந்தர்களும் இன்றி பல்கலைக் கழகங்கள் ஈனர்களின் உறவிடமாகவும் குற்றங்களின் புகலிடமாகவும் மாறியுள்ளன.
இவற்றிலிருந்தெல்லாம் பல்கலைக் கழகங்களைக் காப்பாற்றுவதற்கும் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் மீண்டும், முன்பு போல் கைமாறுக் கருதாமல் நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களை பேராசிரியர்களாகவும் துணை வேந்தர்களாகவும் நியமிக்க வேண்டும்.
நன்றி: சமுதாய நண்பன் மே 2011.